Friday, March 29, 2024

நேர்காணல் : வீணைமைந்தன்


விமர்சனம் அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

 விமர்சனம்

அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

அலெக்ஸ் பரந்தாமன் ஒரு சிறுகதை எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் எனப் பல வகையிலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி. இவரது சிறுகதைகள் ஒரு பிடி அரிசி, தோற்றுப் போனவனின் வாக்குமூலம், அழுகைகள் நிரந்தரமில்லை முதலிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும்.

ஈழத்தில் வெளிவந்த சிறுகதைகளில் சாமானிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பேசும் சிறுகதைகளைப் பலரும் எழுதியுள்ளனர். ஆனால் அலெக்ஸ் பரந்தாமனின் கதைகள் சாமானிய மனிதர்களின் பாடுகளைப் பேசுவதையே பொதுப் போக்காகக் கொண்டவை. அவரது கதைகளில் வரும் கதாமாந்தர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற அடித்தட்டு மக்களாகவே உள்ளனர்.பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்ற அன்றாடங் காய்ச்சிகள், தினக்கூலிகள், சலவைத் தொழிலாளர்கள், பறையடிப்பவர்கள் என்று விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், நெருக்கடிகளையும், துன்பங்களையுமே அவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன.

‘எழுத்தாளன் என்ற நிலைக்கப்பால் கதைகளை எழுதுபவன் எனும் மனவோட்டத்திலேயே என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நான் அணுகுகிறேன். இந்த மனிதர்களிடத்திலிருந்தே எனது கதைக்கான கருக்கள் பிறக்கின்றன’ என்று நூலாசிரியர் குறிப்பிடுவது அவரது கதைகளின் உள்ளடக்கத்தை துலாம்பரப்படுத்துகின்றது.

இந்தத் தொகுதியில் உள்ள எட்டுக் கதைகளும் அவ்வாறானதே. சிறுகதை மஞ்சரியில் ஏலவே இவை பிரசுரமாகியுள்ளன. பாத்திரங்களை அவற்றின் இயல்புக்கூடாக விபரித்து, கதை சொல்லும் பாங்கே இவரது எழுத்து நடையாகும். அது பாத்திரங்களின் நல்ல கெட்ட பண்புகளை வாசகரிடத்தில் தொற்ற வைப்பதனூடாக கதையை நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து பரமன் காடழித்து உருவாக்கிய ஒரு காணியை தாயாரின் இறப்பின் பின்னர் சகோதரி பங்கு கேட்டு பிரதேச செயலகத்துக்கு மனுச் செய்த கதை அம்மான்ரை காணி. தாயாரின் காணியில் தனக்கும் பங்கிருக்கு. பங்கைத் தர வேண்டும் எனக் கேட்டு நிற்கும் சகோதரி தேவியின் சுயநலத்தை இக்கதையில் நூலூசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.

அவ்வாறே மலையகத் தொழிலாளர்களை வன்னி மண்ணில் வேலைக்கமர்த்தி தொழில் சுரண்டலைச் செய்து வாழும் பெரிய மனிதர்களை அம்பலப்படுத்தும் கதையாக கறிவேப்பிலைகள் கதையை அவர் எழுதியுள்ளார். கந்தவனத்தின் தோட்டத்தில் மாடாக உழைத்த மாடசாமி இறுதி யுத்தத்தில் இரு கால்களையும் கையொன்றையும் இழந்து சக்கர நாற்காலியில் பிச்சை எடுக்கிறான். அந்த நேரத்தில் சந்தையில் மாடசாமியைக் காணும் அவர் “உன்னைலெ;லாம் எனக்குத் தெரியாதே… ஆர் நீ?” என்று கேட்டு விட்டு நகர்வது காட்டப்படுகிறது. இவ்வாறு தொழில் சுரண்டல்களால் வாழ்க்கையை இழந்த பலரில் ஒருவனாகவே மாடசாமி நம்முன் தோன்றுகிறான்.

தன்னுடைய அகங்காரத்தாலும், பிடிவாதத்தாலும் தேவி என்ற பெண் தனது வாழ்வையும், தனது குடும்பத்தின் வாழ்வையும் கெடுத்து இறுதிக் காலத்தில் யாருமற்று தனது செயலுக்காக வருந்துவதை காலம் தின்ற வாழ்வு கதை பேசுகிறது. தான் மட்டுமல்ல தனது சகோதரியையும் திருமணம் செய்ய விடாது முதிர்கன்னிகளாக வாழ்வைத் தொலைத்த பல குடும்பங்களின் கதையின் ஒரு பருக்கையே இந்தக் கதையாகும்.

யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம் பேசுவோரும், அடிப்படைவாதம் பேசுவோரும் கன்னை பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காலமிது. ஒரு பஸ் சந்திப்பு திருமணத்தில் வந்து முடிகிறது. ஆண் காலிழந்த முன்னாள் போராளி. பெண் இராணுவத்தில் இருந்து போராளிகளால் கொல்லப்பட்ட சிப்பாயின் மனைவி. இருவருக்குமான சந்திப்புகள், புரிதல்கள் திருமணம் வரை செல்வதை சிங்களத்தி என்ற கதை பேசுகிறது. இதற்குள்ளால் அரசியல்வாதிகளின் கபடத்தனம், போராளிகளை சமூகம் கைக்கொண்ட விதம், உழைப்பைச் சுரண்ட எண்ணும் உறவுகள் எனப் பல விடயங்களை நூலாசிரியர் பேசுகிறார். பிரசன்ன விதானகேயின் பிறகு திரைப்படம் இன்னொரு கோணத்தில் பேசும் விடயத்தை அலெக்ஸ் பரந்தாமன் இக்கதையினூடாக வேறு கோணத்தில் பேசுகிறார்.

குடும்பத்துக்காக உழைத்து மாயும் மனிதர்கள் பற்றியும்(பாரந்தாங்கிகள்), முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதைச் சொல்வதாயும்(குழம்புச்சோறு), சாதி சார்ந்த சிக்கல்களைப் பேசுவதாயும் (காலசூட்சுமம், பறையொலி) இத்தொகுதியில்  கதைகள் உள்ளன. . ஆதிக்க சாதியினருக்கு அடங்கிய ஒரு தலைமுறை வாழ்வு நீங்கி புதிய தலைமுறை வீறுடன் எழுவதை இத்தொகுதியின் தலைப்பான பறையொலி சிறுகதை பேசுகிறது.

