Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 18



 முன்றில் - 18


ஈழத்துப் படைப்பாளிகள் பலரை உருவாக்கிய பெருமை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு. அதனை நிறுவிய பாவலர் துரையப்பாப்பிள்ளை பாரதியின் சமகாலக் கவிஞர். அவர் வழி வந்த சின்னப்பபிள்ளை, செ.கதிரேசர்பிள்ளை என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. அவர்களில் பலருடைய கவிதைகள் மகாஜனக் கவிதைகள் நூலாகவும் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் பண்ணையில் தோன்றிய முதன்மையான பெண் ஆளுமை கோகிலா மகேந்திரன். இவ்வாண்டு யாழ்ப்பாண மாநகர சபையால் வழங்கப்பட்ட இயல் துறைக்கான அரசகேசரி விருதைப் பெற்றுள்ளார்.
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், கட்டுரை, பத்தி, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் அனைத்துப் பக்கங்களிலும் எழுதியிருக்கிறார். இவருடைய முதன்மைப் பாத்திரம் உளவியல்துறையே. பின்னாளில் அதுவே அவரது அடையாளப்படுத்தத்தக்க துறையாக அமைந்தது.
கவிஞரும் உரையாசிரியருமாக விளங்கிய சிவசுப்பிரமணியத்தின்(விழிசைச்சிவம்) மகளாக 1950ஆம் ஆண்டு நவம்பர் 17ஆந் திகதி தெல்லிப்பழை விழிசிட்டியில் பிறந்த கோகிலாதேவி பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில்(1955-58) தனது ஆரம்பக் கல்வியையும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில்(1959-68) இடைநிலைக் கல்வியையும் பெற்றுக் கொண்டார். 1970இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி மருத்துவத்துறையில் மூன்றாண்டுகள் கற்ற போதும் கற்கைநெறியைப் பூரணப்படுத்தவில்லை. உளவளத்துணையாளர்(1995), வட இலங்கை சங்கீத சபையின் நாடக கலாவித்தகர்(2002) பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

 1974இல் விஞ்ஞான பாட ஆசிரிய நியமனம் கிடைத்து பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை ஆரம்பித்தார். தொடர்ந்து கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தில் கற்பித்தார்.(1976-78) பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆசிரிய பயிற்சியினைப்(1979-81) பெற்றுக் கொண்டார். பயிற்சியின் பின்னர் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும்(1982-93), யூனியன் கல்லூரியிலும் கற்பித்தார்.
1994இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபர் பொறுப்பினையேற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் 8ஆண்டுகள் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்றார். தொலைக்கல்வி போதனாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் மற்றும் அறிகைச் சிகிச்சை விரிவுரையாளர், சாந்திகம் நிறுவனப் பணிப்பாளர், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் பதவிகளையும் வகித்த இவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ் மற்றும் சமயபாட வருகை ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

கோகிலா சிவசுப்பிரமணியமாக எழுத்துலகில் பிரவேசித்த இவர் திருமணத்தின் பின்னர் கோகிலா மகேந்திரன் என்ற பெயரில் எழுதி வருகிறார். விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் முதலிய புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார். 1972இல் குயில் சஞ்சிகையில் எழுதிய அன்பிற்கு முன்னால் சிறுகதையுடன் இலக்கிய உலகிற் பிரவேசித்த இவர் சுடர், ஈழநாடு, மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், முரசொலி எனப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
 இவர் எழுதிய 75வரையான சிறுகதைகள் மனித சொரூபங்கள்(1982), முரண்பாடுகளின் அறுவடை(1983), அறிமுகவிழா(புலோலியூர் ஆ.இரத்தினவேலோனுடன் இணைந்து- 1984), பிரசவங்கள்(1986), வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்(1997), முகங்களும் மூடிகளும்(2003), வரிக்குயில்(2016) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மனதைக் கழுவும் மகாசமத்தர்கள்(2008), புலச்சிதறல் நெஞ்சம்(2013), சிறுகதை(2014) முதலிய தொகுப்புகளும் இவரது புனைகதைத் துறைப் பங்களிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. 

