Tuesday, August 31, 2021

நேர்காணல் தாமரைச் செல்வி

 நேர்காணல்:

தாமரைச் செல்வி

நேர்கண்டவர் : இயல்வாணன்

படங்கள் : மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய ரதிதேவி என்ற இயற்பெயர் கொண்ட தாமரைச்செல்வி 04-08-1953இல் விவசாயக் கிராமமான பரந்தனில் உள்ள குமாரபுரத்தில் பிறந்தவர். நீண்ட காலம் அங்கேயே வாழ்ந்தவர். இறுதி யுத்தத்தின் நிறைவில் கொழும்பில் வாழ்ந்த அவர் தற்போது பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். 1973இல் வீரகேசரியில் பிரசுரமான சிறுகதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த தாமரைச்செல்வி சுமைகள்(1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி(1992), தாகம்(1993), வீதியெல்லாம் தோரணங்கள்(2003), பச்சை வயல் கனவு(2004), உயிர்வாசம்(2019) ஆகிய நாவல்களையும், வேள்வித்தீ(1994) குறுநாவலையும், ஒரு மழைக்கால இரவு(1998), அழுவதற்கு நேரமில்லை (2002), வன்னியாச்சி(2005) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். யுத்தம் அவரது எழுத்துப் பிரதிகளை அழித்தது போக இவற்றை அவர் வெளியிட்டுள்ளார். இவருடைய சிறுகதைகள் (உதிரிப் பூக்கள் மகேந்திரன் இயக்கிய இடைவெளி, இமயவர்மன் தயாரித்தளித்த பசி)  குறும் படங்களாக்கப்பட்டுள்ளன. இலங்கை அரச பாடசாலை பாடநூலில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது. உயிர்வாசம் நாவல் வெளியீட்டுக்காக வந்திருந்தவரை பரந்தனில் கலைமுகத்துக்காக நேர்கண்டோம்.

கே : கிளிநொச்சி மண்ணைப் பிரதிபலிக்கும் அதிக படைப்புக்களை எழுதியவர் நீங்கள். மருத நிலப் பண்பாடும் வாழ்வியலுமே உங்கள் அதிக படைப்புக்களில் விரவிக் கிடக்கிறது. எழுத வேண்டும், எழுத்தாளராக வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

ப: சின்ன வயதில் இருந்தே எனக்கு வாசிக்கின்ற பழக்கம் இருந்தது. ஐந்தாம் வகுப்பில் எனது தமிழ் ஆசிரியராக இருந்த வை.நடராசா அவர்கள் சகுந்தலை சரிதை, வியாசர் விருந்து, சக்கரவர்த்தி திருமகன் போன்ற புத்தகங்கள் தந்து வாசிக்க வைத்திருக்கிறார். தமிழின் அழகு அந்த வயதிலேயே என்னுள் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் படித்த போது  அங்குள்ள நூலகத்தில் இரவல் பெற்று, அகலன், கல்கி, ஜெகசிற்பியன் போன்றோரின் நூல்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து இராமநாதன் கல்லூரியில் தையல் பழகிய நேரம் அதிகளவு புத்தகங்களை வாசிக்க முடிந்தது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு, பத்தினிக் கோட்டம் என்று நிறையப் படித்தேன். அதன் பின்னரான நாட்களில்தான் ஈழத்து எழுத்துக்கள் அறிமுகமானது.

படிப்பை நிறுத்தி வீட்டில் இருந்த நாட்களில் கிளிநொச்சி பிரதேச சபை நூலகத்தில் இருந்து கே.டானியல், இளங்கீரன், செங்கை ஆழியான் போன்றோரின் நூல்களைத் தேடிப் படிக்க முடிந்தது. அதனால்தான் எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதென நினைக்கிறேன். இது வாசிப்பின் அருட்டுணர்வால் விளைந்தது. என்னைச் சுற்றியிருந்த உலகம் உழைக்கும் மக்களினால் ஆனது. அவர்களது பிரச்சினைகள் மனதைப் பாதித்த போது அவற்றைச் சொல்ல நினைத்தேன். அவற்றை எழுத்தில் வடித்தேன்.

கே : ரதிதேவி என்பது உங்களது இயற்பெயர். தாமரைச் செல்வி என்ற புனைபெயரைச் சுமக்கக் காரணம் என்ன? பெயர்த் தெரிவுக்கு விசேடமான காரணங்கள் ஏதுமுண்டா?

ப : விசேட காரணங்கள் என்று எதுவுமில்லை. சோமு எழுதிய நந்தவனம் நாவல் படித்தேன். அதில் வந்த நாயகியின் பெயர் தாமரைச் செல்வி. அப்பெயர் என்னைக் கவர்ந்திருந்தது. நான் எழுத ஆரம்பித்த 1973இல் சொந்தப் பெரை விடுத்து, தாமரைச்செல்வி என்ற புனைபெயரை வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். வைத்து விட்டேன். அவ்வளவுதான்!

கே : உங்களுடைய ஆதர்சமாக உங்கள் தந்தையார் இருந்துள்ளார். காடு வெட்டி, கழனி சமைத்த தந்தையாரின் உழைப்பையும், வியர்வையையும், பாடுகளையும் பேசியது உங்களது பச்சை வயல் கனவு நாவல். தந்தையார், அவரின் பின் கணவர், பிள்ளைகள் என்ற குடும்ப வட்டம் உங்களது படைப்பாக்கத்துக்கு எவ்வாறு துணை நின்றது?

ப : எங்கள் தந்தை ஒரு விவசாயி. கடின உழைப்பாளி. அன்பும் இரக்கமும் உடையவர். அடுத்தவரை நேசிப்பதும், உதவி செய்வதும் அவரது இயல்பு. இலக்கியப் பரிச்சயமோ, புரிதலோ அவருக்கு இருந்ததில்லை. எங்கள் குடும்பத்திலோ, எங்களுக்குத் தெரிந்தவர்களிலுமோ யாரும் எழுத்தாளர்களாக இருந்ததுமில்லை. ஆனாலும் நான் எழுதத் தொடங்கிய போது எனது தந்தையார் அதை ஆதரித்தார். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கதைகள் வரும் போது தானும் வாசிப்பார். அவருக்கு விமர்சிக்கத் தெரியா விட்டாலும் நல்லாயிருக்கு என்று சொல்லி ஊக்குவிப்பார்.

அதன் பின் எனது சகோதரர்கள். அவர்களும் நிறைய வாசிப்பார்கள். அவர்கள் இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்கள். எனது கதைகளைப் படித்து, கருத்துக்கள் சொல்வார்கள். அதுவும் என்னை ஊக்குவித்தது. 1974இல் எனக்குத் திருமணம் நடந்தது. எனக்குக் கணவராக வாய்த்தவரும் ஒரு இலக்கிய நேசிப்புள்ளவராக இருந்தது எனக்குப் பெரிய வரமானது. அவரும் ஒரு எழுத்தாளராக இருந்திருக்கிறார். வீரகேசரியில் வரணியூர் சி.கந்தசாமி என்ற பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார். வாசிப்பையும், எழுத்தையும் பற்றியே அதிகம் பேசுவார். இப்படியொரு நிலைமை உள்ள நிலையில் நான் எழுதாதிருந்தால்தான் ஏதாவது அதிசயம் நேர்ந்திருக்கும். நாங்கள் வாசிப்பை நேசித்ததால் பிள்ளைகளும் வாசிப்பில் ஆர்வம் கொண்டிரு;தார்கள். எல்லோரது ஆதரவும், ஊக்குவிப்புமே இன்றளவில் எழுதவும், வாசிக்கவும், இலக்கிய உலகில் தொடர்ந்து பயணிக்கவும் எனக்கு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

கே : 1973 முதல் எழுதி வருகிறீர்கள்.1977இல் வீரகேசரி பிரசுரமாக வந்த சுமைகள் நாவல்தான் உங்களை இலக்கிய உலகில் அடையாளப்படுத்தியது எனக் கருதுகிறேன். கூழாங்கல் போன்று பயனற்று இருந்த இளைஞன் ஒருவன் குடும்பத்தைத் தாங்கும் சுமைதாங்கியாக மாறியதைச் சொல்லும் நாவல் அது. அந்த நாவலை எழுத நேர்ந்ததேன்? அதற்குக் கிடைத்த வரவேற்பு எத்தகையது?

ப: அந்த நாட்களில் வீரகேசரி பிரசுரங்களுக்கு வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. நாங்கள் ஆவலோடு இவற்றை வாங்கி வாசித்து வந்தோம். தமது 50ஆவது பிரசுரமாக வெளியிடுவதற்காக ஒரு நாவல் போட்டியினை அறிவித்திருந்தார்கள். அதற்காக எழுதப்பட்டதே சுமைகள் நாவல். அந்த நாவல் போட்டியில் செங்கை ஆழியானின் காட்டாறு முதல் பரிசு பெற்று, 50ஆவது பிரசுரமாக வெளிவந்தது. எனது நாவலுக்கும் வீரகேசரி பிரசுரத்தில் இன்னொரு சந்தர்ப்பத்தைத் தந்தார்கள். வீரகேசரி பிரசுர நிர்வாகி எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் என்னை அழைத்துக் கலந்துரையாடினார். மீண்டும் திருத்தி எழுதித் தருமாறு கேட்டார். அவர் கூறிய ஆலோசனைகளை மனதில் வைத்து திரும்பவும் எழுதி அனுப்பினேன். அதை ஏற்று வீரகேசரியின் 55வது பிரசுரமாக சுமைகளை வெளியிட்டார்கள்.

நாம் அன்றாடம் பார்க்கும் நிறைகுறைகளுடனான பதின்ம வயது இளைஞன் ஒருவனை வைத்து எழுதப்பட்ட நாவல் அது. பல பேருடைய உணர்வுகளோடு செந்திலின் பாத்திரம் ஒன்றிப் போனதால் நல்ல வரவேற்பும், ஆரோக்கியமான விமர்சனமும் கிடைத்தது. வன்னிப் பிரதேச எழுத்து என்று வரும் போது ஆய்வாளர்களினால் இன்றளவிலும் குறிப்பிடப்படும் நாவல்களில் ஒன்றாக சுமைகளும் இடம்பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியே.

கே : வன்னி மண்ணின் வாழ்வியலையும், அதைத் தடம் புரட்டிய இடப்பெயர்வையும் உங்கள் கதைகள் அதிகம் பேசியுள்ளன. பொதுமைப்பட்ட வாழ்வனுபவங்களாக அக்கதைகள் கட்டவிழ்ந்துள்ளன. பல எழுத்தாளர்கள் இருந்தும் எல்லோரும் இதனைப் பதிவு செய்யவில்லை. இவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இடம்பெயர் வாழ்வனுபவங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கருதுகிறீர்களா?

ப: எந்தவொரு படைப்பாளியும் விரும்புவது போலவே நானும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை அடையாளம் காட்டவே விரும்பினேன். என்னைச் சுற்றி நடப்பவைகளையும், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையுந்தான் என்னால் எழுத முடியும். போரும் இடப்பெயர்வுமாக அலைந்து திரிந்த மக்கள் கூட்டத்தின் நடுவேதான் நானும் வாழ்ந்தேன். ஒரு சமூகத்தின் அலைக்கழிப்பில், அந்த அலைக்கழிப்பில் தானும் ஒருவராக எழுத்தாளர் ஆகும் போது அந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

வன்னியின் வாசல்கள் அடைக்கப்பட்டிருந்த காலத்தின் வாழ்வியலை இத்தகைய எழுத்துக்கள்தான் சுமந்து கொண்டு சென்று சேர்ப்பித்தது. எத்தனையோ படைப்புக்கள் அக்காலத்தில் வெளிவந்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் அந்த இடப்பெயர்வு அவலங்கள் முழுமையாக எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.

கே : இடப்பெயர்வு உங்கள் வசமிருந்த படைப்புக்கள் பலவற்றையும் உங்களிடமிருந்து பறித்து விட்டன என ஒரு நேர்காணலில் கூறியுள்ளீர்கள். அது பற்றிக் கூற முடியுமா?

ப : எமது ஊரான பரந்தன் ஆனையிறவுக்கு அருகில் உள்ளது. ஆனையிறவில இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் நகர்ந்து வரும் போது முதல் இலக்காக எமது கிராமமே இருந்தது. இராணுவம் முன்னேறச் சண்டை ஆரம்பிக்கும் போது ஊரை விட்டுத் தூர ஓடுவதும், சண்டை ஓய்ந்த பின் மீண்டும் திரும்பி வருவதும் நீண்ட காலத்துக்குத் தொடர்கதையாக இருந்தது. முன்னேறி வரும் இராணுவம் வீடு வாசலை எரித்து விட்டுத் திரும்பிப் போயிருக்கும். 

எழுதத் தொடங்கிய நாளிலிருந்து எனது கதைகள் பிரசுரமாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளைக் கவனத்தோடு சேகரித்து வைத்திருந்தேன். கதையின் பெயர், பிரசுரமான பத்திரிகை, சஞ்சிகையின் பெயர், திகதி என்ற தனியான பதிவும் என்னிடமிருந்தது. 1986இல் முதல் தடவையாக எங்கள் வீடு எரிக்கப்பட்ட போது அதுவரை சேகரித்தவை அழிந்து போயின. மறுபடி சேர்த்தவை 1991இல் வீடு எரிக்கப்பட்ட போது கருகிப் போயின. மீண்டும் சேர்த்தவை இறுதி யுத்தத்தின் போது இல்லாமல் போயின. எனக்குக் கிடைத்த விருதுகள், சான்றிதழ்கள் அத்தனையும் அழிந்தன. இந்த இழப்புகள் படைப்பாளி என்ற வகையில் எனக்கு அதிக துன்பந் தருவன. எனினும் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட எத்தனையோ உயிர் இழப்புகளின் மத்தியில் இந்தத் துன்பம் சாதாரணமானது என்றே தோன்றுகிறது.