இந்த எட்டுக் கதைகளும் சமூகத்தின் போலித் தனங்களைப் பேசுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பையும், முயற்சியையும் பேசுகின்றன. ஏழை மக்களின் வாழ்வுப் பாடுகளைப் பேசுகின்றன. குடும்பங்களின் பொருளாதார  உறவுச் சிக்கல்களைப் பேசுகின்றன. இக்கதைகளின் அடிநாதமாக சாதாரண மக்களும், அவர்களின் வாழ்வியலுமே அமைந்துள்ளன. அவ்வகையில் அலெக்ஸ் பரந்தாமன் தனது எழுத்துகள் மூலம் அடித்தட்டு மக்களின் வலிகளையும் வாழ்வையும் நம் கண்முன் கொண்டு வருகிறார். அது வாசகருக்கு புது அனுபவங்களைத் தருவதாக இருக்கும்.

இயல்வாணன்


Sunday, December 10, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 23

 முன்றில் 23

இயல்வாணன்

‘கேட்க ஒரு நாதி

கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம்

மீட்க ஒரு இயக்கம்

மூச்சுவிட ஒரு கவிஞன்

கட்டாயம் தேவை இது

காலத்தின் குரலாகும்’ என்று பாடிய கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தின் கவிஞராகவே தனது அடையாளத்தைப் பதித்தவராவார். சிற்பாசாரியாரான வரதலிங்கத்தின் இரண்டாவது மகனாக 1948ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆந் திகதி புத்தூரில் பிறந்த இரத்தினதுரை தனது ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டு புதுவை இரத்தினதுரையாக கவி வடிக்க ஆரம்பித்தார்.

இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் நிறைவு செய்தார். அதன் பின்னர் இவரது சிறிய தந்தையாரான ஸ்ரீகந்தசாமியுடன் இணைந்து அவரது ஸ்ரீவாணன் சிற்பாலயத்தில் தேர்த் தொழில் செய்வதற்கான நுட்பங்களையும், மரச்செதுக்கு சிற்பக்கலை நுட்பங்களையும் கற்றுத் தேறியதுடன் ஒரு சிற்பாசாரியராகவும் உருவானார். நயினாதீவு நாகபூசணியம்மன் மஞ்சம், முன்னேஸ்வரம் ஆலய தேர், சட்டநாதர் சிவன் கோவில் தேர் உள்ளிட்ட பல ஆலயங்களின் தேர் உருவாக்கத்தில் இவரது கைவண்ணம் உள்ளது. நல்லூர் கம்பன் கோட்டத்தின் கதவு உள்ளிட்ட சிற்பச் செதுக்கல் கொண்ட கலைநயமான கதவுகள் பலவும் இவரால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவரது குருநாதரான கந்தசாமி மார்க்ஸிய சிந்தனை கொண்ட ஒரு பொதுவுடமைவாதியாக விளங்கினார். அவரது கருத்துநிலை புதுவை இரத்தினதுரையைப் பற்றிக் கொண்டது. கொம்யூனிசக் கட்சி ரய சார்பு, சீன சார்பு என நிலையெடுத்திருந்த காலத்தில் இவர் சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்த பொதுவுடமைவாதிகளுடன் இணைந்து தொண்டனாகச் செயற்பட்டார். பெர்துவுடமை மேடைகளில் இவர் உரையாற்றியதுடன் வீச்சுடன் கவிதைகளும் வடித்தார். சிங்கள இடதுசாரிகளுடனும் நெருங்கிப் பழகினார்.

1970களின் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான விரும்பத்தகாத சம்பவங்களின் பாதிப்பு, அரசாங்கத்தில் இணைந்திருந்த இடதுசாரிகளின் மௌனம் என்பன புதுவை இரத்தினதுரையைப் பாதித்தன. 

இருமொழி ஒரு நாடென்று/ இதுவரைஇருந்த நீதி/ தெருவினில் கிடக்குதம்மா/ தேசியம் என்ற பிள்ளை/ கருவிலே சிதைந்த காட்சி/ கண்களிற் தெரியுதம்மா/ பெருத்ததோர் வகுப்புவாதப் /புயலடித் தோய்ந்த தம்மா”என்று இந்த நிலைமையினைப் பாடினார். கொம்யூனிச ஈடுபாட்டையும் குறைத்துக் கொண்டார்.

நாட்டை விட்டு வெளியேறி இரு ஆண்டுகள் (1979-80) சிங்கப்பூரில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் நாடு திரும்பிஇ மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்குச் சென்று தளபாடத் தொழிலகத்தில் (1983-85) பணியாற்றினார். 1985இல் நாடு திரும்பிய இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 2009இல் முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போகும் வரை அந்த அமைப்பின் கலை கலாசாரப் பிரிவின்(பின்னர் கலை பண்பாட்டுக் கழகம்) பொறுப்பாளராகச் செயற்பட்டார்.

தனது 14வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த புதுவை இரத்தினதுரை மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு ஒரு -இடதுசாரியாக- மக்கள் இலக்கியவாதியாக தன்னை அடையாளங் காட்டினார். வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் அடக்கப்பட்ட மக்களுக்காக இவரது பேனா குரல் கொடுத்தது.  மானுட விடுதலைக்கான பாடல்களாக இவரது கவிதைகள் உருக்கொண்டன. குமரன், தாயகம், மல்லிகை, வெளிச்சம், சுட்டும் விழி முதலான சஞ்சிகைகளிலும், தேசாபிமானி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, ஈழநாதம், உலகத்தமிழர், விடுதலைப்புலிகள் முதலான பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. கவிஞராகவே, அதிலும் மரபுக் கவிஞராகவே அடையாளப்படுத்தப்பட்டாலும் கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது கவிதைத் தொகுதியான வானம் சிவக்கிறது சுதாயினி வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் வெளியீட்டு விழா புத்தூரில் நடைபெற்றது. ஒரு தோழனின் காதல் கடிதங்கள்(1976 தாரகைகள் இலக்கியக்குழு வெளியீடு), இரத்த புபங்கள்(1980 கண்டி கலைஞர் பதிப்பகம்), நினைவழியா நாட்கள்(1993 தமிழ்த்தாய் வெளியீடு) , வியாசனின் உலைக்களம்(2003 தமிழ்த்தாய் வெளியீடு), பூவரம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்(2005 நங்கூரம் வெளியீடு) ஆகிய கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன.