துயிலும் ஒருநாள் கலையும்(1986), தூவானம் கவனம்(1989), சந்தனச் சிதறல்கள்(2018) ஆகியவை இவர் எழுதி  வெளியிட்டுள்ள நாவல்களாகும். சிறுவர் இலக்கியஞ் சார்ந்தும் இவர்  நூல்களை எழுதியுள்ளார். விஞ்ஞானக் கதைகள்(2000), அறிவியல் கதைகள்(2020) ஆகிய நூல்கள் மூலம் சிறுவர்களின் அறிவியல் விருத்திக்குப் பங்களித்துள்ளார்.
உளவளத்துணை சார்ந்து பல விரிவுரைகளை மேற்கொண்டும் பயிற்சிகளை வழங்கியும் உள்ள இவர் அது தொடர்பான நூல்களை எழுதியும் இணைந்து தொகுத்தும் உள்ளார்.  அவ்வகையில் மனக்குறை மாற வழி(1996), எங்கே நிம்மதி(2000), சிறுவர் உளநலம்(2002), மகிழ்வுடன் வாழ்தல்(2005), சின்னச் சின்னப் பிள்ளைகள்(2005), உள்ளக் கமலம்(2006), முற்றத்தில் சிந்திய முத்துக்கள்(2006), சுனாமியில் சிதறிய சித்திரங்கள்(2006), மனச்சோர்வு(2006), மனமெனுந் தோணி(2008), உள்ளம் பெருங்கோயில்(2009), உள்ளத்துள் உறைதல்(2011), சிறுவர் பாதுகாப்பு(2015), பதின்ம வயதுப் பிரச்சினைகளும் அவற்றைக் கையாளுதலும்(2016), வாழ்வின் முன்னேற்றத்துக்கான  கற்றல்(2020), சீர்மியத்தில் சிறப்பு முறைகள்(2020), குடும்பம் ஒரு கதம்பம்(2023) முதலான நூல்கள் மூலம் உளவளத்துணை சார்ந்த ஆற்றுப்படுத்தலுக்குப் பெரிதும் பங்களித்துள்ளார்.
இவரது நேர்கொண்ட பாவை(2015) பெண்ணிய உளவியல் சார்ந்த கட்டுரை நூலாகும். திருமனிதர் வாழ்வு(2017) சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாகும். தங்கம்மா அப்பாக்குட்டி பற்றிய தங்கத்தலைவி(2000) தனிமனித ஆளுமையை வெளிப்படுத்தும் நூலாகும். விழிமுத்து(1999), அரங்கக்கலையில் ஐம்பதாண்டு(2003), விழிசைச்சிவம்(2009) ஆகிய இத்தகைய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
நாடகத்துறையிலும் இவர் தனது அடையாளத்தைப் பதித்துள்ளார். நாடக எழுத்தாளராக, நடிகையாக, இயக்குநராக, தயாரிப்பாளராக, ஒப்பனைக் கலைஞராக பல்துறை ஆளுமையுடன் இவர் பயணித்துள்ளதுடன் சோலைக்குயில் அவைக்காற்றுகைக் கழகத்தை நிறுவி பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கோலங்கள் ஐந்து(ஐந்து பேரின் ஐந்து நாடகங்கள்- 1994), கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு(1997), குயில்கள்(2001) ஆகியவை நாடகத்துறை சார்ந்த இவரது நூல்களாகும்.
தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர் அதன்மூலம் பல நூல்களை வெளியிட்டும், நிகழ்ச்சிகளை நடத்தியும் இலக்கியத்துறைக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது கலை இலக்கிய சேவையைப் பாராட்டி இலக்கிய வித்தகர், சமூக திலகம், கலாபூ~ணம், சமூகஒளி, கலைப்பிரவாகம் முதலிய கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பலவழிகளிலும் இலக்கியம், அறிவியல், சமூகவியல், உளவியல், சமயம் சார்ந்து எழுதியும், பேசியும் வரும் கோகிலா மகேந்திரன் 73 வயதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவரது அறிவும் அனுபவமும் ஆளுமைப் பரிமாணமும் சமூகத்துக்கு மேலும் பயன்பட வேண்டும்.

உதயன் சஞ்சீவி 17-09-2023

இயல்வாணன் பத்தி முன்றில் 17




 முன்றில் 17

இயல்வாணன்

தமிழிலக்கண, இலக்கிய, சைவசமய அறிவு நிரம்பப் பெற்ற மரபுக் கவிதை கைவந்த வல்லாளர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம். பலநூறு மரபுக் கவிதைகளையும், பிரபந்தங்களையும், சிறுகதை, கவிதை, குறுங்கதை, நாவல் என உரைநடை இலக்கியங்களையும் படைத்த பன்முகப் படைப்பாளியாக இவர் விளங்குகிறார். 1939ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 28ஆந் திகதி இணுவிலில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும்(தற்போதய இணுவில் இந்துக் கல்லூரி),  இடைநிலைக் கல்வியை உடுவில் மான்ஸ் ஆங்கில பாடசாலையிலும், உயர்தரக் கல்வியை திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியிலும்(தற்போதய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கற்றார்.  கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிநுட்பக் கல்வியைத் தொடர்ந்தார்.

நாவலர் பாடசாலையில் நடைபெற்ற பாலபண்டித வகுப்பில் கற்றுச் சித்தியடைந்ததுடன் 1967இல் பண்டித பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றார். ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 1964இல் நாவற்குழி அ.மி.த.க.பாடசாலையில் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றார். 1967இல் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று, 1968இல் கண்டி புசல்லாவ திருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்றார். தொடர்ந்து புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம், இணுவில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து பல நன்மாணாக்கரை உருவாக்கினார்.

வாணிதாசனின் கவிதைகள் மீதான ஈர்ப்பினால் தனது 13வது வயதில் கவிதை படித்த இவர்  பரமேஸ்வராக் கல்லூரியில் வித்துவான் க.வேந்தனாரிடம் கல்வி கற்ற காலத்தில் நண்பனுக்கு எழுதிய கவிதை மற்றவர்களால் பாராட்டப்பட்ட போது ஊக்கம் பெற்றார். சக நண்பனான சி.முருகவேள்(பின்னாளில் பேராதனை பல்கலைக்கழக நூலகராயிருந்தவர்) கொடுத்த காதல் என்ற தலைப்பிலான ஆங்கிலக் கவிதையை
குன்றின் சாரலில் வழியதனருகில்
நின்று சிதைந்த சமாதியின் மருங்கில்
அன்றொரு நாள் நான் கழித்ததோர் மணியை
என்றும் என் சிந்தையில் தேக்கி மகிழ்வேன்
என்று சில நிமிடங்களில் மொழிபெயர்த்துக் கொடுத்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

பரமேஸ்வராக் கல்லூரியில் கற்ற காலத்தில் அல்லி சஞ்சிகையில் இவரது முதல் கவிதை செந்தாமரை மலரே என்ற தலைப்பில் வெளிவந்தது. கல்லூரி சஞ்சிகையில் தீந்தமிழீழம் என்ற கவிதையை அன்று(1959) எழுதியமையும் குறிப்பிடத்தக்கது. பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் காவியம் தந்த அருட்டுணர்வில் இவரெழுதிய எழிலி காவியம் கலைச்செல்வி ஆசிரியர் சிற்பியின் ஆதரவுடன் செட்டிகுளம் பாலன் பதிப்பக வெளியீடாக 1962இல் வெளிவந்தது. இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. சிற்பி சிவசரவணபவன் ஆசிரியராகவிருந்த கலைச்செல்வி கலை இலக்கிய சஞ்சிகையில் துணை ஆசிரியராக இவர் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

