Monday, October 23, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 21


 முன்றில் - 21

இயல்வாணன்

தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீன், பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கை ஆழியானின் வாடைக்காற்று ஆகிய மூன்று நாவல்களையும் விமர்சகர்கள் ஒப்பிட்டுப் பேசுவர். பகைப்புலம், கதைமாந்தர் வேறாயினும் வாசிக்கும் வாசகனுக்கு இம்மூன்று நாவல்களும் ஒத்த அனுபவத்தைத் தருவதாக அமைந்திருந்தன. நிலக்கிளி நாவலை எழுதியதால் நிலக்கிளி என்ற அடைமொழியோடு அண்ணாமலை பாலமனோகரன் அடையாளப்படுத்தப்படுமளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது. பாலமனோகரன் ஒரு நாவலாசிரியராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,ஓவியராக பல தளங்களில் பங்காற்றியுள்ளார்.


இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 07-07-1942இல் பிறந்தார். இவரது தந்தையார் சிங்கப்பூர் பென்சனியர். அத்துடன் கிராம விதானையாராகவும், உள்ளுராட்சிமன்றத் தலைவராகவும் இருந்தவர். தாயார் தண்ணீரூற்று சைவப் பாடசாலையின் முதல் பெண் ஆசிரியராக இருந்தவர்.


பாலமனோகரன் தனது ஆரம்பக் கல்வியை தரம் 2 வரை தண்ணீரூற்று சைவப் பாடசாலையிலும், தரம் 3முதல் 5 வரை ஆங்கில மொழி மூலம் உடுவில் மகளிர் கல்லூரியில் விடுதியில் தங்கியும் பெற்றார். இடைநிலைக் கல்வியை ஆங்கில மொழி மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பெற்றார். எனினும் 15 வயதில் அங்கிருந்து இடம்மாறி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சிரே~;ட தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றினார்.


1962இல் ஆசிரிய நியமனம் கிடைத்து ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பணியினை மேற்கொண்டார். தொடர்ந்து பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில பாடத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று, பயிற்றப்பட்ட ஆசிரியராக 1967இல் மூதூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நியமனம் பெற்றார். தொடர்ந்து முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் கற்பித்தார். 1984இல் டென்மார்க்கிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கேயே வசித்து வருகிறார். டென்மார்க்கிலும் இவர் கட்டிடத் தெரிநுட்பவியலாளர் படிப்பை 3 வருடங்கள் மேற்கொண்டு நிறைவு செய்திருந்தார்.


தண்ணீரூற்றில் இவரது வீட்டில் ஆனந்தவிகடன், கல்கி ஆகிய தமிழக சஞ்சிகைகளை வாங்குவார்கள். மாணவப் பருவத்தில் வீட்டிற்கு வரும் வேளை அவற்றைப் படிப்பார். அத்துடன் 10 வயதில் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்தைப் படித்து அதனால் நூல் வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது வீட்டில் பல ஆசிரியர்கள் வாடகைக்கு குடியிருந்தனர். முல்லைமணி சுப்பிரமணியம், அப்பச்சி மகாலிங்கம், நா.சுப்பிரமணிய ஐயர் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது வீட்டில் இலக்கிய விவாதங்களை நடத்துவதை இவர் பார்த்து வளர்ந்துள்ளார்.


மூதூரில் இவர் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த ஆசிரிய நண்பனொருவர் சிறுகதையொன்று எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்காக எழுதிய சிறுகதையை மஹ்ரூப் என்ற மாணவனிடம் கொடுத்து அழகான கையெழுத்தில் எழுத வைத்தார். அதைப் படித்த மாணவன் வ.அ.இராசரத்தினம் என்ற எழுத்தாளர் பற்றிக் கூறி அவரிடம் இந்தச் சிறுகதையைக் காண்பிக்கும் விருப்பத்தை வெளியிட்டார். வ.அ.இராசரத்தினம் இவர்களை வரவேற்று கதை தொடர்பில் சில திருத்தங்களையும் முன்வைத்தார். அவர் மூலமாக சிந்தாமணி பத்திரிகையில் இவரது முதலாவது சிறுகதையான ‘மலர்கள் நடப்பதில்லை’ இளவகன் என்ற புனைபெயரில் வெளிவந்தது. இளவழகன் என்ற புனைபெயரிலேயே  ஆரம்பத்தில் சிறுகதைகள் வெளிவந்தன. தொடர்ந்து சிந்தாமணியின் ஆசிரியர் இராஜ அரியரத்தினத்துடனான தொடர்பினால் பல சிறுகதைகளை அப்பத்திரிகையில் எழுதினார். அத்துடன் வீரகேசரி, தினகரன், Weekend ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பப்ட்டது.


இளமைக்காலத்தில் சில வருடங்கள் சொந்த ஊரான தண்ணீரூற்றில் தங்கியிருந்த காலத்தில் தண்ணிமுறிப்பு காட்டிற்கு வேட்டைக்காரர்களுடன் சேர்ந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறார். அதேவேளை தகழி சிவசங்கரபிள்ளையின் செம்மீனை வாசித்த அருட்டுணர்வும் சேர்ந்து கொள்ள ஒரு நாவலை உருவாக்கினார். தண்ணீரூற்றில் வாழ்ந்த ஒருவரையே கோணாமலை என்ற பாத்திரமாக்கி உருவானதே நிலக்கிளி நாவலாகும். இது 1973இல் வீரகேசரி பிரசுரமாக இந்நாவல் வெளிவந்தது. இந்த நாவலின் பெயரை மாற்ற வீரகேசரி பிரசுரத்தினர் விரும்பிய போதும் நூலாசிரியர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நாவலுக்கு அந்த வருடத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இதன் இரண்டாம் பதிப்பு மல்லிகைப்பந்தல் வெளியீடாக 2002இல் வெளிவந்தது.




