வேண்டும் ஓர் உறவெனக்கு.
போலியின் திரை விரிப்பில்
மாயச் சுவரெழுப்பும்
பார்வையும் புன்னகையும்
யாரிடமுமிருக்கிறது தாராளமாய்.
தப்பின் குரல் மறைத்து
சந்தர்ப்பக் கூக்குரல்கள்
நேசம் புரிவதாய்ப் பாவிக்கின்றன.
ஒவ்வொரு மாலையும்
கொஞ்சம் அருள் வார்த்தைகளுமாய்
குரூரங்கள்
தலைவாரி விடுகின்றன.
வீதிகளில்
ஞாபகங்களின் இரை மீட்டி
சற்றே மிரட்டி,
பின் அபயமளிப்பதாய் ஆசீர்வதிக்கின்றன.
சில கண்களும்
கடந்த காலத்து மனிதனென மறுகி
தீண்டாமை விரதமிருக்கின்றன.
பரவாயில்லையே,
சில எச்சமிட்டல்லவா செல்கின்றன.
எனக்கெதற்கு இவை?
எனக்கு வேண்டும் ஓருறவு!
அன்பின் வார்த்தைகளால் தலை வாரி,
நமது மகிழ்ச்சியில் சுகம் கண்டு,
மனதின் வலிகளுக்கு ஒற்றடமிட்டு,
நமது துன்பங்களில் நமைத் தேற்றி,
நமக்கென்றொரு தளமின்றி
நாமே தளமாக.
காலைக்கதிர் ஏப்ரல் 10-18,1998