தனது தந்தையார் வரதலிங்கம், தாயார் பாக்கியம் ஆகியோரது பெயர்களை இணைத்துக் கொண்டு வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதினார். அதுபோல தனது மனைவி ஸ்ரீரஞ்சினியின் பெயரை இணைத்து ரஞ்சினிரத்தினம் என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகளை எழுதியுள்ளார். தனது மகளான மாலிகா என்ற பெயரிலும், கமலக் கன்னி, இளவரதன், வியாசன் என்ற பெயர்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

புதுவை இரத்தினதுரையின் சிறப்பே கவிதை வாசிப்புத்தான். கவியரங்க மேடைகள் பல கண்ட இவரது கவிதைகளைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டமொன்றிருந்தது. சொற்சுவையோடு கவிதை சொல்லும் பாங்கே அலாதியானது. அதுபோலத்தான் இவரது மேடைப்பேச்சும். கொம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும்இ விடுதலைப் போராட்ட கால மேடைகளிலும் அனல் பறக்கும் பேச்சாளனாக இவர் தனித்துத் துலங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞராக விளங்கிய இவர் பல நூறு தாயக விடுதலைப் பாடல்களை எழுதியுள்ளதுடன் அவ்வியக்கம் சார்ந்த பிரச்சாரக் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். பெரியளவில் இரண்டு முத்தமிழ் விழாக்களை மானிப்பாயிலும், சாவகச்சேரியிலும் பெருமெடுப்பில் நடத்திய இவர் காத்திரமான முத்தமிழ் விழா மலர்களையும் (1991இ 1992) வெளியிட்டார். கருணாகரனை ஆசிரியராகவும், புதுவை இரத்தினதுரையை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளியிடப்பட்ட வெளிச்சம் சஞ்சிகை அக்காலகட்டத்தின் காத்திரமான இலக்கிய ஏடாக(1991-2005) வெளிவந்தது.

இலங்கையின் சிங்கள தமிழ்  முஸ்லீம் படைப்பாளிகளை ஒன்றிணைத்து நான்கு நாள்கள் மானுடத்தின் தமிழ்க்கூடல் (2002 ஒக்ரோபர் 20இ21இ22இ23) என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியதில் இவரது தலைமைத்துவம் முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஓவியர் ட்ரொஸ்கி மருது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர். 

அதுபோல ஹிரு குழுவினரின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற சிங்கள தமிழ்க் கலைக்கூடலிலும் (2003 ஒக்ரோபர் 29,30) இவரது பங்களிப்பு முக்கியமானது. இங்குள்ள கலை இலக்கியகர்த்தாக்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று வசதியளித்தல்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் ‘சிஹல உறுமய’ என்ற பேரினவாத அமைப்பொன்று வன்முறைத் தாக்குதலை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்திய போதும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றமையும் பதிவு செய்யத்தக்கது.

பிற்காலத்தில் ஆலயங்கள் மீதான பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். நல்லை முருகன் பாடல்கள், துயர் வெல்லுந் துணை முதலான இறுவட்டுகள் பிரபலமானவை. திருநெல்வேலி பத்திரகாளி அம்மன், லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவில் முதலானவற்றுக்கும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இவரது கவிதைகளைப் போலவே இவரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான மனிதராகவே அடையாளப்படுத்தப்பட்டார். இவரது கவிதைகளும் பேச்சும் உணர்ச்சி கொப்பளிப்பனவாக வெளிவந்ததே இதற்குக் காரணம். ஆனால் இயல்பில் ஒரு குழந்தைத்தனமும்  அன்பும் கொண்ட பழக இனிய மனிதராகவே இவர் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போல ‘புதுவையின் கருத்துநிலைத் துணிபும் கவித்துவ ஆளுமையும் அவரை இன்றைய சராசரி மனிதனின் குரலாகவும், முக்கியமாக அவனுக்கான கவிதைக் குரலாகவும் வைத்திருப்பதைக் காணலாம்’ என்பது முக்கியமானது. அது காலக் கவிஞராக அவரை நிலைநிறுத்தியது.





இயல்வாணன் பத்தி - முன்றில் 22

 

முன்றில் 22

இயல்வாணன்

ஒரு கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாளராக, இதழியலாளராக, காலமாற்றத்துக்கேற்ப நவீன தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவராக பேராசிரியர் எம்.. நுஃமானை நாம் அடையாளங் காணலாம். தமிழிலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் வீச்சுமிக்க மாணவர்களை உருவாக்கியவராகவும் அவர் மிளிர்கிறார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைக்குடியில் அரபுமொழி ஆசிரியராகவும் மதப் பணியாளருமாகவும் விளங்கிய மக்புல் ஆலிமின் மகனாகப் பிறந்தவர் எம்..நுஃமான். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1973இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் மொழியியல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1982இல் முதுகலைமாணி பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேறகொண்டு பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், மொழியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1991இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்று, பேராசிரியராகப் பணியுயர்ந்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச இனவியல் ஆய்வுமையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், அரசாங்க பாடநூல், ஆசிரிய வழிகாட்டி உருவாக்கல், மதிப்பீடு ஆகியவற்றிலும் இவர் தனது வாண்மைத்துவப் பங்களிப்பை வழங்கியதுடன்  பல ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

தனது 16வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் கவிஞர் நீலாவணன் மூலமாக இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இவரது முதல் கவிதை வீரகேசரியில் வெளிவந்தது. இவரது கவிதைகள் தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதை (1977), அழியா நிழல்கள்(1982), மழை நாட்கள் வரும்(1983) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. .யேசுராசாவுடன் இணைந்து பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்(1984) நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பலஸ்தீனக் கவிதைகள்(1981 மற்றும் 2000),  மொகமூத் தர்விஸ் கவிதைகள்(2008), காற்றில் மிதக்கும் சொற்கள்(மலாய் மொழிக் கவிதைகள்), இரவின் குரல்(இந்தோனேசிய மொழிக் கவிதைகள்), நம் அயலவர் -  சிங்களச் சிறுகதைகள் (காமன் விக்கிரமசிங்கவுடன் இணைந்து -2006) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது அடிப்படைத் தமிழ் இலக்கணம்(1999) நூல் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவும் துணைநூலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியற் கருத்துகளையும் இணைத்து தற்கால தமிழ்மொழி இலக்கணத்தை எடுத்து விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (பேராசிரியர் சி.மௌனகுரு, சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து எழுதியது - 1979), பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு(1984), 19ஆம் நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்,  திறனாய்வுக் கட்டுரைகள்(1985), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்(1987), ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்(2002), மொழியும் இலக்கியமும்(2006), சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்(2017), A Constructive Grammar of Tamil and Sinhala Noun Phrase (2003)>  Srilankan Muslims Ethnic Identity within Cultural Diversity (2007)> Understanding Muslim Identity (2004) முதலான நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

மஹாகவி உருத்திரமூர்த்தியுடன் இணைந்து 1969-70 காலப்பகுதியில் கவிஞன் என்ற பெயரில் காலாண்டிதழினை வெளிக்கொணர்ந்தார். 4 இதழ்களே வெளிவந்தன. வாசகர் சங்கம் என்ற பதிப்பகத்தின் மூலம் தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மஹாகவியின் ஆறு காவியங்கள்(2008) உள்ளிட்ட மஹாகவியின் படைப்புகளையும் இவர் தொகுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வேளை கவிதாநிகழ்வு என்ற  நிகழ்ச்சியை இவர் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

2011இல் தமிழ்நாட்டில் இவரது தமிழ்பணியைக் கௌரவித்து விளக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய நுஃமான் ஆரம்பத்தில் மார்க்ஸிய சிந்தனை அடிப்படையிலான இலக்கிய நோக்கினைக் கொண்டிருந்தாராயினும் பின்னர் கல்வித் துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறையினையே பயன்படுத்தினார். இவரது மொழியியல் ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள் முக்கியமானவை. 79வயது நிறைவைக் கண்டுள்ள இவர் தொடர்ந்தும் தனது புலமைத்துவ ஆற்றலை தமிழுலகுக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.

