Tuesday, August 13, 2024

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின் மேடையேற்றம்

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின் மேடையேற்றம்

இயல்வாணன்




பேராசிரியர் சி.ஜெய்சங்கரின் நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் சத்தியசோதனை நாடகம் கடந்த வாரத்தில் 25ஆம், 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் 6 தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டது. கொக்குவில் தேசிய கலை இலக்கிய பேரவையிலும், திருமறைக்கலா மன்றத்திலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி(இரு தடவை), சுண்டிக்குளி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் இந்நாடக ஆற்றுகை நடைபெற்றது.

1984ஆம் ஆண்டளவில் குழந்தை ம.சண்முகலிங்கத்தால் எழுதப்பட்ட இந்நாடகம் அப்போது கலாநிதி க.சிதம்பரநாதனது நெறியாள்கையில் பல அரங்குகள் கண்டிருந்தது. 40 வருடங்கள் கழித்து இந்நாடகம் மீண்டும் மேடையேற்றப்பட்டுள்ளமை முக்கியமானதாகும். இந்த நாடகம் நடைமுறைக் கல்வி தொடர்பான விமர்சனங்களை முன்வைத்து கேள்வி எழுப்புவதுடன் பொருத்தமான கல்விமுறையின் இன்றியமையாமை தொடர்பில் சிந்தனைத் தூண்டலை ஏற்படுத்துவதாக ஆக்கப்பட்டுள்ளது.

40 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கல்வி தொடர்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டனவோ அவையெல்லாம் இன்றும் பேசப்படுகின்ற, மேலும் மோசமாகச் சீரழிந்திருக்கிற நிலையை இந்த நாடகத்தைப் பார்ப்பவர்கள் உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒருவரே கல்வியில் உயர்நிலையை அடைய முடியும். போட்டி போட்டுப் படிக்கின்ற நிலையை, அந்தப் போட்டியில் சிலர் வெல்ல ஏனையவர்கள் வெளிவீசப்படுகின்ற நிலையை, படித்த படிப்புக்கும் கிடைக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத நிலையை இந்நாடகம் பேசுகிறது. பாடசாலைப் படிப்புக்கு மேலாக ரியூசன் என்று பிள்ளைகளை வருத்துகின்ற, அவர்களில் அதிக சுமையை ஏற்றுகின்ற கல்விமுறையை, எமது மக்களின் மனப்பாங்கையெல்லாம் இந்நாடகம் கேள்விக்கு உட்படுத்துகின்றது. இவையெல்லாம் அச்சொட்டாக இன்றும் பொருந்துகிறது. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் தீர்க்கதரிசனமான சிந்தனையை இந்நாடகம் இன்றளவும் கடத்தி வந்துள்ளது என இந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நாடகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவிகளே முழுமையாக நடித்திருந்தனர். சொல்ல வந்த விடயத்தை கச்சிதமாக முன்வைத்திருந்தார்கள். அத்துடன் வழக்கமான இசைக்கருவிகளின் பயன்பாடு இல்லாமல் தடி, சப்பளாக்கட்டை, கிறிச்சான் முதலான எளிமையான கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆற்றுகையை அவர்கள் செய்திருந்தமை சிறப்பானது. தேசிய கலை இலக்கியப் பேரவையில் நாற்சார் முற்றத்திலேயே ஆற்றுகை இடம்பெற்றது. சூழலுக்கேற்ப செயற்படக்கூடிய வகையில் தாமே பாடி ஆடி நடித்தமையும் சிறப்பானது.

இலங்கை அரசாங்கம் கல்வியில் புதிய சீர்திருத்தம் ஒன்றினை நடைமுறைப்படுத்த முனையும் இச்சந்தர்ப்பத்தில் இந்நாடகமும் கல்வியில் மாற்றந் தேவை என வலியுறுத்துவது முக்கிமானது. பேராசிரியர் சி.ஜெய்சங்கர் சமூக மாற்றந் தொடர்பிலும், சூழலியல் தொடர்பிலும், பாரம்பரிய கலைகளின் மீளுருவாக்கம் தொடர்பிலும் தொடர்ந்து குரல் கொடுத்தும் செயலாற்றியும் வரும் ஒருவர். அவரது நெறியாள்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவியர் 40 வருடங்கள் கடந்த ஒரு நாடகத்தை மீண்டும் மேடையேற்றியிருப்பதும், ஒரு சிந்தனைக் கிளறலைச் செய்திருப்பதும் முக்கியமானது.

உதயன் புதன்பொய்கை 01-05-2024

 

மு.தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம்

 மு.தமிழ்ச்செல்வனின் நஞ்சாகும் நிலம்

-இயல்வாணன்

தமிழில் சூழலியல் குறித்த கவனமும், அது தொடர்பான ஆக்கங்களும் குறைவு. ஆயினும் காலத்துக்குக் காலம் பலரும் சூழல் கேடுறுத்தப்படுவது குறித்து எழுதி வந்திருக்கிறார்கள். ஊற்று, ஆதாரம், நங்கூரம் என்று எமது சுற்றுச் சூழலை முக்கியப்படுத்தி பல சஞ்சிகைகளும் வெளிவந்திருக்கின்றன. மில்க்வைற் கனகராஜா ஒரு காலத்தில் தனி மனிதனாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், மரங்களை நடும் செயற்பாட்டையும் மேற்கொண்டார். நெல்லியடி மா.கனகராஜா வல்லைவெளியில் மரநடுகையைச் செய்தார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்  பரந்தளவில் இப்பணியைச் செய்தது. 





சுற்றுச்சூழல் அக்கறையுடன் தொடர்ந்து பயணிப்பவர் பொ.ஐங்கரநேசன். அவருடைய சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை. அவை ஏழாவது ஊழி என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இத்தகைய பணியில் ஈடுபட்டிருப்பவர் மு.தமிழ்ச்செல்வன்.

மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மாவட்டத்தின் காடுகள் சூழ்ந்ததும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஊற்றுப்புலம் என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்கையின் சீதளத்தை அளைந்து வளர்ந்தவர். பசிய மரங்களும், பறவைகளும், விலங்குகளும் கொண்ட இயற்கையில் ஊறித் திளைத்த அவரது வாழ்க்கை யுத்தத்தின் பின்னர் - அந்த அழகிய வாழ்க்கை- மெல்ல மெல்லச் சிதைவுறுதலைக் கண்டு அலைவுற்றவர்.

ஒரு ஊடகவியலாளனாக, ஒளிப்படக் கலைஞராக, பத்தி எழுத்தாளனாக, சமூக நோக்குடையவராக பலநிலைகளில் அவர் படிமலர்ச்சி கண்டாலும் இயற்கையுடன் இயைந்த வாழ்வின் சிதைவு அவரைப் பாதித்தே வந்துள்ளது. அதனால்தான் சமூகவியல், அரசியல் சார்ந்து அவர் எழுதியுள்ள போதும் சூழலியல் குறித்த அவரது எழுத்துகள் அழுத்தமானவையாக அமைந்துள்ளன.  அவற்றை யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஈழநாதத்தில் எழுதியதில் இருந்து அவ்வப்போது கட்டுரைகளாக எழுதி வந்துள்ளார். ஒளிபடங்களாகவும் பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.

இவற்றை நஞ்சாகும் நிலம் என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய இக்கட்டுரைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் சூழலியல் அச்சுறுத்தல்கள், பாதிப்புகள், இதனால் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்பவற்றை விளக்குவனவாக எழுதப்பட்டுள்ளன. சூழலியல் பாதிப்புகள்  எங்கோ ஓரிடத்தில் நடந்தாலும் அது ஒட்டுமொத்த பூமியையும் பாதிக்கும் என்பதை தமிழ்ச்செல்வன்  இந்தக் கட்டுரைகள் ஊடாக அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

இந்த நூலுக்கு மூத்த எழுத்தாளர் கருணாகரன் அறிமுகத்தை எழுதியுள்ளார். வாழ்த்துரையை வண.பிதா யோசுவா அடிகளார் வழங்கியுள்ளார். எழுத்தாளர் நிலாந்தன் முன்னுரை எழுதியுள்ளார். இவற்றில் தமிழ்ச்செல்வனின் பன்முகப் பரிமாணங்களை அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

முதலாவது கட்டுரை வன்னியின் வனாந்தரங்களைப் பாதுகாக்கத் தவறின் வாழ்விழந்து போவோம் என்பதை சொல்கிறது. தொடர்ந்து நடைபெறும் காடழிப்பு, காட்டின் ஆதாரமான கிரவல் மண்ணகழ்வு என்பவற்றால் மாரிமழை குறைவடைவது, வரட்சி, வன்னியின் கிணறுகள் வற்றுதல், அதனால் எழும் மனிதாயப் பிரச்சினைகளை இக்கட்டுரை பேசுகின்றது. இந்தக் கபளீகரங்களைப் பார்த்துக் கொண்டிருப்போரை, அதிகாரிகளை இக்கட்டுரை கண்டிக்கிறது. சூழலியல் பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. 

‘சாதாரணமாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் நிலத்தடி நீர்மட்டம் 20 முதல் 40 அடி வரை காணப்பட்டது. இன்றோ 100 முதல் 150 அடிகளுக்குக் கீழ் போய் விட்டது’ என்று அவர் சொல்வதில் இருந்து இதன் விபரீதத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். கிளிநொச்சி காடுகள் சூழ்ந்த  பிரதேசமாக இருப்பினும் காடழிப்பினால் கடும் வெப்பம் நிலவும் சூழல் இருப்பதற்குக் காரணம் தோலிருக்க சுளை விழுங்கிய கதைதான். வன்னியின் வீதியோரங்களை அண்டி மரங்கள் நெருக்கமாக காடாக உள்ளன. உள்ளே சென்றால் மரங்கள் தறிக்கப்பட்டு, கிரவல்கள் அகழப்பட்டு வெட்டவெளியாக காட்சி தருகின்றது என்பதை அவர் சொல்லும் போது வெம்மையை உணர வைக்கிறது.

மறுபுறத்தில் குளங்கள் காணாமல் போகின்ற அபாயத்தை இவரது கட்டுரைகள் பேசுகின்றன. காணாமல் போன குஞ்சுக்குளம் என்ற கட்டுரையில் வன்னேரியை அடுத்து மக்கள் வாழ்ந்த குஞ்சுக்குளம் பிரதேசம் உவர்நீராக மாறியமையால் அந்தப் பிரதேசத்தை விட்டு மக்கள் மெல்ல மெல்ல வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்த கதையைப் பேசுகிறது. மண்டைக்கல்லாறில் அணை கட்டப்படாததால் கடல்நீர் புகுந்து நன்னீர்க் குளத்தை உவர் நீராக்கி விட்டது. ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யப்பட்ட நிலத்தில் இன்று வெறும் 25 ஏக்கரில் பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. இதுவும் இல்லாமல் போகலாம் என்பது எவ்வளவு துயரமானது!