மித்திரனில் வண்ணக் கனவுகள் என்ற நாவலைத் தொடராக எழுதியுள்ளார். தொடர்ந்து வீரகேசரி பிரசுரமாக குமாரபுரம் (1974), கனவுகள் கலைந்தபோது (1977) ஆகிய நாவல்கள் வெளிவந்தன. இவரது பதிப்பகமான பனம்பூ வெளியீடாக தாய்வழித் தாகங்கள் (1987) நாவல் வெளிவந்தது. அப்பால் தமிழ் இணையதளத்தில் தொடராக இவரெழுதிய வட்டம்பூ நாவல் நந்தாவதி என்ற பெயரில் நூலாக தமி;நாட்டில் வெளிவந்தது.  நந்தாவதியை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Bleeding Hearts (2009) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.


இவரெழுதிய 11 சிறுகதைகள் தீபதோரணம் (1977) தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய 15 சிறுகதைகள் நாவல் மரம் என்ற சிறுகதைத் தொகுதியாக டெனி~; மொழியில் வெளியிடப்பட்டது.


முருகர் குணசிங்கம் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல்கள் இரண்டை இவர் தமிழில் ‘இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு’, ‘இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் அதன் ஆரம்பத் தோற்றம் பற்றியதோர் ஆய்வு’ என்ற தலைப்புகளில் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அத்துடன் டெனி~; தமிழ் அகராதியையும் இவர் தயாரித்து பிரபல நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார்.


ஓவியராகவும் இவர் விளங்குகிறார். இவரது ஓவியங்களை டென்மர்க்கில் பலரும் வாங்கி தமது வீடுகளில் தொங்கவிட்டுள்ளனர். அப்பால் தமிழ் இணையதளம் ஓவிய கூடம் என்ற பகுதியை உருவாக்கி, அதில் இவரது ஓவியங்களை வெளியிட்டு இவரைக் கௌரவித்திருந்தது.

பாலமனோகரனின் கதைகள் முல்லை மண்ணின் இயல்பான வாழ்வையும், இயற்கையின் அழகையும் பேசுவன. வன்னிப் பிரதேசத்தின் எளிமையும் இனிமையும் இவரது கதைகளின் சாரமாகும். மறுபுறத்தில் துன்பங்களை எதிர்கொண்டு துணிந்து வாழும் மக்களின் பண்பையும் வெளிப்படுத்துவன.


81 வயதிலும் டென்மார்க்கில் தளராத பணியாற்றி வரும் பாலமனோகரன் எமக்கு நல்ல இலக்கிய முதுசங்களைத் தந்துள்ளார். மேலும் புதிய அனுபவ வெளியை  புதிய படைப்புகள் மூலம் தர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

Saturday, October 21, 2023

புலர்காலையின் வலி மதிப்பீடு - தாட்சாயணி

 

/

ஒளியுறிஞ்சப்பட்ட புலர்காலைகளின் நிலத்திலிருந்து : தாட்சாயணி

ஒளியின் முதல் துளி அரும்பி வழியும் புலர்காலைகளின் மீது வலி சொட்டுச் சொட்டாய்ப் படர்ந்திருந்த நிலம் ஈழம். ஒவ்வொரு காலையும் விடியும் போதே, இருண்ட துயரங்களால் நிறைந்து எதிர்கொண்டு நடந்த அக்காலங்களை நினைவு கொள்கையில் கூர் கொள்கிறது இயல்வாணனின் புலர்காலையின் வலி.தொண்ணுறுகளின் நடுக்கூறிலிருந்து இரண்டாயிரங்களின் பிற்பகுதி வரை தன் மனதை அசைத்த வலிகளின் நரம்புகளைக் கீறியெடுத்து வாசகர் கரங்களில் வைக்கிறார் இயல்வாணன். சொற்களின் பெருக்கு இயல்பாக அவரது பேனாவிலிருந்து இறங்கி ஓட ஆரம்பிக்கிறது.சில கணங்களில் அது நிற்கிறது. தடைப்புறுகிறது. அக்கணங்களில் பின் தொடரும் நாமும் நிற்கிறோம். வலி ஒரு ஊசியாக நெஞ்சில் தைத்துச் செல்கிறது. ஒரு புலர்காலை விடியும் தருணத்திலேயே வலியைத் தருவது எவ்வாறெனக் காட்டுவதோடு இயல்வாணனின் பணி முடிந்து விடுகிறது. மீதமிருப்பது வாசகனின் கடமையல்லவா?

கிராமங்கள் ஒவ்வோர் மனதின் ஆழ்மனத்தோடும் ஒன்றியிருக்கின்றன. கிராமங்கள் என்றால் அந்த மண், அதில் வாழும் பறவைகள், விலங்குகள் வேறு உயிரிகள் என்பவற்றோடு அந்த மண்ணுடன் இயைந்த செயற்பாடுகள், அங்கிருக்கும் வாழ்க்கைக்கோலங்கள் எல்லாமும் உள்ளடங்கியவை தானே. இங்கும் கதைசொல்லியின் மனதில் உயிர்த்திருக்கும் விடயங்கள் நமக்கு நெருக்கமானவை.உற்சாக ஊற்றாக இருக்கின்ற ஊருக்குள் திடீரென்று ஊடுருவும் மாற்றங்களுள் நவீன விவசாயமும், யுத்தமும் முக்கியமானவை.அதுவரைக்கும் அங்கிருந்த விவசாயிக்கு நேசமான பறவைகள் உரப்பாவனையால் செத்தொழிந்து போவது போல, போர் அங்குள்ள மனிதர்களையும் விழுங்கி விடுகிறது, குறிப்பாக செல்வியை. குஞ்சரப்பா போன்றவர்கள் இயற்கை விவசாயத்தின் நம்மாழ்வாராக ஊருக்குள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன விவசாயத்திற்கு ஆசைப்படுவோருக்கு குஞ்சரப்பா ஒரு மாரித்தவளை மாதிரி. அப்படியே கத்திக் கத்தி மாரித் தவளைக்கு வருவது போலும் இறப்பே அவருக்கும் வாய்த்து விடுகிறது.