1963இல் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை மட்டக்களப்பில் 3 நாள் முத்தமிழ் விழாவினை நடத்தினார். அந்த விழாவில் நாவற்குழியூர் நடராசன் தலைமையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது. மஹாகவி, நீலாவணன், முருகையன், அம்பி, திமிலைத்துமிலன், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் இணைந்து கவிபாடும் வாய்ப்பை எஸ்.பொ. இவருக்கு வழங்கினார். அன்று முதல் இலங்கை முழுவதும் எண்ணற்ற கவியரங்குகளில் இவர் பங்குபற்றித் தன் கவித்திறத்தால் சபையைக் கட்டி வைத்திருக்கிறார். இவரது தலைமையில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது பேறே. இவரது கவியரங்கக் கவிதைகள் தண்டலை என்ற பெயரில் 1966இல் வெளியாகியது.
இன்பவானில்(1971), எரிமலை தந்த விடுதலை(1988), நாடும் வீடும் - கவியரங்கக் கவிதைகள் (2001), ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள்(2002), திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம்(2017), விலங்கு பறவைமுதலான கவிதை நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது பாநாடகங்கள் பஞ்சாட்சரம் பாநாடகங்கள்(2005) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

பல ஆலயங்களுக்குப் பிரபந்தங்களும் பாடியுள்ளார். இவை பல நூல்களாக வெளிவந்துள்ளன. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ், இணுவில் செகராசசேகரப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ், பொறிக்கடவை அம்மன் தலபுராணம், உடுப்பிட்டி மனோன்மணி அந்தாதி, கண்ணன் கவசம், தெண்டைமானாறு சந்நிதி வெண்பா, கனடா துர்க்கேஸ்வரம் அன்னை துர்க்கை அடிதொழு வெண்பா என்பன குறிப்பிடத்தக்கன. திருவூஞ்சல், அம்புலித்தூது, திருவிரட்டை மணிமாலை, திருப்பள்ளியெழுச்சி, மும்மணிக்கோவை, சிந்து முதலான பிரபந்தங்களை பல ஆலயங்களுக்குப் பாடியுள்ளார். இவற்றில் 30ஆலயங்களுக்குப் பாடிய பிரபந்தங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது.
கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். பிரபல பாடகர்கள் உன்னி கிருஸ்ணன், மனோ, மதுபாலகிருஸ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஹரிஸ் ராகவேந்திரா, மாணிக்கவிநாயகம், பம்பே ஜெயஸ்ரீ முதலானோரின் குரல்களில் இவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இவரெழுதிய 50ற்கும் மேற்பட்ட தாயக விடுதலைப் பாடல்களை சாந்தன், திருமலை சந்திரன், மணிமொழி, ராதிகா சுப்பிரமணியம், தவமலர் ஆகியோர் பாடியுள்ளனர். இசைவாணர் கண்ணன் இவரது பாடல்களுக்கு இசையமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவரெழுதி தமிழீழ வானொலியில் ஒலிபரப்பாகி வந்த பிரபாகரப் பெருங்காப்பியம் மூன்று பாகங்களும், 47 படலங்களும், 1300 கவிதைகளும் கொண்ட பெரும்படைப்பாகும். எனினும் அது யுத்தத்துக்குள் தொலைந்து போனமை அவருக்குப் பெரும் இழப்பாகும். மாவீரர் காவியங்களையும் இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
இவரது சிறுகதைகள் சின்னஞ்சிறுகதைகள்(1969), வேள்விநெருப்பு(2003), அன்னைமண்(2008), இந்தத் தீபாவளி தேவைதானா(2011), வண்டி முன்னாக மாடு பின்னாக(2012), கொம்புத்தேன்(2014) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இவரெழுதிய நாவல் கூலிக்கு வந்தவன் என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இவை சின்னப்பாப்பா பாட்டு(2004) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.
இவரெழுதிய இலக்கணப் பூங்கா தமிழ் கற்கும் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் துணை நூலாக 15 பதிப்புகள் கண்டு இன்றும் பயன்பாட்டில் உள்ளமை முக்கியமானதாகும்.
சிறந்த சொற்பொழிவாளரான இவர் ஈழத்திலும், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் சமய, இலக்கிய, அரசியல் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
மரபிலக்கியவாதிகள் நவீன உரைநடை இலக்கியங்களில் ஈடுபாடு காட்டுவதில்லை என்பதைப் பொய்யாக்கும் வகையில் புனைகதைத் துறைக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திய இப்பேராளுமை 84 வயதிலும் தளராத தமிழ்ப்பணியாற்றி வருகிறார். தனது தடத்தில் பல இளங்கவிஞர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமையும், பல இலக்கிய சமய அமைப்புகளை உருவாக்கிய பெருமையும் இவரைச் சாரும். இப்பேராளுமை நூறாண்டு நிறைவாக வாழ வாழ்த்துகிறோம்.

20-08-2023 உதயன் சஞ்சீவி




இயல்வாணன் பத்தி முன்றில் 16



 முன்றில் 16

இயல்வாணன்






மிஸ்டர் மலைவேம்பு பேசுகிறேன் இப்படியொரு பீடிகையுடன் சிறுகதையொன்று அமிர்தகங்கை சஞ்சிகையில் வெளிவந்திருந்ததுகதையின் தலைப்பு ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம்ரேபிள்கள்.  இதை எழுதியவர் அப்போது யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த  .பாலசுந்தரம்யூனியனில் நான் இடைநிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்அந்தக் கதை அந்த வயதிலேயே என்னை ஆகர்சித்திருந்ததுஅந்த மலைவேம்பு யூனியன் கல்லூரி வாசலில் பெருவிருட்சமாய்   நிழல் பரப்பி நின்றது.

  80களின் நடுக்கூறில் - இனவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் - பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு ஏங்கும் பெற்றோரின் மனநிலையை மிகத் தத்ரூபமாக அக்கதை வெளிப்படுத்தியிருந்ததுபின்னர் அக்கதை உட்பட 10 சிறுகதைகள்  தொகுக்கப்பட்டு அந்நிய விருந்தாளி என்ற தலைப்பில் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக வெளிவந்தபோது அதைத் தேடி வாங்கி ஏனைய கதைகளையும் படித்தேன்உயர உயரும் அன்ரனாக்கள்முட்டைப் பொரியலும் முழங்கையும்மூன்று பரப்பும் முக்கால் குழியும் என்று ஒவ்வொரு கதைகளும் வித்தியாசமான தலைப்புகள் கொண்டவையாக அமைந்திருந்தன.

