Sunday, July 2, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 12


முன்றில்  12
இயல்வாணன்

ஓவியர், நாடகர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, உளஆற்றுப்படுத்துநர், இசையாளர், கல்வியியலாளர் எனப் பலதளங்களில் செயற்பட்டவர் மூத்த கல்வி நிர்வாகசேவை அதிகாரியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள முத்து இராதாகிருஸ்ணன். இவர் தெல்லிப்பழை வறுத்தலைவிளானை பூர்வீகமாகக் கொண்டவர். 23-06-1963இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். தந்தையார்  முத்துக்குமாரு தொழில்முறையில் சட்டத்தரணி. தாயார் தனேஸ்வரி சுதுமலைச் சகோதரிகளுள் ஒருவராய் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தியவர்

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் வித்தியாலயம், திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரி, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயம், யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றார்(1986). 1993இல் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும், 2005இல் முதுகல்விமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
1982
ஆம் ஆண்டு சித்திர பாட ஆசிரியராக நியமனம் பெற்று ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கடமையாற்றிய இவர் புவியியல் பட்டதாரி ஆசிரியராக அனலைதீவு சதாசிவ வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றினார்.

 1999இல் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக, வவுனியா தெற்கு மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் தரம் 1 சிரேஸ்ட அதிகாரியாக  விளங்குகிறார்.
கல்வித்துறையில் வடக்கு கிழக்கு மாகாண ஆரம்பக்கல்வி, அழகியற் கல்வி, விசேட கல்வி, உளவளத்துணை, கண்ணிவெடி அனர்த்த விழிப்புணர்வு முதலான செயற்திட்டங்களின் இணைப்பாளராகவும், பொறுப்புவாய்ந்த அதிகாரியாகவும் கடமையாற்றி, பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.  தொலைக்கல்விப் போதனாசிரியராகவும், தேசிய கல்வியியற் கல்லூரி வருகை விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