இன்று சுருங்கி வருகின்ற, ஒருநாள் காணாமல் போகப் போகின்ற கிளிநொச்சிக் குளத்தைப் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. கனகாம்பிகைக் குளத்தின் உபரி நீர் ரை ஆறாக வந்தும், இரணைமடுக் குளத்தின் இடதுகரை வாய்க்கால்  மூலமும் நீரைப் பெறும் இக்குளம் கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு, சூழல் கேடுறுத்தப்படுவது ஒரு புறம். சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு மண் நிரவப்பட்டு குடிமனைகள் உருவாக்கப்படுகின்றமை மறுபுறம். அரசியல் மற்றும் அதிகாரத் தரப்புகள் இதற்கு மறைமுகமாக ஒத்துழைக்கின்றன. வடிவேல் பாணியில் குளத்தைக் காணவில்லை என்று சொல்லும் நிலை வரும் என்பதை தமிழ்ச்செல்வன் இக்கட்டுரையில் கோடிகாட்டுகிறார்.

வடக்கின் பெரிய குளமான இரணைமடுக் குளத்தின் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என்ற கட்டுரை இரணைமடுக் குளத்தின் வரலாற்றைச் சொல்வதுடன் தற்போது 7ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பயன்பெறுவதை வெளிப்படுத்துகிறது. யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதன் பொருட்டு இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு, அணை உயர்த்தப்பட்டது. தற்போது பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்கப்படுவது குறித்துச் சிந்திப்பதால் அந்த நீரை மேற்குப்புற கிராமங்களின் விவசாயத் தேவைக்குப் பயன்படுத்தப்படலாம் என காவேரி கலாமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயத்தை அவர் முன்வைக்கிறார். அத்துடன் விவசாயிகள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீரை வழங்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான தனது விமர்சனத்தையும் அறிவுபூர்வமாக முன்வைக்கிறார்.

இவ்வாறே குழாய்க்கிணறுகள் : நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் என்ற கட்டுரையில் ஆழமாக அமைக்கப்படும் குழாய்க் கிணறுகள் நிலத்தை உவரடையச் செய்யும் ஆபத்தை வெளிப்படுத்துகிறார். அவ்வாறே மூன்றாம் உலகப் போர்  தண்ணீருக்கான யுத்தமாக அமையும் என்பதை உலகளாவிய அனுபவங்களோடு ஒரு கட்டுரையில் முன்வைக்கிறார். இன்னொரு கட்டுரையில் இரசாயன உரம், மருந்துப் பாவனை காரணமாக நிலம் நஞ்சாவதை புள்ளிவிபர ஆதாரங்களோடு முன்வைக்கிறார். கண்டல் தாவரங்களின் அழிவு சூழல் சமநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பு, மர நடுகையின் அவசியம், பாலியாற்றுப் புனரமைப்பின் உள்ளடக்கம், கௌதாரிமுனை மணல் அகழ்வால் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பல விடயங்களை இவரது கட்டுரைகள் பேசுகின்றன.

சுற்றுச்சூழல் குறித்த கூருணர்வு உடையவர்களால்தான் இத்தகைய கட்டுரைகளை எழுத முடீயும். எழுதுவது மட்டுமல்ல மணல் மாபியாக்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், அவர்களுக்கு உதவும் அதிகாரத்தரப்புகளையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தும் வருகிறார். கருணாகரன் சொல்வது போல சூழலியல் பற்றிப் பேசுவது அதிகாரத் தரப்புக்களின் பகையைத் தேடுவது என்ற அச்சத்தில் பலருமிருக்க தமிழ்ச்செல்வன் ஆபத்துகளை எதிர்கொண்டு சுற்றுச்சூழலுக்காகக் குரல்கொடுப்பது பெரிய பணி.

03-03-2024 வீரகேசரி


Thursday, August 8, 2024

வடமயிலை சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார் திருவூஞ்சல்

 வடமயிலை சங்குவத்தை மாணிக்கப் பிள்ளையார்

திருவூஞ்சல்

எச்சரீக்கை-பராக்கு-லாலி-மங்களம்

                                       பாடலாக்கம் : சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்)

காப்பு

திரைபூத்த கட லொலிக்கும் வடமயிலை

சிறந்திடுநற் சங்கு வத்தை ஊருறைந்த

கரிமுகத் தோன் மாணிக்கப் பிள்ளையின்மேல்

காரனைய ஊஞ்சலிசை யினிது பாட

நிரைசேர்ந்து மீனினங்கள் இசை பொழியும்

நித்திலத்தில் ஊர்செழித்து மேன்மை பெறும்

கரையமர்ந்து அருளுகின்ற கண பதியின்

கவினுறுநற் பதமலர்கள் காப்ப தாமே.