கதைசொல்லியின் பார்வையில் அடிக்கடி தட்டுப்படும் செண்பகம் குரலாலும் தோற்றத்தாலும் அழகற்றது. அதன் மண்ணிறச் சிறகுகளும், சோடாச் சிவப்புநிறக் கண்மணிகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.செண்பகம் அழகற்ற பறவையல்ல. அதன் அசைவு ரசிக்கத் தக்கதல்லதென்றும், அதன் குரல் வசீகரமற்றதாகவும் கதைசொல்லியால் அது சுட்டப்பட்டாலும் அதை நோக்கிய அவனது ஈர்ப்பு ஒரு போதும் குறைவற்றது என்பதையே அவன் செண்பகமே, செண்பகமே பாடலைப் பாடும் போது வாசகனால் உய்த்துணர முடிகிறது. நகரமயமாக்கல் அருக வைத்த பறவையினங்களில் செண்பகமும் முக்கியமானது.இப்போது அபாயகரமாக அழிந்து வருவதாக அதனையும் குறிப்பிடுகிறார்கள். தமிழீழம் தேசியப்பறவையாக அங்கீகரித்திருந்த செண்பகத்தின் அழிவின் தொடக்க காலத்தை உணர்ந்தோ அல்லவோ தன் கதையில் அருமையான சூழலியல் குறியீடாக்கியிருக்கிறார் இயல்வாணன். வசந்த காலத்தில் முருங்கை பூத்துக் காய்க்கும் போது, சாம்பல் படிவுகளாய் அடியில் மொய்த்துக் கிடக்கும் மயிர்க் கொட்டிகள், அவை உடலில் பட்டால் ஏற்படும் சுணை, ஊர்ப்புறங்களில் காவோலையால் தீ மூட்டி அவற்றை அழித்தல், செண்பகங்கள் வெகு எளிதாக அம்மயிர்க் கொட்டிகளைப் பிடித்துத் தின்று அழித்து விடும் உணவுச் சங்கிலியின் செயன்முறை எனப் புலர்காலையின் பனிப்பொழுதில் மங்கித் தெரியும் காட்சிகள் வாசகனின் நினைவுகளைக் கிளறக் கூடியவை.

அனுபவஸ்தர்களான கிராமத்து மனிதர்களிடம் எந்தக் காலத்திலும் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. யுத்தகாலத்தில் ரயில் ஓடாத தண்டவாளத்திற்குப் பக்கத்து மதகில் சாவதானமாகக் கத்தி தீட்டிக் கொண்டிருக்கும் தம்பரப்பா இரண்டாம் உலக யுத்த அனுபவங்களை நினைவு கூருவது ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கும் எங்கள் பாட்டன், பாட்டிகள் எமக்குச் சொன்ன அனுபவங்களுக்கு நிகரானது. கதை கேட்கும் அனைவரையும் அக்கால நினைவுகள் தீண்டுகின்றன.வெள்ளையர்,யப்பானியர், இந்தியர், சிங்களவர் எனத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட யுத்தத்தின் விளைவுகள் ஒவ்வொரு காலத்திலும் கரும்புகைக் குண்டுகளாய் கிராமங்களில் ஊடுருவியிருக்கின்றன. யப்பான்காரன் கொழும்புத் துறைமுகத்தில், திருமலைத் துறைமுகத்தில் போட்ட குண்டுகளின் கரும்புகை இப்போதைய நினைவில் மெல்லிய புகைப்படலமாகக் கிளம்புகிறது. உயிர்களின் அவலமும், வெட்டப்பட்ட பானா வடிவப் பதுங்குகுழிகளும் எக்காலத்தும் ஒன்று தானே. வெள்ளைக்காரர் நம்மவரின் பட்டையிறைப்பினை வேடிக்கை பார்த்து இளநீர் வாங்கிப் பருகிப் பண்டமாற்றாக சவர்க்காரம், சிகரெட்டைக் கொடுத்த நினைவுகளை சொல்லும் தம்பரப்பா மூலம் இன்னல் காலத்து நகைச்சுவைகளும் மனம் நனையக் கிடைக்கின்றன.

யாழ்ப்பாணத்துச் சீதன மனப்பாங்கின் வழி வந்த ஆண், சீதனத்திற்கும் மேலதிகமாகத் திருமணச் செலவையும் பெண் வீட்டாரே ஏற்க வேண்டும் எனும் ஆணாதிக்க மனோபாவத்தின் விளைவாகச் சீரழியும் குடும்பத்தையும் இயல்வாணன் வெளிச்சத்திற்கு கொண்டு வர மறுக்கவில்லை. பனை பூக்கும் காலத்திற்குப் பின்பதான காலங்களில் குடித்து விட்டுத் தெரு வழியே புலம்பி வரும் பெரும்பாலான அடித் தட்டு வர்க்க ஆண்களின் அலப்பறைகளும், அதன் விளைவாகக் குன்றி விடும் மனைவி குழந்தைகளுமென விரியும் இக்களம் வேலிகளில் கறையான்களென முளைத்து மறையும் கண்களையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை. எவ்வளவு தூஷண வார்த்தைகள் தன் மீது வந்து விழுந்தாலும்,கணவனை ஊரார் கண்முன் அவமானப்பட விடாமல் உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கும் இருபதாண்டுக்கு முற்பட்ட ஒரு பெண், அவளது மனதில் தாலி குறித்து இருக்கும் புனித பிம்பம், அதற்குப் பிந்திய தலைமுறையிடம் கோபத்தை ஏற்படுத்தினாலும் இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும் அவள், அதனாலேயே மனம் நொந்து நோய்க்குத் தன்னைப் பலி கொடுக்க முன் வந்து விடுகிறாள். இத்தனை பிள்ளைகள் பிறந்த பின்பும் திருமணச் செலவுகளைக் கட்டி முடிக்காததால் தாய் தன்னிடம் கடன்காரியாக இருப்பதை நினைவுறுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு குடிகாரத் தந்தை தன் பிள்ளைகளுக்கு இறுதியில் கொண்டு சேர்க்கப் போவது என்ன? அவர் தான் குடிகாரர். அவர் இழந்த நினைவைச் சமப்படுத்திப்பிள்ளைகளிடத்தே நல்ல உணர்வுகளை விதைக்கச் சம்மதிக்கிறாளா அம்மா? அந்தக்கால அம்மாவின் இந்தப் பண்பு அவளுடைய மகளிடம் கூடச் செல்வாக்குச் செலுத்தாது என்பதை ‘அக்கா’ பாத்திரத்தின் உரையாடலினூடு அழுத்திச் சொல்கிறார் இயல்வாணன்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை என்பது,பிள்ளைகளின் திறனை வளர்ப்பதற்குப் பதிலாகப் பெற்றோர்களதும், ஆசிரியர்களதும், பாடசாலைச் சமூகத்தினதும் கௌரவப் பரீட்சையாக அமைவதை, ஈழச் சூழலில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அவதானிக்க முடியும். அதன் விளைவாகப் பிள்ளைகள் வதைக்கப்படுவதையும், உள ஆற்றல்படுத்தலுக்கான தேவைக்குட்படுத்தப்படுவதையும் காண்கிறோம். பந்தயக் குதிரைகள் என இயல்வாணன் சரியாகவே அடையாளப்படுத்தியிருக்கிறார். கல்விப் பின்புலத்தில் ஒரு ஆசிரியராக, அதிகாரியாகக் கடமையாற்றும் அவரால் ஒரு பிள்ளையைச் சரியாகவே அவதானிக்க முடிவதுடன் கதையில் அப்பிள்ளை அங்குள்ள போட்டிச் சூழலைக் கடந்து செல்லக் கூடிய நிலையில், தான் வாசித்த நல்ல புத்தகங்களின் வழிகாட்டலில் நிமிர்ந்து நிற்கிறான் என்பதைப் பூடகமாக உணர முடிகிறது.