ஓவியத்தில் ஆர்வங் கொண்ட இவர் சன்மார்க்க வித்தியாலயத்தில் தரம் 10 மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் சித்திரக்கதைப் புத்தகம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தில் பயின்றவேளை புவியியலாளன் சஞ்சிகையில் கட்டுரை எழுதியிருக்கிறார். 80களின் நடுப்பகுதியில் மாணவர் போராட்ட அமைப்புகளின் சஞ்சிகைகளில் எழுதியிருக்கிறார். களத்தில், ஊற்று, நெம்பு, தாயகம், வெளிச்சம், சுபமங்களா, சரிநிகர், கணையாழி, தாமரை, புதிய ஊற்று, புதுவசந்தம் முதலான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
வெளிச்சம் சஞ்சிகையில் கோபாலி என்ற பெயரில் இவரது ஓவியங்கள் வெளிவந்தன. அவ்வாறே தாயகம், சுபமங்களா சஞ்சிகைகளிலும் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. இவரது நூல்கள் உட்பட பல நூல்களுக்கு அட்டைப்படங்களையும் இவர் வரைந்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட கவின்தமிழ், முழுநிலா முத்து, கல்விக்கதிர் செய்தியேடு என்பனவற்றின் ஆசிரியராக இருந்து இவற்றை வெளியிடுவதில் பங்காற்றியிருக்கிறார்.
இவரெழுதிய 9 சிறுகதைகள் உதிரவேர்கள்(2000) தொகுதியாகவும், 13 சிறுகதைகள் உள்மனச் சித்திரம்(2013) தொகுதியாகவும் வெளிவந்துள்ளன. ‘இராதாகிருஸ்ணனின் கதைகளில் சூழலின் விபரமான பதிவு, கட்புலமயப்பாடு நன்கு தெரிகிறது. அல்லல்களை, அவலங்களை நுண்திறனுடன் இனங்கண்டு கொள்ளும் ஒரு சமூக நோக்கும் உள்ளது. போர்ச்சூழல், வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களையும் நுணுக்கமாக அவதானிக்கும் சக்தியும் உள்ளதுஎன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போன்று மனித வாழ்வில் நாம் காணும் சிறு சம்பவங்களையும் ஒரு ஓவியத் துளிர்ப்போடும், பாத்திர அசைவோடும் கதையாக்கம் செய்வதில் இராதாகிருஸ்ணனுக்குத் தனிச்சிறப்புண்டு எனலாம். இவரது அந்தப் பெட்டைக் குட்டிகள் என்ற சிறுகதை அரச பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 7 தமிழ்மொழியும் இலக்கியமும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இவரது கவனம் நாடகத்துறையிலும் இருந்தது. நண்பர்களுடன் இணைந்து மண் சுமந்த மேனியரில் பணியாற்றியதிலிருந்து வவுனியாவில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியது வரை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு உள்ளது. இவரெழுதிய நாடகங்கள் 1998இல் மானிடச் சிக்கல் என்ற நூலாக வெளிவந்ததுடன் அரச சாகித்திய விருதினையும் பெற்றுக் கொண்டது. 2006இல் துயரப்பாறை நாடக நூல் வெளிவந்ததுடன் அந்த நூலுக்கும் அரச சாகித்திய விருது கிடைத்தது. பூலோக மோட்சம்(2022) நாடக எழுத்துருக்களளையும் கவிதாநிகழ்வையும் உள்ளடக்கிய தொகுதியாகும்.
சிறுவர் இலக்கியத்துக்கும் இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். சிறுவர் நாடக எழுத்துருக்கள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். அவ்வகையில் சிறுவர் அரங்கு(சிறுவர் நாடகங்கள் - 2004), உள்ளாளி பெருக்கும் சிறுவர் அரங்கு(2004), பசுமைத்தாயகம்(சிறுவர் நாடகங்கள் 2009), பூதம் காத்த புதையல்(2011), காட்டில் மாநாடு (2011), நரிமேளம்(2011), கடலின் துயரம்(2011), சிறுவர் கதைகள்(2017), கூவும் குயிலின் ஏக்கம்(2020) ஆகிய இவரது சிறுவர் இலக்கிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கற்றலும் கற்றல் சூழலும்(2014), பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு(2008) முதலான கல்வியியல் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளதுடன் இவர் எழுதிய கவிதைகள் நிலம் தொடாத மின்னல்(2019) தொகுதியாக வெளிவந்துள்ளது.
தேசிய சாகித்திய விருதுகள் 3, வடக்கு கிழக்கு மாகாண விருதுகள் 4, வடக்கு மாகாண விருதுகள் 3, கிழக்கு மாகாண விருதுகள் 3 என்பன இவரது நூல்களுக்குக் கிடைத்துள்ளன. கிழக்கு மாகாண வித்தகர் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது.


தொழில்சார் நெருக்கடிளுடன் ஒரு கல்வித்துறை அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய போதும் அவ்வப்போது சமூக அக்கறையோடு படைப்புகளை வழங்கியதில் இராதாகிருஸ்ணன் முக்கியமானவர். கல்வித்துறையிலும், இலக்கியத்திலும் அவரது பங்களிப்பு முக்கியமானது. சிறந்த தொடர்பாடல் திறன், கூர்ந்த சூழல் மற்றும் சமூக அவதானிப்பு, மனிதாய அணுகுமுறை, படைப்பாக்கத் திறன் என்பன ஏனையவரிலிருந்து அவரை வேறுபடுத்தும் தனியடையாளமாகும். தனது மணிவிழாவைக் கண்டுள்ள இராதாகிருஸ்ணன் இனி உத்வேகத்துடன் ஈழத்து இலக்கியத்துக்கு வளஞ்சேர்ப்பார் என நம்புகிறோம்.

