Tuesday, June 14, 2022

மறுவாசிப்பின் முகங்கள்

 


மீண்டுமொரு புள்ளிவிபரம் உங்கள் முன் வந்து விழுந்திருக்கிறது. 


கொரோனாவின் 

ஏறுமுகத்தைப் பார்த்துப் 

பதைத்த பொழுதுகள் மங்கின. 

பரீட்சையின்

இறங்குமுகத்தோடு ஒரு 

உத்வேகத்துடன் புள்ளிவிபரத்தைக் கையிலெடுத்துள்ளார்கள். 


ஆதியாகமத்தை விட 

அதிகமாய் எல்லோரும் 

மறுவாசிப்புச் செய்கிறார்கள். 


கல்வியை கடைத்தேற்ற 

வெளிநாட்டில் 

உண்டியல் குலுக்கும் நண்பனது 

ஒருமுகமாயிருந்தது. 


கசாப்புக் கடையில் 

இறைச்சி வெட்டியபடி சொன்னவனது

இன்னொரு முகமாயிருந்தது. 

சங்கக்காரனது கண்டுபிடிப்பு

இன்னொன்றானது.


கல்வி அதிகாரியின் கண்டுபிடிப்பு வேறாயிருந்தது.


பாடசாலை இன்னொரு முகத்தை வடிவமைத்திருந்தது.


எல்லோரும் நன்கு மென்று துப்பினார்கள்.


வியர்வையில் குளித்த படி வேலை செய்து கொண்டிருந்த பரீட்சையில் தோற்றவனின் முகத்தில் 

ஆதியாகமத்தை விட மறுவாசிப்புச் செய்தவர்களின் குற்றங்கள் அட்டை போல் ஒட்டிக் கிடந்தன.

- இயல்வாணன்

காற்றுவெளி ஆனி 2022 

 நடமாடும் தகவல் களஞ்சியம் மயிலங்கூடலூர் பி.நடராசன்

இயல்வாணன்

ஒரு படைப்பாளியாக, பதிப்பாசிரியராக, தொகுப்பாசிரியராக, வழிகாட்டியாக இருந்து மந்தமாருதமாகச் சுழன்ற மயிலங்கூடலூர் பி.நடராசன் என்ற ஆளுமையை நாம் இனிக் காண முடியாது. தமது 84வது வயதில் கடந்த 12-05-2022 அன்று யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அவர் காலமானார்.

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கில் உள்ள மயிலங்கூடலில் 14.10.1939இல் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்திலும், பன்னாலை சேர் கனகசபை வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியிலும் பெற்றார். ஆங்கில மொழி மூலம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற அவரை அவரது தமிழ் ஆசிரியரான கவிஞர் செ.கதிரேசர்பிள்ளை தமிழின்பால் ஆற்றுப்படுத்தினார். அவரது வழிகாட்டல், அயலவரான பண்டிதர் சி.அப்புத்துரையின் தொடர்பு என்பன அவரைத் தமிழ் இலக்கண இலக்கியங்களின்பால் ஈடுபட வைத்தது. கதிரேசர்பிள்ளையிடம் யாப்பிலக்கணத்தைக் கற்றுத் தேர்ந்தார்.  

மல்லாகத்தில் நடைபெற்ற பண்டித வகுப்பில் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, பண்டிதர் வே.சங்கரப்பிள்ளை, பண்டிதர் பொன்னுத்துரை, பண்டிதர் நாகலிங்கம் முதலானவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று, பால பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார். அந்த நேரத்தில் அவரது மைத்துனரது வேண்டுகோளின் பிரகாரம் வவுனியா  வண்ணான் சின்னக்குளத்தில் ஒரு பாடசாலையை ஆரம்பித்து அதில் ஆசிரியராக செயற்பட்டார். அதன் ஸ்தாபராகவும், தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக நீண்ட காலம் பல பாடசாலைகளிலும் கடமையாற்றினார்.

சமூகவியல், வரலாறு, அறிவியல், இலக்கியம், இலக்கணம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ள இவர் மரபுக் கவிதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார்.  ஆயினும் சிறுவர் இலக்கியத்துக்கே இவர் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரது சிறுவர் இலக்கியங்கள் ஆடலிறை மழலைப் பாடல்கள், ஆடலிறை சிறுவர் பாடல்கள், மொழியாக்கச்  சிறுவர் கதைகளான சுதந்திரமாகப் பாடுவேன் ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. இறந்தவர்கள் நினைவாக வெளியிடப்படும் கல்வெட்டுகளில் சிறுவர் பாடல்களைப் பதிப்பித்து வெளியிட்ட இவரது செயற்பாடு பலராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தகக்கது. நல்லூர் ஆசிரிய வள நிலையப் பொறுப்பாளராக இருந்த வேளை- 1985இல் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சிறுவர் இலக்கியக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை நடத்தியதுடன் பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளுக்கு குழந்தைக் கவிதைகளை எழுதும் பட்டறையினையும் நடத்தினார். மாணவிகளால் எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து பாலர் பா அமுதம் என்ற பெயரில்  நூலாகவும் வெளியிட்டார்.

கையெழுத்துச் சஞ்சிகைகள் உள்ளிட்ட பல சஞ்சிகைகளையும் அவர் வெளியிட்டதுடன் அத்தகைய முயற்சிகளை வரவேற்று ஊக்குவித்தார். மல்லாகத்தில் பண்டித வகுப்பில் பயின்ற வேளை பண்டிதம் என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தார். பலாலி ஆசிரிய கலாசாலையில் பயின்ற வேளை அறிவியல் சஞ்சிகையான சுடரின் ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டார். தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தில் பணியாற்றிய வேளை அதன் ஆங்கில செய்தி மடலான குறுஊ நேறள டுநவவநச இன் ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டார்.

