Wednesday, August 9, 2023

இயல்வாணன் பத்தி முன்றில் 15



முன்றில் 15

இயல்வாணன்

எள்ளலும், சுவையும் மிக்க மண் மணம் கமழும் படைப்புகளால் அறியப்பட்டவர் எஸ்.எல்.எம்.ஹனீபா. இவர் எழுதிய கதைகளை விட இவரால் சொல்லப்படுகின்ற கதைகளை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம். திகட்டத் திகட்டச் சுவை கூட்டி அவர் சொல்லும் அழகே தனி. சு.வில்வரத்தினம் போல பாடவும் செய்வார். ஒவ்வொரு கணமும் உயிராற்றல் பீறிடும் இவரைப் போன்ற மனிதரை சமீப காலத்தில் நான் காணவில்லை என்பது இவர் தொடர்பிலான ஜெயமோகனின் பார்வை.

மட்டக்களப்பு மாவட்டம் மீராவோடையின் சட்டிபானை தெருவில் தம்பி சாய்பு சின்னலெவ்வையின் மூன்றாவது மகனாக 01-04-1946இல் எஸ்.எல்.எம்.ஹனீபா பிறந்தார். ஆற்றில் மீன் பிடித்து விற்கும் தொழில் புரிந்து வந்த இவரது தந்தையார் பின்னர் மூன்று கிராமங்களுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளராகக் கடமையாற்றினார்.

ஹனீபா தனது ஆரம்பக் கல்வியை மீராவோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஒட்டமாவடி முஸ்லீம் கலவன் பாடசாலையிலும் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாமிய சமயக் கல்வியைக் கற்றார். தொழிற் கல்வியை கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில்(1966-67) பெற்றார்.

தொடர்ந்து மலேரியா ஒழிப்புப் பிரிவில் மேற்பார்வையாளராக தொழிலுலகுக்குள் நுழைந்தார். சிறிது காலத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கால்நடை போதனாசிரியர் பணியினை ஆற்றினார். ஓராண்டின் பின்னர் 1969இல் விவசாய அபிவிருத்திப் போதனாசிரியர் நியமனம் கிடைத்து, கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெக்கிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலநறுவை, வெலிக்கந்த, திரிகோணமடு ஆகிய இடங்களில் கடமையாற்றி 1990இல் ஓய்வு பெற்றார். இவர் ஒரு குறுந்தூர ஓட்ட வீரராக அகில இலங்கை ரீதியில் விருதுகள் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கால்நடை சார்ந்தும், விவசாயம் சார்ந்தும் ஆலோசனைகளை வழங்கி வரும் இவர் அவ்வப்போது அது தொடர்பில் எழுதியும் வந்துள்ளார்.

இவர் ஒரு இலக்கியக்காரனாக மட்டுமன்றி அரசியல்வாதியாகவும் விளங்கினார். அந்த அரசியலே இலக்கியத்தில் பேராளுமையாக உருவாகாமல் அவரை முடக்கி விட்டது என்றால் மிகையல்ல. அதுபற்றி அவரே பிரஸ்தாபித்துள்ளார். இடதுசாரிய சிந்தனைகளில் ஈடுபாடு காட்டிய இவர் இடதுசாரிகள் கூட்டுச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குச் சார்பாக முதலில் மேடையேறினார். 1963இல் கல்குடா தொகுதி சுதந்திரக் கட்சிக் கிளையை உருவாக்கினார். 1969இல் அக்கரைப்பற்றில் எம்.எச்.எம்.அஷ்ரப்பைச் சந்தித்ததையடுத்து அவர் பால் ஈர்ப்பு ஏற்பட்டது. 1970இல்  அஷ்ரப் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதில் முதன்மைப் பாத்திரம் வகித்தார். காங்கிரஸின் பிரசாரப் பீரங்கியானார்.