கே : தொண்ணூறுகளின் முற்கூற்றில் கடுமையான பொருளாதாரத் தடை நிலவிய காலத்தில் உங்களுடைய மூன்று நாவல்களான தாகம், விண்ணில் அல்ல விடிவெள்ளி, வேள்வித்தீ என்பன மீரா வெளியீடாக வெளிவந்தன. இந்த நூல்கள் பற்றிக் கூறுங்கள். கூடவே மீரா வெளியீட்டின் பங்களிப்புக் குறித்தும் கூறுங்கள்.

ப : 1988 முதல் மீரா வெளியீடு என்னும் பதிப்பகத்தின் மூலம் திரு.டேவிற் லிகோரி அவர்கள் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். செங்கை ஆழியானின் மழைக்காலம், மண்ணின் தாகம், முற்றத்து ஒற்றைப்பனை, அக்கினி, செம்பியன் செல்வனின் கானகத்தின் கானம், து.வைத்திலிங்கத்தின் பூம்பனி மலர்கள், கே.எஸ்.ஆனந்தனின் ராதையின் நெஞ்சம், பூஜைக்காக வாழும் பூவை, இராவணன் கோட்டை, இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் முடிவல்ல ஆரம்பம், இருள் இரவில் அல்ல, முள்முடி மன்னர்கள், மீண்டும் புதிதாய்ப் பிறப்போம், இந்திரா பிரியதர்சினியின் நிலவே நீ மயங்காதே, வளவை வளவனின் சங்கரன், இயல்வாணனின் சுவடுகள், ஓ.கே.குணநாதனின் விடியலைத் தேடி, கே.ஆர்.டேவிட்டின் பாலைவனப் பயணிகள், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை, முருகுவின் ஊருக்கல்ல, வாமதேவனின் ஒரு இல்லத்தில் சில உள்ளங்கள் எனப் பல நூல்கள் மீரா வெளியீடாக வெளிவந்தன.

திரு.லிகோரி நாவல் ஒன்றை எழுதித் தரும்படி கேட்ட போது விண்ணில் அல்ல விடிவெள்ளி நாவலை எழுதிக் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து தாகம் நாவலும், வேள்வித்தீ குறுநாவலும் மீரா வெளியீடுகளாக வெளிவந்தன. நூறு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதற்கமைய எழுதப்பட்ட சிறுநாவல்கள் இவை.

அன்றைய காலத்தில் போராளிகளின் கட்டு;பாட்டில் இருந்த வடக்குப் பிரதேசத்தில் அரசாங்கத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் நல்ல காகிதங்கள் கிடைக்கவில்லை. பைல் மட்டை, பிறவுண் தாள், நீலக் கோடு போட்ட கொப்பி தாள்களில் அச்சிடப்பட்டே பல நூல்களும், பத்திரிகைகளும் வெளிவந்தன. இன்றைக்கும் அன்றைய நெருக்கடிகளின் போதான இலக்கிய வெளிப்பாட்டின் சாட்சியாக அந்த நூல்கள் உள்ளன. 1988 தொடக்கம் மீரா வெளியீடாக சுமார் இருபத்தைந்து நூல்கள் வரை வெளிவந்துள்ளன. இது அன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரை பெரும் சாதனை. சாதாரண மனிதனாக இருந்து இத்தனை பங்களிப்புச் செய்தவருக்கு ஈழத்து இலக்கிய உலகம் உரிய கௌரவத்தைக் கொடுக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது.

கே : மண்வாசனை கமழும் பாரம்பரிய வாழ்வியலை உங்கள் கதைகள் பேசுகின்றன. பெண்கள், அவர்களது உணர்வுகளையெல்லாம் பேசியுள்ளீர்கள். பெண்ணியம் சார்ந்த உங்களது பார்வை எத்தகையது? அதனை எவ்வாறு பதிவு செய்துள்ளீர்கள்?

ப : குடும்பத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சினைகளையும் சுமப்பவளாகவே ஒரு பெண் இருக்கிறாள். சமூக அமைப்பு அப்படித்தான் கட்டமைத்து வைத்திருக்கிறது. என்னைச் சுற்றியிருந்த அதிகளவான பெண்கள் உழைப்பாளிகளாகவும், பாமரர்களாகவுமே இருந்தனர். அவர்கள் சாமானிய வாழ்வில் அதிகம் நெருக்கடிகளைச் சுமந்தார்கள். போர் ஏற்பட்ட போது, அந்தப் போரின் அத்தனை நெருக்கடிகளும் அவர்களுக்கே சுமையானது. அவர்களது வாழ்க்கை மிகுந்த துயர் தருவதாக இருந்தது. மறுபுறம், துயரத்தைக் கடப்பவர்களாகவும் அவர்கள் இருந்தனர். அவர்களைப் பற்றியே நான் அதிகம் எழுதியிருக்கிறேன்.

கல்வியறிவு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பது உண்மையே. ஆனாலும் அதிகம் கல்வியறிவு பெற்றிராத பெண்கள் சுயமாக உழைத்து, தம் காலில் நின்று சமூகத்தை எதிர்கொள்வதையும் தற்போது பார்க்கிறோம். போரின் விளைவாக உருவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எவ்வாறு எதிர்நீச்சலடித்து வாழ்கிறார்கள் என்பதை வன்னியின் ஒவ்வொரு கிராமத்திலும் இன்று காணலாம்.

பெண்கள் ஆணைச் சார்ந்து நிற்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். பெண்ணுக்கு அறிவுரை சொல்லி வளர்க்கும் சமூகம் ஆணுக்கு அறிவுரையேதும் சொல்வதில்லை. வல்லமையற்ற பெண்களின் உணர்வுகளை எழுத முற்படும் போது பல கதைகளை ஆண்களின் பார்வையிலேயே எழுதியிருக்கிறேன். சக மனுஷி என்ற வகையில் பெண்களை மதிக்கவும், நேசிக்கவும் ஆணால் முடியுமெனில் பெண்களுக்கான பல பிரச்சினைகள் மறைந்து போய் விடும்.

கே : நீண்ட காலமாக எழுதி வருகிறீர்கள். இலக்கியத்தில், குறிப்பாக புனைகதைகளில் பல பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. பல கருத்துப் பள்ளிகளும் (ஐனநழடழபல), வாதங்களும் சார்ந்து பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி எழுதும் நிலை காணப்படுகிறது. ஆனால் உங்களது கதைகள் யதார்த்த வாதப் பண்போடுதான் உள்ளன. புதிய இலக்கியப் போக்குகள் குறித்த உங்களின் மதிப்பீடென்ன?

ப : புதிய இலக்கியப் போக்குகள் ஆரோக்கியமானதாகவும், சமூக அக்கறை கொண்டனவாகவும் அமைந்தால் அவை வரவேற்கக் கூடியதே. என்னுடைய கதைகள் அன்று தொட்டு அதே யதார்த்தவாதப் பண்போடுதான் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். என்னால் இந்த விதமாகத்தான் எழுத முடிகிறது. அதுவே எனக்குப் பிடித்தமானதும்.

கே : 'ஈழத்து இலக்கியம் போரின் அவலங்களை மட்டுமே பேசி, பின்திரும்பும் இயல்போடு காணப்படுகிறது. முன்னோக்குப் பார்வை அதற்கு இல்லை' என்பதான விமர்சனங்கள் உள்ளன. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

ப : ஈழத்து இலக்கியம் போரின் அவலங்களை மட்டுமே இன்னமும் பேசிக் கொண்டிருப்பது சலிப்பைத் தருகிறது. அதிலிருந்து விடுபட்டு வேறு விடயங்களை எழுத முன்வர வேண்டும் என்ற குரல்கள் இப்போது பரவலாய் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. 30 ஆண்டு காலப் போர் வாழ்வையும், இழப்புக்களின் வலியையும் இலகுவில் கடந்து போய் விட முடியாது. போர் முடிந்தாலும் போர் விட்டுச் சென்ற நிழலின் அந்தகாரம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. போர் தின்ற வாழ்வு இன்னமும் சரிப்படுத்தப்படவில்லை. அன்றைய பதைபதைப்பு, துடித்த துடிப்பு, பட்ட அந்தரிப்பு... இவையெல்லாம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது என்று சொல்லி விட முடியாது. இன்னமும் எழுதுவதற்கு நிறையவே இருக்கின்றன. தழும்பாகிப் போனாலும் பட்ட துயரங்களை எழுதும் கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு.

அதற்காக அதை மட்டும் எழுத வேண்டும் என்று சொல்ல வரவில்லை. சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் காலங் காலமாக இருந்து கொண்டுதான் வருகிறது. புதிதாகவும் பல பிரச்சினைகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. எழுத்தாளர்கள் மனதைப் பாதிக்கும் எந்த விடயத்தையும் எழுதலாம்.

கே : உங்களது பிந்திய நாவலான உயிர்வாசம் உள்நாட்டுப் போரின் பாதிப்பு மற்றும் அச்சமான சூழலில் உயிரைப் பணயம் வைத்து அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகுபவர்களின் பயங்கர அனுபவங்களைப் பேசுகிறது. இது உண்மை அனுபவமா? இதை எழுதுவதற்குத் தூண்டிய காரணிகள் எவை? 

ப : அவுஸ்திரேலியா நோக்கிய படகுப் பயணம் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஆரம்பமாகியது. ஆபத்தான கடற் பயணத்தை உயிரைப் பணயம் வைத்துத்தான் மேற்கொண்டார்கள். அவுஸ்திரேலியா என்ற நாடு பற்றித் தெரியாது. அதன் தூரம் எவ்வளவு என்றும் தெரியாது. ஆனாலும் ஏதோவொரு துணிச்சல் அவர்களைப் படகேற வைத்தது. நான் அவுஸ்திரேலியாவில் இருந்த போது அவர்களில் பலரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களின் அனுபவத்தைக் கேட்ட போது மெய்சிலிர்த்தது. இந்தத் துயர்மிகு பயணத்தை எழுத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. படகு ஏறி கடல் தாண்டி அவுஸ்திரேலியா போய் இறங்கினார்கள் என்ற செய்திக்குப் பின்னால் ஏராளம் ஏக்கங்கள், துன்ப துயரங்கள் மறைந்து கிடந்தமையை இந்த உலகம் அறியவில்லை. அவைகளை எழுத நினைத்தேன். இரண்டரை வருடங்கள் இந்த நாவலுக்குச் செலவழித்தேன். இந்தக் காலத்தில் அந்த அனுபவங்களில் நானும் தோய்ந்து பயணித்தேன். நாவல் முழுவதும் அவர்களின் அனுபவங்கள் பரவிச் சிதறிக் கிடக்கின்றன.

கே : சமகால இலக்கியப் போக்குத் தொடர்பில் உங்களது அவதானிப்பு என்ன?

ப : புதிது புதிதாய் சமூகம் தோற்றம் பெற்றுக் கொண்டு வரும் போது புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள், புதிய வடிவங்கள் தோன்றுவது இயல்பானதே. தற்போதய எழுத்துக்களில், குறிப்பாக புதிதாக எழுதும் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் புதிய சிந்தனைகளையும், கதை சொல்லும் முறையிலும், உத்தியிலும், வடிவத்திலும் மாற்றங்களையும், நவீன போக்குகளையும் காண முடிகின்றது. சில கதைகளைப் படிக்கின்ற போது தமிழ் வார்த்தைகளை எவ்வளவு வசீகரமாகக் கையாளுகிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகிறது. சில எழுத்தாளர்கள் ஈழத்து இலக்கியத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள்.

கே : புதிய படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப : எழுத ஆர்வமுள்ளவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். எமக்கு அப்பாற்பட்ட உலகத்தையும், மனிதர்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ள வாசிப்பு உதவுகிறது. எழுதிய படைப்புகளுக்கு வருகின்ற நியாயமான விமர்சனங்களைக் கவனத்தில் கொள்ளலாம். அவை எழுத்துக்களைச் செம்மைப்படுத்தி, தன்னைத் தானே திருத்திக் கொள்ள உதவும். வாசிப்பும் யோசிப்பும் மனதைப் பக்குவப்படுத்தும். எழுத ஊக்கத்தைத் தரும்.




கே : நீங்கள் ஒரு ஓவியராகவும் இருந்துள்ளீர்கள். எனினும் ஓவியத்துறையில் ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு என்ன காரணம்?

ப : சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியர் மணியம் வரைந்த கோட்டுச் சித்திரங்கள் பிரமிப்பைத் தந்தன. அதைப் பார்த்து வரையத் தொடங்கினேன். தொடர்ந்து மணியம் செல்வன், மாருதி, ஜெயராஜின் ஓவியங்களையும் பார்த்து வரைந்து பழகினேன். முறையாக ஓவியம் கற்கவில்லை. 

