முன்றில் -19
எழுத்துலகில் தொடர்ச்சியறாது இயங்குவதென்பது, அதிலும் பெண்கள் இயங்குவதென்பது கடினமானது. திருமணமாகி இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் தாயாகி அவர்களது கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்ட ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக எழுதி வருவதென்பது முக்கியமானது. அத்தகைய எழுத்தூழியத்துக்காக அண்மையில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் தாமரைச்செல்வி.
பரந்தன் குமாரபுரத்தில் சுப்பிரமணியத்தின் மகளாக 04-08-1953இல் பிறந்த தாமரைச்செல்வியின் இயற்பெயர் ரதிதேவி. இவர் தனது ஆரம்பக் கல்வியை பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.
தனது 20 வயதில்(1973) இலங்கை வானொலியில் எழுதத் தொடங்கிய இவர் 1974இல் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த ஒரு கோபுரம் சரிகிறது என்ற சிறுகதையுடன் அடையாளம் காணப்பட்டார். அதிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். ஈழநாடு, ஈழமுரசு, ஈழநாதம், முரசொலி, தினகரன், சிந்தாமணி, தினக்குரல் முதலான பத்திரிகைகளிலும், மல்லிகை, அமிர்தகங்கை, வெளிச்சம், நாற்று, ஆதாரம், களம், சிரித்திரன், சுடர், ஞானம், மாணிக்கம், கலாவல்லி, கிருதயுகம், விளக்கு, பெண்ணின் குரல், தாயகம், மாருதம், ஜீவநதி, தாயகம், வளையோசை, யாழ்மதி, நுட்பம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
தமிழ்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலுங் கூட இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆனந்த விகடன், குங்குமம், மங்கை, இதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும், பரிஸ் ஈழநாடு, பரிஸ் ஈழமுரசு, எரிமலை, களத்தில், தாய்வீடு(கனடா), எதிரொலி(அவுஸ்திரேலியா), நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன், அக்கினிக்குஞ்சு(அவுஸ்திரேலியா) ஆகிய புலம்பெயர் ஊடகங்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜேர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது இடைவெளி (The Gap), வாழ்க்கை (The Life) சிறுகதைகள் பேராசிரியர் சி.சிவசேகரத்தாலும், பாதை (The Rugged Path) சிறுகதை ஏ.ஜே.கனகரட்ணவாலும், முகமற்றவர்கள் (Faceless People) சிறுகதை பெ.இராஜசிங்கத்தாலும், எங்கேயும் எப்போதும் (The Invitable) சிறுகதை கே.எஸ்.சிவகுமாரனாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது ‘ஒரு மழைக்கால இரவு’ சிறுகதை திருமதி ஜெயசித்ராவாலும், ‘வன்னியாச்சி’ சிறுகதை திருமதி அனுராத ஜயசிங்கவாலும், ‘வாழ்க்கை’ சிறுகதை பேராசிரியர் பியசீலி விஜயமானவாலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எல்வின் மாசிலாமணியால் இவரது ‘ஓட்டம்’ சிறுகதை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது ஆறு சிறுகதைகள் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது ‘இடைவெளி’ சிறுகதை ‘1996’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல இயக்குநர் உதிரிப்பூக்கள் மகேந்திரனால் குறும்படமாக்கப்பட்டது. அவரது மகனான இயக்குநர் ஜான் மகேந்திரனால் ‘பாதணி’ என்ற சிறுகதை குறும்படமாக்கப்பட்டது. இவரது ‘பசி’ சிறுகதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இமயவர்மனால் குறும்படமாக்கப்பட்டு, லண்டனில் விம்பம் அமைப்பு நடத்திய குறும்பட விழாவில் பார்வையாளர் விருது வென்றது. தாயகத்தின் போராளிக் கலைஞர் திலகனால் இவரது ‘சாம்பல்மேடு’ குறும்படமாக்கப்பட்டுள்ளது. பாதை, வாழ்க்கை ஆகிய சிறுகதைகளும் குறும்படமாக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரச பாடநூலில் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது ‘இன்னொரு பக்கம்’ சிறுகதையும், தமிழ்நாடு அரசின் தரம் 11 பாடத்திட்டத்தில் இவரது ‘பசி’ சிறுகதையும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு(1998), அழுவதற்கு நேரமில்லை(2002), வன்னியாச்சி(2005) ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
முரசொலி பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற வேள்வித்தீ நூல் 1994இல் மீரா வெளியீடாக வெளிவந்தது. இவரது வீதியெல்லாம் தோரணங்கள் நாவல் வீரகேசரி பத்திரிகையும் யாழ்.இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. சுமைகள்(1977), விண்ணில் அல்ல விடிவெள்ளி(1992), தாகம்(1993), வீதியெல்லாம் தோரணங்கள்(2003), பச்சைவயல் கனவு(2004), உயிர்வாசம்(2019) ஆகிய நாவல்கள் இவரால் எழுதப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன.
சாகித்திய மண்டல விருது(பச்சை வயற் கனவு), இலங்கை இலக்கியப் பேரவை விருது(பச்சை வயல் கனவு, விண்ணில் அல்ல விவெள்ளி, தாகம்), வடக்கு கிழக்கு மாகாண விருது(ஒரு மழைக்கால இரவு), வடக்கு மாகாண விருது(வீதியெல்லாம் தோரணங்கள்), சுதந்திர இலக்கிய அமைப்பு விருது(தாகம்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது(உயிர்வாசம்) என்பன இவரது படைப்புகளுக்காக கிடைத்த கௌரவங்களாகும்.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது(2001), கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் இலக்கியமணி விருது(2002), அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது(2000), கொழும்பு கலை இலக்கியக் கழகத்தின் விருது(2003), தமிழ்நாடு சின்னப்பபாரதிஅறக்கட்டளை விருது(2010), கண்டாவளை பிரதேச கலாசார பேரவையின் ஒளிச்சுடர் விருது(2011) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது(2012), யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் கௌரவிப்பு(2015) என்பன இவரது தொடர்ந்த இலக்கியப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட மணிமகுடங்களாகும்.
வாழ்க்கை யதார்த்தங்களை தானும் ஒரு சாட்சியாக, பார்வையாளராக நின்று கொண்டு சித்திரிக்கும் யதார்த்தவாத எழுத்து தாமரைச்செல்வியினுடையது. வன்னி மண்ணின் குறிப்பாக, கிளிநொச்சி மண்ணின் வாசத்தை, அங்குள்ள மனிதர்களை, அவர்களின் பாடுகளை, வாழ்க்கையை கமராக் கண்கொண்டு இவரது எழுத்துக்கள் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளன. இவர் ஒரு ஓவியராகவும் விளங்கியுள்ளார் என்பது இந்தச் சித்திரிப்புக்கு மேலும் வளஞ்சேர்த்துள்ளது. 30 ஆண்டுகள் நீடித்த போரின் துயரத்தை இவரது எழுதுகோல் வரலாற்று இலக்கிய மூலாதாரமாகக் கொள்ளத்தக்க வகையில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. போரில் உடமைகளை மட்டுமல்ல பல எழுத்துப் பிரதிகளையும் இழந்த போதும் இருப்பவை இவரது விஸ்வரூப பரிமாணத்தை எமக்கு வெளிக் காட்டுகின்றன.
70 வயதை நிறைவு செய்துள்ள இவர் எழுத்துலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பெருமையோடு, தனது கணவர், பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இவர் தனது எழுத்துக்களால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளஞ்சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.
உதயன் சஞ்சீவி 24-09-2023
No comments:
Post a Comment