Wednesday, August 14, 2019

விமர்சனம்


ஆழியாள் மொழிபெயர்த்த 
பூவுலகைக் கற்றலும் கேட்டலும்


ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ஈழத்தின் ஆளுமை மிக்க கவிஞர்.உரத்துப் பேச, துவிதம், கருநாவு ஆகிய கவிதைத் தொகுதிகள் மூலம் இவரது கவிதா ஆளுமையைக் கண்டு கொள்ளலாம். ஆங்கிலத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்று யாழ்.பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றி, தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தும் கடமையாற்றியும் வருகிறார்.

ஒரு குடியேற்ற நாடாக இன்றளவும் அடையாளப்படுத்தப்படும் அவுஸ்திரேலியாவில் இரத்தமும் சதையுமாக காலாதி காலமாக அங்கிருக்கும் ஆதிக் குடிகள் தொடர்பில் கண்டுகொள்ளப் படுவதில்லை. இயற்கை மீதான வாஞ்சையும், இயற்கையின் ஒவ்வொரு உயிரிகள் மீதான அன்பும் கொண்ட ஆதிக் குடிகள் பல இனப் பிரிவுகளாக பரவி வாழ்ந்தவர்கள். தமக்கெனச் சொந்த நிலத்தையும், ஆறுகள், மலைகள் முதலான இயற்கைச் செல்வங்களையும், பல்வேறு பாரம்பரியங்களையும், சடங்குகளையும், தமக்கே உரித்தான வாழ்முறைகளையும் கொண்டவர்கள். தமக்கான ஆட்சியினையும் கூட வைத்திருந்தார்கள். இந்த மக்கள் கூட்டம் வந்தேறு குடிகளாக வந்தவர்களால் அடக்கப்பட்டு ஓரத்தில் முடக்கப்பட்டனர். அவர்களது அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டு அவர்கள் கட்டாய வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். 
இன்று அவர்கள் தாம் யார்? என்பது தொடர்பில் பதகளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலைமைகளை அவுஸ்திரேலிய தொல்குடிக் கவிஞர்கள் பேசியுள்ளனர். ஆழியாளுக்கு இந்த உணர்வு ஒத்துணர்வாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈழத்தில் எங்களது நிலையும் அவ்வாறானதே! அவர்களது பாடலை மொழிபெயர்த்து ஆழியாள் தரும் போது அவர்களது குரல் எங்களது குரல் போலவே ஒலிக்கிறது. அவர்களது பாடுகளும், அடையாள இழப்புத் தொடர்பான அவர்களது ஏக்கங்களும் நெஞ்சைப் பிசைகின்றன.

இப்பூவுலகு 
புத்தம் புதிதாய் இருந்த போது
நான் விழித்தெழுந்தேன்.
அப்போது அங்கு
ஈமுவும் ,வொம்பட்டும், கங்காருவும் இருந்தன.
வேற்று நிற மனிதன் எவனும் இருக்கவில்லை.
நானே இந்நிலம்
இந்நிலமே நான்.
நானே அவுஸ்திரேலியா.
(ஆதிக்குடியின் ஆன்மா –ஹைலஸ் மரீஸ்)

வெள்ளையர்களால் தொல்குடிப் பெண்கள் விரும்பியும், பலாத்காரப்படுத்தப்பட்டும் கர்ப்பிணிகளாக்கப்பட்டு, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நிலையோ பரிதாபம். அவர்களை ஆதிக் குடிகளும் சரி, வெள்ளையரும் சரி சந்தேகத்துடனும் ஏளனத்துடனும் பார்க்கும் நிலையில் அவர்களது மனநிலையைப் பேசுகிறார்கள் கவிஞர்கள்.

குழந்தைப் பிராயத்து நினைவுகளில்
‘கலப்பு, கலப்புச் சாதி
கறுப்புப் பெட்டை’யில் தொனிக்கும் 
இகழ்ச்சியும் ஏளனமும்
என் தலையைக் கிறுகிறுக்க வைக்கும்.
எத்தனை கேள்விகள்

இத்தாலியா? கிரேக்கமா?
நியூசிலாந்தின் மயோரியா? 
அப்ப என்ன?