நூல்

1

திடவேத நான்மறைகள் கால்க ளாக

திகழுசிவ ஆகமமே வளைய தாக

நடமிடு நாற்கரணமதே கயிற தாக

நலமிகு மெஞ்ஞானமதே பலகையாக

புடமிடு பொற்பதும பீட மேறி

புவிமிசை மாந்தருய்ய அருளும் பிள்ளை

வடமயிலை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

2

மருங்கதலிக் குலையாளி நிரைகள் நாட்ட

மாவிலையுந் தோரணமும் கரைகள் பூட்ட

பெருந்தெங்கு ஓலையதே கூரை மூட்ட

பேரழகுப் பூக்கள் வெளிவண்ணம் சூட்ட

அருந்துவார பாலகர்போல் இளநீர் காட்ட

அமைத்தமண் டபத்தே அமர்ந்து ஆடும்

தருவமர்ந்த கணபதியே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

3

வெண்சங்க மொலித்தோங்க விரி கடலின்

விளங்குதிரை ஆர்ப்பரித்துப் பூக்கள் தூவும்

பண்கொண்டு மீனினங்கள் பாவே யோதும்

பாலமுதம் ஆவினங்கள் சொரிந்து போற்றும்

விண்ணின்று வெள்ளிகளும் நிலவும் சேர்ந்து

விளக்கனைய தண்ணொளியை நன்றே பாய்ச்சும்

கண்கண்ட தெய்வமே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

4

அலைகடலின் அருகேநற் கோவில் கொள்ள

ஆசாரி லாடசங்கிலித் தவண்டை என்னும்

விலைமதியா விற்பன்னர் சிற்பம் செய்யும்

விஸ்வகர்மா வின்கனவில் தோன்றி அருளி

கலைமலிந்த வடமயிலை வந்தமர்ந் தார்

காலமெலாம் சந்ததிகள் பூசை செய்ய

தலமமர்ந்த ஐங்கரனே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

5

மஞ்சளையும் பொன்பொதிந்த மகுட மாட

மாசெவியில் இழைந்தமணிக் குழைக ளாட

நெஞ்சணிந்த வைரமணித் தாரு மாட

நேரிழையார் சித்திபுத்தி சேர்ந்தே யாட

கஞ்சமலர்ப் பொற்கரத்து அணிக ளாட

காலாடப் பேழைவயிற் றுடம்பு மாட

தஞ்சமடைந் தவர்க்கருள்வாய்! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

6

சங்கரனும் சாம்பவியும் வடந்தொட் டாட்ட

சார்ந்தமர்ந்த சண்முகனும் வடந்தொட் டாட்ட

பொங்கரவில் வாழ்மாலும் வடந்தொட் டாட்ட

போதரிய கண்ணகையும் பேச்சி யம்மன்

தங்குமுனி யப்பருமே வடந்தொட் டாட்ட

தலமமர்ந்த வைரவரும் வடந்தொட் டாட்ட

துங்ககரி முகத்தவனே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

7

வேதியர்கள் நான்மறையும் விதந்தே யோத

வெய்யடியார் பண்ணுடனே பனுவல் பாட

ஊதியவெண் சங்குமணி சேமக் கலமும்

உரத்தொலியை எழுப்பிடவே சுற்று முற்றும்

சோதியென வொளிர்கின்ற தூப தீபம்

சொர்க்கமெனத் தோற்று மெழிற் சோடனையும்

தோதிருக்க அமர்ந்தவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

8

முக்கனியுங் கற்கண்டும் பொங்க லொடு 

மோதகமும் தெங்கிளநீர் பால் தயிரும்

தக்கபல காரமொடு எள் பயறு

தந்தினிய படையலுடன் பக்தர் பரவி

வித்தகனாய் வீற்றிருந்து அருள் பொழியும்

விநாயகனே! உன்னடியைச் சரண் புகுந்தார்.

சக்திமிகக் கொண்டவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

9

ஏந்திழையார் இருமருங்கும் கவரி வீச

ஏற்றடியார் கொடிகுடையும் ஆலவட்டம்

தாங்கியுனை மனமொழியால் துதித்துப் பாட

தேவர்களும் வானிருந்து வாழ்த்திப் பேச

பூந்துணரைப் பெய்துபொழில் வாசம் நாற

பொன்மயிலும் தோகைவிரித் தாட்டம் போட

சங்குவத்தை அமர்ந்தவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்

10

வாழ்வளித்துக் காப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

வரமனைத்தும் அருள்பவரே! ஆடீர் ஊஞ்சல்

ஏழுலகும் உதரங் கொண்டீர்! ஆடீர் ஊஞ்சல்

எண்குணமு முடையவரே! ஆடீர் ஊஞ்சல்

ஊழ்வினையை ஒழிப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

உள்மலத்தை அழிப்பவரே! ஆடீர் ஊஞ்சல்

தொல்மயிலை வாழ்பவரே! ஆடீர் ஊஞ்சல்

மாணிக்கப் பிள்ளையாரே! ஆடீர் ஊஞ்சல்


வாழி

கார்பொழிந்து புவனமெல்லாம் செழித்து வாழி!

காராளர் விஸ்வகர்ம குலமும் வாழி!

பார்சிறந்து வடமயிலை ஊரும் வாழி!

பரவியெங்கும் வாழுமன்புப் பக்தர் வாழி!

தேர்செய்யும் சிற்பவன்மை சிறந்து வாழி!

தேவமொழி யந்தணரும் குடியும் வாழி!

பேர்கொண்டு சங்குவத்தைக் கோவில் வாழி!

பெருமைமிகு பிள்ளையாரின் புகழும் வாழி!