ஆனால் 80ஆம் ஆண்டில் வீரகேசரி வாரமலரில் ஓவியராகப் பணி புரிந்த ஸ்ரீகாந் அவர்களிடம் சிறிது காலம் ஓவியம் கற்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவர் தபால் மூலம் ஓவியம் கற்பித்துக் கொண்டிருந்தார். அதில் நானும் சேர்ந்து முதலில் தபால் மூலமாகத்தான் கற்கத் தொடங்கினேன். ஒரு மாதத்திலேயே எனது ஓவியங்களைப் பாராட்டி நேரில் வந்தும் கற்றுக் கொள்ளலாம் என அழைத்திருந்தார். அதனால் கொழும்பில் சில வாரங்கள் மட்டுமே அவரிடம் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன். கோட்டுச் சித்திரம் வரைவதன் அடிப்படை விசயங்களை அவர்தான் சொல்லித் தந்தார்.

'சித்ரா' என்ற சித்திரச் சஞ்சிகையிலும் அவர் அப்போது பணி புரிந்து கொண்டிருந்தார். எனது சித்திரக் கதைகளை சித்ரா சஞ்சிகையில் பிரசுரிக்கச் செய்தார். குங்குமம் இதழ் அக்கரைச் சிறப்பிதழை வெளியிட்ட போது எனது தோழி தமிழ்ப்பிரியா இலங்கைச் சிறப்பிதழைத் தொகுத்திருந்தார். அவர் முத்து குணரத்தினத்தின் கதைக்கு என்னை ஓவியம் வரையச் செய்து அதனைக் குங்குமத்துக்கு அனுப்பி வைத்தார். இலங்கைச் சிறப்பிதழில் அந்தக் கதையோடு எனது ஓவியத்தைப் பிரசுரித்து இருந்தார்கள். எனது புகைப்படத்தையும் போட்டு, ஓவியம் தாமரைச்செல்வி என்று பிரசுரித்திருந்தார்கள். அந்த இதழில் நான் எழுதி வரைந்த நான்கு பக்கச் சித்திரக் கதையொன்றும் பிரசுரமாகியிருந்தது.

சுடர் சஞ்சிகை எனது சிறுகதையுடன் நான் வரைந்து அனுப்பும் ஓவியங்களையும் ஏற்றுப் பிரசுரம் செய்திருந்தது. தவிர ஈழநாடு, தினகரன், வீரகேசரி, ஜீவநதி ஆகியவற்றில் எனது கதைகளும் ஓவியங்களும் பிரசுரமாகியுள்ளன. எனது அழுவதற்கு நேரமில்லை சிறுகதைத் தொகுப்புக்கு அட்டைப்படம் வரைந்ததுடன் உட்புறம் ஒவ்வொரு சிறுகதைக்கும் ஓவியம் வரைந்திருக்கிறேன்.

ஓவியத்துறையில் மேலும் என்னை வளர்த்துக் கொண்டிருக்கலாம். ஒரு தேக்கநிலை வந்து விட்டது. இப்போது ஓவியம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. வரைவது என்பது மனதுக்குச் சந்தோசம் தருவது. எனவே இனியும் வரைவேன்.

கலை முகம்  இதழ் 69


Monday, August 30, 2021

தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க.தணிகாசலம் அவர்களுடனான நேர்காணல்

 தாயகம் சஞ்சிகை ஆசிரியர் க.தணிகாசலம் அவர்களுடனான நேர்காணல்

இயல்வாணன் - தணிகாசலம் 

                             

எழுத்தாளராக, கவிஞராக, சமூகப் போராளியாக அரை நூற்றாண்டுக்கு மேலாகச் செயற்பட்டு வரும் க.தணிகாசலம் அச்சுவேலி, பத்தமேனியில் 28-09-1946இல் பிறந்தவர். கந்தர்மடத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் பயின்றவர். அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகப் பணியாற்றிய இவர் திருமணத்தின் பின் ஆடியபாதம் வீதி, கொக்குவில் கிழக்கில் வாழ்ந்து வருகிறார்.

சமூகப் போராளியாக ஆரம்பித்த பயணத்தில் இலக்கியத்தைக் கருவியாக்கியதாகக் குறிப்பிடும் தணிகாசலம் சிந்தாமணியில் எழுதிய சிறுகதையுடன் இலக்கிய உலகிற் காலடி எடுத்து வைத்தார். இவருடைய 'பிரம்படி', 'கதை முடியுமா?' ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், 'வெளிப்பு' கவிதைத் தொகுதியும் நூலுருப் பெற்றுள்ளன. கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ள இவர் பாரதி - லூசுன் தொடர்பான ஒப்பீட்டு ஆய்வினையும் செய்துள்ளார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளரான தணிகாசலம், பேரவை வெளியீடாக 1974இல் ஆரம்பிக்கப்பட்ட தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் செயற்பட்டதுடன், தற்போது தாயகத்தின் பிரதம ஆசிரியராகத் தொழிற்படுகிறார்.

கே : ஒரு விவசாயக் குடும்பத்தில், அதன் உப தொழிலான சுருட்டுக் கைத்தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள். தந்தையார் கொழும்பில் சுருட்டுத் தொழிலில் ஈடுபட்ட வேளை 1958 கலவரத்தால் பாதிக்கப்பட்டதால்,  குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நீங்கள் தமிழ்த் தேசிய இயக்கங்கள் சார்ந்தே – அந்தச் சிந்தனையோட்டத்துடனேயே உருவாகியிருக்க வேண்டியவர். ஒரு இடதுசாரிப் பின்னணி எவ்வாறு ஏற்பட்டது? அக்காலத்தில் ஒரு சரடாக மேலெழும்பிய தமிழ்த் தேசிய சிந்தனையிலிருந்து எவ்வாறு மாறுபட்டீர்கள்?

ப : 1958 இனக் கலவரத்தின் பாதிப்பால் தீவிர தமிழ்த் தேசிய உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்ட  பெரும் எண்ணிக்கையானவர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன். தமிழர் சமூகத்தின் மைய நீரோட்ட சிந்தனையாக அன்றிலிருந்து இன்று வரை தொடரும் தமிழ்த் தேசிய உணர்வும், தமிழகத்தில் தி.மு.க.வினர் அன்று முன்வைத்த திராவிட நாட்டுக் கோரிக்கையும், இலங்கையின் புவிசார் அரசியற் சூழல் பற்றிய அன்றைய எனது புரிதலின்மையும் பிரிவினை இலக்கை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. எனது உணர்வுகள் எவ்வாறு தோன்றி மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துள்ளதென்பதை ஆரம்ப காலத்தில் அவ்வப்போது எழுதிய கவிதை வரிகளில் தருவது சமூக வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துவதாக அமையும் என்று எண்ணுகிறேன்.

அந்நியக் கொடி பறந்த

அகிலத்து நாட்டிலெல்லாம்

தம்மின மொழிகளாளத் 

தனிக்கொடி பறக்கும் போது

எந்தமிழ் அன்னை ஆள

ஓர் கொடி நாடு வேண்டும்

என்றொரு கவிஞன் பாடக்

கேட்பது எந்த நாளோ?

   இது 1961ல் நான் எழுதிய கவிதை ஒன்றின் சிலவரிகள். கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக கப்பலில் வந்தவர்கள் திரும்பிச் செல்லக் கூடாது, 1958 கலவரத்தைப் போன்ற பாதிப்பு இனிமேலும் ஏற்படாதிருக்க வேண்டும் என்ற உணர்வு நிலையில் அன்று அடைந்த இலக்காக இக்கவிதையின் பேசுபொருள் அமைகிறது.

   இலங்கை தமிழரசுக் கட்சியால் 1960ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் இதே உணர்வுடன் கலந்துகொண்டிருந்தாலும், அகிம்சைப் போராட்டத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. அப்போரட்டம் தோல்வி அடைந்த பின்னர்; என்னைப் போன்றவர்கள கொண்டிருந்த கொள்கைகள் வலுவானது என எண்ணியிருந்தேன். அந்த உணர்வில் 1962ல் வெளிவந்த கவிதை வரிகள் இவை.

பாரத சுதந்திரப் 

போர்முனை நோக்கி

படையணி திரண்டிட

பாட்டுக்கள் பாடி

வீர சுதந்திரம் 

வேண்டிய பாரதி

பாரினில் மீண்டும் வருவானா?

தமிழ் படையணி

திரட்டித் தருவானா?

  இக்கவிதைகளை எழுதியதோடு நின்றுவிடாமல் பின்தங்கிய கிராமச் சூழலில் இதற்கான உணர்வாளர்களைத் திரட்டும் நோக்குடன் இளைஞர் முன்னேற்றக் கழகம், பாரதி கலா மன்றம் போன்ற அமைப்புக்களை கிராமத்துப் இளைஞர்கள், பெரியவர்களுடன் இணைந்து உருவாக்கினோம். அவைகளுக்கூடாக பொதுப் பணிகளை முன்னெடுக்கும் போதுதான் எமது சமூகத்தின் யதார்த்த நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

  இன, மத பேதங்களால் நாடு மட்டும் பிரிந்து கிடக்கவில்லை. சாதி, மத, பால், வர்க்க பேதங்களால் கிராமங்களும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடப்பதை நடைமுறை வேலைகளுக்கு ஊடாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆறுமுகநாவலர், சேனாதிராச முதலியாரிடம் வந்து பாடங் கற்ற இருபாலைக் கிராமத்தில் நான் இளைஞனாக இருந்தபொழுது, பாடசாலையில் மணவர்களில் ஒருசாரார் கிணற்று நீரை அள்ளிப் பருக முடியாது. உயர் சமூக மணவர்கள் அள்ளி ஊற்ற கைமண்டையில் அள்ளிப் பருக வேண்டிய நிலை. அங்குள்ள குளங்களில் அனைவரும் இறங்கிக் குளிக்கமுடியாது. சாவீடு, சடங்கு வீடுகளில் குடிமைத் தொழில்களைக் கட்டுப்பாடுடன் ஒழுங்காகச் செய்யவேண்டும். நிலத்தின் மீதான அவர்களின் ஆதிக்கம் மக்களின் வாழ்வை பாதித்திருந்தது.

 இவைபோன்று இன்னும் பல நடைமுறைகளுடன் பாரதி கலாமன்ற சனசமூக நிலையத்திலும் அனைவரும் வாங்கில் அமர்ந்து படிக்கமுடியாது என்ற நிலை வந்தபோது அதுவரை நான் கற்ற கல்வியும், படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஏற்றுக்கொண்ட அரசியல் கொள்கைகள் யாவும் - யதார்த்தத்தை – உண்மைகளைப் பேசவில்லை,  சமூகத்தில் அதிகாரம் பெற்றவர்களின் நலன்களையே பேசியதை உணர்ந்தேன். தமிழ்த் தேசிய அரசியலின் போர்வையின் கீழ் அப்பட்டமான ஒடுக்குமுறைகள் மக்கள் மீது கோலோச்சின. இவ்வாறு ஒடுக்குதல்களுக்கு உள்ளாகும் மக்களின் குரல்கள் ஏன் மேலெழவில்லை என்ற தேடல்கள் எழுந்தன. பின்னர்தான்  அந்தோனியோ கிராம்ஸி குறிப்பிடுவது போல் மக்களின் சிந்தனைக்கு தமது அதிகார வர்க்க கருத்தியல்களால் விலங்கிட்டு, ஒடுக்கி வைத்திருக்கும் 'பண்பாட்டு மேலாண்மை'யின் கொடூரங்கள் இவை என அறிய முடிந்தது. 

'மங்கும் நம் வாழ்க்கை

தை பிறந்தால் பொங்குமென்று

பொங்கினோம் பல பொங்கல்.

புதுமை இல்லை வாழ்க்கையிலே

பொங்கடா புரட்சி பொங்க.

புத்துலகைப் படைப்போம்.'

தமிழர்தம் பண்பாட்டின் உச்சமெனப் போற்றும் தைப்பொங்கல் பண்டிகை பற்றிய எளிமையான சொற்களில் அமைந்த ஒரு மாற்று உணர்வுத் தெறிப்பு இது. வழி வழி வந்த பண்பாட்டுச் சிந்தனையிலே ஏற்பட வேண்டிய மாற்றத்தை நோக்கிய குரலாக இக்கவிதை என்னுள் எழுந்தது.

  அன்று யாழ்.பொதுசன நூலகம் அமைவதற்கு முன்னர்,  யாழப்பாணத்தில் அமைந்திருந்த அமெரிக்க நூலகத்தில் படித்த ஸ்டாலினுக்கு எதிரான புத்தகங்கள் மாக்சியத் தத்துவவம் நடைமுறை மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. 'சுயநிர்ணய உரிமை' பற்றி அவரது



புத்தகத்திலேயே முதலில் படித்தேன். மாணவனாக கார்த்திகேசன் மாஸ்ரரிடம் அவரது வீட்டுக்குச் சென்று பாடங் கற்ற போது, அவரது புலமையும், எளிமையும், மற்;ற மனிதர்கள் மீதான அக்கறையும் என்னைக் கவர்ந்திருந்தன. அப்பொழுது அவர் இணைந்திருந்த கம்யூனிஸ்ற் கட்சி, அரசுடன் இணைந்திருந்தமையால் அந்த அரசியல் எனக்குச் சரியாகப் பட்டிருக்கவில்லை. 