கறுப்புக் கலப்பு கூடிப் போனதால்
நான் வெள்ளைக்காரி இல்லை.
வெள்ளைக் கலப்புக் கூடினதால்
நான் கறுப்பி இல்லை.
இரண்டுக்கும் நடுவே 
எங்கும் சேர்த்தியில்லாமல்.

(எங்கு சேர்த்தி? – லொரெயின் மக்கீ சிப்பெல்)

பொன்னிற முடியுடனும் நீல முடிகளுடனும் 
கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைநடுவில் நிற்கிறேன்.
என்னுடைய ஆன்மா கறுப்பாலானது.

இரவுகளில் நான் அழுகிறேன்.

எங்கு நான் உரித்தாய்ச் சேர்வது என்பது
எனக்குள் நடக்கும் ஒரு பெரும் போராட்டம்.
கறுப்பரும் வெள்ளையரும்
என்னை அவநம்பிக்கையோடும் பகையுணர்வோடும் பார்க்கின்றனர்.

யார் அவன்? 
கறுப்பனா? அல்லது வெள்ளையனா?
இரவுகளில் என்னிடம் வரும்
மூதாதையோரின் ஆன்மாக்கள்
அதை ஒரு வேளை
எனக்குச் சொல்லக் கூடும்

(கறுப்பு மனத்தவன் -ஷேன் ஹென்றி)

ஆழியாளின் எளிமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள இக்கவிதைகள் அவுஸ்திரேலியாவின் ஆதிக் குடிகளது ஆன்மாவை மட்டுமல்ல பாரம்பரிய அடையாள இழப்பை மெல்ல மெல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எம்மினத்தினதும், இது போலவே உலகெங்கும் பரவி வாழும் இனங்களதும் ஆன்மாவையும் பேசுகின்றன. 
தென்னமெரிக்காவை, ஆபிரிக்காவைக் கவிதைகளாலும், கதைகளாலும் தரிசிக்க முடிந்த நமக்கு ஆழியாள் புதியதொரு வாசலைத் திறந்துள்ளார். இந்தக் கவிதைகள் எம்மில் உணர்வுத் தொற்றலை ஏற்படுத்தி, எம்மை ஆதிக் குடிகளின் மனநிலையோடு ஒன்றச் செய்கின்றன. ஆழியாள் தந்திருக்கும் அறிமுகம் கவிதைகளை நோக்கி அழைத்துச் செல்லும் கைத்தடியாக இருக்கிறது. பூவுலகு சுவாசிப்பையும், தைல மரங்களின் வாசத்தையும் இந்தக் கவிதைகள் மூலம் எம்மாலும் உணர முடிகிறது. அதுவே ஆழியாளின் வெற்றியும் ஆகும்.

-இயல்வாணன் 
தீம்புனல் 30-04-2018

Friday, August 2, 2019

கவிதை - தோற்றுத்தான் போனோமே!



அன்னராசா மாமா!

நேற்றெங்கள் வீட்டில்
நெடுமரமாய் நின்றீர்கள்!

பூத்துக் காய்த்து நிழல் தந்து உறவுகளின்
புகலிடமாய் மிளிர்ந்தீர்கள்!

ஏற்ற கருமம் எதுவெனினும்
நீங்களல்லால்
ஆற்றியதில்லை எப்போதும் எம்வீட்டில்!

பேற்றின் பேருறவாம் அக்காவைப்
பிரிந்தொருகால்
கூற்றுவரை ஒருநாளும் நீங்கள்
நின்றதில்லை!

காற்றடித்து கடும் புயலாய்
சுழன்றடித்த காலத்திலும்
இவ்வுறவு தகர்ந்ததில்லை!

நேற்றுவரை மாமா 
எம்தாயாய் தந்தையாக
வீற்றிருந்து எம்முன்னே
விளக்காக ஒளிர்ந்தீர்கள்!

காற்றில் சுடர் அணைய
காரிருளில் தவிக்கின்றோம்!

பெருமரத்தின் உருவழிய
பாழ்வெளியில் தகிக்கின்றோம்!

கூற்றுவனைக் கலைக்கும்
வழியற்று நாமெல்லாம்
தோற்றுத்தான் போனோமே!

சுடர்விழியை இழந்தோமே!