எச்சரீக்கை

உமைபாலனே! சிவமைந்தனே! தேவா! எச்சரீக்கை

உளமுருகுவோர் வளம்பெருக்கிடு நாதா! எச்சரீக்கை

தமைவணங்குவோர் தடையகற்றிடு செல்வா! எச்சரீக்கை

தரணீதரா! திரியம்பகா! குருவே!  எச்சரீக்கை


சங்குவத்தையில் வந்துதித்தநற் சீலா! எச்சரீக்கை

சந்ததம்அருள் தந்திடும்எழில் பாலா! எச்சரீக்கை

மங்கைமாதேவி தந்தமாகரி முகனே! எச்சரீக்கை

மன்றிலாடிய தொந்திமாமயூ ரேசா! எச்சரீக்கை


பராக்கு

கந்தனுடன் பிறந்தகரி முகனே! பராக்கு

கணபதியே! உமைமகனே! கஜனே! பராக்கு

மும்மைமல மறுக்குமேக தந்தா! பராக்கு

மூசிகத்தி லமர்ந்தருளும் விக்னா! பராக்கு


தந்தைதாய் உலகென்ற தரணீ! பராக்கு

தவஞானப் பழம்பெற்ற தரனே! பராக்கு

பந்தவினை நீக்குவக்ர துண்டா! பராக்கு

பரவுமடி யார்க்குதவும் பரனே! பராக்கு


லாலி

வடமயிலை வாழ்பவர்க்கு லாலி சுப லாலி

வடைமோதகப் பிரியருக்கு லாலி சுப லாலி

தடையகற்றும் கணபதிக்கு லாலி சுப லாலி

தகையனைத்தும் தருபவர்க்கு லாலி சுப லாலி

நடமிடுமுக் கண்ணனுக்கு லாலி சுப லாலி

நல்லருள்விக் னேஸ்வரர்க்கு லாலி சுப லாலி

திடமருப் பொடித்தவர்க்கு லாலி சுப லாலி

திகழ்பாரதம் எழுதினர்க்கு லாலி சுப லாலி


மங்களம்

பல்லவி

மாணிக்கப் பிள்ளையார்க்கு ஜெயமங்களம் - என்றும்

ஆனைமுகக் கடவுளுக்கு சுபமங்களம்

சரணம்

சீருயர்ந்த வடமயிலை

 திகழ்சங்கு வத்தைக்கும்

பெருமான் நட ராஜருக்கும்

 பெம்மையுமை அம்பிகைக்கும்

தாருடைய வேலனுக்கும்

 தங்குமுனி யப்பருக்கும்

பீடறுக்கும் வைரவர்க்கும்

 பிரானடியார் யாவருக்கும் (மாணிக்க)


மங்களம் ஜெய மங்களம்

மங்களம் சுப மங்களம்


Friday, March 29, 2024

நேர்காணல் : வீணைமைந்தன்


விமர்சனம் அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

 விமர்சனம்

அலெக்ஸ் பரந்தாமனின் பறையொலி

அலெக்ஸ் பரந்தாமன் ஒரு சிறுகதை எழுத்தாளர், கவிஞர், ஊடகவியலாளர் எனப் பல வகையிலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி. இவரது சிறுகதைகள் ஒரு பிடி அரிசி, தோற்றுப் போனவனின் வாக்குமூலம், அழுகைகள் நிரந்தரமில்லை முதலிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இது இவரது நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும்.

ஈழத்தில் வெளிவந்த சிறுகதைகளில் சாமானிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பேசும் சிறுகதைகளைப் பலரும் எழுதியுள்ளனர். ஆனால் அலெக்ஸ் பரந்தாமனின் கதைகள் சாமானிய மனிதர்களின் பாடுகளைப் பேசுவதையே பொதுப் போக்காகக் கொண்டவை. அவரது கதைகளில் வரும் கதாமாந்தர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற அடித்தட்டு மக்களாகவே உள்ளனர்.பல்வேறு தொழில்களிலும் ஈடுபடுகின்ற அன்றாடங் காய்ச்சிகள், தினக்கூலிகள், சலவைத் தொழிலாளர்கள், பறையடிப்பவர்கள் என்று விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், நெருக்கடிகளையும், துன்பங்களையுமே அவரது பெரும்பாலான கதைகள் பேசுகின்றன.

‘எழுத்தாளன் என்ற நிலைக்கப்பால் கதைகளை எழுதுபவன் எனும் மனவோட்டத்திலேயே என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நான் அணுகுகிறேன். இந்த மனிதர்களிடத்திலிருந்தே எனது கதைக்கான கருக்கள் பிறக்கின்றன’ என்று நூலாசிரியர் குறிப்பிடுவது அவரது கதைகளின் உள்ளடக்கத்தை துலாம்பரப்படுத்துகின்றது.

இந்தத் தொகுதியில் உள்ள எட்டுக் கதைகளும் அவ்வாறானதே. சிறுகதை மஞ்சரியில் ஏலவே இவை பிரசுரமாகியுள்ளன. பாத்திரங்களை அவற்றின் இயல்புக்கூடாக விபரித்து, கதை சொல்லும் பாங்கே இவரது எழுத்து நடையாகும். அது பாத்திரங்களின் நல்ல கெட்ட பண்புகளை வாசகரிடத்தில் தொற்ற வைப்பதனூடாக கதையை நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து பரமன் காடழித்து உருவாக்கிய ஒரு காணியை தாயாரின் இறப்பின் பின்னர் சகோதரி பங்கு கேட்டு பிரதேச செயலகத்துக்கு மனுச் செய்த கதை அம்மான்ரை காணி. தாயாரின் காணியில் தனக்கும் பங்கிருக்கு. பங்கைத் தர வேண்டும் எனக் கேட்டு நிற்கும் சகோதரி தேவியின் சுயநலத்தை இக்கதையில் நூலூசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.

அவ்வாறே மலையகத் தொழிலாளர்களை வன்னி மண்ணில் வேலைக்கமர்த்தி தொழில் சுரண்டலைச் செய்து வாழும் பெரிய மனிதர்களை அம்பலப்படுத்தும் கதையாக கறிவேப்பிலைகள் கதையை அவர் எழுதியுள்ளார். கந்தவனத்தின் தோட்டத்தில் மாடாக உழைத்த மாடசாமி இறுதி யுத்தத்தில் இரு கால்களையும் கையொன்றையும் இழந்து சக்கர நாற்காலியில் பிச்சை எடுக்கிறான். அந்த நேரத்தில் சந்தையில் மாடசாமியைக் காணும் அவர் “உன்னைலெ;லாம் எனக்குத் தெரியாதே… ஆர் நீ?” என்று கேட்டு விட்டு நகர்வது காட்டப்படுகிறது. இவ்வாறு தொழில் சுரண்டல்களால் வாழ்க்கையை இழந்த பலரில் ஒருவனாகவே மாடசாமி நம்முன் தோன்றுகிறான்.

தன்னுடைய அகங்காரத்தாலும், பிடிவாதத்தாலும் தேவி என்ற பெண் தனது வாழ்வையும், தனது குடும்பத்தின் வாழ்வையும் கெடுத்து இறுதிக் காலத்தில் யாருமற்று தனது செயலுக்காக வருந்துவதை காலம் தின்ற வாழ்வு கதை பேசுகிறது. தான் மட்டுமல்ல தனது சகோதரியையும் திருமணம் செய்ய விடாது முதிர்கன்னிகளாக வாழ்வைத் தொலைத்த பல குடும்பங்களின் கதையின் ஒரு பருக்கையே இந்தக் கதையாகும்.

யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம் பேசுவோரும், அடிப்படைவாதம் பேசுவோரும் கன்னை பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காலமிது. ஒரு பஸ் சந்திப்பு திருமணத்தில் வந்து முடிகிறது. ஆண் காலிழந்த முன்னாள் போராளி. பெண் இராணுவத்தில் இருந்து போராளிகளால் கொல்லப்பட்ட சிப்பாயின் மனைவி. இருவருக்குமான சந்திப்புகள், புரிதல்கள் திருமணம் வரை செல்வதை சிங்களத்தி என்ற கதை பேசுகிறது. இதற்குள்ளால் அரசியல்வாதிகளின் கபடத்தனம், போராளிகளை சமூகம் கைக்கொண்ட விதம், உழைப்பைச் சுரண்ட எண்ணும் உறவுகள் எனப் பல விடயங்களை நூலாசிரியர் பேசுகிறார். பிரசன்ன விதானகேயின் பிறகு திரைப்படம் இன்னொரு கோணத்தில் பேசும் விடயத்தை அலெக்ஸ் பரந்தாமன் இக்கதையினூடாக வேறு கோணத்தில் பேசுகிறார்.

குடும்பத்துக்காக உழைத்து மாயும் மனிதர்கள் பற்றியும்(பாரந்தாங்கிகள்), முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதைச் சொல்வதாயும்(குழம்புச்சோறு), சாதி சார்ந்த சிக்கல்களைப் பேசுவதாயும் (காலசூட்சுமம், பறையொலி) இத்தொகுதியில்  கதைகள் உள்ளன. . ஆதிக்க சாதியினருக்கு அடங்கிய ஒரு தலைமுறை வாழ்வு நீங்கி புதிய தலைமுறை வீறுடன் எழுவதை இத்தொகுதியின் தலைப்பான பறையொலி சிறுகதை பேசுகிறது.

இந்த எட்டுக் கதைகளும் சமூகத்தின் போலித் தனங்களைப் பேசுகின்றன. தொழிலாளர்களின் உழைப்பையும், முயற்சியையும் பேசுகின்றன. ஏழை மக்களின் வாழ்வுப் பாடுகளைப் பேசுகின்றன. குடும்பங்களின் பொருளாதார  உறவுச் சிக்கல்களைப் பேசுகின்றன. இக்கதைகளின் அடிநாதமாக சாதாரண மக்களும், அவர்களின் வாழ்வியலுமே அமைந்துள்ளன. அவ்வகையில் அலெக்ஸ் பரந்தாமன் தனது எழுத்துகள் மூலம் அடித்தட்டு மக்களின் வலிகளையும் வாழ்வையும் நம் கண்முன் கொண்டு வருகிறார். அது வாசகருக்கு புது அனுபவங்களைத் தருவதாக இருக்கும்.

இயல்வாணன்


Sunday, December 10, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 23

 முன்றில் 23

இயல்வாணன்

‘கேட்க ஒரு நாதி

கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம்

மீட்க ஒரு இயக்கம்

மூச்சுவிட ஒரு கவிஞன்

கட்டாயம் தேவை இது

காலத்தின் குரலாகும்’ என்று பாடிய கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தின் கவிஞராகவே தனது அடையாளத்தைப் பதித்தவராவார். சிற்பாசாரியாரான வரதலிங்கத்தின் இரண்டாவது மகனாக 1948ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆந் திகதி புத்தூரில் பிறந்த இரத்தினதுரை தனது ஊரின் பெயரையும் இணைத்துக் கொண்டு புதுவை இரத்தினதுரையாக கவி வடிக்க ஆரம்பித்தார்.

இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் நிறைவு செய்தார். அதன் பின்னர் இவரது சிறிய தந்தையாரான ஸ்ரீகந்தசாமியுடன் இணைந்து அவரது ஸ்ரீவாணன் சிற்பாலயத்தில் தேர்த் தொழில் செய்வதற்கான நுட்பங்களையும், மரச்செதுக்கு சிற்பக்கலை நுட்பங்களையும் கற்றுத் தேறியதுடன் ஒரு சிற்பாசாரியராகவும் உருவானார். நயினாதீவு நாகபூசணியம்மன் மஞ்சம், முன்னேஸ்வரம் ஆலய தேர், சட்டநாதர் சிவன் கோவில் தேர் உள்ளிட்ட பல ஆலயங்களின் தேர் உருவாக்கத்தில் இவரது கைவண்ணம் உள்ளது. நல்லூர் கம்பன் கோட்டத்தின் கதவு உள்ளிட்ட சிற்பச் செதுக்கல் கொண்ட கலைநயமான கதவுகள் பலவும் இவரால் உருவாக்கப்பட்டுள்ளன.

இவரது குருநாதரான கந்தசாமி மார்க்ஸிய சிந்தனை கொண்ட ஒரு பொதுவுடமைவாதியாக விளங்கினார். அவரது கருத்துநிலை புதுவை இரத்தினதுரையைப் பற்றிக் கொண்டது. கொம்யூனிசக் கட்சி ரய சார்பு, சீன சார்பு என நிலையெடுத்திருந்த காலத்தில் இவர் சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்த பொதுவுடமைவாதிகளுடன் இணைந்து தொண்டனாகச் செயற்பட்டார். பெர்துவுடமை மேடைகளில் இவர் உரையாற்றியதுடன் வீச்சுடன் கவிதைகளும் வடித்தார். சிங்கள இடதுசாரிகளுடனும் நெருங்கிப் பழகினார்.