பின்னர் அவர் உட்பட தோழர் வீ.கந்தசாமி, தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் போன்ற அர்ப்பணிப்புள்ள பல தோழர்கள் சண்முகதாசன் தலைமையில்; பாராளுமன்ற வழிமுறையை நிராகரித்து புரட்சிகர அரசியல் வழிமுறையை முன்வைத்த போது இடதுசாரி அரசியலில் இணைந்து கொண்டேன். அதுவும் நடைமுறையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டம் போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தமை நம்பிக்கையை அளித்தது.  இன உணர்வில் மட்டும் ஊறி இருந்த எனது சிந்தனை இன ஒடுக்கலுக்கு எதிராக மட்டுமன்றி மக்கள் எதிர்நோக்கும் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு முழுமையான விடுதலை நோக்கி நாம் செயற்பட வேண்டும் என்ற உணர்வுக்கு என்னை உந்தித் தள்ளியது.

புத்தக வாசிப்புக்கூடாக கிராமம், பிரதேசம், நாடு, உலகம் என்ற விரிந்த பரப்பில் வாழும் மக்கள் அனைவரும் எமது உறவினர்களாயினர். இத்தகைய ஒரு அறிவின் - அன்பின் தேடலே உழைக்கும் வர்க்கத்தின் உணர்வாகவும், உலகின் உயர்ந்த அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் உணர்வாகவும் கனவாகவும் இருந்தது. அனைத்து மதங்களின் உயர்ந்த விழுமியங்களின் வெளிப்பாடாகவும் இவையே அமைந்திருந்தன.

இத்தகைய உணர்வுடன் கிராமங்கள் தோறும் எமது கட்சி தனது செயற்பாடுகளை விரிவாக்கிக் கொண்டிருந்த போதுதான் பல்வேறு இயக்கங்கள் தத்தமது வழியல் நின்று ஈழப்போராட்டத்தை ஆரம்பித்தன. இதுபற்றிய தனது விமர்சனங்களை எமது கட்சி முன்பே தெளிவாக முன்வைத்திருந்தது. எத்தகைய போராட்டமும் முழுமையை நோக்கியதாக அமையவேண்டும்  என்ற உணர்வுடன் எழுதப்பட்ட கவிதையின் அடிகள் சில.   

மண்ணின் உரிமை மறுத்தோரை

எதிர்த்துமது

இன்னுயிரை ஈந்தோரே!

உங்கள் கல்லறையில் 

எழுத விரும்புகிறேன்.

'மானுடத்தின் விடுதலைக்கு

 நீர் மரித்தீர்' 

1993இல் தாயகத்தில் வெளியான 'உழைப்பாளியின் அஞ்சலி' என்ற கவிதை வரிகளுக்கூடாக தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை உணர்வு சமூக விடுதலையின் அடிப்படையில் இத்தேசத்தின் விடுதலையாகவும் விரிவடைய வேண்டும் என்ற அவாவையே வெளிப்படுத்துகிறது. இவையே என்னிடம் ஏற்பட்டு வந்த உணர்வு மாற்றங்களின் பரிணாமமாகும்.


கே : உங்களுடைய சமூக, அரசியற் பிரவேசமே முதலில் இடம்பெற்றது. அதன் ஒரு அங்கமாகவே உங்களது கலை, இலக்கியச் செயற்பாடுகள் ஆரம்பமாயின எனக் கருதலாமா?

ப : எனது கலை இலக்கியப் பிரவேசம் தமிழ்த் தேசிய உணர்வுடனேயே வெளிப்பட்டது. அதன் காலப் பரப்பு மக்கள் கலை இலக்கியச் செயற்பாட்டுக் காலத்துடன் ஒப்பிடுகையில் குறைவானதாகவே இருந்தமையால் தமிழ்த் தேசிய உணர்வு சார்ந்த படைப்புக்கள் மிகக் குறைவாகவே இருந்தன. தேசிய கலை இலக்கியப் பேரவை, அதன் வெளியீடான தாயகம் கலை,இலக்கிய, சமூக விஞ்ஞான இதழ் என்பன அமைப்புச் சார்ந்த செயற்பாடுகளாக - கூட்டுச் செயற்பாடுகளாக - அமைந்தமையால் மக்கள் கலை இலக்கியப் பரப்பில் ஒப்பீட்டளவில் அதிகம் ஈடுபட முடிந்தது.


கே : பொதுவாக சிறுகதைகளாலும், கவிதைகளாலுமே அதிகம் அறியப்பட்டவர் நீங்கள். சாராம்சத்தில் உங்கள் கதைகள் சாமானிய மக்களின் பாடுகளைப் பேசுவனவாகவே பெரும்பாலும் உள்ளன. கவிதைகள் எதிர்க் குரல் எழுப்புவனவாக உள்ளன. படைப்புக்களுக்கு ஏதாவது தெரிவுகளை – நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்களா?

ப : உள்ளத்திற் படுவதை எல்லாம் எழுதுவது என்பதற்குப் பதிலாக, ஓர் இலக்கை நோக்கிய எழுத்துக்களாக அமைவதால் அதற்கான ஊடகத் தெரிவும் முக்கியமாகிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல்வேறு வடிவங்களிலும் மக்களிடம் இலகுவாகச் சென்றடைவது எது என்பதில் இருந்தே எனது தேர்வு அமைந்தது. ஆரம்பத்தில் நாடகங்களையே எனது தேர்வாகக் கொண்டிருந்தேன். ஏனெனில் அன்றுங் கூட வாசிப்பு என்பது மத்தியதர வர்க்கத்தினரில் ஒரு சிறு பிரிவினருக்கு உரியதாகவே அமைந்தது. நாடகங்கள் உழைப்பாளிகள் உட்பட அனைவருக்கும் உரியதாகவே இன்றும் இருக்கிறது. ஆரம்பத்தில் நாடகங்கள் மூலம் கலை உணர்வைத் தொற்ற வைக்கவும், கருத்துப் பரிமாறலைச் செய்யவும் முயன்றோம். அது கூட்டுக் கலைச் செயற்பாடு, கூட்டு நுகர்வு என்ற வகையில் பயனுள்ளதாகவே இருந்தது. ஆனால் இன்றுள்ளது போல எளிமைப் படுத்தப்பட்ட, பெரும் பணச் செலவற்ற அரங்க வடிவங்கள் அன்று இல்லை. எனவே, அந்த அரங்க முறையைத் தொடர முடியவில்லை. 

 அதன் பின்னர் சிறுகதை, கவிதை வடிவங்களைத் தேர்ந்து கொண்டேன். அவையும் எளிமையாக மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கவிதை உணர்வோடு கலந்து வருவதால் எதிர்ப்புக் குரலாக அமையும் வாய்ப்புக்கள் அதிகம். சிறுகதைகளும் பாத்திர உணர்வுகளுக்கூடாக ஆரவாரமின்றி அதனையே வெளிப்படுத்துகின்றன.

கே : நீங்கள் நீண்ட காலமாகவே தாயகம் சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கிறீர்கள். இதனை தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிடுகிறது. ஒரு அரசியல் இயக்கத்தின் இலக்கியப் பிரதியாக இதனைக் கொள்ளலாமா?

ப : மக்கள் விடுதலையை இலக்காகக் கொண்ட ஒரு அரசியற் கட்சி, அந்த இலக்கை நோக்கிய செயற்பாட்டில் பல்வேறு வெகுஜன அமைப்புக்களை உருவாக்குகிறது. கட்சிக்குரிய யாப்பின் படி கட்சி உறுப்பினர்கள் செயற்படுகிறார்கள். வெகுஜன இயக்கங்களின் யாப்பின் படி வெகுஜன இயக்கங்கள் செயற்படுகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவையும் அவற்றில் ஒன்று. அதற்குரிய யாப்பை அதன் உறுப்பினர்களே உருவாக்கி, செயற்படுகிறார்கள். தாயகம் சஞ்சிகை அதன் வெளியீடாக வருகிறது. அதன் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் பட்டியலில் இருந்து இதனைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், கலை இலக்கியப் பேரவை ஒரு அரசியல் சார்ந்த இலக்கிய அமைப்பு என்பது இதன் உறுப்பினர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. இதன் அரசியல் என்பது இலங்கையில் தொடரும் எழுபது ஆண்டுகால இன மைய அரசியல் அல்ல. விடுதலைக்கான சமூக விஞ்ஞான அடிப்படையில் அமைந்த, ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இன, மத, சாதி, பால், வர்க்க ஒடுக்குதல் இல்லாத ஒரு தாயகத்தை உருவாக்கும் இலக்குடன் செயற்பட்டு வரும் ஒரு அமைப்பு. இத்தகைய அரசியற் சார்பு இருப்பதால் பரப்புரைகளையோ, கோசங்களையோ இலக்கியமாகக் கொள்வதும், அழகியற் பெறுமானம் இல்லாதவற்றை இலக்கியமாக அங்கீகரிப்பதும் கலை இலக்கியப் பேரவையின் கொள்கை அல்ல. அத்துடன் மேற்குறிப்பிட்ட வெளிப்படையான கூற்றுக்கள் முற்றிலும் அரசியல் சாராத இலக்கியங்கள் உண்டு என்பதை அங்கீகரிப்பதாகவும் அமைந்து விடாது.

ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் என மக்கள் சமூகம் மட்டுமல்ல, நாடுகளே பிரிந்திருக்கும் சமூக, பொருளாதார, அரசியற் சூழலில் நடுநிலை இலக்கியம், பொழுதுபோக்கு இலக்கியம் என்பதெல்லாம் மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து, திசை திருப்பி, ஒதுங்கி நிற்க வழி வகுத்து ஒடுக்குதல்களைத் தொடர்பவர்களுக்கு உதவுவதாகவே அமைகின்றன. அதுவும் சுரண்டற் பொருளாதார அமைப்பும், போட்டிச் சந்தையும், நுகர்வுப் பண்பாடும் இன்று உலக மயமாகி உள்ளன. இது உலக மக்களின் வாழ்க்கை முறையிலும், சிந்தனை முறையிலும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. எமது அடுத்த சந்ததிகள் வாழ்வதற்கான நாம் வாழும் புவியின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ள மிக நெருக்கடியான காலச் சூழலில் நாம் வாழ்கிறோம்.

இத்தகைய பாதிப்புக்களுக்கு எதிரான குரல்கள் மேலெழாதபடி வல்லமை வாய்ந்த ஏகாதிபத்திய அரசுகள் நவீன இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி தமது நலன்களுக்குச் சார்பான செய்திகளை, அரசியல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அத்துடன் பலமிக்க கோப்ரேட் நிறுவனங்களுக்கூடாகவும், நுகர்வுச் செலுத்திகளான விளம்பரங்களுக்கூடாகவும் மட்டுமல்ல, காட்சி ஊடகங்களில் வரும் 'அரசியல் நீக்கம்' செய்யப்பட்ட பொழுதுபோக்குக் கலை வடிவங்கள் வரை பெரும் பணச் செலவுடன் திட்டமிட்டு உலகெங்கும் பரப்பி வருகின்றன.

நஞ்சாக இருந்தாலும் எதை உண்பது? எதை உடுப்பது? எத்தகைய சூழலில், எவற்றைச் சிந்தித்து எப்படி வாழ்வது? என்பதை அத்தகைய நிறுவனங்களே தீர்மானிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன. ருஷ்ய இலக்கியமான ஜோர்ஜ் ஓவலின் 'விலங்குப் பண்ணை' எத்தகைய சூழலில், எத்தகைய பார்வையில் எழுதப்பட்டதோ, அதையும் விட மேலாக உலகையே விலங்குப் பண்ணையாக்கி, நுகர்வை மட்டும் இலக்காகக் கொள்ளும் விலங்குகளாக மனிதர்களை ஆக்கும் ஒரு சூழலில், விடுதலை அரசியலை 'தாயகம்' மக்கள் இலக்கியத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கிறது. அது ஏற்புடையதென்றே நாம் கருதுகிறோம்.

கே : தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பணிகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

ப : தேசிய கலை இலக்கியப் பேரவை ஆற்றிய பணிகள் பற்றி அதன் செயற்பாடுகளில் இணைந்து பங்களித்த, பங்குபற்றிய மக்களே நினைவுகூர வேண்டும். 45 ஆண்டுகளாக யாழ்ப்பாணம், கொழும்பு, மலையகம் என இயங்கி வந்து இன்று வவுனியாவிலும்  கால் பதித்து நிற்கிறது. 'தாயகம்' சஞ்சிகையுடன் ஆண்டு மலராக 'புது வசந்தம்' இதழ்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல படைப்பாளிகளின் 117 நூல்களை வெளியிட்டுள்ளது. போர்க் காலத்திலும் அதன் பணி தொடர்ந்தது. அதிலும் இந்தியப் படைகள் இந்த மண்ணில் இருந்த போதே அவர்களை விமர்சிக்கும் கவிதை, சிறுகதை நூல்கள் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டு தேசிய கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டன. போர்க் காலங்களில் மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், இலக்கிய அமைப்புக்களுடன் இணைந்து, அவைகள் முன்னெடுத்த நடவடிக்கைகளிலும் கலந்து கொண்டுள்ளது. பயிலரங்குகள், புத்தக வெளியீடுகள், இசைநாடா வெளியீடு, கருத்தரங்கத் தொடர்கள் எனப் பல நிகழ்வுகளைச் செய்துள்ளது. தமிழ் எழுத்தாளர் ஒன்றிய உருவாக்கத்திலும், அதன் செயற்பாடுகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளது. 