-இயல்வாணன்

Tuesday, July 30, 2019

கருணாகரன் : கிராமத்தின் வேரறா மனிதன்.

கருணாகரனின் இப்படியும் ஒரு காலம் நூலுக்கான அணிந்துரை


ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வேர் பதிந்த கிராமங்களின் மீதும், அதன் இயற்கையான சூழமைவு மீதும், அங்கு வாழும் உயிர்ப்பான மனிதர்கள் மீதும் தீராக் காதலும், கடந்த கால வாழ்வின் கழிவிரக்கமும் உண்டு. அதுவே படைப்பாளிகளிடம் பகைப்புலமாகவும், வர்ணனை களாகவும், கதாமாந்தர்களாகவும் புலக்காட்சி பெற்று தரிசனமடைகிறது. 

கருணாகரன் முக்கியமான கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். இந்தப் பன்முகங்களுக்கும் அப்பால் அவர் கிராம வாழ்வை ஆழமாக நேசித்து, அதற்குள் ஊடாடி வருபவர். நகர வாழ்வு, அறிவும், அதிகாரமும் செல்வாக்கும் பெற்ற மனிதர்களின் நட்பு என்ற எல்லைகளுக்கு அப்பால் கிராமிய மனிதர்களுடன், அவர்களில் வயது வேறுபாடோ, தொழில் வேறுபாடோ, வேறெந்த வேறுபாடோ கருதாமல் மெய்யன்போடு உறவாடுபவர். 
இப்படியொரு காலம் நூலின் சிங்களமொழிபெயர்ப்பு

கருணாகரன் என்ற மனிதன் கிராமத்தின் வேரறா மனிதன். போலித்தனமல்லாத கிராமிய மனிதக் காட்டுரு. அவருள் இருந்து கிராமத்தின் ஜீவனைப் பிரிக்க முடியாது. அதுவே அவரது படைப்புக்களான போதும் கிராமங்களை அதன் உயிர்ப்போடு தரிசித்த ஒரு மனிதன் அந்தக் கிராமங்களை வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதார அம்சங்கள் பாதித்த வலிகளை, உருமாற்றங்களை கழிவிரக்கத்தோடு நோக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

கிராமங்கள் என்பது முன்னைய உயிர்ப்போடு இல்லை.இயற்கையின் சீதளத்தோடு ஒன்றித்த வாழ்வு மெல்ல மெல்லச் சிதைந்து விட்டது.வெண்மையாய் மலர்ந்து மணம் பரப்பும் முல்லைப் பூவைப் போல, கஞ்சல் கருக்கல்களோடு பிரவகித் தோடும் காட்டாற்றைப் போல இயற்கையின் மெய்ம்மை குன்றாது, தம்மியல்பு அழியாது வாழ்ந்த கள்ளங்கபடமற்ற மனித வாழ்வு இன்றில்லை. கூட்டுக் குடும்பங்களாய் ஒன்றாய்க் கூடி விருந்துண்டு, சேர்ந்துழைத்து, ஓய்வின் போது கூத்தும் பாட்டுமாய் குதூகலித்து வாழ்ந்த வாழ்க்கை நம்மிடமில்லை.


 வேலிகளும் மதில்களும் எமது காணிகளை மட்டுமல்ல மனங்களையும் இறுகக் குறுக்கி எமக்குள்ளேயே பூட்டுக்களைப் போட்டு விட்டன. வஞ்சத்தையும் சூதையும் தினசரி தொலைக்காட்சிகள் மண்டைக்குள் ஓங்கி அறைகின்றன. முகமிழந்த, மனமழிந்த மனிதர்களாக நாம் மாற நமது வாழ்வு நமக்குக் கற்பிக்கிறது.

இரண்டு தலைமுறைக்கு நீடித்த அமைதியின்மை நமது வாழ்வை எங்கோ கொண்டு சென்று விட்டது. அது சாதகமானதும் பாதகமானதுந்தான். ஆனால் நமது இயற்கையை, அதனோடியைந்த அழகிய வாழ்வை, நம்முள்; ஊறிய நல்ல அம்சங்களை எல்லாம் யுத்தம் நம்மிடமிருந்து பிடுங்கி விட்டது.