சின்னஞ்சிறு குடில்கள் முளைத்த அகதிமுகாம்கள் யுத்தகாலத்தில் எங்கும் தானிருந்தன.அவற்றை நிர்வகித்த கரங்கள் மட்டும் ஒரு தரம் போராட்டக்காரரிடமும், மறு தடவை இராணுவத்திடமுமென இடம் மாறின. நிர்வகித்த கரங்கள் யாருடையவை என்பதை மிக இலகுவாகவே சொல்லி விடலாம். அதற்கேற்றபடி இருக்கும் அங்கு தங்கி வாழ்பவர்களது ஊசலாட்டம். சின்னஞ்சிறிசுகள் ஆயுதங்களைத் தொட்டுப் பார்ப்பதும், போராளிகள் தோள்களில் வாஞ்சையாகத் தொற்றிக் கொள்வதும் காலகாலமாக ஒவ்வொரு போராளியின் நினைவிலும் ஊறிக்கிடப்பது போலவே, அந்தச் சின்னஞ் சிறுவர் நினைவுகளிலும் படர்ந்திருக்கிறது. குலப்பெருமையும், மீண்டு தப்புதலுமெனப் புலப்பெயர்வில் ஒழிந்து கொண்ட சமூகத்தைத் துறந்து சனத்துக்குப் போராடுபவனது தாகத்திற்குத் தண்ணீர் தரவும், ஊரில் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களால் தானே போராட்டம் வேர் ஊன்றி வளர்ந்தது.ஒரு காலத்தைய நினைவுகளின் ஈரம் கண்களை மூடித் திளைக்க வைக்கிறது.

உச்சத்தில் இருக்கும் ஒரு சந்ததியின் வாழ்வு எப்போதுமே உச்சத்தில் இருப்பதில்லை. அதன் கொடி வழி வரும் அடுத்த தலைமுறை வீழ்ச்சியைச் சந்திக்காமல் போகாது. இது வரலாறு நமக்குத் தரும் பாடம். பட்டொளி வீசிப் பிரகாசித்த எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் சரிந்து மண்ணோடு மண்ணாகின. சாம்ராஜ்யங்கள் அப்படியிருக்க சாமானிய மனிதனின் சரித்திரம் மட்டும் இக்கணக்கில் தப்பி விடுமா? பூதப்பிள்ளை உடையார் குடும்பத்தின் குலப் பெருமை அவரது அதிகாரத்தின் வழி நகர்ந்து, உடுப்பிட்டிக்குச் சென்று வந்த போது பிடித்த கைரகப் பேயினால் அவர் இரத்தம் கக்கி இறக்கின்ற போது தன் அந்திமத்தை நெருங்குகின்றது. அவர் இறந்தது பஞ்சமியில். பஞ்சமியில் இறப்பவர்கள் கூட இன்னும் ஐந்து பேரைக் கொண்டு செல்வார்கள் என்பது ஊர் வழக்கு. உடையாரின் மகளுக்கு வாய்த்தவன் மலேஷியா போன பிறகு, உடையாரம்மாவும் இறக்க, இரு தூய மரபும் துய்ய வந்த மகள் செல்லாச்சிப்பிள்ளை தனித்துப் போகிறாள். இருந்தாலும் உடையார் பரம்பரையல்லவா? பரம்பரைக் கௌரவமும், ஆளுகையும் தந்த துணிச்சல் தனித்து வாழ்தலில் அவளுக்கு அச்சம் தரவில்லை. எனினும் கணவன் திரும்பி வரவேண்டும் எனும் பெண்மைக்குரிய இயல்பான இறைநேர்த்தி, யாப்பன்காரனை யுத்தத்தை மலேஷியா மீது திருப்ப வைக்க, அப்புத்துரையை ஊர் நோக்கித் திருப்பி அனுப்புகிறது. தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும் ஊழ் வாய்த்ததில் அவனும் இறக்கிறான். இறுதி அரசியாக அந்த வீட்டைத் தனியே ஆண்ட செல்லாச்சியும் ஒரு நாள் பாயில் இறந்து கிடந்த பிறகு, அந்த வீடு போராளிகளிடம் சென்று அதற்கும் பிறகு இராணுவத்திடம் கை மாறி, கதைசொல்லியின் கண் முன் மண் மேடாகக் கிடக்கிறது.புலர்காலையின் வலியின் அழியாத தடம் அந்த வீடிருந்த மண்மேடு.