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் இருந்து கொழும்புக்கு வந்திருந்த தமிழக எழுத்தாளரும், முக்கியமான இலக்கிய சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்த சுபமங்களாவின் ஆசிரியரும், முற்போக்குச் சிந்தனையாளருமான கோமல் சுவாமிநாதனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து, நிலமைகளைப் பார்வையிட வைத்ததில் பேரவை பங்களித்தது. எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், மக்களைச் சந்திக்க வைக்கவும், சுபமங்களாவில் அவர் இலங்கை அனுபவங்களைத் தொடராக எழுதவும் அது வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவையும் தமிழக சுபமங்களா சஞ்சிகையும் இணைந்து உலகளாவிய ஈழத்து எழுத்தாளர்களுக்குக் களந் தரும் ஈழக் குறுநாவல் போட்டியை நடத்தியது. இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்து எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் எழுதினர். அவர்களில் இருந்து 10 குறுநாவல்கள் பரிசுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டன. இவ்வாறு பல்வேறு செயற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

கே : இலக்கியத்தைக் கோட்பாடுகளுக்குள் வரையறுப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

ப : இலக்கியத்தை இலக்கியமாகப் பார்ப்பதை விட்டு கோட்பாட்டுக்குள் வைத்துப் பார்க்கிறார்கள் என்பது மக்கள் இலக்கியம் படைப்போருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக எழுகிறது. கோட்பாடு, தத்துவம் என்ற சொற்களை வைத்து அவர்கள் வாசகர்களை மிரட்டுகிறார்களே அன்றி அவைகள் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம்.

 ஒவ்வொரு மனிதரும், பிறப்புக்கும், வாழ்வுக்கும், இறப்புக்குமான காரணத்தைத் தாம் வாழும் சமூகத்தின் மத, பண்பாட்டுக் கருத்தியல்களுக்கூடாகவே புரிந்து கொள்கின்றனர். வாழ்வின் துன்பங்கள் எல்லை மீறி வரும் போது 'கடவுள்தான் காப்பாத்த வேணும்' 'தலைவிதியை மாத்த ஏலாது' 'கடவுள் விதிச்ச விதி' 'அவனவனுக்கு அளந்ததுதான் கிடைக்கும்' என்ற வார்த்தைகள் மக்களிடம் இருந்து இயல்பாகவே வெளிவரும் வார்த்தைகளாக உள்ளன. இவை மக்களின் மனங்களில் இயல்பாகப் பதிந்த மதத் தத்துவங்கள், கோட்பாடுகளின் எளிமையான வடிவங்களாகவே வெளிப்படுகின்றன. அத்துடன் உழைப்பும், சுரண்டலும், ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் நிறைந்த சமூகத்தைப் பல நூற்றாண்டு காலம் தொடர்வதற்கான கருத்தியல் தளத்தை அவ்வார்த்தைகளின் பின்னால் உள்ள கோட்பாட்டுப் புரிதல்களும், உணர்வு நிலையும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன.

இது அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தமது நலன்களைத் தொடர்ந்து பாதுகாப்பதற்கு மிகவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய கோட்பாடுகளின், தத்துவங்களின் பலத்தில்தான் எமது நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேல் பேரினவாதம் எழுந்து நிற்கிறது. இதே பலத்தின் மீதுதான் ஏகாதிபத்தியங்கள் யாவும் தமது கோட்பாடுகளையும் இணைத்து நிமிர்ந்து நிற்கின்றன.

ஆனால் இத்தகைய தத்துவங்கள், கோட்பாடுகளின் அடிப்படையாக எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் கோட்பாடு சாராத இலக்கியங்களாக விமர்சகர்கள் பலரால் பார்க்கப்படுகின்றன. அவர்கள் இதன்மூலம் யாருக்குச் சேவை செய்கின்றனர் என்பது வெளிப்படையானது.

இது கடவுளால் விதிக்கப்பட்ட மாற்ற முடியாத விதியல்ல. இது பொருளாதாரப் போட்டியால் மனிதர்களால் மனிதர்கள் மீது விதிக்கப்பட்ட மாற்றியமைக்கக்கூடிய விதி என்பதுதான் மார்க்சிசம். இது காலம் காலமாகப் பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிவரும்  மக்களின் விடுதலைக்கான சமூக விஞ்ஞான அறிவியற் தத்துவம். எனவேதான், இக்கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியத்தை மட்டுமல்ல அரசியல், சமூக, பொருளாதார, கலை, பண்பாடுகள் யாவற்றையும் அறிவியல் பூர்வமாகப் பார்ப்பதையும், விமர்சிப்பதையும் இவர்கள் விரும்புவதில்லை.    குறிப்பாக அதிகார வர்க்கங்களுக்குச் சார்பான கோட்பாடுகளின் அடிப்படையாக எழும் இலக்கியங்களை கண்டுகொள்ளாது  ஏற்கும் இவர்கள் மக்களின் விடுதலைக்குச் சார்பான இலக்கியங்களில் மட்டும் கோட்பாடுகளின் அடிப்படையை ஏற்பதில்லை.

கே : 'கலை கலைக்காக' 'கலை மக்களுக்காக' என்ற கருத்துப் பள்ளிகள் இலக்கியத்தில் ஒரு காலத்தில் இருந்தன. இதில் நீங்கள் எதனை வலியுறுத்துவீர்கள்?

ப : கலை கலைக்காக என்பது அதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வௌ;வேறு வடிவங்களில் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் தேவையையும், பயன்பாட்டையும் நோக்கியே எதையும் செய்கிறான். மனிதனால் படைக்கப்படும் அனைத்தும் முழுமையாக அனைவருக்கும் பயன்படாவிட்டாலும், அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் நுகர்வுக்காகவாவது பயன்படுகிறது. இப்பயன்பாட்டின் - நுகர்வின் - வளர்ச்சி வேகத்தால் குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் மட்டுமல்ல, இயற்கை அழகு நிறைந்த இடங்கள் கூட உல்லாசப் பயணிகளின் நுகர்வு மையங்களாகி இயற்கையின் அழகுத் தோற்றங்களே பணத்துக்காக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இவை மட்டுமல்ல பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள் மத்தியில் வாழும் ஒரு கலைஞன் கலை கலைக்காக என ஒதுங்கி வாழ முடியுமா? அதீத தனிமனித நிலைப்பாட்டில் நின்று ஆன்ம திருப்திக்காகத்தான் கலை என்று சொன்னாலும் அதுவும் பயன் நோக்கியதாகவே அமைகிறது. அழகியல், கலை என்று மக்களிடம் இருந்து வெகுதூரம் செல்பவர்கள் மக்களின் விடுதலைக்காக அழகியல் தரம் மிக்க படைப்புக்களைப் படைத்தளிப்பதில்லை.

எனவே, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு ஒடுக்குமுறைகளில் இருந்தும் தம்மை விடுவித்துக் கொள்ளவும், இழந்து போன காற்றையும், நீரையும், இயற்கையையும் தமக்கு உறவாக்கிக் கொள்ளவும் விழிப்பையும், நம்பிக்கையையும், உறுதியையும் அளிப்பதற்கு மக்கள் கலை இலக்கியம் வளமாக்கப்பட வேண்டும்.

கே : கலை மக்களுக்காக என்ற நிலைப்பாடே உங்களுடையது என்பதை அழுத்திக் கூறியிருக்கிறீர்கள். அதை வலியுறுத்த நீங்கள் முன்வைக்கும் நியாயப்பாடு என்ன?

ப : மனித வரலாற்றில் பெரும் எண்ணிக்கையான உழைக்கும் மக்கள் அதிகார வர்க்கங்களுக்குச் சார்பான பொருளுற்பத்தி முறைமை, ஏற்றத்தாழ்வு, வறுமை என்பவற்றால் கல்வியறிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வியும், கலைப் பயிற்சியும் கூட அதிகார வர்க்கத்தினருக்கு உரியதாகவே இருந்து வந்தது. ஏகலைவனின் வரலாற்றுப் பாத்திரமும், 'வேத மந்திரங்கள் சூத்திரர்களின் காதுகளுக்கு எட்டக்கூடாது' என்ற மனுதர்ம சாத்திரத்தின் விதியும், 'வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே' என்ற தொல்காப்பியர் வரிகளும் இதனையே வெளிப்படுத்தி நிற்கின்றன.

மதங்களின் ஆதிக்கங்களையும், முடிமன்னர் ஆட்சியையும் எதிர்த்தெழுந்த மத்திய கால அறிவியல் மறுமலர்ச்சியும், 'மக்களால், மக்களுக்கான', ஜனநாயக ஆட்சியை முன்வைத்த பிரெஞ்சுப் புரட்சியும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களும் கூட அடித்தள மக்களிடம் சென்று சேரவில்லை. பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த முதலாளி வர்க்கத்தினருக்கு உரியவையாகவே அவை இருந்தன.

உழைக்கும் மக்களின் அடிமைத்தனமும், வறுமையும், கொடுமையும் நிறைந்த வாழ்க்கையை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்ந்தறிந்து கார்ள் மார்க்ஸ் என்ற அறிஞர் தந்த மனித குல விடுதலைக்கான அறிவியல் தத்துவமாக மார்க்சிசம் அமைந்தது. 1917இல் லெனின் தலைமையில் ருஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசப் புரட்சிதான் பாரதி போற்றிய யுகப் புரட்சியாக அடித்தள மக்களின் விலங்குகளை உடைத்தெறிந்தது. மக்களுக்கான கலை, இலக்கியமும் அதற்குத் துணை புரிந்தது. அப்பேரெழுச்சிதான் உலகெங்கும் உழைக்கும் மக்களுக்கும், பெண் விடுதலைக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைக்கும் உரம் சேர்த்தது. மக்கள் கலை, இலக்கியத்தின் மாண்பைப் பறை சாற்றியது. சீன எழுத்தாளர் லூசுன் தனது 'வியர்வை இலக்கியம்' என்ற கட்டுரையில் 'இதுவரை உயர் வர்க்க சீமாட்டிகளின் வியர்வை இலக்கியமாகியது. ருஷ்யப் புரட்சியுடன் உழைப்பாளிகளின் வியர்வை இலக்கியமாகிறது' என்றார்.

இன்று எமது மண்ணில் தொடரும் ஒடுக்குதல்களிலிருந்து மக்கள் விடுதலை பெறவும், விழிப்புணர்வையும், மனவுறுதியையும் பெறவும் மக்கள் இலக்கியம் தேவையானது.

கே : மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் என்பதற்கப்பால் இவற்றின் கலைப் பெறுமானம், அழகியல் அம்சங்கள் முக்கியமல்லவா? மக்கள் இலக்கியம் என்பதற்குள்ளால் கருத்துக்கள் மட்டும் சென்றடைவது போதுமானதா?

ப : மக்கள் கலை இலக்கியம் என்பது கருத்துக்களை மட்டும் மக்களிடம் கொண்டு செல்பவை. அவற்றில் அழகியல் பெறுமானம் இல்லை என்ற அர்த்தத்தில் உங்களது கேள்வி எழுகிறது. ஈழத்து இலக்கியத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களில் இதுவும் ஒன்று. மக்கள் இலக்கியத்துக்குரிய அழகியல் பெறுமானமும், சமூகப் பெறுமானமும் உள்ள படைப்புக்கள் பலவற்றை நாம் இங்கு அடையளம் காணமுடியும். 

     இலக்கியம் என்பது கலைப்பெறுமானமும், அழகியல் பெறுமானமும், உள்ளடக்கப் பெறுமானமும் உள்ளவையாக  இருத்தல் வேண்டும் என்பதில்  எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியது. ஆனால் இவை யாவும் வரலாற்று வளர்ச்சி நிலைகளுக்கேற்ப, அது உருவாகும் கால, வெளிகளுக்கேற்ப மாறுதல்களையும், வளர்ச்சியையும் கொண்டிருக்கும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

   ஒரு காலத்தில் முடி மன்னர்கள், நிலப் பிரபுக்களின் அழகியல் இரசனைக்காக கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன. மத்திய கால மறுமலர்ச்சிக் காலத்துடன் முதலாளித்துவ வர்க்கத்தினரின் இரசனைக்கும், அதிகாரத் தேவைகளுக்குமானதாக அவை அமைந்தன. ருஸ்யப் புரட்சியுடன் தொழிலளர், விவசாயிகள் உட்பட சாதாரண உழைப்பாளி மக்களுக்கான அழகியல் இரசனைக்கு  உரியவையாக மாற்றமடைந்தன. இம் மாறுதல்களுக்கு ஏற்ப அழகியல் இரசனையிலும், உள்ளடக்கங்களிலும் வேறுபாடுகள் உண்டு என்பதை மனதிற் கொள்ளவேண்டும்.         

  மக்கள் இலக்கியம் என்பது சமூகத்தில் பல்வேறு வகைகளிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கானது. எனவே மக்களின் இரசனைக்கும், மகிழ்வுக்குமானது மட்டுமல்ல, மக்களின் விடுதலைக்கு பங்களிப்பதுமாகும். அதனால் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் சமூக விழிப்புணர்வு பெறுவதவற்கு உதவும் கலை இலக்கியச் சாதனமாக அது உள்ளது. அழகியல் தரத்தை மட்டும் உயர்திச் செல்வதால் இலக்கியம் மக்களிடம் இருந்து பிரிந்து மத்தியதர வர்க்கக உணர்வுடைய சிலரது இரசனைக்கானதாகவே அமையும். வெகுஜன மார்க்கத்தை முன்னெடுத்த மாஓவின் அனுபவ வெளிப்பாடான 'மக்களின் அழகியல் இரசனைத் தளத்தில் இருந்து படிப்படியாக அழகியல் தரத்தை உயர்த்திச் செல்வது'   என்பதையே மக்கள் இலக்கியம் தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.