 அந்நிய தேசங்களிலிருந்து வரும் பணம் எங்கள் சிலரது குடிசைகளை மாடமாளிகைகளாக்கியிருக்கிறது. மாடமாளிகைக் கனவுகளில் மூழ்கி ஏனைய குடிசைவாசிகள் பெரும் பிரயத்தனப்படுகின்றனர். லீசிங், லோன், அடகு, சீட்டு என்று எங்களவர் பலரது வாழ்வு அலைக்கழிகிறது. முடிவு மரணமாகவோ, சிறையாகவோ மாறுகிறது. விளம்பரங்களுள் அள்ளுண்டு அந்தரிக்கும் வாழ்வையே காலம் நமக்குப் பரிசளித்திருக்கிறது. அது அரசியலிலுந்தான்.

கருணாகரனுடைய இந்தக் கட்டுரைகளைப் படித்து முடிந்ததும் கடந்த காலத்தைய கழிவிரக்கம் மனதைப் பிசைகிறது. அது மட்டுமன்றி வரலாற்று பரிணாமத்தில் நடந்து முடிந்தவைகள் மனதை நெருடுகின்றன. 

கிளிநொச்சி பற்றிய முதற் கட்டுரை ஒரு கவிதை போல நகர்கிறது.ஒரு காடாக இருந்த அந்த நகரம் ஒரு குழந்தையைப் போல எழுந்து எழுந்து விழுந்து விழுந்து மீண்டும் எழுந்த கதை கவிதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தலைமுறைக் கேள்விகளைக் கடந்து அது எழுந்த கதை சுவாரஸ்யங்குன்றாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அது போலவே இரவில் உயிர் பெற்றுப் பகலில் உறங்கிய கிளாலிக் கதை உலகத்தவர் நம்ப மறுக்கும் உண்மைக் கதை. அது உயிரோட்டத்தோடு தத்ரூபமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவமடு, கண்டாவளை, அக்கராயன், செம்மணி, நந்திக்கடல் என்று நீளும் இந்த இடங்களின் கதைகள் வெறுங்கதைகள் அல்ல. இவை மனிதர்களின் பாடுகளைச் சொல்கின்றன. முள்முடி குத்திச் சிலுவை சுமந்த வரலாற்றைப் பேசுகின்றன. தெளிந்த சிற்றோடைகள் திடீரெனக் காட்டாறாகி உன்மத்தம் கொண்டழித்த காலங்களின் துயரை எடுத்துரைக்கின்றன.

இவை மற்றவர்களின் கூற்றுக்களை வைத்து எழுதப்பட்டவைகள் அல்ல.  இந்தக் கிராமங்களில் வாழ்ந்து, புழுதி வாசத்தைச் சுகித்து, பாடுகளை அனுபவித்து, அந்த வாழ்வை  விமர்சனபூர்வமாக அணுகி, புறநிலை உண்மைகளையும் உட்புகுத்தி கருணாகரன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

ஒரு கவிஞனிடத்தில் இருந்து வெளிப்படும் சொற்களில் இருக்கும் கவித்துவம் இந்தக் கட்டுரைகள் முழுமையும் வெளித்தெரிகின்றன. நாமே அறியாத நம்மைப் பற்றிய வாழ்வை நமது கிராமங்களிலிருந்து தரிசனங் கொள்ள வைக்கின்றன இந்தக் கட்டுரைகள். நீள நினைந்திடும் வாழ்வை இவற்றினூடாக கருணாகரன் நம்முள் உட்பொதிக்கிறார்.இது காலத்தினால் செய்த உதவி.அதற்காக அவருக்கு தலைமுறைகளின் நன்றி என்றுமிருக்கும்.

இயல்வாணன்

சு.ஸ்ரீகுமரன்
வலயக் கல்வி அலுவலகம், 
கிளிநொச்சி.

Monday, July 29, 2019

அறிவாலயத்துக்கு அகவை ஐம்பது


இன்று உள்நாட்டிலும், புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலும் வாழ்பவர்களில் கணிசமானோரது  அறிவு விருத்திக்கும், ஆன்ம விருத்திக்கும் காலாக இருந்த அறிவாலயம் சுன்னாகம் பொது நூலகமாகும். இந்த நூலகம் ஐம்பது ஆண்டுகள் அறிவொளி பரப்பிய ஆலமரமாக நிமிர்ந்து நின்று பொன்விழாவைக் கொண்டாடியுள்ளது. அதனை மேலும் வளர்த்தெடுத்து நமது அறிவுப் பொக்கிசமாகப் பேண வேண்டியது நம் எல்லோரதும் கடமையாகும்.