 

Monday, October 23, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 21


 முன்றில் - 21

இயல்வாணன்

தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கை ஆழியானின் வாடைக்காற்று ஆகிய மூன்று நாவல்களையும் விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பேசுவர். பகைப்புலம், கதைமாந்தர் வேறாயினும் வாசிக்கும் வாசகனுக்கு இம்மூன்று நாவல்களும் ஒத்த அனுபவத்தைத் தருவதாக அமைந்திருந்தன. நிலக்கிளி நாவலை எழுதியதால் நிலக்கிளி என்ற அடைமொழியோடு அண்ணாமலை பாலமனோகரன் அடையாளப்படுத்தப்படுமளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது. பாலமனோகரன் ஒரு நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,ஓவியராக பல தளங்களில் பங்காற்றியுள்ளார்.


இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 07-07-1942இல் பிறந்தார். இவரது தந்தையார் சிங்கப்பூர் பென்சனியர். அத்துடன் கிராம விதானையாராகவும், உள்ளுராட்சிமன்றத் தலைவராகவும் இருந்தவர். தாயார் தண்ணீரூற்று சைவப் பாடசாலையின் முதல் பெண் ஆசிரியராக இருந்தவர்.


பாலமனோகரன் தனது ஆரம்பக் கல்வியை தரம் 2 வரை தண்ணீரூற்று சைவப் பாடசாலையிலும், தரம் 3முதல் 5 வரை ஆங்கில மொழி மூலம் உடுவில் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கியும் பெற்றார். இடைநிலைக் கல்வியை ஆங்கில மொழி மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பெற்றார். எனினும் 15 வயதில் அங்கிருந்து இடம்மாறி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சிரே~;ட தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றினார்.


1962இல் ஆசிரிய நியமனம் கிடைத்து ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை மேற்கொண்டார். தொடர்ந்து பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில பாடத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று, பயிற்றப்பட்ட ஆசிரியராக 1967இல் மூதூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நியமனம் பெற்றார். தொடர்ந்து முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கற்பித்தார். 1984இல் டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கேயே வசித்து வருகிறார். டென்மார்க்கிலும் இவர் கட்டிடத் தெரிநுட்பவியலாளர் படிப்பை 3 வருடங்கள் மேற்கொண்டு நிறைவு செய்திருந்தார்.


தண்ணீரூற்றில் இவரது வீட்டில் ஆனந்தவிகடன், கல்கி ஆகிய தமிழக சஞ்சிகைகளை வாங்குவார்கள். மாணவப் பருவத்தில் வீட்டிற்கு வரும் வேளை அவற்றைப் படிப்பார். அத்துடன் 10 வயதில் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தைப் படித்து அதனால் நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது வீட்டில் பல ஆசிரியர்கள் வாடகைக்கு குடியிருந்தனர். முல்லைமணி சுப்பிரமணியம், அப்பச்சி மகாலிங்கம், நா.சுப்பிரமணிய ஐயர் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது வீட்டில் இலக்கிய விவாதங்களை நடத்துவதை இவர் பார்த்து வளர்ந்துள்ளார்.


மூதூரில் இவர் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஆசிரிய நண்பனொருவர் சிறுகதையொன்று எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காக எழுதிய சிறுகதையை மஹ்ரூப் என்ற மாணவனிடம் கொடுத்து அழகான கையெழுத்தில் எழுத வைத்தார். அதைப் படித்த மாணவன் வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளர் பற்றிக் கூறி அவரிடம் இந்தச் சிறுகதையைக் காண்பிக்கும் விருப்பத்தை வெளியிட்டார். வ.அ.இராசரத்தினம் இவர்களை வரவேற்று கதை தொடர்பில் சில திருத்தங்களையும் முன்வைத்தார். அவர் மூலமாக சிந்தாமணி பத்திரிகையில் இவரது முதலாவது சிறுகதையான ‘மலர்கள் நடப்பதில்லை’ இளவகன் என்ற புனைபெயரில் வெளிவந்தது. இளவழகன் என்ற புனைபெயரிலேயே  ஆரம்பத்தில் சிறுகதைகள் வெளிவந்தன. தொடர்ந்து சிந்தாமணியின் ஆசிரியர் இராஜ அரியரத்தினத்துடனான தொடர்பினால் பல சிறுகதைகளை அப்பத்திரிகையில் எழுதினார். அத்துடன் வீரகேசரி, தினகரன், Weekend ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பப்ட்டது.


இளமைக்காலத்தில் சில வருடங்கள் சொந்த ஊரான தண்ணீரூற்றில் தங்கியிருந்த காலத்தில் தண்ணிமுறிப்பு காட்டிற்கு வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறார். அதேவேளை தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீனை வாசித்த அருட்டுணர்வும் சேர்ந்து கொள்ள ஒரு நாவலை உருவாக்கினார். தண்ணீரூற்றில் வாழ்ந்த ஒருவரையே கோணாமலை என்ற பாத்திரமாக்கி உருவானதே நிலக்கிளி நாவலாகும். இது 1973இல் வீரகேசரி பிரசுரமாக இந்நாவல் வெளிவந்தது. இந்த நாவலின் பெயரை மாற்ற வீரகேசரி பிரசுரத்தினர் விரும்பிய போதும் நூலாசிரியர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நாவலுக்கு அந்த வருடத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இதன் இரண்டாம் பதிப்பு மல்லிகைப்பந்தல் வெளியீடாக 2002இல் வெளிவந்தது.




மித்திரனில் வண்ணக் கனவுகள் என்ற நாவலைத் தொடராக எழுதியுள்ளார். தொடர்ந்து வீரகேசரி பிரசுரமாக குமாரபுரம் (1974), கனவுகள் கலைந்தபோது (1977) ஆகிய நாவல்கள் வெளிவந்தன. இவரது பதிப்பகமான பனம்பூ வெளியீடாக தாய்வழித் தாகங்கள் (1987) நாவல் வெளிவந்தது. அப்பால் தமிழ் இணையதளத்தில் தொடராக இவரெழுதிய வட்டம்பூ நாவல் நந்தாவதி என்ற பெயரில் நூலாக தமி;நாட்டில் வெளிவந்தது.  நந்தாவதியை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Bleeding Hearts (2009) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.