கே : ஈழத்தின் சமகால இலக்கியம் குறித்த உங்களின் மதிப்பீடென்ன?

ப : ஈழத்தின் சமகால இலக்கியங்களில் போர்க்கால இலக்கியங்கள் முதன்மை பெறுகின்றன. அவை போர்க்களத்தின் பதிவுகளாகவும், போர்க்கால நிகழ்வுகளின் நினைவுப் பதிவுகளாகவும் அமைகின்றன. இதுவரை வெளிவந்த நூல்களை முற்றாகக் கற்காமல் மதிப்பீட்டைச் செய்ய முடியாது. தேசிய கலை இலக்கியப் பேரவை இத்தகைய மதிப்பீட்டைச் செய்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. போர்க்காலத்தில் உருவான படைப்பாளிகள் முதல் புதிய இளம் தலைமுறையினரும் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகியும் அதன் தாக்கங்களில் இருந்து மக்கள் முற்றாக விடுபடவில்லை. போருக்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை. மக்களது வாழ்வியல் பிரச்சனைகளும் கூர்மை அடைந்து வருகின்றன. எனவே பல்வேறு கோணங்களில் நின்று செயற்படும் எழுத்தாளர்களிடையே ஆரோக்கிமான விமர்சனங்களும், உரையாடல்களும் நிகழ வேண்டும்.


கே : இலக்கியத்தில் ஒரு கூறாக தலித் இலக்கியம் இன்று முதன்மைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பல சாதியப் போராட்டங்கள் நடந்த போதும் தலித் இலக்கியம் இங்கேயே தளிர் விட்டது என்றும், கே.டானியல் இதன் பிதாமகன் என்றும் தமிழகத்தில் அ.மார்க்ஸ் முதலானோர் குறிப்பிடுகின்றனர். முன்னர் இழிசனர் இலக்கியம் என்று கூறப்பட்டதை தலித் இலக்கியம் என்று கூறலாமா? இங்கு தலித் இலக்கியம் முதன்மை பெற்றது எவ்வாறு?


ப : இழிசனர் இலக்கியம் என்று ஈழத்தில் அறுபதுகளில் குறிப்பிடப்பட்ட சொற்பதத்தை தமிழகத்தில் பின்னர் பிரபலமடைந்த தலித் இலக்கியம் என்பதுடன் ஒப்பிட முடியாது. இழிசனர் என்பது யாழ்ப்பாணக் கலாசாரத்தில் மக்களில் ஒரு சாராரை ஒதுக்கி வைத்து இடப்பட்ட வழக்குச் சொல். ஈழத்தில் அறுபதுகளிலே முனைப்படைந்த சாதாரண பேச்சுவழக்கு, வட்டார வழக்குகளைச் சிறுகதை, நாவல்களில் எழுதும் மண்வாசனை எழுத்துக்களைப் புறக்கணித்த மரபுவாதப் பண்டிதர்கள் 'இழிசனர் வழக்கு' என இதனை ஏளனமாகக் குறிப்பிட்டனர். 

இதனையும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஏனைய இந்திய மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கும் தலித் என்ற சொல்லடியாக எழுந்த தலித் இலக்கியத்தையும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. 'இழிசனர் வழக்கு' என்ற சொற்றொடரை    அன்று பிரயோகித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை  நடந்தினர். அது முட்டை எறிந்து குழப்பப்பட்டது. இதனை தொண்ணூறுகளில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தவறென்று ஒப்புக் கொண்டதும், எழுத்தாளர் சொக்கன் வானொலி உரையொன்றில் சரி என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் - தமிழ்நாட்டில் - தலித் இலக்கியம் பிரபலமடையும் முன்பே, ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்தன. அத்துடன் 1966ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. வடபகுதியில் தேநீர்க் கடைகளில் மூக்குப் பேணிகளுக்குப் பதிலாக கறள் பிடித்த தகரப் பேணிகளிலும், போத்தல்களிலும் தேநீர் கொடுக்கப்பட்டது. நந்தனார் போன்று கோவில்களுக்கு வெளியே நின்று வழிபடும் முறையே இருந்தது. இது போன்று பல்வேறு ஒடுக்குதல்கள் சாதியின் பெயரால் இருந்தது. இன்றைய இளஞ் சந்ததியினருக்கு  இவை கற்பனையாகவும் படலாம். ஆனால்  வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவிலில் சென்ற ஆண்டு வடக்கையிற்றில் கை பிடித்தால் தீட்டு என்று ஜே.சி.பி. எந்திரத்தால் தேரை இழுத்ததையும், திருவுருவைத் தோளில் சுமந்தால் சாமிக்குத் தீட்டு என்று கூறி இவ்வாண்டு திருவிழாவையே நிறுத்தியதையும் நினைவு படுத்தலாம்.

இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் மார்க்சிசக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டது. டானியல் தனது நாவல்களின் முன்னுரைகளில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலித் மக்களின் போராட்டம் போல அடையாளங்களை மட்டும் வலியுறுத்தி இப்போராட்டம் இங்கு நடைபெறவில்லை. அரசால் பாதுகாக்கப்படும் இச்சமூக பொருளாதார அமைப்பின் கீழ் நிலவும் தீண்டாமை உட்பட இனத்துவ, சமூக, பால், வர்க்க ஒடுக்குமுறைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வுள்ளவர்கள் யாவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டமாக  அது அமைந்தது. பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான மக்களே இப்போராட்டத்தில் முன்னின்றனர்.

1920களில் செயற்பட்ட இளைஞர் காங்கிரஸ் முதல் அப்போராட்டத்தை வர்க்க உறுதியுடன் முன்னெடுத்த இடதுசாரிகள் வரை நீண்ட காலச் செயற்பாடுகளில் உருவான விரிந்த வெகுஜனத் தளம் அப்போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது.

இத்தகைய ஒரு கோட்பாட்டுத் தளத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட போராட்ட கால இலக்கியப் பதிவாக பல கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்கள் வெளிவந்தன. அவைகளும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மக்கள் எழுத்தாளர்கள் யாவரும் விமர்சனம், சுயவிமர்சனம், மாற்றம் என்ற ஆக்கபூர்வமான நடைமுறையில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களது படைப்புக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. இதன் நோக்கம் மக்களின் விடுதலைக்குப் பலமான ஆயுதங்களாக அவை ஆக்கப்பட வேண்டும் என்பதே.

 தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் டானியல் ஒரு எழுத்தாளராக மட்டுமன்றி ஒரு முன்னணிப் போராளியாகவும் இருந்தார். அவரது படைப்புக்கள் அப்போராட்டத்தின் பதிவுகளாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட இடர்களையும், அதற்கு எதிரான செயற்பாடுகளையும் இலக்கிய நயத்துடன் பதிவு செய்பவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் அவரது எழுத்துக்கள் பெறுமதி மிக்கவை. பயனுள்ளவை.

போராட்டத்தை மையப்படுத்தி அவர் எழுதிய நாவல்கள் போராட்டத்தின் யதார்த்தத்தையும், அதன் போக்கையும், இலக்கையும் மீறிய சில நிகழ்வுப் பதிவுகளுக்கு இடமளித்துள்ளன. பொதுவான ஒரு நாவலின் போக்குக்கு அவை பொருந்தி வந்தாலும் மக்கள் விடுதலை நோக்கிய வெகுஜன மார்க்கத்தை அவை பிரதிபலிப்பதாக அமையவில்லை. இவற்றை வைத்து தலித் இலக்கியமாக டானியலின் படைப்புக்களை நாம் கருதவில்லை. டானியலே ஏற்றுக் கொண்ட மக்கள் கலை இலக்கியத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியின் தேவை கருதியே நாவல் பற்றிய இத்தகைய விமர்சனங்கள் எம்மிடம் உள்ளன.

பின்நவீனத்துவக் கருத்துக்களைக் கொண்டுள்ள தலித்திய இலக்கியப் போக்குக்குப் பொருந்தாத இலக்கியப் போக்குகளும் அணுகுமுறைகளும் டானியலின் படைப்புக்களில் உண்டு. எவ்வாறாயினும் தமிழகச் சூழலில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தலித் மக்களின் விடுதலைக்கு டானியலின் படைப்புக்கள் பயன்படுவது ஈழத்து இலக்கியத்துக்கு சிறப்பளிப்பதாகும். 


நேர்காணலும் படங்களும் : இயல்வாணன்
நன்றி :கலைமுகம் சஞ்சிகை


திருவூஞ்சல்

 சிறுப்பிட்டி தெற்கு தாமர்வளவு

அருள்மிகு ஞானவைரவப் பெருமான் மீது பாடப்பெற்ற

திருவூஞ்சல்

காப்பு

தென்சிறுவைத் தாமர் வளவுவாழ் வைரவர்க்கு

நன்சொற் திருவூஞ்சல் நான் பாட – பண்செய்

பவளக் கரிமுகத்து ஐங்கரனே யெனக்கு

நுவலத் தமிழ்தந்து கா

நூல்

மாணிக்கங் கோர்த்தபொற் தூண்க ளாலும்

மரகதமே பதித்தமைத்த வளையி னாலும்

ஆணிமுத்தால் இழைத்தவுறு வடத்தி னாலும்

அரியதந்தம் பின்னியவன் பலகை யாலும்

பேணியமைத்த வூஞ்சற்பீ டத்தி லமர்ந்து

பேரருளால் சிறுப்பிட்டி தெற்கி லோர்ந்து

தாணித்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


தேன்நிறை பூந்தார் செறிந்து கூரையாக

தெங்கிளநீர் சிறுவுடுவாய் ஆங்கே மின்ன

பூங்கதலிக் குலை வரிசை கால்களாக

புரியுதோ ரணங்கள் எல்லைச் சுவர்களாக

வான்மதியோ வைரமணிச் சுடரே யாக

வனைந்தபெரு மண்டபத்தே யமர்ந் தருளி

நானிலத்தை ஆள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

ஞானமருள் வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


பக்தியுடன் பக்தர்மலர் பாதம் சூட்ட

பண்ணுமொழி பாவில்மறை வேதம் சாற்ற

சுத்தமனத் துள்ளோர்கள் துதித்தே போற்ற

சோதியென வேதியர்நற் தீபம் ஏற்ற

சக்திபல வளித்துத்தாமர் வளவி னின்று

சகலவுயிர்ப் பழவினைகள் போக்கி யாண்டு

முத்தியின்பம் தருபவரே! ஆடீர் ஊஞ்சல்

முழுநிறைவே! வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


காற்றிலசை கின்றகொடி வாழ்த்துச் சொல்ல

கவரிவீசு காரிகையர் ஏவல் செய்ய

ஏற்றுமடி யார்கள்குடை ஏந்தி நிற்க

ஏந்திழையார் ஆலவட்டந் தாங்கி நிற்க

போற்றுயர்கா ராளர்வாழ் சிறுவை தெற்கில்

போதரிய தான்தோன்றி யாயு தித்தாய்

நாற்றிசையும் ஆள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

நமையாளும் ஆண்டவரே! ஆடீர் ஊஞ்சல்


ஐங்கரனும் கண்ணகியும் அருக மர்ந்து

ஆசிதந்து உந்தனுக்கு வாழ்த்துச் சொல்ல

பங்கமிலாக் கணங்கள் புடைசூழ வந்து

பாராள்சிவ பூதராயர் ஆசி நல்க

பொங்கல்பழம் பலகாரம் பல படைத்து

போற்றுமடி யார்களுனைச் சேவித் திருக்க

சங்கரனின் மைந்தனே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


பண்கொண்டு நாதசுரந் தவில் முழங்கும்

பாவலர்தே வாரயிசை அயல் துலங்கும்

வெண்சங்க வொலியெழுந்து வானை முட்டும்

விளங்குசே மக்கலமும் சேர்ந் தொலிக்கும்

மண்கொண்டு ஏராண்ட மாந்தர் வாழ்வில்

மகிழ்ச்சிநலம் செல்வமெலாம் ஈந்த ருளும்

கண்கண்ட தெய்வமே! ஆடீர் ஊஞ்சல்

கலைஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


இருளாண்ட அந்தகனை அழித்துத் தேவர்

ஈடேறச் சிவன்தந்த வடுக னென்றும்

அருளாண்டு மாந்தரிடர் களைந் துய்க்கும்

கரிமுத்தன் சஞ்சிகனே வாதுக னென்றும்

மருணீக்கும் நிர்வாணி சட்டை நாதர்

மாகபாலி நாமங்கள் சொல்லிச் சொல்லி

உருகுமடி யார்போற்ற ஆடீர் ஊஞ்சல்

உன்மத்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

 

தண்ணொளியைத் தலையணிந்து சூல மேந்தி

தரித்தமுப் புரிநூலாய் அரவஞ் சூட்டி

எண்டிசையைக் காலத்தை நவகோள்களினை

ஏழுலகை ராசிகளைக் கட்டி யாளும்

வண்ணமதாய் பாசாங் குசமுந் தாங்கி

வலம்வந்து சுயம்புவாய் சிறுவை தெற்கு

மண்ணமர்ந்த வைரவரே! ஆடீர் ஊஞ்சல்

மறைஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


வெய்யோனும் வெண்மதியும் ஒளியைச் சிந்த

வெண்முகிலும் பன்னீரைச் சொரிந்து தூற்ற

மையோமர கதமென்ன மயில்க ளாட

மைவிழியார் மணிக்கரத்தால் மலர்கள் சாற்ற

மெய்யோர்தம் உளம்போல வண்டு ஆர்ப்ப

மேதியா நிரைசூழ்ந்து அமுத மூற்ற

அய்யாவெமை ஆண்டருள்வீர்! ஆடீர் ஊஞ்சல்

ஆபத்து தாரணரே! ஆடீர் ஊஞ்சல்


அன்பர்தமைக் காப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

அடியவர்க்கு அருள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

இன்பநிலை தருபவரே! ஆடீர் ஊஞ்சல்

இன்னல்களைக் களைபவரே! ஆடீர் ஊஞ்சல்

நன்மைகளைச் செய்பவரே! ஆடீர் ஊஞ்சல்

நம்மலங்கள் அறுப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

தென்சிறுவை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

சிவஞான வைரவரே! ஆடீர் ஊஞ்சல்


வாழி

கார்மழையும் மண்ணுஞ் சிறந்து வாழி!