யுத்தகாலங்கள் வயதுகளைத் தின்ற பெருவலி ஈழத்து இளைஞர்களின் மனதில் ஒரு காலமும் அற்றுப் போகாது. அவ்வாறு நாள்கள் முழுவதையும் தின்ற ஒரு காலத்தின் பதிவு முடவன் நடை. விடிகாலையில் வீட்டை விட்டுப் புறப்படும் கதைசொல்லி இடைவெளியில் பதினோரு சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.இங்கு சொல்லப்பட்டவற்றை விட சொல்லப்படாதவை அதிகம். அந்தப் பதினோரு காவல் அரண்களில் இறங்கி, ஏறி நடந்து வாகனத்தில் இடத்தைப் பறி கொடுத்து பயணிக்கிற கடினத்தைத் தவிர அந்தப் பயணத்திற்கிடைப்பட்ட நேரத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காத்திருக்க வேண்டும் என்றும், ஒரு போராளி பிடிபடவோ, ஒரு குண்டு வீச்சு நிகழாமலோ இருக்க வேண்டும் என்றும் மனம் பிரார்த்திப்பதென்பது ஒவ்வொரு பயணியினதும் முடவன் நடை மீதான அங்கலாய்ப்புத் தான். முடவன் நடைக்கு, காவலரண்கள் தடை போட்ட காலங்கள் போலவே ‘கொன்வே’ எனும் வாகனத் தொடரணி பெருஞ்சாலைகளை மறித்த காலங்களும் இருந்தன.பலாலி வீதி, கண்டி வீதி போன்ற வீதிகளூடு பயணிப்போர், இரவு ஒன்பது, பத்து மணிக்குத் தம் குழந்தைகள் உறங்கிய பின்னரே வீடு போய்ச் சேர்வர் என்பதையும் இங்கு நினைவூட்டல் தகும்.
அன்றாடங்களின் பிரச்சினை எளிய குடும்பமொன்றை எவ்வாறு தாக்கும் என அறிந்துள்ள நமக்கு யுத்தம் பலியெடுத்த குடும்பத்தில் ஏற்பட்ட தாக்கத்தைப் பேசும் போது இதயம் கூசாதா…? அத்தகைய துயரைப் பேசுகிறது ‘வெளிக்கும்’ எனும் கதை. குடும்பத்தலைவன் அற்றுப் போன குடும்பத்தில் ஒற்றைத்தாய் ஒவ்வொரு வருடமும் பூவாணங்களும் , வெடிகளும் கொடுத்துத் தன் குழந்தைகளின் புதிய வருடத்திற்கு ஒளியேற்றுகிறாள். யுத்தம் ஏற்படுத்தும் பொருளாதாரத்தடை, அதிகரித்த விலையேற்றம் ஒரு கட்டத்தில் கதைசொல்லிக்குப் புது வருடமே இல்லை என்றாக்குகிறது. இழுத்து, இழுத்துத் தேய்ந்த பதினெட்டு வருடங்களையும் சலித்துக் கொள்ளும் கதைசொல்லி தான் உயிர்த்திருப்பதன் அர்த்தம் அடுத்த புதுவருடத்திலாவது பொருள் கொள்ள வேண்டுமென நினைக்கிறான். புலர்காலையின் பனியை மீறி விழும் முதல் துளியின் ஜொலிப்பு இது.
போர் துரத்தத் துரத்த இடம் பெயர்ந்த ஒரு காலகட்ட வாழ்வு, பெயர்க்கப்பட்ட தண்டவாளங்கள் மீது கூடப் புதிய குடிசைகளைக் கட்டியெழுப்பியது. இந்தியப்படை நாடு மீண்ட காலகட்டத்திலேயே, இந்திய ஜவான்களை ஏற்றிக் கொண்டு சென்ற புகையிரதங்களைச் சிறுமியராயிருந்த நண்பிகளோடு வேடிக்கை பார்த்த நினைவு என்னிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு வந்த இளம் சந்ததி யாழ்ப்பாணத்தில் ரயிலைக் கண்டே இருக்கவில்லை. தண்டவாள சிலிப்பர்கட்டைகள் பிடுங்கப்பட்டுப் பதுங்குகுழிகளுக்கு மேல் அரண்களாக்கப்பட்டன.யாழ் இடப்பெயர்வின் போது வரிசை, வரிசையாகத் தண்டவாளப் பாதைகளில் குடிசைகள் எழுந்தன. மாவிட்டபுரத்தில் தன் சொந்த வீட்டில் இருந்த போது தினமும் புகையிரதக் கூவலில் கண் விழிக்கும் கந்தையர் ரயிலின் எஞ்சின் பெட்டி போலக் குடிசைகளுக்கெல்லாம் முகப்பாக அந்த ரயில் பாதையில் குடிசை அமைத்து வாழ்ந்ததென்பது எவ்வளவு முரண் நகை. யுத்தம் முடிந்த மீள்குடியேற்றக் காலங்களில் புகையிரதப் பாதையில் குடிசையமைத்து இருந்தவர்களும் தனியான ஒரு வகுதியனராகக் கருதப்பட்டு அவர்களுக்கும் மீள் குடியேறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டமை இன்னொரு தனிக்கதை.