இவரெழுதிய 11 சிறுகதைகள் தீபதோரணம் (1977) தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய 15 சிறுகதைகள் நாவல் மரம் என்ற சிறுகதைத் தொகுதியாக டெனி~; மொழியில் வெளியிடப்பட்டது.


முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல்கள் இரண்டை இவர் தமிழில் ‘இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு’, ‘இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு’ என்ற தலைப்புகளில் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அத்துடன் டெனி~; தமிழ் அகராதியையும் இவர் தயாரித்து பிரபல நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.


ஓவியராகவும் இவர் விளங்குகிறார். இவரது ஓவியங்களை டென்மர்க்கில் பலரும் வாங்கி தமது வீடுகளில் தொங்கவிட்டுள்ளனர். அப்பால் தமிழ் இணையதளம் ஓவிய கூடம் என்ற பகுதியை உருவாக்கி, அதில் இவரது ஓவியங்களை வெளியிட்டு இவரைக் கௌரவித்திருந்தது.

பாலமனோகரனின் கதைகள் முல்லை மண்ணின் இயல்பான வாழ்வையும், இயற்கையின் அழகையும் பேசுவன. வன்னிப் பிரதேசத்தின் எளிமையும் இனிமையும் இவரது கதைகளின் சாரமாகும். மறுபுறத்தில் துன்பங்களை எதிர்கொண்டு துணிந்து வாழும் மக்களின் பண்பையும் வெளிப்படுத்துவன.


81 வயதிலும் டென்மார்க்கில் தளராத பணியாற்றி வரும் பாலமனோகரன் எமக்கு நல்ல இலக்கிய முதுசங்களைத் தந்துள்ளார். மேலும் புதிய அனுபவ வெளியை  புதிய படைப்புகள் மூலம் தர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

Saturday, October 21, 2023

புலர்காலையின் வலி மதிப்பீடு - தாட்சாயணி

 

/

ஒளியுறிஞ்சப்பட்ட புலர்காலைகளின் நிலத்திலிருந்து : தாட்சாயணி

ஒளியின் முதல் துளி அரும்பி வழியும் புலர்காலைகளின் மீது வலி சொட்டுச் சொட்டாய்ப் படர்ந்திருந்த நிலம் ஈழம். ஒவ்வொரு காலையும் விடியும் போதே, இருண்ட துயரங்களால் நிறைந்து எதிர்கொண்டு நடந்த அக்காலங்களை நினைவு கொள்கையில் கூர் கொள்கிறது இயல்வாணனின் புலர்காலையின் வலி.தொண்ணுறுகளின் நடுக்கூறிலிருந்து இரண்டாயிரங்களின் பிற்பகுதி வரை தன் மனதை அசைத்த வலிகளின் நரம்புகளைக் கீறியெடுத்து வாசகர் கரங்களில் வைக்கிறார் இயல்வாணன். சொற்களின் பெருக்கு இயல்பாக அவரது பேனாவிலிருந்து இறங்கி ஓட ஆரம்பிக்கிறது.சில கணங்களில் அது நிற்கிறது. தடைப்புறுகிறது. அக்கணங்களில் பின் தொடரும் நாமும் நிற்கிறோம். வலி ஒரு ஊசியாக நெஞ்சில் தைத்துச் செல்கிறது. ஒரு புலர்காலை விடியும் தருணத்திலேயே வலியைத் தருவது எவ்வாறெனக் காட்டுவதோடு இயல்வாணனின் பணி முடிந்து விடுகிறது. மீதமிருப்பது வாசகனின் கடமையல்லவா?

கிராமங்கள் ஒவ்வோர் மனதின் ஆழ்மனத்தோடும் ஒன்றியிருக்கின்றன. கிராமங்கள் என்றால் அந்த மண், அதில் வாழும் பறவைகள், விலங்குகள் வேறு உயிரிகள் என்பவற்றோடு அந்த மண்ணுடன் இயைந்த செயற்பாடுகள், அங்கிருக்கும் வாழ்க்கைக்கோலங்கள் எல்லாமும் உள்ளடங்கியவை தானே. இங்கும் கதைசொல்லியின் மனதில் உயிர்த்திருக்கும் விடயங்கள் நமக்கு நெருக்கமானவை.உற்சாக ஊற்றாக இருக்கின்ற ஊருக்குள் திடீரென்று ஊடுருவும் மாற்றங்களுள் நவீன விவசாயமும், யுத்தமும் முக்கியமானவை.அதுவரைக்கும் அங்கிருந்த விவசாயிக்கு நேசமான பறவைகள் உரப்பாவனையால் செத்தொழிந்து போவது போல, போர் அங்குள்ள மனிதர்களையும் விழுங்கி விடுகிறது, குறிப்பாக செல்வியை. குஞ்சரப்பா போன்றவர்கள் இயற்கை விவசாயத்தின் நம்மாழ்வாராக ஊருக்குள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன விவசாயத்திற்கு ஆசைப்படுவோருக்கு குஞ்சரப்பா ஒரு மாரித்தவளை மாதிரி. அப்படியே கத்திக் கத்தி மாரித் தவளைக்கு வருவது போலும் இறப்பே அவருக்கும் வாய்த்து விடுகிறது.

கதைசொல்லியின் பார்வையில் அடிக்கடி தட்டுப்படும் செண்பகம் குரலாலும் தோற்றத்தாலும் அழகற்றது. அதன் மண்ணிறச் சிறகுகளும், சோடாச் சிவப்புநிறக் கண்மணிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.செண்பகம் அழகற்ற பறவையல்ல. அதன் அசைவு ரசிக்கத் தக்கதல்லதென்றும், அதன் குரல் வசீகரமற்றதாகவும் கதைசொல்லியால் அது சுட்டப்பட்டாலும் அதை நோக்கிய அவனது ஈர்ப்பு ஒரு போதும் குறைவற்றது என்பதையே அவன் செண்பகமே, செண்பகமே பாடலைப் பாடும் போது வாசகனால் உய்த்துணர முடிகிறது. நகரமயமாக்கல் அருக வைத்த பறவையினங்களில் செண்பகமும் முக்கியமானது.இப்போது அபாயகரமாக அழிந்து வருவதாக அதனையும் குறிப்பிடுகிறார்கள். தமிழீழம் தேசியப்பறவையாக அங்கீகரித்திருந்த செண்பகத்தின் அழிவின் தொடக்க காலத்தை உணர்ந்தோ அல்லவோ தன் கதையில் அருமையான சூழலியல் குறியீடாக்கியிருக்கிறார் இயல்வாணன். வசந்த காலத்தில் முருங்கை பூத்துக் காய்க்கும் போது, சாம்பல் படிவுகளாய் அடியில் மொய்த்துக் கிடக்கும் மயிர்க் கொட்டிகள், அவை உடலில் பட்டால் ஏற்படும் சுணை, ஊர்ப்புறங்களில் காவோலையால் தீ மூட்டி அவற்றை அழித்தல், செண்பகங்கள் வெகு எளிதாக அம்மயிர்க் கொட்டிகளைப் பிடித்துத் தின்று அழித்து விடும் உணவுச் சங்கிலியின் செயன்முறை எனப் புலர்காலையின் பனிப்பொழுதில் மங்கித் தெரியும் காட்சிகள் வாசகனின் நினைவுகளைக் கிளறக் கூடியவை.