உள்ளுராட்சி மன்ற எல்லைகள் மறுசீரமைப்பின் கீழ் 1964 ஜனவரி 01 முதல் சுன்னாகம் பட்டின சபை இயங்க ஆரம்பித்தது. செனட்டர் பொ.நாகலிங்கம் தலைமையிலான சபை சுத்தமான, மின்னொளி வசதியுடனான நகரமாக சுன்னாகத்தை ஆக்கியதுடன் வீதிகளுக்கு பெரியார்களது பெயர்களைச் சூட்டியதுடன் சுன்னாகம் பொது நூலகத்தையும் ஆரம்பித்தது. 

காங்கேசன்துறை வீதியில் ஆயுர்வேத வைத்தியர் தம்பையா அவர்களது இல்லத்தில் 1964 ஒக்டோபர் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்ட நூலகத்தை அப்போதய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு.நெவில் ஜெயவீர திறந்து வைத்தார். பத்திரிகைகள், சஞ்சிகைகளுடன் உசாத்துணைப் பகுதியும் ஆரம்பத்தில் செயற்பட்டன.

ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம் தலைமையில் ஆய்வு வட்டம் (Study Circleசெயற்பட்டதோடு ஒவ்வொரு போயா தினத்திலும் பல்வேறு அறிஞர்களின் உரைகளும் இடம்பெற்றமை முக்கியமானதாகும். பின்னர் நூலகம் பண்டிதர் சிவசம்பு அவர்களது இல்லத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அக்காலத்தில் சமய வகுப்புக்களும் இடம்பெற்றன.

 1972இல் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வி.எம்.குமாரசாமி அவர்களின் காணியில் இருந்து 3 பரப்பு கொள்வனவு செய்யப்பட்டு, நூலகம் கட்டப்பட்டு 1972 ஜுன் ஐந்தாந் திகதி அப்போதய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். அல்விஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி, சபை நிதி ஆகியவற்றைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பொதுநூலகம் பல்வேறு காலங்களிலும் பல்வேறு தரப்பினரதும் பங்களிப்புடன் வளர்ச்சியும் விருத்தியும் பெற்று, யாழ்ப்பாணத்தின் சிறப்பு மிக்க நூலகமாக மிளிர்கின்றது. யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த நிலையில் புத்தக இழப்பையும் நூலகம் சந்தித்தது. எனினும் மிடுக்கோடு முன்னேறிய நூலகம் இன்று 23ஆயிரத்து 200 நூல்களுடன் வளர்ச்சி கண்டுள்ளது. 3402 அங்கத்தவர்களும், 498 சிறுவர் அங்கத்தவர்களும் இரவல் பெற்று நூல்களைப் பயன் படுத்தி வருகின்றனர். அத்துடன் பத்திரிகைப் பகுதி, உசாத்துணைப் பகுதி, இரவல் வழங்கும் பகுதி என்பன சிறப்பாக இயங்கி வருகின்றன.

2007ஆம் ஆண்டு நூலக ஆவணமாக்கல் சபையால் தரம் 2 நூலகமாகத் தரம் உயர்த்தப்பட்ட இந்நூலகம் அவ்வாண்டு சிறப்பு விருதினையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் 2009ஆம் ஆண்டு பிரதேச மக்களின் அறிவு விருத்தி மற்றும் தகவல் தேடல் திறனை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு உயர்தர நூலக சேவையொன்றை நடத்திய பங்களிப்புக்காக தேசிய நூலகத்தால் சிறப்புத் திறன் விருது வழங்கப்பட்டது.