1928ஆம் ஆண்டு ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று ஆவரங்காலில் பிறந்த கதிர் பாலசுந்தரம் தனது ஆரம்பக் கல்வியை மூன்றாம் வகுப்பு வரை  மதவாச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும்,  ஆங்கில மொழி மூலக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியிலும் கற்றார்ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடைநிறுத்திக் கொண்டார்.  இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலத்தில்(1939-1945) திருகோணமலை சீனன்வாடி வான்படைத் தளத்தில் பொறியியலாளர்கள் நெய்பர்கிளாக் ஆகியோரின் அலுவலகத்தில் பணியாற்றினார்பின்னர் அங்குள்ள கிளப்பன்பேக்கில் (கடற்படை முகாம்வெள்ளை அதிகாரி கில் என்பவரின் அலுவலகத்தில் பணியாற்றினார்யுத்த முடிவைத் தொடர்ந்து 1946இல் சொந்த ஊரான ஆவரங்காலுக்குத் திரும்பிய இவர் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் படித்து எஸ்.எஸ்.சி (சிரேஷ்ட இடைநிலை தராதரப் பத்திரம்பரீட்சையில் சித்தியடைந்தார்.

1950ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் 6 மாதங்கள் தற்காலிக பணியை ஆரம்பித்த இவர் பின்னர் இந்துபோட் நிர்வகித்த வவுனியா வடக்கிலுள்ள ஆயிலடி பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினார்ஓராண்டிற்குள் மட்டக்களப்பு ஒலுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இடம்மாறினார்அங்கு ஆறரை ஆண்டுகள் பணியாற்றினார்தொடர்ந்து ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்(1958) புவியியல் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

1965இல் படிப்பு விடுமுறை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் படித்து கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்தொடர்ந்து கேகாலை ஹெம்மாந்தகம அல் அஸார் மகா வித்தியாலயம்நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். 1977இல் யூனியன் கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார்அடுத்த ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தார்தொடர்ந்தும் அங்கேயே அதிபராகக் கடமையாற்றி 1987இல் ஓய்வு பெற்றார்இவரது காலத்தில் யூனியன் கல்லூரி புகழ் பூத்த பாடசாலையாக விளங்கியதுடன் .பொ..உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் நா.சுகந்தன் முதலிடத்தைப் பெற்ற வரலாற்றுச் சாதனை அக்காலத்தில் நிகழ்ந்தது.

ஒலுவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை இவர் எழுதிய சிறுகதையொன்று தினகரனில் வெளியானதுவானொலி நாடகமொன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதுதொடர்ந்து வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார்.  மேடைநாடகங்கள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார்.அமிர்தகங்கைசிரித்திரன்றோசாப்பூசிரித்திரன் ஆகியவற்றில் இவரது ஆரம்பகாலப் படைப்புகள் வெளிவந்தன.

இவரது சிறுகதைகள் அந்நிய விருந்தாளி(1986) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளதுகதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளார்பெரும்பாலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளனபாத்திரங்களின் உரையாடலோடு கதையை நகர்த்திச் செல்லும் பண்பும்பாத்திரங்களின் உணர்வோட்டத்தினூடாகக் கதை சொல்லும் பண்பும் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக உள்ளமையை அவதானிக்க முடிகிறதுபொதுவாக இக்கதைகள் முழுவதையும் தொகுத்து நோக்கும் போது பாலசுந்தரம் அவர்களால் ஈழத்துச் சிறுகதைத் துறையில் புதிய வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது

மறைவில் ஐந்து முகங்கள்(2004), வாரிசுகள்(2016), சிவப்பு நரிஅங்கத நாவல்(2004), கனடாவில் ஒரு சாவித்திரிவன்னி(2015) முதலான நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்ஆங்கிலத்தில் His Royal Highness, The Tamil Tigers(2011)> The Five Hidden Faces(2004)> The Militant’s Silence(2015), Blood and Terror ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

கல்வித்துறையில் தடம் பதித்த இவர் யூனியன் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிய கால அனுபவங்களை பொற்காலம் என்ற நூலில் தந்துள்ளார்அத்துடன் யூனியன் கல்லூரியின் இருநூறு ஆண்டுகால வரலாற்றை பல ஆதாரங்கள்ஆவணங்களுடன் தங்கத்தாரகை(2016) என்ற நூலாக எழுதியுள்ளார்அத்துடன் சிவதலம் என்ற தலைப்பில் ஆவரங்கால் கிராமத்தின் வரலாற்றையும் எழுதியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக விளங்கிய இவர் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் பற்றிய பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்அவற்றில் அமிர்தலிங்கம் சகாப்தம்(2004), சாணக்கியன்கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் நூற்றாண்டு மலர்(2011), ஆவணம்பல்வேறு இயக்கங்களால் தமிழரசுக் கட்சித் தலைவர்கள்தொண்டர்கள் கொல்லப்பட்ட ஆவணத் தொகுப்பு(2023),சத்தியங்களின்சாட்சியம்  முதலான நூல்களையும் பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

1950களில் பேரறிஞர் அண்ணாத்துரையின் வேலைக்காரி நாடகத்தில் வில்லன் பாத்திரமேற்று நடித்ததுடன் வேறு பல நாடகங்களிலும் நடித்துள்ளார்பிரெஞ்சு நாடகமேதை மொல்லீரின் பறக்கும் டாக்டர் நாடகத்தை மொழிபெயர்த்து மேடையேற்றியுள்ளார்இவர் எழுதி மேடையேற்றிய சாம்பல் மேடுவிஞ்ஞானி என்ன கடவுளா?, விழிப்பு என்பன இவருக்குப் பெயர்தேடித் தந்த நாடகங்களாகும்.

