Sunday, December 10, 2023

இயல்வாணன் பத்தி - முன்றில் 22

 

முன்றில் 22

இயல்வாணன்

ஒரு கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாளராக, இதழியலாளராக, காலமாற்றத்துக்கேற்ப நவீன தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவராக பேராசிரியர் எம்.. நுஃமானை நாம் அடையாளங் காணலாம். தமிழிலக்கியத்துக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கியதோடல்லாமல் வீச்சுமிக்க மாணவர்களை உருவாக்கியவராகவும் அவர் மிளிர்கிறார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைக்குடியில் அரபுமொழி ஆசிரியராகவும் மதப் பணியாளருமாகவும் விளங்கிய மக்புல் ஆலிமின் மகனாகப் பிறந்தவர் எம்..நுஃமான். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் நிறைவு செய்தார்.

ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். 1973இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் மொழியியல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1982இல் முதுகலைமாணி பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேறகொண்டு பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகவும், மொழியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1991இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியேற்று, பேராசிரியராகப் பணியுயர்ந்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச இனவியல் ஆய்வுமையத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றியுள்ளார்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், அரசாங்க பாடநூல், ஆசிரிய வழிகாட்டி உருவாக்கல், மதிப்பீடு ஆகியவற்றிலும் இவர் தனது வாண்மைத்துவப் பங்களிப்பை வழங்கியதுடன்  பல ஆய்வு மாநாடுகளில் பங்குபற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

தனது 16வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் கவிஞர் நீலாவணன் மூலமாக இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இவரது முதல் கவிதை வீரகேசரியில் வெளிவந்தது. இவரது கவிதைகள் தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதை (1977), அழியா நிழல்கள்(1982), மழை நாட்கள் வரும்(1983) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. .யேசுராசாவுடன் இணைந்து பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்(1984) நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளார். சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பலஸ்தீனக் கவிதைகள்(1981 மற்றும் 2000),  மொகமூத் தர்விஸ் கவிதைகள்(2008), காற்றில் மிதக்கும் சொற்கள்(மலாய் மொழிக் கவிதைகள்), இரவின் குரல்(இந்தோனேசிய மொழிக் கவிதைகள்), நம் அயலவர் -  சிங்களச் சிறுகதைகள் (காமன் விக்கிரமசிங்கவுடன் இணைந்து -2006) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது அடிப்படைத் தமிழ் இலக்கணம்(1999) நூல் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு உதவும் துணைநூலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியற் கருத்துகளையும் இணைத்து தற்கால தமிழ்மொழி இலக்கணத்தை எடுத்து விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் (பேராசிரியர் சி.மௌனகுரு, சித்திரலேகா மௌனகுருவுடன் இணைந்து எழுதியது - 1979), பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு(1984), 19ஆம் நூற்றாண்டின் நவீன உரைநடை இயக்கமும் ஆறுமுக நாவலரும்,  திறனாய்வுக் கட்டுரைகள்(1985), மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்(1987), ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்(2002), மொழியும் இலக்கியமும்(2006), சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்(2017), A Constructive Grammar of Tamil and Sinhala Noun Phrase (2003)>  Srilankan Muslims Ethnic Identity within Cultural Diversity (2007)> Understanding Muslim Identity (2004) முதலான நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

மஹாகவி உருத்திரமூர்த்தியுடன் இணைந்து 1969-70 காலப்பகுதியில் கவிஞன் என்ற பெயரில் காலாண்டிதழினை வெளிக்கொணர்ந்தார். 4 இதழ்களே வெளிவந்தன. வாசகர் சங்கம் என்ற பதிப்பகத்தின் மூலம் தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மஹாகவியின் ஆறு காவியங்கள்(2008) உள்ளிட்ட மஹாகவியின் படைப்புகளையும் இவர் தொகுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வேளை கவிதாநிகழ்வு என்ற  நிகழ்ச்சியை இவர் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

2011இல் தமிழ்நாட்டில் இவரது தமிழ்பணியைக் கௌரவித்து விளக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கிய நுஃமான் ஆரம்பத்தில் மார்க்ஸிய சிந்தனை அடிப்படையிலான இலக்கிய நோக்கினைக் கொண்டிருந்தாராயினும் பின்னர் கல்வித் துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறையினையே பயன்படுத்தினார். இவரது மொழியியல் ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள் முக்கியமானவை. 79வயது நிறைவைக் கண்டுள்ள இவர் தொடர்ந்தும் தனது புலமைத்துவ ஆற்றலை தமிழுலகுக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.

 

No comments:

Post a Comment