காராளர் மறையவர்கள் வணிகர் வாழி!

ஏருழுத பயிர்விளைந்து பொலிந்து வாழி!

ஏராளர் செல்வம்பசு நிறைந்து வாழி!

நேர்மகளிர் சந்ததிகள் செழித்து வாழி!

நேயமுடன் ஊரொன்றித் தழைத்து வாழி!

பேர்புகழத் தென்சிறுவை மக்கள் வாழி!

பேரருளால் உலகாளும் இறையே! வாழி!









இலங்கையர்கோன் கட்டுரைகள் உரை

https://www.youtube.com/watch?v=zuF9Ow30J8A  




Monday, April 13, 2020

சிறுகதை -வெளிக்கும்

சிறுகதை 
வெளிக்கும் 

வருசம் பிறந்திட்டுது. இது புதுசுதான். இதப்போலை ஒவ்வொரு வருசமும் புதுசுதான். ஆனா, பஞ்சாங்கந்தான் அதை அறுபதாய்ப் பிரிச்சு, அறுபது பேர் வைச்சு, அறுபது வருசத்துக்கொவ்வொண்டாய் வருசம் திரும்பத் திரும்ப வருமெண்டு சொல்லுது. இந்தப் பஞ்சாங்கத்தைப் பற்றியே ஆரும் இப்ப நினைக்கிறேல்லை. பஞ்சாங்கங்கள் கூட ஒவ்வொண்டும் ஒவ்வொரு போக்கிலை போய்க் கொண்டிருக்குதுகள். அதாலை, அது கூட இப்ப பெரிசாய்த் தெரியுறேல்லை. நான் பிறந்ததிலையிருந்து இப்ப வரைக்கும் பதினெட்டு வருசத்தைக் கண்டிட்டன். இருந்தாலுமென்ன?
அம்மா ஒவ்வொரு வருசமும் புதுப் புதுச் சட்டையள் எடுத்துத் தருவா. அக்கம் பக்கத்து வீடுகளிலை பொங்கல் நடக்கும். கோவிலுகளிலை திருவிழாக்கள் நடக்கும். நானும் தங்கச்சியும் புதுப் புதுச் சட்டையளோடை கோவிலுகளுக்கும், சொந்தக்கார வீடுகளுக்கும் போவம். வெடி கொளுத்தியும், கிட்டி, கிளித்தட்டு விளையாடியும் திரிவம். அவ்வளவுதான்.
எனக்குச் சின்னனாய் இருக்கே;கை ஒண்டும் தெரியாது! அம்மா உடுப்பு எடுத்துத் தருவா. பலகாரங்கள் சுட்டுத் தருவா. பூவாணம் வெடியெல்லாம் வாங்கித் தருவா. எங்களுக்குச் சந்தோசமாயிருக்கும். துள்ளிக் கொண்டு திரிவம்.
அம்மா கூட நாளிலை வெள்ளைச் சீலைதான் உடுப்பா. மாமி மாதிரியோ, மற்றப் பெரிய பொம்புளையள் மாதிரியோ அம்மா சிவப்புப் பொட்டுப் போடமாட்டா. கழுத்திலை, கையிலை நகை நட்டொண்டும் போடமாட்டா. ஒரு இடத்துக்கும் வரவும் மாட்டா. கேட்டால் “ நான் வரேல்லை” என்பா. “ஏன் வரேல்லை?” எண்டால் “அப்பிடித்தான்” என்பா. நாங்கள் நெடுக ஆய்க்கினைப்படுத்தினால் “நான் வரக்கூடாது. அப்பா இல்லாட்டால் நான் கோயில் குளமொண்டுக்கும் போகக் கூடாது. நீங்கள் கவனமாய்ப் போட்டு வாங்கோ” என்பா. அப்பா சாமியிட்டைப் போயிட்டாரெண்டுதான் அம்மா சொன்னா.
நான் கொஞ்சம் வளந்தாப் பிறகுதான் தெரியும் அப்பா செத்ததும், அப்பா இல்லாமல் அம்மா கஷ்ரப்பட்டதும், அந்த நேரம் வெளியிடத்திலையிருந்து இஞ்சை வந்து வேலை செய்த பொம்பிளைப் பிள்ளையளுக்கு அம்மா சமைச்சுக் குடுத்ததும், அந்த வருமானத்திலை எங்களை வளர்த்ததும். இன்னும்…இன்னும்…
அதுவரையிலை அந்த அக்காமார் வருவினை. சாப்பிடுவினை. ஏதாவது கேட்பினை. போவினை. அவ்வளவுதான்!
இப்ப நினைக்கேக்கை மனதுக்குள்ளை ஏதோ குமையுது.
“அவள் நெருப்புத் திண்டு உங்களை வளத்தவள். நீங்கள் ஏதோ அதை உணந்து படிச்சு ஒரு தொழில்துறையிலை சேந்திட்டியளெண்டால்தான் அவள் பாடுபட்டதுக்குப் பலனாகும்” எண்டு நாகம்மா ஆச்சி நெடுகச் சொல்லுறது இப்பதான் முழுசாய்ப் புரிஞ்சிருக்குது.
இனியாவது நாங்கள் அம்மாவைக் கஸ்டப்படுத்தக் கூடாது எண்டு என்னை நினைக்க வச்சிருக்குது.
வருசம் பிறந்தால் ஊரெல்லாம் வெடி வெடிக்கத் தொடங்கி விடும். வருசம் பிறக்க முதலே வெடி வெடிக்கத் தொடங்கி, வருசம் பிறக்கிற நேரம் உச்சக் கட்டத்திலை நிக்கும். மொத்தமாய் வெடிச் சத்தம் ஓய ஒரு கிழமையாவது செல்லும். வருசப் பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் எண்டு வந்தாலே போதும்! எங்கடை ஒழுங்கையெல்லாம் வெடி வெடிச்ச கடுதாசித் துண்டுகள் மழை காலத்து ஈசல் இறகுகள் போலை குவிஞ்சு கிடக்கும். சின்னச் சின்னத் தகரப் பேணியள் எல்லாம் சப்பையாய்ப் பிரிஞ்சு போய்க் கிடக்கும். பட்டணசபைக்காரர் பார்வையிலை படாவிட்டால் அதுகள் மாதக் கணக்காய்க் குவிஞ்சு போய்க் கிடக்கும். ஒரு சில வீட்டுக்காரர்கள் மட்டும் தங்கடை வீட்டுக்கு முன்னாலை வீதியில் குவிஞ்சு போய்க் கிடக்கும் குப்பையளைக் கூட்டி, தங்கடை எல்லை கழிய வீதியிலையே குவிச்சு விடுவினை.
வருசம் பிறக்க முதலே அம்மா எங்களுக்குச் சொல்லிப் போடுவா…            
“வருசப் பிறப்பா நாத்துக் குழப்படியேதும் செய்யக்கூடாது. சண்டை பிடிக்கக்கூடாது. அழக்கூடாது. விளங்குதோ? வருசப் பிறப்பிலை குழப்படி செய்தால் அந்த வருசம் முழுக்க அதைத்தான் செய்வீங்கள்… அதை விட்டிட்டு நல்ல பிள்ளையளாய் இருக்க வேணும்… நல்லாய்ப் படிக்க வேணும்…விளங்குதோ?” எண்டு அவ சொல்லச் சொல்ல நாங்களும் ஓமெண்டு சொல்லுவம். அம்மா சொன்னபடி நடக்க வேணும் எண்டுதான் விடிய எழும்பினவுடனையே நினைப்பம். ஆனா, அண்டைக்கு ஏதோ ஒரு விதத்திலையெண்டாலும் குழப்படி விடாமலிருந்ததாய் ஞாபகமில்லை.
நான் கொஞ்சம் வளந்தாப் பிறகு வருசப் பிறப்பு நாளிலை கொஞ்ச நேரம் படிக்கிறது… கொஞ்ச நேரம் விளையாடிறது… கொஞ்ச நேரம் பாட்டுப் பாடுறது எண்டு கொஞ்சக் கொஞ்ச வேலையளைச் செய்து கொண்டிருப்பன். ஏனெண்டால் வருசம் முழுவதும் அப்பிடிச் செய்யலாம் எண்ட நம்பிக்கையிலை!
இந்த முறையும் ஏதோ ஒரு வருசம் பிறந்திட்டுது. அந்த வருசத்தின்ரை வடமொழிப் பெயர் மனசுக்கை நிக்குதில்லை. இப்ப நினைக்கிற போதுதான் தமிழ் எவ்வளவு மொழியளைத் தனக்குள்ளை இரவல் வாங்கி வச்சிருக்கெண்டு தெரியுது. அதாலைதான் நாங்களும் இண்டைக்கு நடுத்தெருவிலை நிக்கிறமோ?
இப்ப கொஞ்சக் காலமாய் வருசப் பிறப்புகள் சோபையில்லாமலேயே வந்து போகுதுகள். வெடி கொளுத்திறேல்லை. பொங்கிப் படைச்சு, புது உடுப்புகளோடை உல்லாசமாய்த் திரியுறேல்லை. ஒவ்வொரு வீட்டிலையும் ஒவ்வொரு பிரச்சினையள்! ஒரு வீட்டிலை பொம்பர் அடிச்சு, வீட்டிலை சமைச்சுக் கொண்டிருந்த பொம்பிளை செத்திருப்பா. ஒரு வீட்டிலை ஷெல் விழுந்து இன்னொருத்தர் செத்திருப்பார். இன்னொண்டிலை அடுத்த நேரக் கஞ்சிக்கு வழியில்லாமல், உலருணவு நிவாரணத்தை மட்டும் பாத்துக் காத்திருப்பினை. இப்பிடியே வீட்டுக்கு வீடு வாசல் படியாய்ச் சனம் ஒவ்வொரு பாடாய் இருக்கேக்கை வருசமென்ன.. தீபாவளியென்ன…
இந்த வருசம் இறுக்கம் கொஞ்சம் கூட. சாமானுகளின்ரை விலையள் சாதாரணமாய் எங்களைப் போலை வறிய சனங்கள் எட்டிப் பிடிக்கேலாத அளவுக்கு உயர்வாயிருக்குது. இப்பவெல்லாம் மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் சாமான்களின்ரை விலை ஏறிக் கொண்டே போகுது. கொஞ்சம் பிரச்சினையெண்டு கேள்விப்பட்டாலே அந்தண்டு சாமான்கள் - முக்கியமாய் மண்ணெண்ணெய்- காணக் கிடைக்காது. நாங்கள் ஏதாவது பிரச்சினை இருக்கோ இல்லையோ எண்டதைப் பேப்பரைப் பாக்க முன்னமே மண்ணெண்ணெய்க் கடையைப் பார்த்தாலே தெரிஞ்சு போகும். பிறகு அடுத்த நாள் இருபதோ முப்பதோ ரூபாயாலை சாமானுகளின்ரை விலை கூடியிருக்கும்.
இந்த முறை சனத்தின்ரை கை நல்லாய் வறண்டு போச்சுது. அதாலை புது வருசம் எண்டது கூடப் பல பேருக்குத் தெரியாமலே போச்சுது. ஒண்டிரண்டு வெளிநாட்டுப் பணக்காரற்றை வீடுகளிலைதான் வருசத்தின்ரை அடையாளத்தைக் காணேலும். எங்கடை வீட்டிலையும் இந்த முறை வருசப் பிறப்புக் கொண்டாடேல்லை. பொங்கலுமில்லை. புது உடுப்பும் எடுக்கேல்லை. விடிய வெள்ளணவே ஐயரிட்டை ரண்டு ரூபா தெட்சணை குடுத்திட்டு, ஒரு செம்பு மருத்துநீர் வாங்கியந்து தோஞ்சிட்டு, அக்கம் பக்கத்திலையுள்ள கோவில்களுக்குப் போட்டு வந்ததோடை சரி.
ஆனால் மாமா வீட்டுக்காரர் வருசப் பிறப்புக் கொண்டாடினவை. அவையிட்டை கனடாப் பணமிருக்குது. அதாலை விதம் விதமாக உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு வந்து போச்சினம்.
இதைப் போலைத்தானே நாங்களும் விதம் விதமான உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு வெடியளையும் பூவாணங்களையும் கொளுத்திக் கொண்டு திரிஞ்சனாங்கள். ஆனா, இந்தப் பிரச்சினையளாலை இப்ப இதையெல்லாம் எங்களாலை கொண்டாடேலாமல் போச்சுது. எண்டைக்கோ ஒரு நாளைக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் தீர்ந்து நாங்கள் இதுகளையெல்லாம் சந்தோசமாய்க் கொண்டாடுவம்தானே எண்டு நான் எனக்குள்ளை ஆறுதல் பட்டன். வீட்டு நிலமை புரிஞ்சதாலை என்னாலை பேசாமலிருக்க முடிஞ்சுது. ஆனா, தங்கச்சிக்கு அது புரியேல்லை. அவள் சின்னப் பிள்ளைதானே! அதாலை
“மச்சாளவையெல்லாம் புதுப் புதுச் சட்டையளோடை வரேக்கை நான் மட்டும் இந்தப் பழசோடை நிக்கிறதே?” எண்டு அம்மாவோடை சண்டைக்குப் போனாள். அவள் அப்பிடிக் கேக்கேக்கை கண்ணீரும் வந்திட்டுது. அதைப் பார்க்க எனக்கும் பரிதாபமாய்த்தான் கிடந்தது. அதை விட அம்மாவைப் பார்க்க…
அம்மாவுக்கும் கண் கலங்கி விட்டுது. அவளுக்குப் பதிலொண்டும் சொல்ல ஏலாமல் நிண்டா. என்னாலை கூடத்தான் எதுவும் செய்ய முடியேல்லை. பிறகு நான்தான் அவளைக் கூப்பிட்டு “புது வருசத்திலை புது உடுப்புப் போடுறதாலை ஒண்டும் வந்திடாது. நாங்கள் எங்கடை மனங்களைப் புதுசா… வெள்ளையா வச்சிருந்தாலே போதும். அதுதான் உண்மையான புது வருசம்” எண்டு சொன்னன். ஆனால் அவள் சமாதானம் அடையேல்லை.
என்னாலையுந்தான் அவளுக்கு ஒரு உடுப்பை எடுத்துக் குடுக்க முடியேல்லை. அம்மாதான் அப்பா இல்லாதவ. அவவாலை என்னதான் செய்யேலும்? பாழாய்ப் போன ஆமியள் அப்பாவைச் சுடாமல் இருந்திருந்தால் இந்தப் பத்து வருசத்திலையும் எவ்வளவு முன்னேறியிருப்பம்? இப்பதான் எனக்கு கொஞ்சம் உலகம் பிடிபடுகுது. இனி நான் கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டுப் பாடு பயனுகளைப் பார்க்க வேணும்.
வீணாய் நாளுகள்தான் ஓடிப் போயிட்டுது. ஓடி ஓடி அது இண்டைக்கு என்னடடையிருந்து பதினெட்டு வருசத்தையும் இழுத்துக் கொண்டு போயிட்டுது. இந்தப் பதினெட்டு வருசத்திலையும் நான் எதையும் உருப்படியாகச் செய்யேல்லை. செய்ய முடியாமல் போச்சுது. இதுக்காண்டி நான் ஆரைக் குறை சொல்லுறது? காலத்தையா?
கடந்த காலங்கள் கசப்பாயே கழிஞ்சு போயிட்டுது. அம்மா கஸ்டப்பட்டுப் படிப்பிச்சா. நானும் படிச்சன். இடையிலை பிரச்சினையள்… மனக் குழப்பங்கள்... இப்பிடியே காலம் கழிஞ்சு போக திடீரெண்டு பரீட்சை அறிவிப்பு வரும். திடீரெண்டு நிக்கும். பிறகு கொஞ்சக் காலம் செல்லத் திரும்பவும் பரீட்சை அறிவிப்பு வரும். பரீட்சைக்கு ஆயத்தம் நடக்கும். அந்த நேரம் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வரும். ஊரடங்குச் சட்டம் அமுலிலை இருக்கேக்கையே பரீட்சையும் நடக்கும். இதுக்குள்ளை கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பாய்ப் போனது போலை எங்கடை மூளைக்குள்ளை கிரகிச்சு வைச்சவையெல்லாம் மறந்து போயிடும். பரீட்சையிலை எதிர்பார்த்த றிசல்டும் கிடைக்காது.
வரும் வரும் எண்டு றிசல்டை எதிர்பார்த்தும் நாங்கள் களைச்சுப் போனம். இனி அது வந்தாலும் என்னென்ன சோதினையளுடன் வருமோ தெரியேல்லை. அது வரைக்கும் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வருசப் பிறப்பாநாத்து தங்கச்சிக்கு ஒரு உடுப்பு எடுத்துக் குடுக்கக் கூட வக்கில்லாத நிலையிலை நான் றிசல்டைப் பார்த்து, அது வந்தாப் பிறகு ஒவ்வொரு மனக் கோலங்களைக் கட்டிக் கொண்டிருக்கேலாது.
இவ்வளவு காலந்தான் பேசாமல் இருந்திட்டன். இனியாவது உருப்படியாய் ஏதாவது செய்ய வேணும். இந்தப் படிப்பு இண்டைக்கிருக்கிற நிலையிலை எனக்கு என்னத்தைத் தந்திட்டுது? அப்பா இல்லாமல் அம்மா எங்களை வளர்த்து ஆளாக்கின பிறகும் நான் இப்பிடியே மரக்கட்டையாய் இருந்து என்ன செய்யுறது?
இண்டைக்கிருக்கிற நிலமையிலை படிப்பும், படிப்புக்கேற்ற தொழிலும் எண்டிருந்தால் அடுத்த வருசப் பிறப்புக்குள்ளை காணாமல் போயிடுவம்.
அடுத்த வருசப் பிறப்பிலையாவது நான் கட்டாயம் தங்கச்சிக்கு ஒரு உடுப்பு எடுத்துக் குடுப்பன். உடுப்பு எடுத்துக் குடுக்கிறதோடை மட்டும் எங்கடை பிரச்சினை தீர்ந்து போகுமா?