இவ்வாறு கல்வித்துறையிலும்இலக்கியத்துறையிலும் தடம்பதித்த இவர் ஒரு காலத்தில் பிரபலமான ஆங்கில ஆசிரியராகவும் விளங்கினார்ஆங்கில இலக்கணத்தை தெளிவுறக் கற்பித்ததால் இவரது வீட்டில் நடைபெற்ற ஆங்கில வகுப்புகளில் மாணவர்கள் பெருமளவில் படையெடுத்துக் கற்றமையும் குறிப்பிடத்தக்கது.

95 வயதில் கனடாவில் வாழும் இப்பேரறிஞர் சகாப்தம் கண்டு தமிழுக்குச் சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

13-08-2023 உதயன் சஞ்சீவி


மதிப்பீட்டுரை

 கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் எழுதிய 30 கோவில் நூல்கள் 

இயல்வாணன்

தமிழிலக்கண அறிவும், பாரம்பரிய-மரபு சார்ந்த- இலக்கிய அறிவும், சமய அறிவும் கைவரப்பெற்றவர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள். இத்தகைய அறிவு கைவரப்பெற்ற பல பண்டிதர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் தமது மரபார்ந்த சிந்தனைக்குள் மட்டுப்படுத்தப் பட்டவர்களாக, அதற்கு மட்டுமே முன்னுரிமை தருபவர்களாக இருந்துள்ளனர். அவர்களால் பல மரபிலக்கியப் பனுவல்களைத் தர முடிந்துள்ளது.

இதற்கப்பால் இந்தப் புலமையோடு நவீன இலக்கியப் பரிச்சயமும், அதன் மீதான முனைப்பும் கொண்டு இலக்கியம் படைத்தவர்களும் உளர். பண்டிதர் க.சச்சிதானந்தன், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே), மதுரகவி இ.நாகராஜன், இ.முருகையன், வித்துவான் க.சொக்கலிங்கம் (சொக்கன்), மஹாகவி து.உருத்திரமூர்த்தி, கவிஞர் சோ.பத்மநாதன் என்று குறிப்பிடத்தக்க ஆளுமைகளை இவ்வாறு கண்டு கொள்ளலாம்.

அத்தகைய ஒருவராக, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெளிப்பாட்டைச் செய்த ஒருவராக பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தை நாம் அடையாளங் காண முடியும். ஒரு மரபுக் கவிஞராகவே அதிகம் அடையாளம் காணப்பட்ட பஞ்சாட்சரம் அவர்கள் பலநூறு மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், குறுங்கதை என உரைநடை இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

நாடறிந்த கவிஞராக கவியரங்க மேடைகள் பல கண்ட ச.வே. பஞ்சாட்சரம் ஈழத்தின் மூத்த கவிஞர்கள் நீலாவணன், மஹாகவி, முருகையன், அம்பி, திமிலைத்துமிலன் முதலான கவிஞர்களுடன் இணைந்து மேடையில் கவிதைகள் பாடியுள்ளார். இவரது தலைமையில் கவியரங்கில் கவிதை பாடும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தமை பேறே.

தண்டலை, எரிமலை தந்த விடுதலை, நாடும் வீடும், ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள், திறந்தவெளிச் சிறையில் ஒரு தேசம், விலங்கு பறவை, பஞ்சாட்சரம் பாநாடகங்கள் ஆகிய நூல்கள் மூலம் இவரது கவிதை ஆற்றலை நாம் கண்டுணர முடியும். 3 பாகங்கள், 47 படலங்கள்,1300 பாடல்கள் கொண்ட பிரபாகரப் பெருங்காவியமும் இதிலொன்று. ஆயினும் வானலைகளில் தவழ்ந்த இக்காவியத்தின் பிரதிகள் இன்று இல்லாதமை இழப்பே.

இவரது சிறுகதைகள் வேள்வி நெருப்பு, சின்னஞ்சிறுகதைகள், அன்னை மண், இந்தத் தீபாவளி தேவைதானா? வண்டி முன்னாக மாடு பின்னாக, கொம்புத்தேன் ஆகிய  நூல்களாக வெளிவந்துள்ளன. கூலிக்கு வந்தவன் இவரெழுதிய நாவலாகும். சின்னப்பாப்பா பாட்டு என்ற சிறுவர் நூலையும் வெளியிட்டுள்ளார். இவரது இலக்கண நூலான இலக்கணப் பூங்கா பாடசாலை மாணவர்களுக்கு வரப்பிரசாதமான 15 பதிப்புகள் கண்ட துணை நூலாகும்.

இதற்கப்பால் நூறு வரையான பிரபந்தங்களை இவர் ஆக்கியுள்ளார். அவை ஆலயங்களாலும்இ அடியவர்களாலும் தனித்தனி நூல்களாக்கப்பட்டுள்ளன. பல வெம்போரில் வீழ்ந்து காணாமலும், அழிந்தும் போய்விட்டன. இருப்பவற்றுள் யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் உள்ள ஆலயங்கள் மீது பாடப்பட்ட 30 பிரபந்தங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறப்பு இணைப்பாக சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் திருப்பள்ளியெழுச்சி இடம்பெற்றுள்ளது.

இவற்றில் எட்டு திருவூஞ்சல்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஏழு ஆலயங்களுக்கும், ஒன்று பலாலி இராஜேஸ்வரி மனோன்மணி அம்பாளுக்கும் பாடப்பட்டுள்ளன. நான்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டு நான்மணிமாலை, இரண்டு மும்மணிக்கோவை, மூன்று திருவிரட்டை மணிமாலை, மூன்று சிந்து, இரண்டு பதிகம், சுன்னாகம் ஐயனாருக்கு அம்புலித்தூது, இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு வெண்பா, வன்னேரிக்குளம் ஐயனாருக்கு அருள்மங்கலம், அக்கராயன் சித்தி விநாயகருக்கு திருவடிபுகற்பா, கண்ணனுக்கு கவசம் என 31 பிரபந்தங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.

