இயல்வாணன்
மிக
எளிமையான, மென்மையான, அதிர்ந்து பேசாத ஒரு ஆளுமை யோகேஸ்வரி சிவப்பிரகாசம். சிறுகதைகள்
பலவற்றை எழுதியுள்ள இவர் பெண்ணிலைசார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் பல கட்டுரைகளையும்
எழுதியுள்ளார்.
அந்தக்
காலத்தில் வெளிநாட்டு உத்தியோகம் என்பது மலேசியாவை மையமாகக் கொண்டதுதான். பலர் மலேசியாவின்
அரச துறைகளிலும், தனியார் துறைகளிலும் பணியாற்றியுள்ளனர். மலாயன் பென்சனியர்கள் ஒரு
காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கிய பாத்திரங்களாக விளங்கினர். அந்த வகையில் தொழில்
நிமித்தம் மலேசியாவில் வசித்த சின்னத்துரை தம்பதியினரின் மகளாக யோகேஸ்வரி 13-11-1948இல் மலேசியாவில் (அப்போதய மலாயா) பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியை தங்களது தாயாரின் புர்வீக
கிராமான இளவாலையில் வசித்த நிலையில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்திலும், மீண்டும்
மலேசியா சென்று மலாயா இம்றோட் தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றார். பின்னர் மூளாயில்
தனது தந்தையாரின் ஊரில் வசித்த போது பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலையில் இடைநிலைக்
கல்வியைத் தொடர்ந்தார்.
பேராதனை
பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு சமஸ்கிருதத்தில் சிறப்புப் பட்டம் பெற்று
வெளியேறினார். 1972இல் சாவகச்சேரி மக்கள் வங்கியில்
உதவி முகாமையாளராகப் பணியை ஆரம்பித்து கன்னாதிட்டி கிளையில் முகாமையாளராகப் பதவியுயர்வு
பெற்று யாழ். பல்கலைக்கழகக் கிளையில் முகாமையாளராக
இருந்து 2003இல் ஓய்வு பெற்றார்.
25-04-1965ஆம்
ஆண்டு ஈழநாட்டில் துளசிராணி என்ற புனைபெயரில் எழுதிய “கடைசியாக ஒருமுறை“ என்ற சிறுகதையுடன்
இவர் இலக்கிய உலகில் பிரவேசித்தார். முன்னதாக இலங்கை வானொலியின் இளைஞர் மன்றம், சுதந்திரன்
பத்திரிகையின் வளர்மதி சிறுவர் பகுதி ஆகியவற்றிலும் இவர் எழுதியுள்ளார். ஈஸ்வரி, வாடாமலர்,
யோசி முதலான புனைபெயர்களிலும் இவர் எழுதியுள்ளார்.
தினகரன்,
வீரகேசரி, முரசொலி, ஈழமுரசு, ஈழநாதம், உதயன், ஈழநாடு, நமது ஈழநாடு, தினக்குரல், இளங்கதிர், மல்லிகை, ஞானம், ஜீவநதி, ஞானச்சுடர், அருள்ஒளி முதலான
பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது எழுத்துகள் வெளிவந்துள்ளன.
இவரது
14 சிறுகதைகள் உணர்வின் நிழல்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு 1997இல் மல்லிகைப்பந்தல்
வெளியீடாக வெளிவந்தது. ஈன்ற பொழுதில்(1999), கணநேர நினைவலைகள்(2001), மனம் விந்தையானதுதான்(2006),
இன்னும் பேச வேண்டும்(2012), தாலி(2021) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
யோகேஸ்வரி
சிவப்பிரகாசத்தின் சிறுகதைகள் தனிமனித வாழ்க்கைச் சிக்கல்களையும், சமூக நடப்பினையும்,
மனித நடத்தைகளின் பல்வேறு கோலங்களையும், யுத்தகால
மற்றும் யுத்தத்துக்குப் பின்னான கால வாழ்முறைகளையும், புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களையும்
பேசுவன. எளிமையான மொழிக்கையாட்சி, இயல்பாக பாத்திரங்களைச் சிருஷ்டித்து நடமாட விடுதல்,
நேர்த்தியான சம்பவ விபரிப்பு என்பன அவரது சிறுகதைகளின் தனித்துவமெனலாம்.
எண்ணிலாக்குணமுடையோர்-
நடைச்சித்திரம்(2010), அரைநிமிட நேரம் – சமயக் கட்டுரைகள்(2005), முன்னோர் சொன்ன கதைகள்
– இளையோருக்கான படிப்பினைக் கதைகள் (2011), உனக்கொன்றுரைப்பேன்- பெண்ணிலைசார் கடித
இலக்கியம்(2009), ஒளிவளர்தீபங்கள் – வலிகிழக்கின் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள்(2016) முதலான
நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
வடகோவை
சபாபதி நாவலரின் நான்மணிகள்(2016), இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் ஆகிய
நூல்களையும் அவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்.இலக்கிய
வட்டம் முதலான அமைப்புகளில் இணைந்து செயற்பட்ட இவர் இலக்கிய சேவைக்காக பல விருதுகளையும்,
பட்டங்களையும் பெற்றுள்ளார். வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினால்
வழங்கப்பட்ட கலைக்குரிசில் விருது, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கப்பட்ட ஞானச்சுடர்
விருது, யாழ்முத்து விருது, சார்க் மகளிர் அமைப்பு விருது, உதயன் வெள்ளிவிழா விருது,
கனகசெந்தி கதா விருது, சிரித்திரன் சுந்தர் விருது, இலக்கியத் தென்றல் விருது, இலங்கை
இலக்கியப் பேரவை விருது, செம்புலக்குரிசில் விருது எனப் பல விருதுகளும், பரிசுகளும்
இவரது இலக்கிய சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.
தற்போது
மகன் மற்றும் இரு மகள்களின் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் தொடர்ந்த
வாசிப்போடும், எழுதும் ஆர்வத்தோடும் பயணிக்கிறார்.
அவரது வெளிவராச் சிறுகதைகளும், கட்டுரைகளும் தொகுக்கப்படும் போது அவரது பார்வை வீச்சின்
ஆழத்தை மேலும் அறிய முடியும்.
07-05-2023 உதயன் சஞ்சீவி