பல நூல்களின் தொகுப்பாளராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றிள்ளார். பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், எழுததாளர்களின் நூல்களுக்குழ், ஆய்வேடுகளுக்கும் உசாத்துணைத் தகவல்களைத் தேடி வழங்கி, பிழைகள் திருத்தி, ஒப்புநோக்கி அந்த நூல்களும் ஆய்வேடுகளும் சிறப்பாக வெளிவரக் காரணமாக இருந்துள்ளார். 1972இல் ஆ.சிவநேசச்செல்வனுடன் இணைந்து பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழா மலரை உருவாக்கி வெளியிட்டார். அவருடன் இணைந்து தெல்லிப்பளை கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் மறுமலர்ச்சிக்காலம் - இலக்கியச் சிறப்பிதழ் என்ற நூலையும் வெளியிட்டார். அத்துடன் 1971 முதல் 1976 வரையான மகாஜனன் இதழ்களின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

மூதறிஞர் சொக்கனால் உருவாக்கப்பட்ட முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் இவரே முன்னின்று மேற்கொண்டார். கலாநிதி க.சொக்கலிங்கம், பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் நா.சுப்பிரமணியன், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆகியோரின் இன்றளவும் பேசப்படும் தமிழியல் ஆய்வுநூல்களைப் பிழையறப் பதிப்பித்து வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. 

தமிழின் முக்கிய அரசியல் கவிதைத் தொகுப்பான மரணத்துள் வாழ்வோம் நூலின் தொகுப்பாளர்களுள் இவரும் ஒருவராவார். இவருடன் அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், உ.சேரன் ஆகியோர் இணைந்து 19 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகளைத் தொகுத்து  இந்த நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. பாவலர் துரையப்பாபிள்ளையின் சிந்தனைச் செல்வம் நூலை மீள்பதிப்புச் செய்து வெளியிட்டார். சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி : ஆக்கமும் ஆளுமையும் என்ற நூலையும் தொகுத்தார். இடப்பெயர் ஆய்வு, கைலாயமாலை ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.

வித்துவான் கலாநிதி க.சொக்கலிங்கத்துடன் இணைந்து கட்டுரைக் கோவை என்ற நூலையும், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவுடன் இணைந்து தமிழியற் கட்டுரைகள் என்ற நூலையும் எழுதினார். ஈழத்துத் தமிழறிஞர் என்ற தலைப்பில் சி.வை.தாமோதரம்பிள்ளை, கணேசையர் ஆகியோர் பற்றிய கட்டுரை நூலையும் எழுதி வெளியிட்டார்.

இத்தகைய பணிகளை விட அவர் ஆற்றிய பிரதான பணி கற்பித்தலும், வழிகாட்டலுமே. நூல்களை விலை கொடுத்து வாங்கி வாசிப்பதும், அவற்றைப் பற்றி தனது மாணவர்களுக்குக் கூறி வாசிப்பின்பால் அவர்களை ஆற்றுப்படுத்துவதும் அவரது தலையாய பணியாக இருந்தது. அத்துடன் தனது மாணவர்களிடத்தில் படைப்பு உந்தலை ஏற்படுத்தி, அவர்களது ஆக்கங்களைத் திருத்தி, தட்டிக் கொடுத்து, பிரசுர வாய்ப்பினை ஏற்படுத்தி அவர்களை வளர்த்து விட்ட நல்லாசிரியராக அவர் விளங்கினார்.

பின்னாளில் அவர் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கலாநிதி சி.ஜெய்சங்கர், இயல்வாணன், சி.ரமே~; ஆகியோர் ஈழத்தமிழர் தொன்மையும் வழக்காறுகளும் என்ற பெயரில் தொகுத்து நூலாக வெளியிட்டனர். ம.பா.மகாலிங்கசிவம், சி.ரமே~;, சி.சிவஞானசீலன் ஆகியோர் அவரது பெருந்தொகுப்பு ஒன்றினை ஆடலிறை ஆக்கங்கள் என்ற பெயரில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் வெளியிட்டுள்ளனர்.

ஒரு தகவல் களஞ்சியமாக மிளிர்ந்த அவர் ஒரு தனி மனித தோப்பாக விளங்கினார். பலரும் அவரது நிழலில் பயன்பெற்றனர். இன்றோ பெருவிருட்சம் சாய்ந்ததென அவரது வெற்றிடம் நேர்ந்திருக்கிறது. அவர் செய்த பணிகளிலும், அவரது படைப்புக்களிலும், அவரால் உருவாக்கப்பட்டவர்களது நினைவுகளிலும் அவர் சாசுவதமாய் வாழ்வார்.


தமிழ்முரசு 15-05-2022






 


மின்னி மறைந்த பேரொளி  எஸ்போஸ்

இயல்வாணன்


எஸ்போஸ் என்கிற சந்திரபோஸ் சுதாகர்  கலகக்காரனாகவே அறியப்பட்ட ஒருவர். உண்மைதை; தரிசிக்க விளைந்த கவிஞனின் முன் பொய்யும் பித்தலாட்டங்களுமே யதார்த்தமான போது கவிதைகள் மூலமும் தனது செயல்கள் மூலமும் எதிர்வினையாற்றிய  அவனை இந்தச் சமூகம் அப்படித்தான் அடையாளப்படுத்தும். பாரதிக்கு நேர்ந்ததுதான் சுதாகருக்கும் நேர்ந்தது. பாரதியின் அந்திமம் பிணியுடன் மோசமாய் கடந்து, சிலருடன் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்தது. சுதாகருக்கோ   வாழ்வு மறுக்கப்பட்டு, இனந்தெரியாதவர்களின் துப்பாக்கி ரவைகளால் மரணம் பரிசளிக்கப்பட்டது.

ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சஞ்சிகை ஆசிரியராக, விமர்சகராக தன்னை அடையாளப்படுத்திய சந்திரபோஸ் சுதாகர் கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரத்தில்  24-08-1975இல் பிறந்தார். தந்தையார் சந்திரபோஸ் பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாயார் லீலாவதி நெடுந்தீவைச் சேர்ந்தவர். அவர்களது குடும்பத்தினர் ஸ்கந்தபுரத்தில் வசித்து வந்தனர். பாஸ்கர் என்ற மூத்த சகோதரரும், சுசீலா என்ற தங்கையும், சுதாகரின் உடன்பிறந்தோர்.  தாயார் ஒரு பரிசாரகராக பணியை ஆரம்பித்து நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் பணிபுரிந்தார். 

அதனால் சுதாகர் நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில்  தனது ஆரம்ப, இடைநிலைக் கல்வியை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் ஒரு சிறார் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். சிறிது காலத்தில் அதிலிருந்து விலகினார்.


தாயார் அக்கராயன் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த பின்னர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார்கள் அக்கராயன் மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் இருந்து உயர்தரம் வரை  கற்றார். பாடசாலைக் காலத்திலேயே ஒரு வித்தியாசமான ஆளுமையாக அவர் வெளித் தெரிந்தார். யாருடனும் அதிகம் பேசாத, புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கிய ஒருவராக அவர் தோற்றந் தந்தார். திமிர்ந்த ஞானச் செருக்கு அப்போதே அவரிடம் இருந்தது. எந்த விடயத்திலும் மற்றவர்களின் பார்வையில் இருந்து சுதாகரின் பார்வை மாறுபட்டிருந்தது. மாற்றுச் சிந்தனைகள் அவரிடம் இருந்தன. அவை ஒத்தோடிகள் நிறைந்த சமூகத்தில் மறுத்தோடியாக அவரை அடையாளப்படுத்தின. தர்க்க ரீதியாகச் சிந்திப்பது, விமர்சனபூர்வமாகச் பேசுவது, ஏன்? எதற்கு? எப்படி என்று கேள்வி கேட்பது என்பன அறிவியலில் முக்கியமானது. சமூக முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது. ஆனால் நடைமுறை உலகில் அத்தகைய நிலை என்பது அவ்வாறு இருப்பவரை கலகக்காரனாக்கி விடுகிறது. 

பாடசாலையில் ஆசிரியர்களுடன் முரண்படும் ஒருவராகப் பார்க்கப்பட்டார். பின்னர் அவர் பணியாற்றிய அலுவலகங்களிலும் அதேநிலைதான். அதிகாரம் எந்த வடிவில் வந்தாலும் சுதாகர் அதை எதிர்த்தார். அவர் எதிர்பார்த்ததெல்லாம் அன்பையும் பாசத்தையும் மனிதநேயத்தையுமே.

பாடசாலைக் காலத்திலேயே அவரிடம் வாசிப்பு பெரிய பாதிப்பாக இருந்தது. மேத்தா, வைரமுத்துவில் இருந்துதான் அவரது கவிதை வாசிப்பு ஆரம்பமானது. ஆனால் அவரது வாசிப்பு தீவிரமானது. அசுரத்தனமானது. வாசிப்பும் தேடலுமாகவே அவரது பாடசாலைக் காலம் கழிந்தது. அந்த வாசிப்பு கவிதைகளை எழுத வைத்தது.  அப்பியாசப் புத்தகத் தாள்களை இரண்டாக மடித்து கவிதைகள் எழுதினார். எளிமையான காதல் கவிதைகளுடன்  அவரது கவிதைப் பயணம் தொடங்கியது. சந்திரபோஸ் சுதாகர் என்ற இயற்பெயரில் எழுத ஆரம்பித்த அவர் பின்னாளில் எஸ்போஸ், போஸ் நிஹாலே, போசு என்ற பெயர்களிலும் எழுதினார்.

ஆனால் அவரது வாசிப்பும், பார்வையும்,  தீவிரமும் கவித்துவமும் பொருண்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவராக அவரை மாற்றியது. அன்பையும், பாசத்தையும் அவாவியவை அவரது கவிதைகள். வாழ்வின் நிராசைகளே அவரது பெரும்பாலான கவிதைகள் எனலாம். வாழ்வின் நிராசைகள் என்பது அவரது சொந்த வழ்வு குறித்தானதல்ல. அவரது வாழ்காலம் குறித்தானது.

அன்பு எவ்வாறிருக்கும் என்ற கவிதையில் அது இவ்வாறு கட்டவிழ்கிறது.

நீண்ட நாட்களாய் அது பற்றிய கேள்விகள் 

மனதை உலுக்கிச் சிதைக்கின்றன.

சிலவேளை வர்ணங்கள் பூசப்பட்ட இனிப்பு மாதிரி,

அல்லது நான் உண்ணும் உப்பிடாத ரொட்டி மாதிரி

புரியவில்லை.

அதனால் சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும்

கொல்லவும் கூட முடியுமாம்,

அயலவர்கள் இவ்வாறு பேசிக் கொள்கிறார்கள்.

எனக்கு அன்பு பற்றி

பாசம் பற்றி

காதல் பற்றி

அயலவரோடு பேசப் பயமாயிருக்கிறது.

அவரது பால்ய காலம் முழுவதும் யுத்தத்தின் வலிகளோடுதான் கழிந்தது. சுற்றிலும் பீதி படர்ந்த வாழ்க்கையே அவர் கண்முன் நின்றது. மரணங்கள், இடம்பெயர்வுகள், வெடியோசைகள், சொத்தழிவுகள் என்று அவர் கண்டதனைத்தும் இந்தக் காட்சிகளே.

நான் எனக்கான ஒவ்வொன்றையும் இழந்தேன்.

தலைநகரம்

வீதிகள்

பூக்கள்

சுடுகாடுகள் எல்லாவற்றையும்.

சில மனிதர்களோடு 

காடுகளை நோக்கி என் பயணம் தொடங்கியது.