25-06-2023 உதயன் சஞ்சீவி

 

இயல்வாணன் பத்தி - முன்றில் 11

 

முன்றில் 11

இயல்வாணன்



நடிகராக, நாடக இயக்குநராக, நாடகப் பயிற்சியினை வழங்கும் வளவாளராக, எழுத்தாளராக, அரங்க ஆய்வாளராக, விமர்சகராக, கூத்துக் கலைஞராக அரங்கும் கூத்துமாக வாழ்வைக் கொண்டாடிய கலைஞர் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு. அவர் கடந்த ஜுன் 9ஆந் திகதி அகவை 80இல் அமுதவிழாக் கண்டுள்ளார். ஈழத்தின் அரங்கத்துறை ஆளுமைகளில் முக்கியமானவரான இவர் கிராமங்களில் வழக்கொழிந்து கொண்டிருந்த கூத்துகளை மீளுருவாக்கம் செய்வதிலும் ஆவணப்படுத்துவதிலும் முதன்மையான பங்களிப்பை வழங்கிய ஒருவராவார்.

மட்டக்களப்பு அமிர்தகழியிலுள்ள சீலாமுனை கிராமத்தில் 09-0-1943இல் பிறந்த மௌனகுரு தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும்(1965), தமிழ் முதுமாணிப் பட்டத்தையும்(1973) பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.கைலாசபதியின் வழிகாட்டலில் கலாநிதிப் பட்டத்தைப்(1982) பெற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா பட்டத்தையும்(1975) பெற்றுக் கொண்டார்.

1966இல் ஆசிரியப் பணியில் இணைந்து கொண்ட இவர் 5 ஆண்டுகள் கொழும்பு பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் அரச பாடநூல் எழுதும் பணியில் ஈடுபட்டார். மீண்டும் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு, 1981வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1979இல் இருந்து மூன்றாண்டுகள் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1984இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் உதவி விரிவுரையாளராகப் பணியை ஆரம்பித்த அவர், விரிவுரையாளராக, முதுநிலை விரிவுரையாளராக அங்கு பணியாற்றினார்.

1991இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்ற இவர் நுண்கலைத்துறைத் தலைவராகவும், கலைப்பீடாதிபதியாகவும் பணியாற்றினார்.

தனது இந்த பணிகளின் போது பல நூற்றுக் கணக்கான அரங்கவியல் கலைஞர்களையும், கூத்துக் கலைஞர்களையும் உருவாக்கியுள்ள இவர் அரங்கு சார்ந்தும், கூத்து சார்ந்தும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனது வாழ்நாளைச் செலவிட்டுள்ளார். அத்துடன் கிராமப்புறத்துக்குள் முடங்கியிருந்த கூத்தினை பேராசிரியர் வித்தியானந்தனின் அடியொற்றி புலமைத்துவ மட்டத்துக்கு எடுத்துச் சென்ற பெருமையும் இவரைச் சாரும்.

இவரது கிராமம் வடமோடிக்கூத்தில் பிரபலம் பெற்ற ஒரு கிராமமாகும். அங்குள்ள செல்லையா அண்ணாவியரிடத்தில் கூத்துப் பயின்ற மௌனகுரு அவரது அண்ணாவியத்தில் ‘பாசுபதாஸ்திரம் கூத்தில் நடித்தார். அந்த நடிப்பைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்து வைத்திருந்த பேராசிரியர் சு.வித்தியானந்தன் பல்கலைக்கழகம் சென்ற மௌனகுருவை சிக்கெனப் பிடித்துக் கொண்டார். அவர் மரபுவழித் தமிழ் நாடக மறுமலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்து நாடகங்களை மேடையேற்றிய காலமது. மௌனகுருவை பிரதான பாத்திரமாகக் கொண்டு இராவணேசன், நொண்டி நாடகம், கர்ணன் போர், வாலிவதை முதலான நாடகங்களை மேடையேற்றினார்.

ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கருத்துநிலைப்பட்டு இயங்கிய இவர் பின்னர் மார்க்ஸிய சிந்தனைகளால் கவரப்பட்டார். அதன் விளைவாக   1969ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி அரங்கில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டுக்காக அவர் தயாரித்து அளிக்கை செய்த சங்காரம் நாடகம் அக்காலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதெனலாம்.