பிரபந்தங்கள் எனப்படுபவை காவியத்தன்மை இல்லாத இலக்கியமாகும் எனக் கூறுவர். இசையோடு பாடப்படுவது எனவும் கருத்துண்டு. நூலாசிரியர் சில பிரபந்தங்களைப் பாடுவதற்கு இறைவன் கனவில் தோன்றி பாட வைத்துள்ளதாக எழுதியிருக்கிறார். அது சாத்தியமானதே. நானும் திருவூஞ்சல், திருப்பள்ளியெழுச்சி, பதிகம் பாடியிருக்கிறேன். அது ஒரு இறையனுபவப் பரவசநிலையிலேயே சாத்தியமாயிருந்திருக்கிறது.

படைப்பாளிகள் காலத்தின் சாட்சிகள். காலத்தில் ஏற்படும் விளைவுகள் அவர்களைப் பாதிக்கும். நாயன்மார்களின் காலத்தில் இருந்து இன்றைய கவிஞர்கள் வரை காலத்தின் சாட்சியாக அவர்களது பாடல்கள் இருந்துள்ளன. நோயை நீக்கவும், வெவ்வினைகள் நீங்கவும், பஞ்சத்தில் இருந்து மீளவும் இறைவனை வேண்டிப் பாடிய பிரபந்தங்கள் பலவும் எம்மத்தியில் உள்ளன. கவிஞர் ச.வே.பஞ்சாட்சரமும் காலத்தை தனது பிரபந்தங்களில் பிரதிபலித்துள்ளார்.

பாம்பைக் கயிறாகப் பற்றிமலை ஏறுநராய்ச்

சாம்பவி தாம்தருக்கும் சொத்தெல்லாம் - தாம் விட்டுச்

செம்மணி வீதியிலே செத்தபிண மாய் நகர்ந்தார்

அம்மணியே! வாழ்விதுதானா? 

என்று 1995 மகா இடப்பெயர்வை முன்வைத்து நுணாவிற்குளம் கண்ணகை அம்மனிடம் இறைஞ்சுகிறார்.

இதே பிரபந்தத்தில் இன்னுமொரு இடத்தில் மிகநுட்பமாக இன்னொரு விடயத்தைப் பேசுகிறார்.

அன்னை செய்கையும் தந்தை செய்கையும்

அண்ணன் செய்கையும் தம்பி செய்கையும்

அந்நியன் அயல் பகைவன் செய்கையும்

அரசன் செய்கையும் அடிமை செய்கையும்

என்ன செய்கையும் எவரின் செய்கையும்

இன்னதேசரி என்று திட்டமாய் 

அன்னை நீநிற்கும் அகங்கள் ஏற்குமேல்

அவைகள் மட்டுமே அறங்கள் நல்லறம்

என்று இறைவியிடம் சொல்கிறார். இறைவியே! இதையெல்லாம் அறமாகப் பார்க்கிறாயா? என்று கேட்பது போலவும், எங்கள் செயல்களின் விளைவை நாங்கள் அனுபவிக்கும் பேறு கிடைத்ததா? என்று கேட்பது போலவும் நேரெதிரான அர்த்தங்களை வெளிப்படுத்தும் வகையில் பொருள்கோடத் தக்கதாக இப்பாடலைப் கட்டமைத்துள்ளார்.

நுணாவிற்குளம் கண்ணகையம்மன் கோவிற்சூழல் எனக்குப் பரிச்சயமானது. எனது புகுந்தவிடம் அது. அந்தச் சூழலை, அதன் வனப்பை, இறைவியின் அருட்சிறப்பை நான்மணி மாலையாகத் தந்துள்ளார்.

“கொன்றை ஆல் கிஞ்ஞாக் குளிர்வனஞ் சூழ்ந்தொளிர் கண்ணகியே”

“கதிர்கள் அசையும் கழனி வரம்பில் வரிசைகளாய் 

மதர்களைக் கற்றை சுமந்துசெல் மாதர் மகிழ்ந்திசைக்கும்”

“மருதுநீ ழலில் வாய் குளத்தினில் 

மன்னி நீந்திடும் மங்கை மார்முகம்

கரிய நாகமாய் கூந்தல் கவ்விடும்

காட்சி கண்டயர் கந்த மைந்தனின்

அரிய அன்னையே!”  

என நுணாவிலின் எழிலைப் பல பாடல்களில் பாடியுள்ளார்.

இவர் எழுதிய திருப்பள்ளியெழுச்சிகளிலும் சூழல் விபரிப்பின் சிறப்பைக் காணலாம். மல்லாவி யோகபுரநாதர் திருப்பள்ளியெழுச்சியின் பாடலொன்று இவ்வாறுள்ளது.

பொய்கையில் தாமரை பூட்டுவாய் திறப்ப

போற்றியுன் நாமங்கள் புளகிக்க என்றே

மெய்குளிர் ஓடைநீர் வீழ்ந்தாடி மீண்டோம்

விழிமலர் திறந்த நின் விளங்கெழில் பருக

செய்வன புன்னகை தேன்பொழில் மலர்கள்

செல்லுவோம் சேருவோம் சிவன் கழல் என்றே.

வழக்கமான கற்பனைகளிலிருந்து விலகி சூழலின் விகசிப்பைத் தரிசிக்க வைக்கும் வகையில் இவரது திருப்பள்ளியெழுச்சி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னொரு திருப்பள்ளியெழுச்சி சுவிஸ் பேர்ண் ஞானலிங்கேச்சுரருக்குப் பாடப்பட்டது.

சுவிற்சர்லாந்து பனிவிழும் தேசம். காலையில் பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெறும். குளிரைத் தாங்கும் ஆடை அணிகளுடனேயே நடமாடலாம். 

பாதையில் உறுமுவ பனிவழிப் பான்கள்

பகற்பணி யாளர்செல் உந்தொலி பம்மும்

காதுமெய் மூடிய கம்பளி ஆடைக்

கன்னியர் எம்பாவை பாடினர் தெருவில்

ஈதுநற் புலர்வென்றே இல்லங்கள் யன்னல்

எட்டியே பார்ப்பன வைகறை விளக்கும் 

பூதமை ஏந்தியே பூவையர் வந்தார்

புரங்கள் செற்றீர் பள்ளி எழுந்தருள்வீரே!