மனிதர்கள் மனிதர்களை அழித்தார்கள்.

மனிதர்கள் காடுகளையும் மிருகங்களையும் அழித்தார்கள்.

எங்கும் பாழ்வெளிகளே எஞ்சின.

அந்த வாழ்வு சந்திரபோஸ் சுதாகரை இன்னொரு பக்கம் நகர்த்தியது. நித்தமும் காணும் அவல வாழ்வைக் கடந்து செல்ல எண்ணினார். அதனால் அவர் ஒரு போராளியானார்.

ஆணவத்தாலும் அதிகாரத்தின் வழியாகவும்

கோரமாக்கப்பட்டு 

அழைத்துச் செல்லப்பட்டேன்

மனிதர்களற்ற சூனியத் தீவிற்குள்.

வேதனைகளால் கரைகின்றன நிமிடங்கள்.

தமிழனின் ஆதிக்குடி பற்றியும் 

இந்த மண்ணுக்கு அவனே சொந்தக்காரனென்றும் சொல்லிக் கொண்டிருப்பதில்

சலித்துப் போயிற்று என் பேனா?

நான் தமிழன்

எனக்கொரு அடையாளம் வேண்டும்.

அதற்கு கவிதை போதாது.

துப்பாக்கி, கத்தி, கோடரி

ஏதாவது ஒன்று அல்லது மூன்றும் உடனே வேண்டும்.

காலமும் சூழலும் இளம் வயதினனான சுதாகரைப் போராளியாக்கிற்று. ஆனால் அவன் போராட்டத்துக்குள் நுழைந்த வேளை போராட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் ஒரு கட்டமைப்பாக, நிழல் அரசாங்கமாகப் பரிமித்திருந்தது. அரசாங்கம் என்பது அதிகாரத்தின் மையம். அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வழக்கமான நடைமுறைகள் சுதந்திரத்தை அவாவி நின்ற சுதாகருக்கு ஒத்து வரவில்லை. அந்த வாழ்வும் அவருக்குச் சலிப்பூட்டியது. அதன் மீதும் கேள்விகளை முன்வைத்தார். இறுதியில் அதிலிருந்து விலகினார்.

கட்டளையிடுதல் உணவை விட அவசியமாயிருந்தது அவர்களுக்கு

தமது கனவுகளால் 

மிகப்பெரிய கோட்டைகளையும்

சாம்ராஜ்ஜியங்களையும்

சூரியனைக் கூடத் தமது காலடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

………………

எல்லோருக்கும் ஆத்திரத்தையும் எரிச்சலையும் அளிக்கக்கூடிய

அவர்களின் குரல்

ஒரு நதியில் கலந்த வி~த்துளியைப் போல

காற்றில் எறிந்து விடப்பட்ட பஞ்சுப் பொதியைப் போல

எங்கும் பரவுகிறது.

மக்கள் தங்கள் கனவுகளை இழந்தார்கள்.

தங்களின் எழில்மிகு நகரங்களின் கூரைகளை இழந்தார்கள்.

வனங்களின் வழியே 

திக்கற்றதாயிற்று அவர்களின் வாழ்வு.

அதிகாரத்தின் குரல் அவர்களைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது

என்று அவர் ஒரு கவிதையில் பாடுகிறார். அரசாங்கம் - புலிகள் என்ற அதிகாரப் பலப் பரீட்சையில் சிக்கித் தவிக்கும் சனங்களின் பாடுகளை அவர் இப்படித்தான் பார்த்தார். இங்கு அவர் அதிகாரம் சார்ந்தே கருத்துரைக்கிறார். அது எங்கிருந்து எவரிடமிருந்து வந்தாலும்.



எஸ்போஸின் கவிதைகள் முழுவதும் மிருகங்கள், பாம்புகள், வி~ ஜந்துகள் வருகின்றன. துர்க்குணமுடைய எவையும், மரணத்தை வருவிக்கக்கூடிய எவையும் அவரது கவிதைகளில் படிமமாக்கப்பட்டுள்ளன. அதிகாரத்தை அவர் அவற்றின் வடிவில் காண்கிறார். அதேவேளை சனங்கள் பறவைகளாகவும், சிறு பூச்சிகளாகவும் படிமப்படுத்தப்படுகிறார்கள். ரஞ்சகுமாரின்  சிறுகதையில் கபரக்கொயா படிமப்படுத்தப்பட்டது போல, சுதாகருடைய கவிதைகளில் அடிக்கடி மிருகங்கள் இழுத்துச் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. வீடு, தெரு, அலுவலகம் எங்கும் அந்தக் காலத்தில் இதுதான் நடந்தது. மரணம் பற்றிய பீதியில் உறைந்த நாட்கள் அவை. எந்த நேரத்திலும் எவ்வாறும் மரணம் நிகழலாம் என்ற நிலை. யாராலும் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்படலாம் என்ற நிலை.சுதாகரை இந்த நிலைமை மிகவும் அலைக்கழித்தது. ஒருமுறை கைது செய்யப்பட்டு, சித்திரவதை அனுபவித்த அவருக்கு மரணம் நிழலாகத் துரத்துவது தெரிந்திருந்தது. எந்த நேரத்திலும் தான் இழுத்துச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, மரணத்தைத் தழுவலாம் என்று அவரது உள்ளுணர்வு சொல்லிக் கொண்டேயிருந்தது. அதனால் அவரது பெரும்பாலான கவிதைகள் அது பற்றியே பேசியுள்ளன. அந்த உள்ளுணர்வு சக மனிதர்கள் பற்றிய பிரக்ஞையோடு பொதுமைப்பட்டதாகவும் இருந்திருக்கலாம்.

என் அன்புக்கினிய தோழர்களே!

என் காதலியிடம் சொல்லுங்கள்

ஆயிரக்கணக்கில் மனிதர்கள் குழுமியிருந்த 

வனாந்தரத்திலிருந்து

ஒரு மிருகம் என்னை இழுத்துச் சென்று விட்டது.