அனுபவஸ்தர்களான கிராமத்து மனிதர்களிடம் எந்தக் காலத்திலும் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் ரயில் ஓடாத தண்டவாளத்திற்குப் பக்கத்து மதகில் சாவதானமாகக் கத்தி தீட்டிக் கொண்டிருக்கும் தம்பரப்பா இரண்டாம் உலக யுத்த அனுபவங்களை நினைவு கூருவது ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் எங்கள் பாட்டன், பாட்டிகள் எமக்குச் சொன்ன அனுபவங்களுக்கு நிகரானது. கதை கேட்கும் அனைவரையும் அக்கால நினைவுகள் தீண்டுகின்றன.வெள்ளையர்,யப்பானியர், இந்தியர், சிங்களவர் எனத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட யுத்தத்தின் விளைவுகள் ஒவ்வொரு காலத்திலும் கரும்புகைக் குண்டுகளாய் கிராமங்களில் ஊடுருவியிருக்கின்றன. யப்பான்காரன் கொழும்புத் துறைமுகத்தில், திருமலைத் துறைமுகத்தில் போட்ட குண்டுகளின் கரும்புகை இப்போதைய நினைவில் மெல்லிய புகைப்படலமாகக் கிளம்புகிறது. உயிர்களின் அவலமும், வெட்டப்பட்ட பானா வடிவப் பதுங்குகுழிகளும் எக்காலத்தும் ஒன்று தானே. வெள்ளைக்காரர் நம்மவரின் பட்டையிறைப்பினை வேடிக்கை பார்த்து இளநீர் வாங்கிப் பருகிப் பண்டமாற்றாக சவர்க்காரம், சிகரெட்டைக் கொடுத்த நினைவுகளை சொல்லும் தம்பரப்பா மூலம் இன்னல் காலத்து நகைச்சுவைகளும் மனம் நனையக் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணத்துச் சீதன மனப்பாங்கின் வழி வந்த ஆண், சீதனத்திற்கும் மேலதிகமாகத் திருமணச் செலவையும் பெண் வீட்டாரே ஏற்க வேண்டும் எனும் ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாகச் சீரழியும் குடும்பத்தையும் இயல்வாணன் வெளிச்சத்திற்கு கொண்டு வர மறுக்கவில்லை. பனை பூக்கும் காலத்திற்குப் பின்பதான காலங்களில் குடித்து விட்டுத் தெரு வழியே புலம்பி வரும் பெரும்பாலான அடித் தட்டு வர்க்க ஆண்களின் அலப்பறைகளும், அதன் விளைவாகக் குன்றி விடும் மனைவி குழந்தைகளுமென விரியும் இக்களம் வேலிகளில் கறையான்களென முளைத்து மறையும் கண்களையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை. எவ்வளவு தூஷண வார்த்தைகள் தன் மீது வந்து விழுந்தாலும்,கணவனை ஊரார் கண்முன் அவமானப்பட விடாமல் உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் இருபதாண்டுக்கு முற்பட்ட ஒரு பெண், அவளது மனதில் தாலி குறித்து இருக்கும் புனித பிம்பம், அதற்குப் பிந்திய தலைமுறையிடம் கோபத்தை ஏற்படுத்தினாலும் இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும் அவள், அதனாலேயே மனம் நொந்து நோய்க்குத் தன்னைப் பலி கொடுக்க முன் வந்து விடுகிறாள். இத்தனை பிள்ளைகள் பிறந்த பின்பும் திருமணச் செலவுகளைக் கட்டி முடிக்காததால் தாய் தன்னிடம் கடன்காரியாக இருப்பதை நினைவுறுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு குடிகாரத் தந்தை தன் பிள்ளைகளுக்கு இறுதியில் கொண்டு சேர்க்கப் போவது என்ன? அவர் தான் குடிகாரர். அவர் இழந்த நினைவைச் சமப்படுத்திப்பிள்ளைகளிடத்தே நல்ல உணர்வுகளை விதைக்கச் சம்மதிக்கிறாளா அம்மா? அந்தக்கால அம்மாவின் இந்தப் பண்பு அவளுடைய மகளிடம் கூடச் செல்வாக்குச் செலுத்தாது என்பதை ‘அக்கா’ பாத்திரத்தின் உரையாடலினூடு அழுத்திச் சொல்கிறார் இயல்வாணன்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை என்பது,பிள்ளைகளின் திறனை வளர்ப்பதற்குப் பதிலாகப் பெற்றோர்களதும், ஆசிரியர்களதும், பாடசாலைச் சமூகத்தினதும் கௌரவப் பரீட்சையாக அமைவதை, ஈழச் சூழலில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அவதானிக்க முடியும். அதன் விளைவாகப் பிள்ளைகள் வதைக்கப்படுவதையும், உள ஆற்றல்படுத்தலுக்கான தேவைக்குட்படுத்தப்படுவதையும் காண்கிறோம். பந்தயக் குதிரைகள் என இயல்வாணன் சரியாகவே அடையாளப்படுத்தியிருக்கிறார். கல்விப் பின்புலத்தில் ஒரு ஆசிரியராக, அதிகாரியாகக் கடமையாற்றும் அவரால் ஒரு பிள்ளையைச் சரியாகவே அவதானிக்க முடிவதுடன் கதையில் அப்பிள்ளை அங்குள்ள போட்டிச் சூழலைக் கடந்து செல்லக் கூடிய நிலையில், தான் வாசித்த நல்ல புத்தகங்களின் வழிகாட்டலில் நிமிர்ந்து நிற்கிறான் என்பதைப் பூடகமாக உணர முடிகிறது.