சிறுவர் அரங்கச் செயற்பாடுகளிலும் ஈடுபட்ட இவர்  வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், தப்பி வந்த தாடி ஆடு, ஒரு முயலின் கதை, பரபாஸ் முதலான நாடகங்களைத் தயாரித்து மாணவர்களை நடிக்க வைத்து மேடையேற்றினார். அத்துடன் சக்தி பிறக்குது, சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள் முதலான பெண்ணிய நாடகங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

அரங்கு சார்ந்தும், தமிழிலக்கியம் சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அரங்கு ஓர் அறிமுகம் (பேராசிரியர் கா.சிவத்தம்பி,க.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து – 1999), அரங்கியல்(2003), 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கியம் (எம்.ஏ.நுஃமான், திருமதி சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து – 1979), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1999), கலை இலக்கியக் கட்டுரைகள்(1997), சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1993), மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), தமிழர் வரலாறும் பண்பாடும்(2005), தமிழ்க் கூத்துக்கலை(2010), சங்ககால இலக்கியமும் சமூகமும் ஒர் மீள்பார்வை(2003), சடங்கிலிருந்து நாடகம் வரை(1988), நாடகம் - அரங்கியல் பழையதும் புதியதும்(2005), பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்(2005), பழையதும் புதியதும்(1992), பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்(1997) கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்(1994) முதலான பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

 அவர் எழுதிய நாடக ஆக்கங்கள் இராவணேசன்(1998), சக்தி பிறக்குது(1997), நாடகம் நான்கு(இ.முருகையனின் கடூழியம், நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம், இ.சிவானந்தனின் காலம் சிவக்கிறது, மௌனகுருவின் சங்காரம் ஆகியவை – 1980), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(மழை, நம்மைப் பிடித்த பிசாசுகள், சரிபாதி ஆகிய நாடகங்கள் - 1987), சங்காரம், தப்பி வந்த தாடி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், புத்துயிர்ப்பு முதலான பலவும் நூல்களாக வெளிவந்துள்ளன.

மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு அதிகாரப் போட்டியால் உருவாகும் யுத்தத்துக்கு எதிரான குரலாக  சார்வாகன் (2000) என்ற குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார். மக்கள் இலக்கியக் கவிஞர் சுபத்திரனது கவிதைகளையும்(2002) இவர் தொகுத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் சிறுகதைகள், கவிதைகளை எழுதிள்ளார். அத்துடன் இலங்கை வானொலியிலும் சங்கநாதம், கிராம சஞ்சிகை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ளார். சிறுவர் பாடல்களையும் எழுதியுள்ளார். பொன்மணி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவரது கலைச்சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட நாடககீர்த்தி(2013), கொடகே தேசிய சாகித்திய வாழ்நாள் சாதனை விருது(2014), தேசநேத்துரு விருது(2015), இலங்கை அரசின் பாரம்பரிய மற்றும் நவீன கலைச்சேவைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது(2019), சாதனைத் தமிழன் விருது(2020) போன்றன இவருக்கான மணிமகுடங்களாக அமைந்துள்ளன. 2017இல் மகுடம் சஞ்சிகை இரட்டைச் சிறப்பிதழை வெளியிட்டு மௌனகுருவைக் கௌரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் வாலையில் ஆடிய துடிப்போடு மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்தை நிறுவி, தனது அறிவையும் அனுபவங்களையும் இளைய சந்ததிக்கு கடத்தும் பணியில் தொடர்ந்தும் செயலாற்றி வருகிறார்.

 11-06-2023 உதயன் சஞ்சீவி

இயல்வாணன் பத்தி - முன்றில் 10

முன்றில் – 10

இயல்வாணன்

கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக, நடிகராக, பல்துறை அறிஞராக, பேச்சாளராக, சமயச் சொற்பொழிவாளராக, கல்வியியலாளராக, சிறுவர் இலக்கியகர்த்தாவாக பல நிலைகளில் கலை இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் பெருந் தொண்டாற்றியவராக அவர் விளங்குகின்றார்.