சுவிற்சர்லாந்தின் இயற்கை நிலைமையை உள்ளடக்கிய சூழல் விபரிப்பாக இத்திருப்பள்ளியெழுச்சி அமைந்திருப்பது முக்கியமானதாகும்.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் நான்மணி மாலையில் வரும் அகவற்பா தமிழர் தொன்மையை நினைந்து அன்றைய அவல வாழ்வைப் பேசுகிறது.

வாழி நீ அம்மா வயங்கருள் விளக்கே!

ஈழமண் தமிழன் அரசுகள் எத்தனை?

நல்லையில் வன்னியில் வல்லி புரத்தினில்

தம்பல காமத்தில் சால்கோண மலையினில்

எம்பழம் அரசுகள் இருந்ததை மறைத்து வெம்

செய்கையர் தமிழினச் சிதைப்பினில் முனைந்து

வெங்களம் படைத்தெமை விரட்டிடும் வேளையில்

அடைக்கலம் அளித்தெம் புரவலர் அணிக்கும்

துடித்துவந் தண்டிய சோரமில் தமிழர்க்கும்

விடுதலைத் தவத்துக்குந் திடவலு வேற்றிட 

என்றே ஈரைம் பானாண் டின்முன்

அன்றே இரணை மடுவாய் அமைந்தோய்

தொடர்ந்த யுத்தமும் இடம்பெயர்வுமான வாழ்வைப் பேசும் வன்னேரிக்குளம் ஐயனார் திருவூஞ்சலின் காப்புச் செய்யுள்  இவ்வாறு அமைகின்றது

வேரோடு பிடுங்குண்டோம் வீசப்பட்டோம்

வீடின்றி நாடெல்லாம் அலைய நாங்கள்

ஊரோடு தங்குகின்றீர் எனினும் நும்தம்

உண்மையருள் நம்முன்னே உலவிக் காக்கும்

சீராரும் இணுவை செகராசக் கோனே!

செழும்வன்னி வன்னேரிக் குளத்தில் வாழும்

காராளும் சாத்தன்மேல் ஊஞ்சல் பாடக்

காப்பருள்வீர் கவிதருவீர் கால்கள் போற்றி

இவரது காப்புச் செய்யுள்கள் எல்லாமே இணுவில் செகராசசேகரப் பிள்ளையாரை முன்வைத்தே பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவது முக்கியமானது. 

‘எம்மினத்தின் எதிர்காலம் ஈழத்திலே இடையூறு மயமாகவும் நிச்சயமற்றும் காணப்படும் நிலையிலும் நிகழ்காலத்தில் வாழும் மூத்த தலைமுறைப் பலர் அதுபற்றிக் கவலையே இல்லாமல் சுயவிளம்பரஇ தற்புகழ்ச்சிப் பல்லக்குகளில் ஏறிப் பவனி வருவதிலேயே முனைப்பாக அலைவதன் மூலம் தம் பிற்சந்ததிகளின் எதிர்காலத்தைப் பாலைவனமாக்குவதோடு அவர்கள் மனங்களுக்கும் அந்நியர் ஆகி விடுகின்றனர்.’

இதுதான் இன்றைய பொதுநிலைமை. காலச் சூழலை உள்ளார்ந்து நோக்காத நிலை எதிர்காலத்தை இருளுக்குள் தள்ளிவிடும் என்பது உண்மையே. 

தங்கம்மா அப்பாக்குட்டி கூறுவது போல ‘அரசியல் கவிஞராகவும்இ ஆன்மீகக் கவிஞராகவும்இ புரட்சிக் கவிஞராகவும்’ ச.வே.பஞ்சாட்சரம் விளங்குகிறார். எனில் அவருடைய சமூகப் பொறுப்பு, சமூகம் மீதான அன்பு, அக்கறை,



சமூக நோக்கு என்பவையே அவரை இத்தகைய பாத்திரத்தை வகிக்க வைத்துள்ளன.





Wednesday, August 9, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 15



முன்றில் 15

இயல்வாணன்

எள்ளலும், சுவையும் மிக்க மண் மணம் கமழும் படைப்புகளால் அறியப்பட்டவர் எஸ்.எல்.எம்.ஹனீபா. இவர் எழுதிய கதைகளை விட இவரால் சொல்லப்படுகின்ற கதைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். திகட்டத் திகட்டச் சுவை கூட்டி அவர் சொல்லும் அழகே தனி. சு.வில்வரத்தினம் போல பாடவும் செய்வார். ஒவ்வொரு கணமும் உயிராற்றல் பீறிடும் இவரைப் போன்ற மனிதரை சமீப காலத்தில் நான் காணவில்லை என்பது இவர் தொடர்பிலான ஜெயமோகனின் பார்வை.

மட்டக்களப்பு மாவட்டம் மீராவோடையின் சட்டிபானை தெருவில் தம்பி சாய்பு சின்னலெவ்வையின் மூன்றாவது மகனாக 01-04-1946இல் எஸ்.எல்.எம்.ஹனீபா பிறந்தார். ஆற்றில் மீன் பிடித்து விற்கும் தொழில் புரிந்து வந்த இவரது தந்தையார் பின்னர் மூன்று கிராமங்களுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றினார்.

ஹனீபா தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஒட்டமாவடி முஸ்லீம் கலவன் பாடசாலையிலும் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாமிய சமயக் கல்வியைக் கற்றார். தொழிற் கல்வியை கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில்(1966-67) பெற்றார்.

தொடர்ந்து மலேரியா ஒழிப்புப் பிரிவில் மேற்பார்வையாளராக தொழிலுலகுக்குள் நுழைந்தார். சிறிது காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கால்நடை போதனாசிரியர் பணியினை ஆற்றினார். ஓராண்டின் பின்னர் 1969இல் விவசாய அபிவிருத்திப் போதனாசிரியர் நியமனம் கிடைத்து, கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெக்கிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலநறுவை, வெலிக்கந்த, திரிகோணமடு ஆகிய இடங்களில் கடமையாற்றி 1990இல் ஓய்வு பெற்றார். இவர் ஒரு குறுந்தூர ஓட்ட வீரராக அகில இலங்கை ரீதியில் விருதுகள் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கால்நடை சார்ந்தும், விவசாயம் சார்ந்தும் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர் அவ்வப்போது அது தொடர்பில் எழுதியும் வந்துள்ளார்.