1970களின் இறுதியில் தமிழர்களுக்கு எதிரான விரும்பத்தகாத சம்பவங்களின் பாதிப்பு, அரசாங்கத்தில் இணைந்திருந்த இடதுசாரிகளின் மௌனம் என்பன புதுவை இரத்தினதுரையைப் பாதித்தன. 

இருமொழி ஒரு நாடென்று/ இதுவரைஇருந்த நீதி/ தெருவினில் கிடக்குதம்மா/ தேசியம் என்ற பிள்ளை/ கருவிலே சிதைந்த காட்சி/ கண்களிற் தெரியுதம்மா/ பெருத்ததோர் வகுப்புவாதப் /புயலடித் தோய்ந்த தம்மா”என்று இந்த நிலைமையினைப் பாடினார். கொம்யூனிச ஈடுபாட்டையும் குறைத்துக் கொண்டார்.

நாட்டை விட்டு வெளியேறி இரு ஆண்டுகள் (1979-80) சிங்கப்பூரில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர் நாடு திரும்பிஇ மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்குச் சென்று தளபாடத் தொழிலகத்தில் (1983-85) பணியாற்றினார். 1985இல் நாடு திரும்பிய இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 2009இல் முள்ளிவாய்க்காலில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போகும் வரை அந்த அமைப்பின் கலை கலாசாரப் பிரிவின்(பின்னர் கலை பண்பாட்டுக் கழகம்) பொறுப்பாளராகச் செயற்பட்டார்.

தனது 14வது வயதில் கவிதை எழுத ஆரம்பித்த புதுவை இரத்தினதுரை மார்க்சிய சிந்தனையை வரித்துக் கொண்டு ஒரு -இடதுசாரியாக- மக்கள் இலக்கியவாதியாக தன்னை அடையாளங் காட்டினார். வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் அடக்கப்பட்ட மக்களுக்காக இவரது பேனா குரல் கொடுத்தது.  மானுட விடுதலைக்கான பாடல்களாக இவரது கவிதைகள் உருக்கொண்டன. குமரன், தாயகம், மல்லிகை, வெளிச்சம், சுட்டும் விழி முதலான சஞ்சிகைகளிலும், தேசாபிமானி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, ஈழநாடு, ஈழநாதம், உலகத்தமிழர், விடுதலைப்புலிகள் முதலான பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்தன. கவிஞராகவே, அதிலும் மரபுக் கவிஞராகவே அடையாளப்படுத்தப்பட்டாலும் கட்டுரைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது கவிதைத் தொகுதியான வானம் சிவக்கிறது சுதாயினி வெளியீடாக 1970ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் வெளியீட்டு விழா புத்தூரில் நடைபெற்றது. ஒரு தோழனின் காதல் கடிதங்கள்(1976 தாரகைகள் இலக்கியக்குழு வெளியீடு), இரத்த புபங்கள்(1980 கண்டி கலைஞர் பதிப்பகம்), நினைவழியா நாட்கள்(1993 தமிழ்த்தாய் வெளியீடு) , வியாசனின் உலைக்களம்(2003 தமிழ்த்தாய் வெளியீடு), பூவரம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்(2005 நங்கூரம் வெளியீடு) ஆகிய கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன.

தனது தந்தையார் வரதலிங்கம், தாயார் பாக்கியம் ஆகியோரது பெயர்களை இணைத்துக் கொண்டு வரதபாக்கியான் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதினார். அதுபோல தனது மனைவி ஸ்ரீரஞ்சினியின் பெயரை இணைத்து ரஞ்சினிரத்தினம் என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகளை எழுதியுள்ளார். தனது மகளான மாலிகா என்ற பெயரிலும், கமலக் கன்னி, இளவரதன், வியாசன் என்ற பெயர்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

புதுவை இரத்தினதுரையின் சிறப்பே கவிதை வாசிப்புத்தான். கவியரங்க மேடைகள் பல கண்ட இவரது கவிதைகளைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டமொன்றிருந்தது. சொற்சுவையோடு கவிதை சொல்லும் பாங்கே அலாதியானது. அதுபோலத்தான் இவரது மேடைப்பேச்சும். கொம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும்இ விடுதலைப் போராட்ட கால மேடைகளிலும் அனல் பறக்கும் பேச்சாளனாக இவர் தனித்துத் துலங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான கவிஞராக விளங்கிய இவர் பல நூறு தாயக விடுதலைப் பாடல்களை எழுதியுள்ளதுடன் அவ்வியக்கம் சார்ந்த பிரச்சாரக் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். பெரியளவில் இரண்டு முத்தமிழ் விழாக்களை மானிப்பாயிலும், சாவகச்சேரியிலும் பெருமெடுப்பில் நடத்திய இவர் காத்திரமான முத்தமிழ் விழா மலர்களையும் (1991இ 1992) வெளியிட்டார். கருணாகரனை ஆசிரியராகவும், புதுவை இரத்தினதுரையை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளியிடப்பட்ட வெளிச்சம் சஞ்சிகை அக்காலகட்டத்தின் காத்திரமான இலக்கிய ஏடாக(1991-2005) வெளிவந்தது.

இலங்கையின் சிங்கள தமிழ்  முஸ்லீம் படைப்பாளிகளை ஒன்றிணைத்து நான்கு நாள்கள் மானுடத்தின் தமிழ்க்கூடல் (2002 ஒக்ரோபர் 20இ21இ22இ23) என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியதில் இவரது தலைமைத்துவம் முக்கியமானது. தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஓவியர் ட்ரொஸ்கி மருது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர். 

அதுபோல ஹிரு குழுவினரின் ஏற்பாட்டில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற சிங்கள தமிழ்க் கலைக்கூடலிலும் (2003 ஒக்ரோபர் 29,30) இவரது பங்களிப்பு முக்கியமானது. இங்குள்ள கலை இலக்கியகர்த்தாக்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று வசதியளித்தல்களைச் செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் ‘சிஹல உறுமய’ என்ற பேரினவாத அமைப்பொன்று வன்முறைத் தாக்குதலை நடத்தி குழப்பங்களை ஏற்படுத்திய போதும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றமையும் பதிவு செய்யத்தக்கது.