28-10-1933 அன்று நுணாவில் மேற்கு, சாவகச்சேரியில் பிறந்த விநாயகர் கந்தவனம் தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் மேற்கு கணேச வித்தியாசாலையிலும் ( இன்று நுணாவில் மேற்கு அ.த.க.பாடசாலை -  மூடப்பட்டுள்ளது) இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் நிறைவு செய்தார். சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் பரீட்சையில் (எஸ்.எஸ்.சி)  சித்தியடைந்த அவர் ஓராண்டு டிறிபேக் கல்லூரியில் எழுதுவினைஞராகக் கடமை புரிந்தார்.

இக்காலத்தில் வடமாநில ஓவியப் பரிசோதகர் கனகசபையிடம் ஓவியமும், சங்கீத பூஷணம் நடேசனிடம் சங்கீதமும் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும், கோவை அரசினர் கலைக்கல்லூரியிலும் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1958ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்ட அவர் 6 ஆண்டுகள் மாத்தளை சென்.தோமஸ் கல்லூரியில் கற்பித்து, இடமாற்றம் பெற்று வந்து வயாவிளான் மத்திய கல்லூரியில் கற்பித்தார். குரும்பசிட்டி அவர் திருமண பந்தத்தால் புகுந்த இடமாயிற்று.

கல்வி அமைச்சின் பாடநூற் சபையில் பணியாற்றியதுடன் அரச புவியியல் பாட நூல் எழுத்தாளர் குழுவில் ஒருவராகக் கடமையாற்றினார். புவியியல் பாடத் துணைநூல்களையும்(1970) எழுதினார்.1973ஆம் ஆண்டு அதிபர் நியமனம் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் யோகபுரம் மகாவித்தியாலயத்தில் பணியாற்றினார். ஆசிரிய ஆலோசகராகவும் கடமை புரிந்தார். பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியிலும் சிறிது காலம் அதிபராகக் கடமையாற்றினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார்.

இந்தக் காலங்களில் பட்டப்பின் கல்வி டிப்புளோமா தகைமையைப் பெற்றார். இலங்கையில் க.பொ.த. உயர்தரத்தில் நாடகவியல் ஒரு பாடமாக ஆரம்பிக்கப்பட்ட போது தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழக கொழும்பு வளாகத்தில் நாடக டிப்புளோமா பயிற்சி வழங்கப்பட்டது. அதில் இவர் பங்குபற்றிச் சிறப்புச் சித்தியடைந்ததுடன் வடபுலத்தில் முதன்முதலில் (வயாவிளான் மத்தியகல்லூரியில்) நாடக பாடத்தைக் கற்பித்த ஆசிரியராக இவர் விளங்கினார். அத்துடன் நாடகபாட ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் வளவாளராகவும் விளங்கினார். உயர் ஆங்கில டிப்புளோமா படிப்பையும் நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்தகன்று கற்ற அறிவும், அனுபவமும் அவரை ஒரு அறிஞனாகவே ஆக்கியது.

1980ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு கற்பித்தல் பணிக்காகப் பயணமான அவர் அந்நாட்டின்  டிரான்ஸ்கி பிராந்தியத்தில் (நெல்சன் மண்டெலா பிறந்த இடம்) புனித கத்பேட்ஸ் உயர் பாடசாலையில் மானிடவியல்துறைத் தலைவராகக் கடமையாற்றினார். 1988ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற அவர் இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார்.