சின்னஞ்சிறு குடில்கள் முளைத்த அகதிமுகாம்கள் யுத்தகாலத்தில் எங்கும் தானிருந்தன.அவற்றை நிர்வகித்த கரங்கள் மட்டும் ஒரு தரம் போராட்டக்காரரிடமும், மறு தடவை இராணுவத்திடமுமென இடம் மாறின. நிர்வகித்த கரங்கள் யாருடையவை என்பதை மிக இலகுவாகவே சொல்லி விடலாம். அதற்கேற்றபடி இருக்கும் அங்கு தங்கி வாழ்பவர்களது ஊசலாட்டம். சின்னஞ்சிறிசுகள் ஆயுதங்களைத் தொட்டுப் பார்ப்பதும், போராளிகள் தோள்களில் வாஞ்சையாகத் தொற்றிக் கொள்வதும் காலகாலமாக ஒவ்வொரு போராளியின் நினைவிலும் ஊறிக்கிடப்பது போலவே, அந்தச் சின்னஞ் சிறுவர் நினைவுகளிலும் படர்ந்திருக்கிறது. குலப்பெருமையும், மீண்டு தப்புதலுமெனப் புலப்பெயர்வில் ஒழிந்து கொண்ட சமூகத்தைத் துறந்து சனத்துக்குப் போராடுபவனது தாகத்திற்குத் தண்ணீர் தரவும், ஊரில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தானே போராட்டம் வேர் ஊன்றி வளர்ந்தது.ஒரு காலத்தைய நினைவுகளின் ஈரம் கண்களை மூடித் திளைக்க வைக்கிறது.

உச்சத்தில் இருக்கும் ஒரு சந்ததியின் வாழ்வு எப்போதுமே உச்சத்தில் இருப்பதில்லை. அதன் கொடி வழி வரும் அடுத்த தலைமுறை வீழ்ச்சியைச் சந்திக்காமல் போகாது. இது வரலாறு நமக்குத் தரும் பாடம். பட்டொளி வீசிப் பிரகாசித்த எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து மண்ணோடு மண்ணாகின. சாம்ராஜ்யங்கள் அப்படியிருக்க சாமானிய மனிதனின் சரித்திரம் மட்டும் இக்கணக்கில் தப்பி விடுமா? பூதப்பிள்ளை உடையார் குடும்பத்தின் குலப் பெருமை அவரது அதிகாரத்தின் வழி நகர்ந்து, உடுப்பிட்டிக்குச் சென்று வந்த போது பிடித்த கைரகப் பேயினால் அவர் இரத்தம் கக்கி இறக்கின்ற போது தன் அந்திமத்தை நெருங்குகின்றது. அவர் இறந்தது பஞ்சமியில். பஞ்சமியில் இறப்பவர்கள் கூட இன்னும் ஐந்து பேரைக் கொண்டு செல்வார்கள் என்பது ஊர் வழக்கு. உடையாரின் மகளுக்கு வாய்த்தவன் மலேஷியா போன பிறகு, உடையாரம்மாவும் இறக்க, இரு தூய மரபும் துய்ய வந்த மகள் செல்லாச்சிப்பிள்ளை தனித்துப் போகிறாள். இருந்தாலும் உடையார் பரம்பரையல்லவா? பரம்பரைக் கௌரவமும், ஆளுகையும் தந்த துணிச்சல் தனித்து வாழ்தலில் அவளுக்கு அச்சம் தரவில்லை. எனினும் கணவன் திரும்பி வரவேண்டும் எனும் பெண்மைக்குரிய இயல்பான இறைநேர்த்தி, யாப்பன்காரனை யுத்தத்தை மலேஷியா மீது திருப்ப வைக்க, அப்புத்துரையை ஊர் நோக்கித் திருப்பி அனுப்புகிறது. தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும் ஊழ் வாய்த்ததில் அவனும் இறக்கிறான். இறுதி அரசியாக அந்த வீட்டைத் தனியே ஆண்ட செல்லாச்சியும் ஒரு நாள் பாயில் இறந்து கிடந்த பிறகு, அந்த வீடு போராளிகளிடம் சென்று அதற்கும் பிறகு இராணுவத்திடம் கை மாறி, கதைசொல்லியின் கண் முன் மண் மேடாகக் கிடக்கிறது.புலர்காலையின் வலியின் அழியாத தடம் அந்த வீடிருந்த மண்மேடு.

யுத்தகாலங்கள் வயதுகளைத் தின்ற பெருவலி ஈழத்து இளைஞர்களின் மனதில் ஒரு காலமும் அற்றுப் போகாது. அவ்வாறு நாள்கள் முழுவதையும் தின்ற ஒரு காலத்தின் பதிவு முடவன் நடை. விடிகாலையில் வீட்டை விட்டுப் புறப்படும் கதைசொல்லி இடைவெளியில் பதினோரு சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.இங்கு சொல்லப்பட்டவற்றை விட சொல்லப்படாதவை அதிகம். அந்தப் பதினோரு காவல் அரண்களில் இறங்கி, ஏறி நடந்து வாகனத்தில் இடத்தைப் பறி கொடுத்து பயணிக்கிற கடினத்தைத் தவிர அந்தப் பயணத்திற்கிடைப்பட்ட நேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு போராளி பிடிபடவோ, ஒரு குண்டு வீச்சு நிகழாமலோ இருக்க வேண்டும் என்றும் மனம் பிரார்த்திப்பதென்பது ஒவ்வொரு பயணியினதும் முடவன் நடை மீதான அங்கலாய்ப்புத் தான். முடவன் நடைக்கு, காவலரண்கள் தடை போட்ட காலங்கள் போலவே ‘கொன்வே’ எனும் வாகனத் தொடரணி பெருஞ்சாலைகளை மறித்த காலங்களும் இருந்தன.பலாலி வீதி, கண்டி வீதி போன்ற வீதிகளூடு பயணிப்போர், இரவு ஒன்பது, பத்து மணிக்குத் தம் குழந்தைகள் உறங்கிய பின்னரே வீடு போய்ச் சேர்வர் என்பதையும் இங்கு நினைவூட்டல் தகும்.
அன்றாடங்களின் பிரச்சினை எளிய குடும்பமொன்றை எவ்வாறு தாக்கும் என அறிந்துள்ள நமக்கு யுத்தம் பலியெடுத்த குடும்பத்தில் ஏற்பட்ட தாக்கத்தைப் பேசும் போது இதயம் கூசாதா…? அத்தகைய துயரைப் பேசுகிறது ‘வெளிக்கும்’ எனும் கதை. குடும்பத்தலைவன் அற்றுப் போன குடும்பத்தில் ஒற்றைத்தாய் ஒவ்வொரு வருடமும் பூவாணங்களும் , வெடிகளும் கொடுத்துத் தன் குழந்தைகளின் புதிய வருடத்திற்கு ஒளியேற்றுகிறாள். யுத்தம் ஏற்படுத்தும் பொருளாதாரத்தடை, அதிகரித்த விலையேற்றம் ஒரு கட்டத்தில் கதைசொல்லிக்குப் புது வருடமே இல்லை என்றாக்குகிறது. இழுத்து, இழுத்துத் தேய்ந்த பதினெட்டு வருடங்களையும் சலித்துக் கொள்ளும் கதைசொல்லி தான் உயிர்த்திருப்பதன் அர்த்தம் அடுத்த புதுவருடத்திலாவது பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறான். புலர்காலையின் பனியை மீறி விழும் முதல் துளியின் ஜொலிப்பு இது.
போர் துரத்தத் துரத்த இடம் பெயர்ந்த ஒரு காலகட்ட வாழ்வு, பெயர்க்கப்பட்ட தண்டவாளங்கள் மீது கூடப் புதிய குடிசைகளைக் கட்டியெழுப்பியது. இந்தியப்படை நாடு மீண்ட காலகட்டத்திலேயே, இந்திய ஜவான்களை ஏற்றிக் கொண்டு சென்ற புகையிரதங்களைச் சிறுமியராயிருந்த நண்பிகளோடு வேடிக்கை பார்த்த நினைவு என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு வந்த இளம் சந்ததி யாழ்ப்பாணத்தில் ரயிலைக் கண்டே இருக்கவில்லை. தண்டவாள சிலிப்பர்கட்டைகள் பிடுங்கப்பட்டுப் பதுங்குகுழிகளுக்கு மேல் அரண்களாக்கப்பட்டன.யாழ் இடப்பெயர்வின் போது வரிசை, வரிசையாகத் தண்டவாளப் பாதைகளில் குடிசைகள் எழுந்தன. மாவிட்டபுரத்தில் தன் சொந்த வீட்டில் இருந்த போது தினமும் புகையிரதக் கூவலில் கண் விழிக்கும் கந்தையர் ரயிலின் எஞ்சின் பெட்டி போலக் குடிசைகளுக்கெல்லாம் முகப்பாக அந்த ரயில் பாதையில் குடிசை அமைத்து வாழ்ந்ததென்பது எவ்வளவு முரண் நகை. யுத்தம் முடிந்த மீள்குடியேற்றக் காலங்களில் புகையிரதப் பாதையில் குடிசையமைத்து இருந்தவர்களும் தனியான ஒரு வகுதியனராகக் கருதப்பட்டு அவர்களுக்கும் மீள் குடியேறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டமை இன்னொரு தனிக்கதை.