கடைசியாக நான் முத்தமிடவில்லை.

அவளது கண்களின் வழமையாயிருக்கும் 

ஒளியை நான் காணவில்லை.  (சூரியனைக் கவர்ந்து சென்ற மிருகம்)


அழகிய இரவு பற்றிய எனது கவிதைகளில்

எப்போதுமே மிருகங்கள் காவலிருக்கின்றன

மிருகங்கள் பற்றிய அச்சத்தால் 

அழுகிச் சிதைந்தது நிலவு

நேற்றைய கவிதைகளையும் இன்றைய வாழ்க்கையையும்

நான் இழந்தேன்.

………..

துரத்தியடிக்கப்பட்ட ஒரு கவிஞனின் 

எல்லையற்ற விதி பற்றியும்

மிருகங்களுடனான அவனது வாழ்வு பற்றியும்

இன்றைய கவிதையை காற்றுத்தானும் எழுதவில்லை

எனது முழுமையையும் மிருகங்கள் உறிஞ்சிய

கவிதைகளின்

பிரேதநதி இழுத்துச் சென்று விட்டது.

நூறு தடவைகளுக்கு மேல் நிகழ்ந்தது எனது இறப்பு.

எஸ்போஸ் அக்கராயனில் இருந்த போது அவர்களது விடுதிக்கு அருகே தங்கியிருந்த மருத்துவதாதியாகப் பணிபுரிந்த செந்தமிழ்ச்செல்வியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூகத்தின் பெரும்போக்கு நிலையிலிருந்து விலகியதாக   செந்தாவை அவர் விரும்பித் திருமணம் செய்தார். இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

ஆனால் அவர் குடும்பத்தினரோடு வாழ்ந்த காலத்தை விட வெளியில் வாழ்ந்த காலமே அதிகமாகும். கிளிநொச்சியிலும், கொழும்பிலும் அவர் வாழ்ந்தார். கொழும்பில் இதழியல் கல்லூரியில் கல்வி கற்றார். பொருளாதார ரீதியில் மிகவும் நலிவுற்ற நிலையில் அங்கு படிக்கும் காலத்தில் அவர் சந்தித்த பண நெருக்கடியை அவருடைய கடிதம் மற்றும் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இந்தக் காலம் உட்பட பிரிவும் தனிமையும் அவரை  எப்போதும் வாட்டிக் கொண்டேயிருந்தது. அந்த வலிகள் கவிதைகளாயின.

வெறுமனே யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன்.

கருணா அண்ணனுடனும்

அவர் போல் இன்னும் நால்வருடனும்

நடந்து முடிந்து விட்ட திருமணம்,

செந்தாவின் முகம்,

தெருவோரக் கடைகளின் ஈ மொய்க்கும் உணவு

சலிப்பூட்டும் மனிதர்களின் முகங்கள்

அவலங்களின் உரு அமைப்பிலான உறவுகள்

நரிகளோடும் எருமைகளோடும் 

வாழக் கிடைத்து விட்ட நிகழ்காலம்

ஒன்றன்பின் ஒன்றாய் 

எனது ஞாபகங்களையும்

தனித்திருக்கும் கணங்களையும் 

அழித்துவிட முடியுமென்று தோன்றுவதேயில்லை,

என்னை அழித்து விடத் தோன்றுவதைப் போல. (செத்துவிட்ட கவிதைகளின் ஞாபகத்தில் நிற்கும் முதல் வரிகள்)

இது ஒரு மரணவேதனை

எனது மூளையை 

திசைகள் ஒவ்வொன்றையும் வியாபித்திருக்கும்

ஒலிகளும் எண்ணங்களும் சிதைத்து விட்டன.

நான் உணர்கிறேன்

மீண்டும் விதிக்கப்பட்டிருக்கும் 

தனிமையின் கொடூரத்தால்

நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன் (தலைப்பற்றது)

எனினும் இந்தத் தனிமையையும் பிரிவையும் புத்தகங்கள் ஓரளவு போக்கின. புத்தகங்களோடு கழிந்த வாழ்வை அவர் இப்படிப் பாடுகிறார்.

கொஞ்சம் புத்தகங்களோடு தொடங்கியது வாழ்க்கை

புத்தகங்களின் சொற்களில் சோறு இல்லை என்பதே

பிரச்சினையாயிற்று வாழ்க்கை முழுக்க.

……

நான் புத்தகங்களோடு வாழ்கிறேன் என்பதையும்

புத்தகங்களில் தூங்குகிறேன் என்பதையும்

இதயம் சிதையும் துயரின் ஒலியை

புத்தகங்கள் தின்னுகின்றன என்பதனையும்

ஓ கடவுளே! யாரும் அதை நம்பவில்லை.

என்னையும் அனுமதிக்கவில்லை.

புறாக்கள் வாழ்ந்த கூரைகளில்

உதிர்ந்து கிடக்கின்றன வெண்சிறகுகள் (புத்தகங்கள் மீதான எனது வாழ்வு)

எப்போதுமே சுயத்தை அவாவி நின்ற கவிஞன் சுதாகர். 

என்னைப் பேச விடுங்கள்

உங்களின் கூக்குரல்களால் 

எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.

எனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில் 

அமுங்கிச் சிதைகிறது.

வேண்டாம்

நான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன் எப்போதும்.

……..

எனது உடைந்த குரலில் 

நானும் பாட விரும்புகிறேன்

அன்பு நிறைந்த துயரப் பாடல்களை. (சுயம்)

தனது சுயத்தை வலியுறுத்திய, அன்பு நிறைந்த பாடல்களைச் சுதந்திரமாகப் பாட விரும்பிய ஒரு கவிஞனை அநாமதேயிகள் சுட்டுக் கொண்றார்கள். 16.04.2007 அன்று இரவு வவுனியாவில் உள்ள சுதாகரது வீட்டிற்குள் நழைந்த இனந்தெரியாத ஆயததாரிகள் அவரது பிள்ளையின் முன்னே அவரைச் சுட்டுக் கொன்றனர். அதிகாரத்துக்கு எதிரான அவரது குரலை ஆயுதங்கள் மௌனிக்கச் செய்தன.