 1989இல் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மூன்று ஆரம்பப் பாடசாலைகளை உருவாக்கியமை உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தனது பிரதேசத்துக்குச் செயற்படுத்தினார். அக்காலத்தில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் முகநூலில் இவர் பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு பொது நூலகம் இவரது ஆரம்பகால வாசிப்புக்குத் தீனி போட்டது.  இவரது முதற் சிறுகதையான நெஞ்சின் நினைவினிலே 1962இல் ராதா சஞ்சிகையில் வெளிவந்தது. இன்சான், இளம்பிறை, வீரகேசரி, சுதந்திரன், சுடர், சிந்தாமணி,கணையாழி,பூரணி,பாமிஸ், ராவய(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது) ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ஐம்பது சிறுகதைகள் வரையே இவர் எழுதியுள்ளார்.

என்னைச் சூழவும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்கள் அறியாமையோடும் வறுமையோடும் வானம் பார்த்த பூமியை வைத்து மாரடிக்கிறார்கள். இந்த மக்களை மூலதனமாகக் கொண்டு ராஜதர்பார் நடத்துகின்ற அரசியல் புறோக்கர்கள், ஏழைகளைச் சுரண்டி வாழும் தனவந்தர்கள். இந்த முரண்பாடுகளின் கோட்டமே நான் வாழும் கிராமம். இந்த முரண்பாடுகளுக்கு மத்தியிலே அவலப்படும் மக்களுடைய மானுஷீகத்தைத் தரிசிப்பதுதான் எனது எழுத்துப்பணி என எஸ்.எல்.எம்.ஹனீபா பிரகடனம் செய்வது போலவே அவரது எழுத்துகள் அமைந்துள்ளமை சொல்லத்தக்கதாகும்.


சமூகப்
பிரக்ஞையுள்ள சத்தியக் கலைஞனுக்கு எழுத்தூழியமும் ஒரு புனித யுத்தமாக அமைந்து விடுகிறது என்று குறிப்பிடும் இவர் சன்மார்க்கம் கதை வெளிவந்த வேளை ஹனிபாட கையெ முறிச்சுப் போடணும் என்று சொம்பினார்களாம் என்று எழுதியிருக்கிறார்.

1992இல் இவரது 15 சிறுகதைகள் மக்கத்துச் சால்வை என்ற தலைப்பில் வெளியானது. இவரது மக்கத்துச் சால்வை சிறுகதையே இவரைப் பலரும் அறிய வைத்த கதை. கிராமத்தில் பெருநாள் காலத்தில் நிகழும் சிலம்பாட்டத்தை மையப்படுத்திய இக்கதை மனிதர்களின் கௌரவம், வெல்லும் ஆசை என்பவற்றுக்கு அப்பால் அன்பின் வலிமையை உள்ளார்ந்து பேசுகின்றது. இக்கதை இலங்கை அரசினர் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு தரம் 11 பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோல மருமக்கள் தாயம், வேட்டை கதைகளும் பேசப்பட்ட கதைகளாகும்.

மக்கத்துச் சால்வையில் இடம்பெற்ற சில கதைகளையும் உள்ளடக்கி 24 சிறுகதைகள் அவளும் ஒரு பாற்கடல் என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியீடாக 2007இல் வெளிவந்தது. மக்கத்துச்சால்வை வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு மக்கத்துச் சால்வை மண்ணும் மணமும் என்ற தலைப்பில் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறப்பு மலர் ஒன்று 2021இல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு மலரில் எம்..நுஃமான், தெளிவத்தை யோசப், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயமோகன், எம்.கே.முருகானந்தன், கருணாகரன் உள்ளிட்ட 56 பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இவரெழுதிய என்டெ சீவியத்திலிருந்து பாகம் 1 என்ற தலைப்பிலான பத்திகளின் தொகுப்பு இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அத்துடன் இவரது சிறந்த சிறுகதைகளான மக்கத்துச் சால்வை, மருமக்கள் தாயம் ஆகிய கதைகள் பேஜஸ் புத்தக நிலையத்தின் சிறுநூல் வரிசையில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ளது.