வெளிச்சம்
புரட்டாதி 1993.


Wednesday, August 14, 2019

விமர்சனம்


ஆழியாள் மொழிபெயர்த்த 
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்


ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ஈழத்தின் ஆளுமை மிக்க கவிஞர்.உரத்துப் பேச, துவிதம், கருநாவு ஆகிய கவிதைத் தொகுதிகள் மூலம் இவரது கவிதா ஆளுமையைக் கண்டு கொள்ளலாம். ஆங்கிலத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்று யாழ்.பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றி, தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தும் கடமையாற்றியும் வருகிறார்.

ஒரு குடியேற்ற நாடாக இன்றளவும் அடையாளப்படுத்தப்படும் அவுஸ்திரேலியாவில் இரத்தமும் சதையுமாக காலாதி காலமாக அங்கிருக்கும் ஆதிக் குடிகள் தொடர்பில் கண்டுகொள்ளப் படுவதில்லை. இயற்கை மீதான வாஞ்சையும், இயற்கையின் ஒவ்வொரு உயிரிகள் மீதான அன்பும் கொண்ட ஆதிக் குடிகள் பல இனப் பிரிவுகளாக பரவி வாழ்ந்தவர்கள். தமக்கெனச் சொந்த நிலத்தையும், ஆறுகள், மலைகள் முதலான இயற்கைச் செல்வங்களையும், பல்வேறு பாரம்பரியங்களையும், சடங்குகளையும், தமக்கே உரித்தான வாழ்முறைகளையும் கொண்டவர்கள். தமக்கான ஆட்சியினையும் கூட வைத்திருந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் வந்தேறு குடிகளாக வந்தவர்களால் அடக்கப்பட்டு ஓரத்தில் முடக்கப்பட்டனர். அவர்களது அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் கட்டாய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். 
இன்று அவர்கள் தாம் யார்? என்பது தொடர்பில் பதகளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலைமைகளை அவுஸ்திரேலிய தொல்குடிக் கவிஞர்கள் பேசியுள்ளனர். ஆழியாளுக்கு இந்த உணர்வு ஒத்துணர்வாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈழத்தில் எங்களது நிலையும் அவ்வாறானதே! அவர்களது பாடலை மொழிபெயர்த்து ஆழியாள் தரும் போது அவர்களது குரல் எங்களது குரல் போலவே ஒலிக்கிறது. அவர்களது பாடுகளும், அடையாள இழப்புத் தொடர்பான அவர்களது ஏக்கங்களும் நெஞ்சைப் பிசைகின்றன.

இப்பூவுலகு 
புத்தம் புதிதாய் இருந்த போது
நான் விழித்தெழுந்தேன்.
அப்போது அங்கு
ஈமுவும் ,வொம்பட்டும், கங்காருவும் இருந்தன.
வேற்று நிற மனிதன் எவனும் இருக்கவில்லை.
நானே இந்நிலம்
இந்நிலமே நான்.
நானே அவுஸ்திரேலியா.
(ஆதிக்குடியின் ஆன்மா –ஹைலஸ் மரீஸ்)

வெள்ளையர்களால் தொல்குடிப் பெண்கள் விரும்பியும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கர்ப்பிணிகளாக்கப்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நிலையோ பரிதாபம். அவர்களை ஆதிக் குடிகளும் சரி, வெள்ளையரும் சரி சந்தேகத்துடனும் ஏளனத்துடனும் பார்க்கும் நிலையில் அவர்களது மனநிலையைப் பேசுகிறார்கள் கவிஞர்கள்.

குழந்தைப் பிராயத்து நினைவுகளில்
‘கலப்பு, கலப்புச் சாதி
கறுப்புப் பெட்டை’யில் தொனிக்கும் 
இகழ்ச்சியும் ஏளனமும்
என் தலையைக் கிறுகிறுக்க வைக்கும்.
எத்தனை கேள்விகள்

இத்தாலியா? கிரேக்கமா?
நியூசிலாந்தின் மயோரியா? 
அப்ப என்ன?

கறுப்புக் கலப்பு கூடிப் போனதால்
நான் வெள்ளைக்காரி இல்லை.
வெள்ளைக் கலப்புக் கூடினதால்
நான் கறுப்பி இல்லை.
இரண்டுக்கும் நடுவே 
எங்கும் சேர்த்தியில்லாமல்.

(எங்கு சேர்த்தி? – லொரெயின் மக்கீ சிப்பெல்)

பொன்னிற முடியுடனும் நீல முடிகளுடனும் 
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைநடுவில் நிற்கிறேன்.
என்னுடைய ஆன்மா கறுப்பாலானது.

இரவுகளில் நான் அழுகிறேன்.

எங்கு நான் உரித்தாய்ச் சேர்வது என்பது
எனக்குள் நடக்கும் ஒரு பெரும் போராட்டம்.
கறுப்பரும் வெள்ளையரும்
என்னை அவநம்பிக்கையோடும் பகையுணர்வோடும் பார்க்கின்றனர்.

யார் அவன்? 
கறுப்பனா? அல்லது வெள்ளையனா?
இரவுகளில் என்னிடம் வரும்
மூதாதையோரின் ஆன்மாக்கள்
அதை ஒரு வேளை
எனக்குச் சொல்லக் கூடும்

(கறுப்பு மனத்தவன் -ஷேன் ஹென்றி)

ஆழியாளின் எளிமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இக்கவிதைகள் அவுஸ்திரேலியாவின் ஆதிக் குடிகளது ஆன்மாவை மட்டுமல்ல பாரம்பரிய அடையாள இழப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எம்மினத்தினதும், இது போலவே உலகெங்கும் பரவி வாழும் இனங்களதும் ஆன்மாவையும் பேசுகின்றன. 
தென்னமெரிக்காவை, ஆபிரிக்காவைக் கவிதைகளாலும், கதைகளாலும் தரிசிக்க முடிந்த நமக்கு ஆழியாள் புதியதொரு வாசலைத் திறந்துள்ளார். இந்தக் கவிதைகள் எம்மில் உணர்வுத் தொற்றலை ஏற்படுத்தி, எம்மை ஆதிக் குடிகளின் மனநிலையோடு ஒன்றச் செய்கின்றன. ஆழியாள் தந்திருக்கும் அறிமுகம் கவிதைகளை நோக்கி அழைத்துச் செல்லும் கைத்தடியாக இருக்கிறது. பூவுலகு சுவாசிப்பையும், தைல மரங்களின் வாசத்தையும் இந்தக் கவிதைகள் மூலம் எம்மாலும் உணர முடிகிறது. அதுவே ஆழியாளின் வெற்றியும் ஆகும்.

-இயல்வாணன் 
தீம்புனல் 30-04-2018

Friday, August 2, 2019

கவிதை - தோற்றுத்தான் போனோமே!



அன்னராசா மாமா!

நேற்றெங்கள் வீட்டில்
நெடுமரமாய் நின்றீர்கள்!

பூத்துக் காய்த்து நிழல் தந்து உறவுகளின்
புகலிடமாய் மிளிர்ந்தீர்கள்!

ஏற்ற கருமம் எதுவெனினும்
நீங்களல்லால்
ஆற்றியதில்லை எப்போதும் எம்வீட்டில்!

பேற்றின் பேருறவாம் அக்காவைப்
பிரிந்தொருகால்
கூற்றுவரை ஒருநாளும் நீங்கள்
நின்றதில்லை!

காற்றடித்து கடும் புயலாய்
சுழன்றடித்த காலத்திலும்
இவ்வுறவு தகர்ந்ததில்லை!

நேற்றுவரை மாமா 
எம்தாயாய் தந்தையாக
வீற்றிருந்து எம்முன்னே
விளக்காக ஒளிர்ந்தீர்கள்!

காற்றில் சுடர் அணைய
காரிருளில் தவிக்கின்றோம்!

பெருமரத்தின் உருவழிய
பாழ்வெளியில் தகிக்கின்றோம்!

கூற்றுவனைக் கலைக்கும்
வழியற்று நாமெல்லாம்
தோற்றுத்தான் போனோமே!

சுடர்விழியை இழந்தோமே!

-இயல்வாணன்