Friday, August 2, 2019

கவிதை - தோற்றுத்தான் போனோமே!



அன்னராசா மாமா!

நேற்றெங்கள் வீட்டில்
நெடுமரமாய் நின்றீர்கள்!

பூத்துக் காய்த்து நிழல் தந்து உறவுகளின்
புகலிடமாய் மிளிர்ந்தீர்கள்!

ஏற்ற கருமம் எதுவெனினும்
நீங்களல்லால்
ஆற்றியதில்லை எப்போதும் எம்வீட்டில்!

பேற்றின் பேருறவாம் அக்காவைப்
பிரிந்தொருகால்
கூற்றுவரை ஒருநாளும் நீங்கள்
நின்றதில்லை!

காற்றடித்து கடும் புயலாய்
சுழன்றடித்த காலத்திலும்
இவ்வுறவு தகர்ந்ததில்லை!

நேற்றுவரை மாமா 
எம்தாயாய் தந்தையாக
வீற்றிருந்து எம்முன்னே
விளக்காக ஒளிர்ந்தீர்கள்!

காற்றில் சுடர் அணைய
காரிருளில் தவிக்கின்றோம்!

பெருமரத்தின் உருவழிய
பாழ்வெளியில் தகிக்கின்றோம்!

கூற்றுவனைக் கலைக்கும்
வழியற்று நாமெல்லாம்
தோற்றுத்தான் போனோமே!

சுடர்விழியை இழந்தோமே!

-இயல்வாணன்

No comments:

Post a Comment