இவரது மக்கத்துச் சால்வை தொகுதிக்கு 1992இல் தமிழ்நாடு லில்லிதேவசிகாமணி விருதும், இலங்கை அரசின் சாகித்திய விருதும் வழங்கப்பட்டது. ஆளுநர் விருது(2000), கலாபூஷணம் விருது(2005), ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பேரவை விருது, மட்டக்களப்பு மாவட்ட கலாசார பேரவை விருது என்பனவும் இவரது இலக்கிய சேவையைக் கௌரவித்து வழங்கப்பட்டுள்ளன.

கரிசல் காட்டுக்கு ஒரு கி.ராஜநாராயணன் என்றால் மட்டக்களப்புத் தமிழுக்கு எஸ்.எல்.எம். தான் என்று எம்.கே.முருகானந்தன் குறிப்பிடுவது போல மட்டக்களப்பு முஸ்லீம் பிரதேச பேச்சுவழக்கினை இவரது கதைகளில் அலாதியாய் சுவைக்கலாம். இவரது கதைகளில் வரும் சொற்கள், சொலவடைகள் ஒரு வட்டாரச் சொல்லகராதியை உருவாக்குவதற்கான மூலமாகலாம்.

77வயதில் முதுமையின் தளர்ச்சியை இடையிடையே வெளிக்காட்டினாலும்  இளைஞனைப் போன்ற மனதுடன் இருக்கும் இவர் தனது அனுபவங்களை எழுத்தாக்கி ஈழத்து இலக்கியத்துக்கு புதிய ஒளி பாய்ச்ச வேண்டும்.

கவியரங்கக் கவிதை

 காலம் : 02-08-2023 பி.ப.3 மணி

இடம் : வலி.தெற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபம் (வலி.தெற்கு கலாசார பேரவை   கலைஞர் ஒன்றுகூடல்)

தலைமை : கவிஞர் த.ஜெயசீலன்

தலைப்பு : ‘காலப் பிழையோ அன்றிக் கடவுள் தரும் தண்டனையோ

        சாலப் பொருந்தி வந்து சா எமக்குத் தருகிறாயோ’

        வன்முறை




வேங்கட மலை முதல் வெண்ணுரைக் குமரியில் 

தீங்கெழில் செய்தமிழ் எந்தமிழே!

பூங்குழ லார்மொழி போலிள மென்மையும்

பொலிந்திடு நன்மொழி எந்தமிழே!

ஆங்கொரு பாரதி ஆர்த்திடு கவிதையில்

அருவியாய் பொழிந்ததும் எந்தமிழே!

தேங்கவி கம்பனும் வள்ளுவன் ஒளவையும்

திகட்டிடக் கவி தந்த எந்தமிழே!

நின்னைப் பணிந்தேன்


முந்துதமிழ் சந்தகவி தந்தஅழ காலே - எம்

முன்றிலுறை கின்றஎழில் ஜெயசீலத் தலைவ!

மந்தமரு தஞ்சேர்ந்த மணிக்கவிதைக் காரன்

மாண்புடைய கவித்தலைவ, வணக்கங்கள் என்றும்.

சுந்தரச் சொல்சேர்த்து சுற்றியுள்ள நிலைநோக்கி

மந்திரக் கவிசொல்லும் மதிப்புயர் கவிஞர்காள்!

வந்தமர்ந் தவையிலே தமிழ்ச் சுவை மாந்தும் எண்ணத்தில்

நந்தமிழ் நயங்கேட்கும் நல்ல சுவைஞர்காள்! வணக்கங்கள்


காலப்பிழையோ அன்றிக் கடவுள்தரும் தண்டனையோ

சாலப்பொருந்தி வந்து நீ சா எமக்குத் தருகிறாயோ?