இவர் ஒரு இலக்கியக்காரனாக மட்டுமன்றி அரசியல்வாதியாகவும் விளங்கினார். அந்த அரசியலே இலக்கியத்தில் பேராளுமையாக உருவாகாமல் அவரை முடக்கி விட்டது என்றால் மிகையல்ல. அதுபற்றி அவரே பிரஸ்தாபித்துள்ளார். இடதுசாரிய சிந்தனைகளில் ஈடுபாடு காட்டிய இவர் இடதுசாரிகள் கூட்டுச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குச் சார்பாக முதலில் மேடையேறினார். 1963இல் கல்குடா தொகுதி சுதந்திரக் கட்சிக் கிளையை உருவாக்கினார். 1969இல் அக்கரைப்பற்றில் எம்.எச்.எம்.அஷ்ரப்பைச் சந்தித்ததையடுத்து அவர் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. 1970இல்  அஷ்ரப் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். காங்கிரஸின் பிரசாரப் பீரங்கியானார்.

 1989இல் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மூன்று ஆரம்பப் பாடசாலைகளை உருவாக்கியமை உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தனது பிரதேசத்துக்குச் செயற்படுத்தினார். அக்காலத்தில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முகநூலில் இவர் பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு பொது நூலகம் இவரது ஆரம்பகால வாசிப்புக்குத் தீனி போட்டது.  இவரது முதற் சிறுகதையான நெஞ்சின் நினைவினிலே 1962இல் ராதா சஞ்சிகையில் வெளிவந்தது. இன்சான், இளம்பிறை, வீரகேசரி, சுதந்திரன், சுடர், சிந்தாமணி,கணையாழி,பூரணி,பாமிஸ், ராவய(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது) ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஐம்பது சிறுகதைகள் வரையே இவர் எழுதியுள்ளார்.

என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமையோடும் வறுமையோடும் வானம் பார்த்த பூமியை வைத்து மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்பார் நடத்துகின்ற அரசியல் புறோக்கர்கள், ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமே நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷீகத்தைத் தரிசிப்பதுதான் எனது எழுத்துப்பணி என எஸ்.எல்.எம்.ஹனீபா பிரகடனம் செய்வது போலவே அவரது எழுத்துகள் அமைந்துள்ளமை சொல்லத்தக்கதாகும்.


சமூகப்
பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்தூழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்து விடுகிறது என்று குறிப்பிடும் இவர் சன்மார்க்கம் கதை வெளிவந்த வேளை ஹனிபாட கையெ முறிச்சுப் போடணும் என்று சொம்பினார்களாம் என்று எழுதியிருக்கிறார்.

1992இல் இவரது 15 சிறுகதைகள் மக்கத்துச் சால்வை என்ற தலைப்பில் வெளியானது. இவரது மக்கத்துச் சால்வை சிறுகதையே இவரைப் பலரும் அறிய வைத்த கதை. கிராமத்தில் பெருநாள் காலத்தில் நிகழும் சிலம்பாட்டத்தை மையப்படுத்திய இக்கதை மனிதர்களின் கௌரவம், வெல்லும் ஆசை என்பவற்றுக்கு அப்பால் அன்பின் வலிமையை உள்ளார்ந்து பேசுகின்றது. இக்கதை இலங்கை அரசினர் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 11 பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோல மருமக்கள் தாயம், வேட்டை கதைகளும் பேசப்பட்ட கதைகளாகும்.

மக்கத்துச் சால்வையில் இடம்பெற்ற சில கதைகளையும் உள்ளடக்கி 24 சிறுகதைகள் அவளும் ஒரு பாற்கடல் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக 2007இல் வெளிவந்தது. மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் என்ற தலைப்பில் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறப்பு மலர் ஒன்று 2021இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் எம்..நுஃமான், தெளிவத்தை யோசப், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயமோகன், எம்.கே.முருகானந்தன், கருணாகரன் உள்ளிட்ட 56 பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இவரெழுதிய என்டெ சீவியத்திலிருந்து பாகம் 1 என்ற தலைப்பிலான பத்திகளின் தொகுப்பு இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அத்துடன் இவரது சிறந்த சிறுகதைகளான மக்கத்துச் சால்வை, மருமக்கள் தாயம் ஆகிய கதைகள் பேஜஸ் புத்தக நிலையத்தின் சிறுநூல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளது.

இவரது மக்கத்துச் சால்வை தொகுதிக்கு 1992இல் தமிழ்நாடு லில்லிதேவசிகாமணி விருதும், இலங்கை அரசின் சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. ஆளுநர் விருது(2000), கலாபூஷணம் விருது(2005), ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பேரவை விருது, மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை விருது என்பனவும் இவரது இலக்கிய சேவையைக் கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.

கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புத் தமிழுக்கு எஸ்.எல்.எம். தான் என்று எம்.கே.முருகானந்தன் குறிப்பிடுவது போல மட்டக்களப்பு முஸ்லீம் பிரதேச பேச்சுவழக்கினை இவரது கதைகளில் அலாதியாய் சுவைக்கலாம். இவரது கதைகளில் வரும் சொற்கள், சொலவடைகள் ஒரு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்குவதற்கான மூலமாகலாம்.

77வயதில் முதுமையின் தளர்ச்சியை இடையிடையே வெளிக்காட்டினாலும்  இளைஞனைப் போன்ற மனதுடன் இருக்கும் இவர் தனது அனுபவங்களை எழுத்தாக்கி ஈழத்து இலக்கியத்துக்கு புதிய ஒளி பாய்ச்ச வேண்டும்.