1994இல் எழுத ஆரம்பித்த சந்திரபோஸ் சுதாகர் மரணத்தைத் தழுவும் கணம் வரை எழுதியும் செயற்பட்டும் வந்துள்ளார். அவரது படைப்புகள் ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், தமிழ் உலகம், இன்னொரு காலடி, மூன்றாவதுமனிதன், ஆதாரம், தடம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். நிலம் என்ற கவிதைக்கான இதழின் ஆசிரியராக இருந்து தனது முயற்சியில் வெளியிட்டார். நிலம் மூன்று இதழ்கள் வெளிவந்தன. லண்டனில் இருந்து வெளியிடப்பட்ட தமிழ்உலகம் இதழுக்கு ஆசிரியராக இருந்து, கொழும்பில் வைத்து அதனைத் தயாரித்து வழங்கியிருந்தார்.

கருணாகரன், ப.தயாளன், சித்தாந்தன் ஆகியோரால் சுதாகருடைய 62 கவிதைகள், 5 சிறுகதைகள், மனைவிக்கு எழுதிய கடிதம், நாட்குறிப்பு வடிவிலான குறிப்புகள், நூல் விமர்சனங்கள், நிலம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கங்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுதாகரால் செய்யப்பட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி, கவிஞர் சோ.பத்மநாதன், உமாஜிப்ரான், கிளிநொச்சி மத்திய கல்லூரி தொடர்பான நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சுதாகர் பற்றிய கட்டுரைகள் மற்றும் பதிவுகளும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  எஸ்போஸ் படைப்புக்கள் என்ற வடலி வெளியீடான இந்நூல் சுதாகரைத் தரிசிக்க வைக்கும் முக்கிய ஆவணமாகும். மேலும் பல விடுபட்டிருக்கலாம் என்றே தொகுப்பாளர்கள் கருதுகிறார்கள்.

சந்திரபோஸ் சுதாகர்  மின்னி மறைந்த பேரொளி. உண்மையைத் தரிசிக்க விளைந்த பேரொளி. பொய்மையில் சுழன்ற அதிகாரத்தின் அரூப கரங்கள் அந்த ஒளியைத் தின்று செமித்தன. ஆயினும் அவர் வரலாற்றில் வாழ்வார்.

இலக்கியவெளி ஜனவரி -ஜுன் 2022







Friday, January 21, 2022

பொ.சண்முகநாதன் படைப்புலகம்

நகைச்சுவைப் படைப்புகளால் மக்களைச் சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தவர் பொ.சண்முகநாதன்
இயல்வாணன்
நகைச்சுவை இலக்கியம் படைத்த முன்னோடிப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப்பட்ட பொ.சண்முகநாதன் அவர்கள் சிறுகதை, குறுநாவல், நகைச்சுவை நாடகம், பத்தி எழுத்து, ஊடகத்துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்கியவராவார்.


பொன்னையா - பவானி தம்பதிகளின் மகனாக சங்குவேலி கிராமத்தில் பிறந்த பொ.சண்முகநாதன் ஆரம்பக் கல்வியை சங்குவேலி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். க.பொ.த சாதாரண தரம் வரை கற்ற இவர் ஆங்கிலத்தில் நல்ல அறிவுடையவராக விளங்கினார். தட்டச்சும் பயின்றிருந்தார். அதனால் மொழிபெயர்ப்பு மற்றும் கடிதங்கள், சத்தியக்கடதாசி முதலியவற்றைத் தயாரிப்பதை பகுதிநேரத் தொழிலாக மேற்கொண்டார். பின்னர் கணனியைக் கையாண்டு இந்தப் பணியைச் செய்தார். திருமணத்தின் பின்னர் கந்தரோடையில் வசித்து வந்தார்.

கலை, இலக்கியத்துறையில் அவர் ஈடுபாடு கொள்ளக் காரணமானவர் அவரது வீட்டிற்கு அருகில் வசித்த சிற்பி சிவசரவணபவன் ஆவார். அவர் கலைச்செல்வி சஞ்சிகையை ஆரம்பித்து நடத்திய போது சண்முகநாதன் அவருக்கு உதவிகரமாகச் செயற்பட்டார். அதில் எழுதவும் ஆரம்பித்தார். கலைச்செல்வி பண்ணைக்கூடாக அடையாளங் காணப்பட்ட இவர் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிய போதிலும், இவரிடம் இருந்த நகைச்சுவை உணர்ச்சி இவரை ஒரு நகைச்சுவை எழுத்தாளராக நிலைநிறுத்தியது.
தினகரன் பத்திரிகையின் மானிப்பாய் செய்தியாளராகக் கடமையாற்றியதுடன் உதயன் பத்திரிகைக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 