கண்ட நேரமெல்லாம் செல்போனை நோண்டுகையில் 

மண்டை பிளந்தொருவன் மரித்திட்ட செய்தி வரும்

அண்டை வீட்டார் அடிபட்ட செய்தி வரும்

கொண்டை பிடித்திரு கோதையர்கள் வீதியிலே

சண்டையிடும் காட்சிகளை வலைத்தளங்கள் (நே) அலை காட்டும். 11

ஹொண்டாவில் குழுவாய் வந்து கொலைவாளைக் கையிலேந்தி

முண்டாசு கட்டி முகம் மறைத்து அடிதடி குத்துவெட்டு

சண்டாளர் செய்யும் சங்கதிகள் தினந்தினமும்.

பத்திரிகை ரிவியிலும் பதைபதைக்கும் செய்திகள்தாம்

கத்தை கத்தையாய் பணங் கொடுத்து ஆள்வைத்து – (கூலிக்கு) 11

சொத்துக்கள் சேதமிட்டு பெற்றோல் குண்டடித்து

நர்த்தனங்கள் புரிகின்ற நாடாச்சு நம்நாடு.

தத்துவஞானிகள் சிவபூமி என்ற மண்ணில்

குத்தும் கொலைவெறியும் கொண்டலையுங் கும்பல்களால்

சத்தியமாய் சாந்தி கெட்டு சவபூமியாகிறதே!

பக்திக்கு உரிய மண்ணில் பலிக்களங்கள் திறக்கிறதே!


கூட்டுக் குடும்பத்தில் கூடி வாழ்ந்தவர் நாம்.

வீட்டுக்குள்ளே விரிசலுக்குப் பொத்தலிட்டு – எவருக்கும்

கேட்டிடா வண்ணம் மூடி மறைத்தவர் நாம் - இன்றோ

கோட்டுப் படியேறி குடும்பத்துச் சங்கதியை – உலகம்

கேட்டிடச் சொல்கிறோம் கேடான செய்தியெல்லாம்.

வீட்டுக்குள்ளே வன்முறையின் சதிராட்டம்

கோட்டுச் சூட்டோடு குதூகலித்த மணப்பந்தல்

வாட்டமுற ; ஆயிரங்காலப் பயிர் சோர்ந்து மகிறது.


கல்லுவைத்த கோவிலெல்லாம் கைதொழுத எம்மவர்கள்

கல்லெறிஞ்சு கொல்லுகிற கலிகாலம் வந்ததையா!

பொல்லூன்றும் முதியவர்க்கு வலிந்துதவி செய்பவர்க்கு

கொல்லுகின்ற மனநிலையைக் கொடுவினையாய் கொடுத்தது யார்?

மல்லுக்குக் குழு சேர்த்து மனங்கவராப் பெயருமிட்டு

தில்லிருந்தால் வாவென்று தெருத்தெருவாய் அறைகூவும்

பொல்லாத வாலைகளின் துடுக்கடக்கப் போவது யார்?

வல்ல காவலர்க்கு வாள் குழுவைத் தெரியாதோ?


வன்முறையின் நதிமூலம் எங்கூற்றாய் தோன்றியது?

வாள் வில் சூலம் வேல் கொண்டெங்கள் கடவுளர்கள்

நன்முறைப் படுத்த வன்முறையைக் கைக்கொண்டார்.

நம்புராண இதிகாச வழியெல்லாம் வன்முறைதான்!

மன்னர்கள் வரலாற்று வழியெங்கும் இரத்தந்தான்!

பொன்பொருள் சூறையாடி பெண்கொண்டு முடிமன்னர்

தன்னாட்டை நிறுவிய சங்கதிதான் வரலாறாம்!

சங்கமெனும் பொற்காலம் சண்டைகளின் இழிகாலம்.


சேரனொடு சோழன் பாண்டியனும் (தமக்குள்) சண்டையிட்டு

பேர்கொண்டு கொடிநாட்டி வீரத்தை விளைத்தார்கள்.

போரால் வென்ற எங்கள் திராவிட மன்னரெல்லாம் - தனியாக

ஆரியத்தின் எழுச்சியிலே அனைத்தையும் இழந்து போனார். – பின்னர்

வீறாக எழுந்த சோதரர்கள் பிளவுண்டு

வாராது வரவிருந்த மாமணியைத் தொலைத்தோமே!