சாதாரண எளிய மனிதர்களிடத்தில் போராடும் உந்துசக்தியைக் கொண்டு வந்து சேர்த்தது எது? குருதியும், நிணமும் பெருகச் செய்யும் யுத்தம் அத்தனை அழகானதா என்ன? இளமையும், அழகும்,உணர்வுகளும் பொதிந்த காதலும் வாழ்வும் இருப்பின் அவற்றைத்தான் யுத்தத்தை விட அதிகமாக மனிதர்கள் தேர்வு செய்யக் கூடும். அப்படியொரு இனிய குடும்பத்தையும், வாழ்வையும் அணியாகக் கொண்ட ஒரு உழைப்பாளி அக்குடும்பத்திற்காகத் தன் உயிரைப் பிழிந்து உழைப்பதைத் தானே தன் வாழ்விற் கிடைத்த வரமாகக் கொள்வான். இயற்கையின் புயலுக்குள்ளும், எதிர்ப்பிற்குள்ளும் கட்டுமரமேறி இரவின் இருளை வென்று வாழ்வை வெல்லும் தைரியம் மிக்க அவனை எதிரியின் குண்டுகளும், ஷெல்களும் விரட்டி, விரட்டி அவனது வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. நிறைமாதக் கர்ப்பிணியான அவன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவன் தான் எதையாவது தர வேண்டும்? திரும்பத், திரும்ப முயற்சித்தும் அவனைத் தொழில் செய்ய விடாது விரட்டுகின்றன எறிகணைகள். வீடு திரும்பும் அவனுக்கு மனைவியோடு சிறு முரண். தூண்டில் மீன் பிடிக்கக் காத்திருப்பவனிடம் பிள்ளையிடம் தூதனுப்பி சாப்பிட அழைக்கிறாள் மனைவி. சில மீன்களையாவது பிடித்துக் கொண்டே வருவதாக ஓர்மத்துடன் சொல்லியனுப்புகிறான். அவன் திரும்பி வரும் போது எஞ்சியிருப்பது என்ன? இடிந்த கற்குவியலும்,சிதைந்த உடல் பாகங்களும், கொல்லையில் கட்டியிருந்த ஆட்டின் உடலும் மட்டுமே . புலர்காலை பலியெடுத்த அவன் குடும்பத்தின் நிழலையேனும் இனி அவனால் தொட்டுணர முடியுமா…? பதில்களற்ற கேள்விகளே, வாழ்க்கை முழுவதையும் தின்று தீர்க்கின்றன.

அடுக்கடுக்கான இறப்புகளும், சிதைவுகளும் காணும்தோறும் பலவீனமான இதயங்களின் அடுக்குகள் குலைந்து விடுகின்றன. இராசம்மா அக்காவுக்கு ஏற்படும் உளப்பிறழ்வு சமூகத்தில் அவள் கண்ட யத்தத்தின் மூர்க்கத்தால் விளைந்தது. யுத்தம் என்ன செய்யும் என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரிகிறது. அதனால் தான் தன் குடும்பத்திலிருக்கின்ற, சமூகத்திலிருக்கின்ற யாரை நோக்கியும் அந்த யுத்தம், கொடூர வாளை வீசிவிடக்கூடும் என அஞ்சுகிறாள். அது அவள் பிள்ளைகளை மட்டுமல்ல. அவ்வூரிலுள்ள எந்தப் பிள்ளைக்குமான எச்சரிக்கைக் கூவல். யுத்தத்திற்கான எதிர்க்குரல்.அதைப் புரிந்து கொள்ளும் போது தான் அவள் மீதான அனுதாபத்தை விட, யுத்தகாரணர்கள் மீதான எதிர்க்குரலை உலக அரங்கில் பதிவு செய்ய முடியும்.

புலர்காலையின் வலியாக இயல்வாணன் தொட்டுச் சென்ற எதுவும் எம் மண்ணில் பிறந்தவர்களுக்கு அந்நியமானதல்ல. காலங்களின் ரணங்கள் மீது ஒத்தடம் கொடுக்க யாருமில்லாத வேளையில் இவ்வாறான எழுத்துக்களே கொஞ்சமேனும் வலியை ஒற்றியெடுக்கின்றன. அப்போது ஒற்றியெடுத்த எழுத்துக்கள் மீது படர்ந்திருந்த வலி இப்போது வாசிக்கும் போது மீளத் தொற்றிக் கொள்கிறது. எழுத்தாளனுக்கு வேறென்ன பணி இருக்கப் போகிறது? காலத்தைக் கலைத்துக் கலைத்து நிகழ்காலத்தின் கனவுகள் மீது கடந்த காலத் துயரைப் பேசுவதைத் தவிர.

தாட்சாயணி

ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய  சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

 

 

Thursday, October 19, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 20



 முன்றில் - 20

இயல்வாணன்
இலங்கை அரசாங்கத்தால் இலக்கியத்துறைப் பங்களிப்புக்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய ரத்னா விருதை இவ்வாண்டு தமிழ் மொழி சார்ந்து மூத்த எழுத்தாளர் க.சட்டநாதன் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், விமர்சனம் எனத் தொடர்ந்து புனைவிலக்கியம் படைத்து வரும் க.சட்டநாதன் 22-04-1940இல் வேலணையில் பிறந்தார். இவரது பேரனார் பேரம்பலம் வேலணையில் பெயர்பெற்ற தமிழ்ப் புலவர்.  தந்தையார் கனகரத்தினமும் ஒரு தமிழ்ப் புலவராக விளங்கினார்.


இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் நிறைவு செய்து இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். இவரது உயர் கல்வியை சென்னை விவேகானந்தா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கற்று 1964இல் விஞ்ஞானமானி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஊர் திரும்பிய இவர் சிறிது காலம் சுயமுயற்சியாளராக கால்நடைப் பண்ணையொன்றை வேலணையில் நிர்வகித்தார். தொடர்ந்து 1967 முதல் 1971 வரை வீரகேசரி பத்திரிகையில் ஆசிரிய பீடத்திலும், விளம்பரப் பிரிவிலும் பணியாற்றினார். 1971இல்  பட்டதாரி ஆசிரிய உதவியாளர் நியமனம் பெற்று ஆங்கில ஆசிரியராக புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரியில் பணியாற்றினார். 1976இல் பட்டதாரி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. 1980இல் ஆரம்பித்த பொது வேலைநிறுத்தத்தில் இவரும் பங்கேற்றதால் வேலையிழந்தார்.