2011,2012ஆம் ஆண்டுகளில் தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களுக்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட நூலகம் 2013ஆம் ஆண்டில் வடமாகாணத்தின் சிறந்த நூலகமாக கல்விச் சேவைகள் அமைச்சால் தெரிவு செய்யப்பட்டதுடன் சுவர்ண புரவர விருதினையும் தட்டிக் கொண்டது.
இத்தகைய வெற்றிக்குப் பின்னால் இக்காலத்தில் நூலகராக இருந்த க.சௌந்தரராஜன் ஐயர் அவர்களது பங்களிப்பு குறித்துரைக்கத் தக்கதாகும். இவர் ஆசிரியராக இருந்து வெள்ளிமலை என்ற சஞ்சிகையை வெளியிட்டார். வெள்ளிமலை 2007 முதல் 2012 வரை 12 இதழ்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய சுன்னாகம் பொது நூலக பொன்விழா மலரும் இவரால் தொகுக்கப் பட்டுள்ளது. அத்துடன் ஞானவிலாசம் என்ற கலை, இலக்கிய கருத்தாடல்களும் இவரது காலத்தில் நடத்தப்பட்டதுடன் பிரதேச அறிஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சுன்னாகம் பொதுநூலகத்தின் இன்றுள்ள பிரதான பிரச்சினை இடநெருக்கடியே. 3 பரப்பு காணிக்குள் 2814 சதுர அடி மாடிக் கட்டடத்துக்குள் எல்லாவற்றையும் அடக்குவது சாத்தியமானதல்ல. அருகில் உள்ள சட்டத்தரணி கு.விஸ்வலிங்கம் அவர்களது காணியில் ஒரு பகுதி கொள்வனவாகவோ, அன்பளிப்பாகவோ பெறப்பட வேண்டும் என்பதுடன் தற்போது உள்ள கட்டடம் போல புதிதாக கட்டடம் அமைக்கப்படவும் வேண்டும்.

 மேலும் நவீன நூலக வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மின்னூலகப் பயன்பாடு, எண்ணிம நூலகப் பயன்பாடு என்பன உருவாக்கப்பட வேண்டும். அது மட்டுமன்றி ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், இந்தியாவிலும் வெளியிடப்படும் ஈழத்தமிழ் நூல்கள் அனைத்தும் கொள்வனவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி பிரதேசத்தின் கல்வெட்டுக்கள், சமூக நிறுவனங்களின் மலர்கள், அரும்பொருட்கள் என்பவற்றைப் பேணும் ஆவணக் காப்பகம் ஒன்றும் இந்நூலகத்தில் உருவாக்கப்பட வேண்டும். 

இதற்கப்பால் பிரதேசத்தின் வரலாறு கூறும் நூல்கள் பல இடங்களிலும் வெளியிடப்பட்டுள்ள போதும் சுன்னாகத்துக்கென்று ஒரு வரலாற்று நூல் இதுவரை வெளிவரவில்லை. அதுவும் வெளிவருவது காலத்தின் தேவையாகும். அத்துடன் வரத பண்டிதர், முத்துக்குமார கவிராயர், முருகேச பண்டிதர், குமாரசாமிப் புலவர் என நீளும் பிரதேச படைப்பாளிகளின் நூல்கள் மீள் பதிப்புச் செய்யப்பட வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சு.ஸ்ரீகுமரன்
கனடா சுன்னாகம் ஒன்றிய மலர் 2017






மரபுக் கவிதை-ஆறே! வழுக்கை நீ வாழ்க!


மரபுக் கவிதை


ஓடும் மேகம் ஒன்றாகி மலையில் 
கூடும் வண்மை கண்டிலையே!
மூடும் பாறை மேலே ஊற்றாய்
பீறும் தகையும் கொண்டிலையே!
காரும் கறுத்து வானிடிய மழை
தூறும் பொழுதில் நீயுயிர்ப்பாய்.
பேரும் கொண்டாய் ஆறெனவே
பெருந்தாய்! வழுக்கை; நீ வாழ்க.

மண்ணும் குளிரவுன் மடி பெருக்கும்
மெல்ல நடந்து சென்றிடுவாய்.
நண்ணும் கரையின் சுற்றந் தழுவி
நுரைத்துச் சிரித்துச் சென்றிடுவாய்.
பொன்னும் பொருளும் சீர் கொண்டு
போவாய் ; காதற் கடல் சேர
வண்ணங் கொண்டெமை வளமூட்டும்
வடிவே! வழுக்கை; நீ வாழ்க.