1948ஆம் ஆண்டு தனது 15வது வயதில் ஈழகேசரியின் சிறுவர் பகுதியில் ‘ஒரு கால் மூன்று தலை என்ற தலை;பில் எழுதிய கட்டுரையுடன் இவர் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். 1952இல் ஈழகேசரி  பொதுநலவாய பொருட்காட்சி தொடர்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 1954ஆம் ஆண்டு இவரது முதலாவது நூலான ‘ஒன்றரை ரூபாய் குறுநாவல் வெளிவந்தது. இதனை கவிநாயகன் என்ற புனைபெயரில் எழுதினார். பல்வேறு துறைசார்ந்து 50ற்கு மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். வித்தியானந்தமாலை, அரும்பு,பூச்சரம், தேவைக்கேற்ற திருமுறைத் திரட்டு உள்ளிட்ட பல நூல்களைத் தொகுத்துள்ளார்.


கீரிமலையினிலே குறுங்காவியம்(1969), பாடுமனமே கவிதைகள் (1972), இலக்கிய உலகம் கவிதைகள்(1964),  ஏனிந்தப் பெருமூச்சு கவிதைகள்(1965), கூனியின் சாதனை கட்டுரை (1966), நுணாவிலூர் இடவரலாறு(1971), உய்யும் வழி அரங்கக் கவிதைகள்(1972), கவியரங்கில் கந்தவனம்(1972), நல்லூர் நாற்பது(1971), முறிகண்டிப் பத்து, குரும்பசிட்டி விநாயகர் பத்து,  பரீட்சையில் சித்தியடைவதெப்படி?(1972), இலங்கையில் ஆசிரியத் தொழில்(1977), விநாயகப்பா பக்திப் பனுவல்(1993), ஒன்றுபட்டால் நாட்டிய நாடகம்(1994), மணிக்கவிகள்(1994), இயற்கைத்தமிழ்(1995), எழுத்தாளர்(2005), முத்தான தொண்டர்(1995), புதிய சைவ வினாவிடை(1997), தங்கம்மா நான்மணிமாலை(1997), பத்துப் பாட்டு(1998), ஆறுமுகம்(1998), 12 Short Stories (1998), Lasting Lights(1998), சிவபுராண தத்துவம்(1998), கனடாவில் சைவசமயம்(2000), அது வேறுவிதமான காதல்(2001), சிவவழிபாடு(2002), கந்தன் கதை(2002), ஓ கனடா(2002), வரிக்கவிகள்(2002), தமிழ்க் கவிதை மரபு(2005), பொங்குதமிழ்(2005), ஆன்மீகக் கவிதைகள்(2007), பாவாரம்(2007), கவிநாயகம் வாழ்வும் வரலாறும் வானொலி தொடர் நேர்காணல்(2009) முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கன. ஆலயங்கள் பலவற்றுக்கும் - குறிப்பாக கொல்லங்கிராய் விநாயகருக்கு – பல சிறுநூல்களை எழுதியுள்ளதுடன் சிறுவருக்கான சமயக் கதைநூல்களையும்(கந்தனும் ஒளவையாரும், விநாயகப் பெருமானும் அகத்தியரும்) எழுதியுள்ளார். இவ்வாறு தமிழன்னைக்கு மகுடம் சூடும் பல படைப்புகள் மூலம் தனது பல்துறை ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார்.

யாழ்.இலக்கிய வட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கவிஞர் கந்தவனம் எட்டு ஆண்டுகள் அதன் தலைவராகவும் கடமையாற்றினார். தான் வாழ்ந்த, பணியாற்றிய இடங்களில் இலக்கிய மன்றங்களை உருவாக்கியுள்ளார். கவிமணி, மதுரகவி, இலக்கிய வித்தகர், சைவதுரந்தரர் முதலான 20ற்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கி தமிழுலகம் இவரைக் கௌரவித்துள்ளது.

தனது ஆழ்ந்தகன்ற அறிவால் தமிழிலக்கியத்துக்கு வளஞ்சேர்த்த கவிஞர் வி.கந்தவனம் 90 அகவையில் கனடாவில் வசித்து வருகிறார். அவர் நூறாண்டு நிறைவு கண்டு தமிழுக்கு அணி செய்ய வாழ்த்துவோம்.

04-06-2023 உதயன் சஞ்சீவி