கூறாகிக் குழுவாகி குழுவுக்குள் கூறாகி

நார்நாராய் கிழிகின்றார் நம்தமிழின் தலைவர்கள்!


நம்முன்னால் முரசறையும் சினிமாவும் நாடகமும் 

வன்முறைக் காட்சிகளை மண்டைக்குள் திணிக்கிறது.

அம்மென்னு முன்னே அடிதடிக் காட்சிகளை 

நம்சினிமா காட்டி நம்மனதைச் சிதைக்கிறது.

கம்மென்றிருந்து கல்வி கற்க வேண்டியவர்

கம்புடனே குழுவாக அடிதடியில் இறங்குகிற

வன்முறைக் காட்சிகளை சினிமாவே தருகிறது.

நாயகனின் இலக்கணமே வன்முறைதான் என்கிறது.


பாடம் புகட்டும் ஆசிரியர் கம்பெடுத்து

ஆடுகின்ற சன்னதமும் அணிசேர்ந்து கொள்கிறது.

பாடம் படித்தவர்கள் (அதேவழியில்) பாடம் எடுக்கிறார்கள்.

பார்த்து நாம் வாய் மூடி பதைபதைத்து நிற்கின்றோம்.

கேட்க ஒருவரில்லை; கிளர்ந்தெழுந்து இதற்கு ஒரு 

காட்டமாய் முடிவெடுக்கும் கவனமும் யார்க்குமில்லை.

வாட்டும் துன்பம் போக்கி வளமானசமு தாயத்தை

தேட்டமாக்கும் தலைப்பிறை தெரியவில்லை எம்வானில்.


இப்படியே இருந்து நாம் இறந்தழிந்து போவதுவோ?

செப்படி வித்தையென்று சொல்லிக் கடந்து போவதுவோ?

தப்பென்றுரைத் தவர்க்கு தகுந்தவழி காட்டி நல்ல

பக்குவ வாழ்வுக்குப் பதப்படுத்த முனைவோர் யார்?

துப்பாக்கி வேண்டாம் சுடுகுழல்கள் இனி வேண்டாம்

தப்பாக யாரும் பிறப்பதில்லை மண்மீது.

பக்குவமாய் எடுத்துரைக்கும் பாங்கான வழி காண்போம்

முப்போதும் அவர் வாழ முறையான வழி சமைப்போம்.


கல்வியில் இருந்து கலை(க்)கின்ற பிள்ளைகளே

நல்வழி கெட்டு நடுத்தெருவில் நிற்கின்றார்.

பல்லோராய் கூடி போதையினை மாந்தி நாளும்

அல்வழியில் சென்று அடித களவு செய்தார். – அவரை

நல்விதமாய் மாற்றுகின்ற நலமான கல்வி வேண்டும்.

நன்மனத்தோர் ஆசுநீக்கி அவரையாண்டு கொள்ள வேண்டும்.

பொல்லாத விதியாக தமிழ்ச்சாதி அல்லலுறும்

வல்வினை நீங்கி நல்லோரை பிறக்க வேண்டும்.


ஆற்றலாம் இளைஞர்க்கு அளித்து நல்ல பயிற்சியினால்

மாற்றத்தைக் காண மனப்புரட்சி செய்ய வேண்டும்.

தோற்றுத் துவண்டு விரக்தி மனச்சோர்வு 

ஊற்றெழா வண்ணம் (அவர்) உளத்தைக் காக்க வேணும்.

நாற்ற மெடுக்கும் போதை மது புகையொழித்து

தோற்றும் புதுச் சமுதாயம் திரண்டெழுந்து வரவேண்டும்.

ஆற்றலாம் இளைஞர்சக்தி வளமானால் எம்நாடு

ஏற்றமுறும் : எழுந்துயர்ந்து முன்னேறும்.