பாதை மருங்கில் அணி வகுத்துப்
பூத்துக் குலுங்கும் மரக்கூட்டம்
தாதை இறைத்து மணமூட்டும்
தழுவிக் காற்று தாலாட்டும்
கோதையர்கள் குருகி னங்கள்
குளித்துப் புரள்வர் உன்மடியில்
ஓதை உனதோ? கோதையதோ?
ஓதாய்! வழுக்கை; நீ வாழ்க.

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் முதுமொழியை
அழித்து யாழ்ப்பாண மங்கைக்கு
பேறாய் உதித்துப் பேர் போக்கினையே!
பேரரசு கதிரமலை நிலைநிற்க எல்லைச்
சீராய் நின்றாய்! உக்கிரசிங்க மன்னன்
நாவாய் நகர்ந்து பொருள் தேட
ஆறானாய்! வளநகராய் ஆக்கும் நல்ல
சூரானாய்! வழுக்கை; நீ வாழ்க.

அம்பனை வெளியின் நீர் சேர்ந்து
ஆடிப் பினாக்கைக் குளஞ் சேர
வந்தனை; பெருமாக் கடவையின் வழியே
கந்த ரோடையில் இளைப்பாறி மெல்லச்
சங்குவேலியுள் நுழைந்து வயல் விரித்த
சண்டிலிப்பாயில் உறங்கி எழுந்து
சங்கரத்தையில் ஏறி அராலியில் நுழைந்தாய்
காணலையே! வழுக்கை; நீ எங்கே?

 கலைநிலம் 
வலி.தெற்கு கலாசார பேரவை மலர் 2018

கவிதை -புரியாப் பாடல்


புரியாத பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்
எல்லோரும்.

வார்த்தைகள் மாறுகின்றன.
வியாக்கியானங்கள் மாறுகின்றன.

அவரவர் நோக்கில் 
பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன நடந்தது?
ஏன் நடந்தது?
யாருக்கும் புரியவில்லை.

ஒரு சாரார் 
தங்கள் மதங்கள் கக்கியதை
மீள  வியாக்கியானப்படுத்தி 
பாடிக் கொண்டிருக்கிறார்கள்

மறு சாரார்
தங்கள் அரசியலுக்குப் பொருத்தமான
வார்த்தைகளைக் கோர்த்துப்
பாடிக் கொண்டிருக்கிறார்கள்

புரியாத பாடலை
புரிந்து கொண்ட தோரணையில்.

அவர்களது பாடல்
மதுவாய் ஊறி 
எல்லோரிலும் நிறைகிறது.

எல்லோரும் பாடுகிறார்கள்.

ஒவ்வொரு சுருதியிலும் ஸ்தாயியிலும்.

நாரசமாய் ஒலிக்கும் பாடலில்
கட்டி வைத்த இழைகள்
ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன.

                                         தாயகம் ஏப்ரல் - ஜுலை 2019

கவிதை -உலகம் உருண்டைதான்


உலகம் உருண்டை என்றாள்
சின்ன மகள்.

அது எவ்வளவு மகத்தானது என்றேன்
நான்.

இல்லை அது கோளம் போன்றது என்றாள்.
பின் 
கணித ரீதியாக கோளமல்ல என்றாள்.

எப்படியோ 
உருண்டையானது என்பதே 
எமக்குத் தெரிந்தது.
அதுவே மகத்துவமானது என்றேன்.

மனிதர்கள் திரும்பத்திரும்ப 
சந்திக்க நேர்வதும்
சம்பவங்கள் மீள மீள
நடந்தேறுவதும்
வரலாறு புரண்டு மீள்வதும்
உருண்டையினாலன்றோ!


தட்டையெனில்
முன்னோக்குடன் செல்பவர்கள்
சந்திக்கும் புள்ளியேது?

சம்பவங்கள் காலம் மாறி இடம் மாறி
 ஆள்கள் மாறி நடப்பது ஏன்?

வரலாறு முரண் கொண்டு உருவெடுப்பதேன்?

உலகம் உருண்டை என்பது 
மகத்துவமானதுதான் மகளே!
                                                                              
                                                                      2017