இவர் எழுதிய முதலாவது நூல் கொழும்புப் பெண். நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுதியான இந்நூல் கலைச்செல்வி வெளியீடாக 1965 செப்ரெம்பரில் வெளிவந்தது. மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர் ரீ.பாக்கியநாதன் அவர்களின் மதிப்புரையுடன் இந்நூல் வெளிவந்தது. ‘ஈழத்தின் முதலாவது நகைச்சுவைக் கட்டுரைத் தொகுப்பு உங்கள் வசம் இருக்கிறது.அத்தோடு நகைச்சுவை இலக்கியத்தின் எதிர்காலமும் உங்கள் வசமே உள்ளது’ என்று மதிப்புரையில் ரீ.பாக்கியநாதன் குறிப்பிடுகிறார். மு.வரதராசன், நாடோடி முதலானவர்களின் பாராட்டையும் இந்நூல் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்நூலில் உள்ள 16 நகைச்சுவைக் கட்டுரைகள் ஈழநாடு, தினகரன், ராதா, செய்தி, வீரகேசரி, கலைச்செல்வி ஆகிய இதழ்கள், பத்திரிகைகளில் முதலில் வெளிவந்தவையாகும். விலகல் நடத்தையுடைய சமூக மாந்தர்களையும், சமூக நடப்புக்களையும் அங்கதச் சுவையில் விமர்சிக்கும் வகையிலான இந்தக் கட்டுரைகள் வாசகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
இவரது சிறுகதைகளி;ன் தொகுதி வெள்ளரி வண்டி என்ற பெயரில் 1968 ஜனவரியில் வெளிவந்தது. தமயந்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்நூலில் 12 சிறுகதைகள் இடம்பெற்றன. சிற்பி சிவசரவணபவன் அவர்களது மதிப்புரையுடன் இந்நூல் வெளிவந்நது.

“சிக்கலற்ற சம்பவக் கோவையும், தெளிவான கருத்தும், சரளமான மொழிநடையுங் கொண்ட இக்கதைகளுட் பெரும்பாலானவை தம் ‘தூண்டுகோல்’ பணியையும், ‘கடிவாளப்’ பணியையும், ;மத்து’ பணியையும் திருப்திகரமாகச் செய்வதால் வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறும் என்பதில் ஐயமில்லை” என இந்நூலின் மதிப்புரையில் சிற்பி அவர்கள் கூறுவது இவரது கதைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் எனலாம். பல்வேறு சம்பவ விபரிப்புக்கள் கொண்ட காதல் கதை, வெள்ளரி வண்டி, றிச்சேட் கிழவன், வேட்டைப்புலி, கண்ணீர், யதார்த்த எழுத்தாளர், சுண்டங்காயும் சுமைகூலியும், யாருக்காக?, கிரகணம், வலி, கற்புக் கனல், எழுத்தாளன் மனைவி ஆகிய சிறுகதைகள் இந்நூலில் வெளிவந்தன. ஈழநாடு, கலைச்செல்வி, கலைவாணி, விவேகி, சுதந்திரன், வீரகேசரி,புதினம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவை ஏலவே வெளிவந்த கதைகளாகும்.

பொ.சண்முகநாதனின் அடுத்த நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுதி பெண்ணே நீ பெரியவள்தான். தமயந்தி பதிப்பக வெளியீடாக ஆனி, 1971இல் வெளிவந்த இந்நூலில் 12 நகைச்சுவைக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மனிதர்களின் குணவியல்புகளை இயல்பாக, நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் இக்கட்டுரைகள் சமூகத்தின் விலகல் நடத்தைக் கோலங்களை விபரிப்பனவாக எழுதப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்ற குடும்பாளுமன்றம்  நாடகப் பாணியில் எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘சண்முகநாதனின் எழுத்துநடை வாசிப்போருக்குக் களைப்பை உண்டாக்காது, படிப்போரைச் சோர்வடையச் செய்யாது ஆற்றொழுக்காக அமைந்துள்ளது. நகைச்சுவை வளர வேண்டிய கலை. சண்முகநாதன் போன்றோரால்தான் அது வளரவும் முடியும்’ என்று இந்நூலுக்கு வழங்கிய மதிப்புரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிட்டமை முக்கியமானது.
‘இடுக்கண் வருங்கால் நகுவதற்கான நல்ல படைப்புகள் பொ.சண்முகநாதனுடையவை என்று இந்நூலின் பதிப்புரையில் புத்தொளி ந.சிவபாதம் சிலாகித்துக் கூறியுள்ளார்.
இவரது நாடக நூலான இதோ ஒரு நாடகம் 1973 நவம்பரில் தமயந்தி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. பொ.சண்முகநாதனது இலக்கிய நண்பரான இரா.பாலச்சந்திரன் ‘நீர் ஏன் நகைச்சுவை நாடகம் எழுதக்கூடாது?’ என்று தூண்டியதன் விளைவாக இந்நாடகம் எழுதப்பட்டது. இரண்டு களங்கள் கொண்ட இந்நாடகத்தில் மாலினி என்ற ஒரேயொரு பெண் பாத்திரமே உள்ளடங்கும் வகையில் 9 பாத்திரங்கள் நடிக்கக்கூடிய வகையல் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகம் ஆறு காட்சிகள் கொண்டதாக ஆக்கப்பட்டது. ஒரு நாடகத்தை உருவாக்குவதை நகைச்சுவை உணர்வோடு இந்த நாடகம் வெளிப்படுத்துகிறது.

உதயன் பத்திரிகையின் சஞ்சீவி வாரமலரில்  இவர் சேறும் தண்ணீரும் என்ற குறுநாவலை எழுதியுள்ளார். எனினும் அது நூலுருப் பெறவில்லை.
உதயன் பத்திரிகை ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சண் அங்கிள் என்ற பெயரில் உதயன் பத்திரிகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒரு பத்தியினை எழுதினார். நினைக்க சிரிக்க சிந்திக்க என்ற தலைப்பில் அமைந்த இந்தப் பத்தி எழுத்துக்கு 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்தாளருக்கான B.A.Siriwardana coloumnist of the year என்ற இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் உயரிய விருது கிடைத்தது.
இந்தக் கட்டுரைகள் ‘நினைக்க சிரிக்க சிந்திக்க’ என்ற பெயரில் இந்தியாவின் மணிமேகலை பிரசுரத்தால் 2005ஆம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது. நகைச்சுவை ததும்பும் 60 கட்டுரைகள் இந்நுலில் இடம்பெற்றுள்ளன.