சாதாரண எளிய மனிதர்களிடத்தில் போராடும் உந்துசக்தியைக் கொண்டு வந்து சேர்த்தது எது? குருதியும், நிணமும் பெருகச் செய்யும் யுத்தம் அத்தனை அழகானதா என்ன? இளமையும், அழகும்,உணர்வுகளும் பொதிந்த காதலும் வாழ்வும் இருப்பின் அவற்றைத்தான் யுத்தத்தை விட அதிகமாக மனிதர்கள் தேர்வு செய்யக் கூடும். அப்படியொரு இனிய குடும்பத்தையும், வாழ்வையும் அணியாகக் கொண்ட ஒரு உழைப்பாளி அக்குடும்பத்திற்காகத் தன் உயிரைப் பிழிந்து உழைப்பதைத் தானே தன் வாழ்விற் கிடைத்த வரமாகக் கொள்வான். இயற்கையின் புயலுக்குள்ளும், எதிர்ப்பிற்குள்ளும் கட்டுமரமேறி இரவின் இருளை வென்று வாழ்வை வெல்லும் தைரியம் மிக்க அவனை எதிரியின் குண்டுகளும், ஷெல்களும் விரட்டி, விரட்டி அவனது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. நிறைமாதக் கர்ப்பிணியான அவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவன் தான் எதையாவது தர வேண்டும்? திரும்பத், திரும்ப முயற்சித்தும் அவனைத் தொழில் செய்ய விடாது விரட்டுகின்றன எறிகணைகள். வீடு திரும்பும் அவனுக்கு மனைவியோடு சிறு முரண். தூண்டில் மீன் பிடிக்கக் காத்திருப்பவனிடம் பிள்ளையிடம் தூதனுப்பி சாப்பிட அழைக்கிறாள் மனைவி. சில மீன்களையாவது பிடித்துக் கொண்டே வருவதாக ஓர்மத்துடன் சொல்லியனுப்புகிறான். அவன் திரும்பி வரும் போது எஞ்சியிருப்பது என்ன? இடிந்த கற்குவியலும்,சிதைந்த உடல் பாகங்களும், கொல்லையில் கட்டியிருந்த ஆட்டின் உடலும் மட்டுமே . புலர்காலை பலியெடுத்த அவன் குடும்பத்தின் நிழலையேனும் இனி அவனால் தொட்டுணர முடியுமா…? பதில்களற்ற கேள்விகளே, வாழ்க்கை முழுவதையும் தின்று தீர்க்கின்றன.

அடுக்கடுக்கான இறப்புகளும், சிதைவுகளும் காணும்தோறும் பலவீனமான இதயங்களின் அடுக்குகள் குலைந்து விடுகின்றன. இராசம்மா அக்காவுக்கு ஏற்படும் உளப்பிறழ்வு சமூகத்தில் அவள் கண்ட யத்தத்தின் மூர்க்கத்தால் விளைந்தது. யுத்தம் என்ன செய்யும் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரிகிறது. அதனால் தான் தன் குடும்பத்திலிருக்கின்ற, சமூகத்திலிருக்கின்ற யாரை நோக்கியும் அந்த யுத்தம், கொடூர வாளை வீசிவிடக்கூடும் என அஞ்சுகிறாள். அது அவள் பிள்ளைகளை மட்டுமல்ல. அவ்வூரிலுள்ள எந்தப் பிள்ளைக்குமான எச்சரிக்கைக் கூவல். யுத்தத்திற்கான எதிர்க்குரல்.அதைப் புரிந்து கொள்ளும் போது தான் அவள் மீதான அனுதாபத்தை விட, யுத்தகாரணர்கள் மீதான எதிர்க்குரலை உலக அரங்கில் பதிவு செய்ய முடியும்.

புலர்காலையின் வலியாக இயல்வாணன் தொட்டுச் சென்ற எதுவும் எம் மண்ணில் பிறந்தவர்களுக்கு அந்நியமானதல்ல. காலங்களின் ரணங்கள் மீது ஒத்தடம் கொடுக்க யாருமில்லாத வேளையில் இவ்வாறான எழுத்துக்களே கொஞ்சமேனும் வலியை ஒற்றியெடுக்கின்றன. அப்போது ஒற்றியெடுத்த எழுத்துக்கள் மீது படர்ந்திருந்த வலி இப்போது வாசிக்கும் போது மீளத் தொற்றிக் கொள்கிறது. எழுத்தாளனுக்கு வேறென்ன பணி இருக்கப் போகிறது? காலத்தைக் கலைத்துக் கலைத்து நிகழ்காலத்தின் கனவுகள் மீது கடந்த காலத் துயரைப் பேசுவதைத் தவிர.

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

உரையாடலுக்கு