பிற்காலத்தில் ஆலயங்கள் மீதான பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். நல்லை முருகன் பாடல்கள், துயர் வெல்லுந் துணை முதலான இறுவட்டுகள் பிரபலமானவை. திருநெல்வேலி பத்திரகாளி அம்மன், லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன், சுவிற்சர்லாந்து சூரிச் சிவன் கோவில் முதலானவற்றுக்கும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இவரது கவிதைகளைப் போலவே இவரும் ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பான மனிதராகவே அடையாளப்படுத்தப்பட்டார். இவரது கவிதைகளும் பேச்சும் உணர்ச்சி கொப்பளிப்பனவாக வெளிவந்ததே இதற்குக் காரணம். ஆனால் இயல்பில் ஒரு குழந்தைத்தனமும்  அன்பும் கொண்ட பழக இனிய மனிதராகவே இவர் வாழ்ந்திருக்கிறார். பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறுவது போல ‘புதுவையின் கருத்துநிலைத் துணிபும் கவித்துவ ஆளுமையும் அவரை இன்றைய சராசரி மனிதனின் குரலாகவும், முக்கியமாக அவனுக்கான கவிதைக் குரலாகவும் வைத்திருப்பதைக் காணலாம்’ என்பது முக்கியமானது. அது காலக் கவிஞராக அவரை நிலைநிறுத்தியது.





இயல்வாணன் பத்தி - முன்றில் 22

 

முன்றில் 22

இயல்வாணன்

ஒரு கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாளராக, இதழியலாளராக, காலமாற்றத்துக்கேற்ப நவீன தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவராக பேராசிரியர் எம்.. நுஃமானை நாம் அடையாளங் காணலாம். தமிழிலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் வீச்சுமிக்க மாணவர்களை உருவாக்கியவராகவும் அவர் மிளிர்கிறார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைக்குடியில் அரபுமொழி ஆசிரியராகவும் மதப் பணியாளருமாகவும் விளங்கிய மக்புல் ஆலிமின் மகனாகப் பிறந்தவர் எம்..நுஃமான். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1973இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் மொழியியல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1982இல் முதுகலைமாணி பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேறகொண்டு பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், மொழியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1991இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்று, பேராசிரியராகப் பணியுயர்ந்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச இனவியல் ஆய்வுமையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், அரசாங்க பாடநூல், ஆசிரிய வழிகாட்டி உருவாக்கல், மதிப்பீடு ஆகியவற்றிலும் இவர் தனது வாண்மைத்துவப் பங்களிப்பை வழங்கியதுடன்  பல ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

தனது 16வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் கவிஞர் நீலாவணன் மூலமாக இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இவரது முதல் கவிதை வீரகேசரியில் வெளிவந்தது. இவரது கவிதைகள் தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதை (1977), அழியா நிழல்கள்(1982), மழை நாட்கள் வரும்(1983) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. .யேசுராசாவுடன் இணைந்து பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்(1984) நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பலஸ்தீனக் கவிதைகள்(1981 மற்றும் 2000),  மொகமூத் தர்விஸ் கவிதைகள்(2008), காற்றில் மிதக்கும் சொற்கள்(மலாய் மொழிக் கவிதைகள்), இரவின் குரல்(இந்தோனேசிய மொழிக் கவிதைகள்), நம் அயலவர் -  சிங்களச் சிறுகதைகள் (காமன் விக்கிரமசிங்கவுடன் இணைந்து -2006) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது அடிப்படைத் தமிழ் இலக்கணம்(1999) நூல் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவும் துணைநூலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியற் கருத்துகளையும் இணைத்து தற்கால தமிழ்மொழி இலக்கணத்தை எடுத்து விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (பேராசிரியர் சி.மௌனகுரு, சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து எழுதியது - 1979), பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு(1984), 19ஆம் நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்,  திறனாய்வுக் கட்டுரைகள்(1985), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்(1987), ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்(2002), மொழியும் இலக்கியமும்(2006), சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்(2017), A Constructive Grammar of Tamil and Sinhala Noun Phrase (2003)>  Srilankan Muslims Ethnic Identity within Cultural Diversity (2007)> Understanding Muslim Identity (2004) முதலான நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

மஹாகவி உருத்திரமூர்த்தியுடன் இணைந்து 1969-70 காலப்பகுதியில் கவிஞன் என்ற பெயரில் காலாண்டிதழினை வெளிக்கொணர்ந்தார். 4 இதழ்களே வெளிவந்தன. வாசகர் சங்கம் என்ற பதிப்பகத்தின் மூலம் தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மஹாகவியின் ஆறு காவியங்கள்(2008) உள்ளிட்ட மஹாகவியின் படைப்புகளையும் இவர் தொகுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வேளை கவிதாநிகழ்வு என்ற  நிகழ்ச்சியை இவர் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

2011இல் தமிழ்நாட்டில் இவரது தமிழ்பணியைக் கௌரவித்து விளக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய நுஃமான் ஆரம்பத்தில் மார்க்ஸிய சிந்தனை அடிப்படையிலான இலக்கிய நோக்கினைக் கொண்டிருந்தாராயினும் பின்னர் கல்வித் துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறையினையே பயன்படுத்தினார். இவரது மொழியியல் ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள் முக்கியமானவை. 79வயது நிறைவைக் கண்டுள்ள இவர் தொடர்ந்தும் தனது புலமைத்துவ ஆற்றலை தமிழுலகுக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.