‘பல வருடங்களுக்கு முன்னர் படித்த, பார்த்த, கேள்விப்பட்ட விடயங்கள், விவகாரங்களை அச்சொட்டாக மீள நினைவுக்குக் கொண்டு வரவல்ல அபார ஞாபகசக்தி இன்றியமையாதது. இவற்றுடன் சமகால ஆட்டோட்டங்களை அவதானித்துக் கருத்துச் சொல்லும் தகுதியும் தேவை.இவை எல்லாவற்றுக்கும் உள்ளும் புறமுமாக நகைச்சுவை கலந்து முலாமிட்டு வாசகனைச் சிரிக்க வைக்கும் வல்லமை சண் அங்கிளுக்கு கைவந்த கலை. சமூகத்திலும், அதன் நடவடிக்கைகளிலும் உள்ள குறைபாடுகளை நாசூக்காக நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் திறமையை அவரது பல பத்திகளில் காணலாம் . 
எப்போதோ நிகழ்ந்ததை நேற்றைய சம்பவம் போலவும், நேற்றைய நிகழ்வை பழையது போலவும் புடம் போடுகின்ற எழுத்தாற்றல் பொண்முகநாதனுக்கு கைவரப்பெற்றது. சண் அங்கிளின் எழுத்து தங்குதடையின்றி, தளம்பல் குழம்பல் இன்றி, ஆற்றுநீர் போல ஓடுவது. அதில் ஆழமும் தெளிவும் செறிந்திருக்கும்’ என்று இந்நூலுக்கான வாழ்த்துரையில் உதயன் சஞ்சீவி பத்திரிகைகளின் ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் சண் அங்கிளைச் சிலாகித்துக் கூறியுள்ளார்.

‘ஆழமான செய்திகளை இலகுநடையில் வாசகருடன் பேசுவது போன்று, நகைச்சுவையையும் கலந்து ஆசிரியர் பொ.சண்முகநாதன் எழுதக்கூடியவர் என்பது இத்தொகுப்பு மூலம் நிரூபணமாகிறது’ என்று விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

உதயனில் எழுதிய பத்திகளின் அடுத்த தொகுப்பான ‘சிரிப்போம் சிந்திப்போம்’ 2006இல் மணிமேகலை பிரசுர வெளியீடாக வெளிவந்தது. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் 49 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிற்பி சிவசரவணபவன் அவர்களது அணிந்துரை, ம.வ.கானமயில்நாதன் அவர்களது வாழ்த்துரையுடன் இந்நூல் வெளிவந்தது. 
‘பல்வேறு காரணங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் இம்மண்ணில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் யாதுஞ் சுவடு படாமல் யாழ்ப்பாணத்தை அடிக்கடி தரிசிப்பதற்கு இந்நூல் பயன்படும்’ என சிற்பி அவர்கள் இந்நூலை விதந்துரைத்துள்ளார். 

‘நகைச்சுவைகளை இலாவகமாகவும், பூடகமாகவும் தந்த சண் அங்கிளின் பத்திகள் எங்கள் மண்ணினதும், மக்களதும் வாழ்வாதாரங்களையும், பண்பாதாரங்களையும் உள்நின்று சொல்லும் பெற்றியுடையவை. அத்தோடு அவை பற்றித் தெரியாத இளம் சந்ததியினருக்கு அறிமுகம் செய்யும் ஆவணங்களாகவும் திகழ்கின்றன’ என்று ம.வ.கானமயில்நாதன் அவர்கள் இந்நூலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறார்.

நகைச்சுவைக் கட்டுரைகளின் இன்னொரு தொகுதி ‘நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள்’ என்ற தலைப்பில் 2007இல் மணிமேகலை பிரசுரமாக வெளியிடப்பட்டது. உதயன் பத்திரிகை ஆசிரியர் ம.வ.காணமயில்நாதன் அவர்களதும், புலம்பெயர் வாசகர்களதும் வாழத்துக்கள், செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களது அறிமுகவுரை என்பவற்றுடன் இந்நூல் வெளிவந்தது.

‘கற்பனைக்கு அப்பால் நிதர்சனமான விடயங்களை நகைச்சுவையோடு எடுத்துரைக்கும் ஆற்றல் இவரது தனிச் சிறப்பு எனலாம். பழமையும் புதுமையும் கலந்த பாணியில் கருத்தோடு கூடிய நகைச்சுவைச் செய்திகளை அழகு தமிழில் தருவதில் இவர் வல்லவர். இவரால் படைக்கப்பட்ட நூல்கள் தமிழுக்கு அழகு செய்துள்ளன’ என்று ஆறு.திருமுருகன் அவர்கள் அறிமுகவுரையில் சண் அங்கிளைப் பாராட்டியுள்ளார். இந்நூலிலே நகைச்சுவை இலக்கியத்தைப் படைத்த முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய 7 கட்டுரைகளும், 15 நகைச்சுவைக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பொ.சண்முகநாதன் அவர்களது கலைத்துறைச் சேவையினைப் பாராட்டி வலிகாமம் தெற்கு கலாசார பேரவை ஞானஏந்தல் விருது வழங்கிக் கௌரவித்தது. அத்துடன் இலங்கை அரசின் கலாசாரத் திணைக்களத்தின் கலாபூ~ணம் விருது 2008இல் வழங்கப்பட்டது.

ஒரு நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்டாலும் சமூகப் பார்வையுடன் கூடிய எழுத்துக்களைத் தந்த ஒருவராகவே அவர் வரலாற்றில் நிலைத்திருப்பார். அவரது எழுத்துக்கள் வாசக மனங்களில் நிறைந்திருக்கும் வரையும் அவர் வாழ்வார்.





சாந்தனின் சித்தன் சரிதம் நூல் அறிமுகம் இயல்வாணன் உரை

எழுத்தாளர் இயல்வாணன் |எழுத்தாணி பகுதி - 04 | Ezulathani | Capitaltv Sril...