நின்று நிலைக்கின்றன
இந்தக் கள்ளிச் செடிகள்
எந்தக் காற்றையும் வரவேற்றபடி
எந்தக் காலத்துக்கும் வாயுதிர்த்தபடி
எல்லாச் சமரசங்களோடும்.
மழையில் அவை நீராடுகின்றன.
வெயிலில் தலையுலர்த்துகின்றன.
பழங்கறை நீங்கி
புதுக்கோலம் புனைகின்றன.
புதிய அரசர்கள் வருகிறார்கள்
கள்ளிச் செடிகள்
துதிபாடி வரவேற்கின்றன.
அந்தப்புரத்துக்கு
அழைத்துச் செல்கின்றன.
கள்ளிச் செடிகளுக்குண்டு ஓரிலக்கு
வாழ்வதுதான்!
எப்படியேனும்
எவருடனேனும்.
தெரிதல் தை-மாசி 2004

No comments:
Post a Comment