மீண்டும் 1982லேயே பணியில் அமர முடிந்தது. மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு நியமனம் கிடைத்து சில நாள்களிலேயே மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றார். 1987வரை அப்பாடசாலையில் கடமையாற்றிய இவர் அவ்வாண்டு கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று 2000ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை அங்கு கடமையாற்றினார். 27வருட ஆசிரிய சேவையில் ஆங்கிலம், விஞ்ஞானம், சுகாதாரம் ஆகிய பாடங்களைக் கற்பித்ததோடு, இலக்கியத்துறையில் வழிப்படுத்தலையும் செய்து நன்மாணாக்கர்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர் சிவராமலிங்கமும் சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் விரிவுரையாளர் ஜெகநாதாச்சாரியரும் இவரை  இலக்கியத்தின்பால் ஆற்றுப்படுத்தியிருந்தனர். கூடவே இவரது பரம்பரைத் தமிழ்ப்புலமையும் கைகொடுத்தது.
1970இல் வீரகேசரியில் வெளிவந்த நாணயம் சிறுகதையுடன் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. தொடர்ந்து வீரகேசரி, உதயன், மல்லிகை, பூரணி, அலை, திசை, நங்கை, அஞ்சலி, தாயகம், வெளிச்சம், நங்கூரம், மூன்றாவது மனிதன், கலைமுகம், மகுடம், எதுவரை, ஜீவநதி, தூண்டி, தெரிதல் முதலான பத்திரிகைகள், இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
இவரது 6 சிறுகதைகள் கொண்ட மாற்றம்(1980),  8 சிறுகதைகள் கொண்ட உலா (1992), நீளும் பாலை குறுநாவல் மற்றும் ஏற்கனவே வெளிவந்த 12 சிறுகதைகளைக் கொண்ட சட்டநாதன் கதைகள்(1995), 13 சிறுகதைகள் கொண்ட புதியவர்கள்(2006), 12 சிறுகதைகள் கொண்ட முக்கூடல் (2010), 12 சிறுகதைகள் கொண்ட பொழிவு(2016), 10 சிறுகதைகள் கொண்ட தஞ்சம்(2018) ஆகியன நூல்களாக வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஏ.ஜே.கனகரத்னா, சி.கனகநாயகம், சோ.பத்மநாதன், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகள் The Shower(2020) என்ற நூலாக வெளிவந்துள்ளது.
கவிதைகள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் நீரின் நிறம் (2017), துயரம் தரும் அழகு(2019) ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது நாவல் உயிரில் கலந்த வாசம்(2020) பால்ய காலத்தை நினைவுகூரும்  இயல்பான கிராமத்து வாழ்வையும், உணர்வனுபவங்களையும் பேசுகின்றது. இவர் எழுதிய பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் சட்டநாதன் கட்டுரைகள்(2021) நூலாக வெளிவந்துள்ளது.
கலை இலக்கிய விமர்சன இதழான பூரணியை(1972) என்.கே.மகாலிங்கத்துடன் இணையாசிரியராக இருந்து வெளிக்கொணர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. திரைப்பட ரசனை மிக்கவராகவும் இவர் விளங்கினார்.
சட்டநாதனின் கதைகள் இயல்பான குடும்ப வாழ்வையும், அகச் சிக்கல்களையும் பேசுவன. கிராமத்து மாந்தர்களை இயல்பான பாத்திரங்களாக வார்த்து, சொற்சிக்கனத்தோடு நளின நடையில் கதையை நகர்த்திச் செல்வதில் சட்டநாதன் முக்கியத்துவம் மிக்க படைப்பாளியாக விளங்குகிறார். தி.ஜானகிராமன் போல பாலியல் சார்ந்த விடயங்களை, மென்மையான உணர்வுகளை தனது கதைகள் ஊடாக நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்துள்ளார். பெண்களை, குழந்தைகளை உயர்வாகச் சித்திரிக்கும் வகையிலும் இவரது படைப்புகள் முக்கியத்துவமுடையவை.

‘எனது கதைகளில் வரும் பெண்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் நின்றபடி தலைநிமிர்ந்து பார்ப்பவர்கள். சரியெனப்படுவதைத் தீர்மானமாகச் செய்பவர்கள். எனது எழுத்தின் அடிச்சரடாய், தொடரிழையாய் இருப்பது இப்பெண்கள் பற்றிய அக்கறையும், அவர்களது உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொணரும் முயற்சிதான்’என்று சட்டநாதன் குறிப்பிடுவது அவரது கதைகளின் பிரதான பாத்திர வார்ப்பைத் துலாம்பரப்படுத்துகின்றன.
‘பிளிறிக் கொண்டு அட்டகாசம் செய்யும் யானையைப் போலன்றி, மிக அடக்கமாகவும் மனிதத்தன்மையோடும் பாத்திரங்களை நோக்கி அவர்களின் உறவுகளினூடாக சமுதாயத்தைப் பற்றி குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமூகத்தைப் பற்றி நாசூக்காக சிந்திக்கத் தூண்டினார்’ என இவரது கதைகள் தொடர்பில் ஏ.ஜே.கனகரத்ன குறிப்பிட்டது முக்கியமானதாகும்.

83 வயதில் ஆயிரம் பிறை கண்டு வாழும் சட்டநாதன் அடிப்படையில் சிறந்த – தொடர்ந்த - வாசகர். அந்த வாசிப்பே அவரது படைப்புகளின் உயர்தரத்துக்கும் அடிப்படையானது. தொடர்ந்தும் அவரது இலக்கியப் பங்களிப்பை ஈழத்தவர்கள் நுகரும் வாய்ப்பு கிட்ட வேண்டி வாழ்த்துகிறோம்.

உதயன் சஞ்சீவி 15-10-2023








இயல்வாணன் பத்தி முன்றில் 19



 முன்றில் -19

எழுத்துலகில் தொடர்ச்சியறாது இயங்குவதென்பதுஅதிலும் பெண்கள் இயங்குவதென்பது கடினமானதுதிருமணமாகி இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் தாயாகி அவர்களது கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்ட ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதி வருவதென்பது முக்கியமானதுஅத்தகைய எழுத்தூழியத்துக்காக அண்மையில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் தாமரைச்செல்வி.

பரந்தன் குமாரபுரத்தில் சுப்பிரமணியத்தின் மகளாக 04-08-1953இல் பிறந்த தாமரைச்செல்வியின் இயற்பெயர் ரதிதேவிஇவர் தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.

தனது 20 வயதில்(1973) இலங்கை வானொலியில் எழுதத் தொடங்கிய இவர் 1974இல் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கோபுரம் சரிகிறது என்ற சிறுகதையுடன் அடையாளம் காணப்பட்டார்அதிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்ஈழநாடுஈழமுரசுஈழநாதம்முரசொலிதினகரன்சிந்தாமணிதினக்குரல் முதலான பத்திரிகைகளிலும்மல்லிகைஅமிர்தகங்கைவெளிச்சம்நாற்றுஆதாரம்களம்சிரித்திரன்சுடர்ஞானம்மாணிக்கம்கலாவல்லிகிருதயுகம்விளக்குபெண்ணின் குரல்தாயகம்மாருதம்ஜீவநதிதாயகம்வளையோசையாழ்மதிநுட்பம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டிலும்புலம்பெயர் தேசங்களிலுங் கூட இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளனதமிழ்நாட்டில் ஆனந்த விகடன்குங்குமம்மங்கைஇதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும்பரிஸ் ஈழநாடுபரிஸ் ஈழமுரசுஎரிமலைகளத்தில்தாய்வீடு(கனடா), எதிரொலி(அவுஸ்திரேலியா), நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன்அக்கினிக்குஞ்சு(அவுஸ்திரேலியாஆகிய புலம்பெயர் ஊடகங்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம்சிங்களம்ஜேர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனஇவரது இடைவெளி (The Gap), வாழ்க்கை (The Lifeசிறுகதைகள் பேராசிரியர் சி.சிவசேகரத்தாலும்பாதை (The Rugged Pathசிறுகதை  .ஜே.கனகரட்ணவாலும்முகமற்றவர்கள் (Faceless Peopleசிறுகதை பெ.இராஜசிங்கத்தாலும்எங்கேயும் எப்போதும் (The Invitableசிறுகதை கே.எஸ்.சிவகுமாரனாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது ஒரு மழைக்கால இரவு சிறுகதை திருமதி ஜெயசித்ராவாலும்வன்னியாச்சி சிறுகதை திருமதி அனுராத ஜயசிங்கவாலும்வாழ்க்கை  சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமானவாலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனஎல்வின் மாசிலாமணியால் இவரது ஓட்டம் சிறுகதை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவரது ஆறு சிறுகதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளனஇவரது இடைவெளி சிறுகதை 1996 என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல இயக்குநர் உதிரிப்பூக்கள் மகேந்திரனால் குறும்படமாக்கப்பட்டதுஅவரது மகனான இயக்குநர் ஜான் மகேந்திரனால் பாதணி என்ற சிறுகதை குறும்படமாக்கப்பட்டதுஇவரது பசி சிறுகதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இமயவர்மனால் குறும்படமாக்கப்பட்டுலண்டனில் விம்பம் அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் பார்வையாளர் விருது வென்றதுதாயகத்தின் போராளிக் கலைஞர் திலகனால் இவரது சாம்பல்மேடு குறும்படமாக்கப்பட்டுள்ளதுபாதைவாழ்க்கை ஆகிய சிறுகதைகளும் குறும்படமாக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரச பாடநூலில் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது இன்னொரு பக்கம் சிறுகதையும்தமிழ்நாடு அரசின் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது பசி சிறுகதையும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்இவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு(1998), அழுவதற்கு நேரமில்லை(2002), வன்னியாச்சி(2005) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

முரசொலி பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற வேள்வித்தீ   நூல் 1994இல் மீரா வெளியீடாக வெளிவந்ததுஇவரது வீதியெல்லாம் தோரணங்கள் நாவல் வீரகேசரி பத்திரிகையும் யாழ்.இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதுசுமைகள்(1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி(1992), தாகம்(1993), வீதியெல்லாம் தோரணங்கள்(2003), பச்சைவயல் கனவு(2004), உயிர்வாசம்(2019) ஆகிய நாவல்கள் இவரால் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.

சாகித்திய மண்டல விருது(பச்சை வயற்  கனவு), இலங்கை இலக்கியப் பேரவை விருது(பச்சை வயல் கனவுவிண்ணில் அல்ல விவெள்ளிதாகம்), வடக்கு கிழக்கு மாகாண விருது(ஒரு மழைக்கால இரவு), வடக்கு மாகாண விருது(வீதியெல்லாம் தோரணங்கள்), சுதந்திர இலக்கிய அமைப்பு விருது(தாகம்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது(உயிர்வாசம்என்பன இவரது படைப்புகளுக்காக கிடைத்த கௌரவங்களாகும்.

வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது(2001), கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியமணி விருது(2002), அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது(2000), கொழும்பு கலை இலக்கியக் கழகத்தின் விருது(2003), தமிழ்நாடு சின்னப்பபாரதிஅறக்கட்டளை விருது(2010), கண்டாவளை பிரதேச கலாசார பேரவையின் ஒளிச்சுடர் விருது(2011)  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது(2012), யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் கௌரவிப்பு(2015) என்பன இவரது தொடர்ந்த இலக்கியப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட மணிமகுடங்களாகும்.

வாழ்க்கை யதார்த்தங்களை தானும் ஒரு சாட்சியாகபார்வையாளராக நின்று கொண்டு சித்திரிக்கும் யதார்த்தவாத எழுத்து தாமரைச்செல்வியினுடையதுவன்னி மண்ணின் குறிப்பாககிளிநொச்சி மண்ணின் வாசத்தைஅங்குள்ள மனிதர்களைஅவர்களின் பாடுகளைவாழ்க்கையை கமராக் கண்கொண்டு இவரது எழுத்துக்கள் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளன. இவர் ஒரு ஓவியராகவும் விளங்கியுள்ளார் என்பது இந்தச் சித்திரிப்புக்கு மேலும் வளஞ்சேர்த்துள்ளது. 30 ஆண்டுகள் நீடித்த போரின் துயரத்தை இவரது எழுதுகோல் வரலாற்று இலக்கிய மூலாதாரமாகக் கொள்ளத்தக்க வகையில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளதுபோரில் உடமைகளை மட்டுமல்ல பல எழுத்துப் பிரதிகளையும் இழந்த போதும் இருப்பவை இவரது விஸ்வரூப பரிமாணத்தை எமக்கு வெளிக் காட்டுகின்றன

70 வயதை நிறைவு செய்துள்ள இவர் எழுத்துலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பெருமையோடுதனது கணவர்பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார்இவர் தனது எழுத்துக்களால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளஞ்சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

உதயன் சஞ்சீவி 24-09-2023