Friday, June 13, 2025

யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகள்

 யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகள்

இயல்வாணன்



ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள். மலைகளில் திரளும் மேகம் ஒடுங்கி மழையாகப் பொழிந்து, அந்த நீர் அருவியாகப் பாய்ந்து, அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஆறாகி, அந்த ஆறு தான் போகும் இடங்களுக்கு அழகையும் செழிப்பையும் கொடுத்துச் செல்லும். காவியங்கள் யாவற்றிலும் நதிகள் பிரதான பகைப்புலமாகவும், பாடுபொருளாகவும் இருந்துள்ளன. இராமாயணத்தில் சரயு நதியும் கங்கை நதியும் பிரதானமாக வருகின்றன. வான்மீகி இராமாயணத்தில் 49 நதிகள் பாடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் காவிரி நதி வருகின்றது. மதுரைக் காஞ்சியில் வைகைநதி வருகிறது. ஈழத்து இலக்கியத்தில் மகாவலியும், களனி கங்கையும் மாணிக்க கங்கையும் வந்துள்ளன.

‘பூங்குறிஞ்சி முகட்டினிலேறி பொழிந்த தௌ;ளமு தாகிய வெள்ளம் பாங்கிலாத பரத்தையை நாடி படருவோரிற் பரந்தது பள்ளம்’ என்று நவாலியூர் சோமசுந்தரப் புலவர் மலையிலிருந்து அருவி தவழ்ந்து வந்து ஆறு உருவாவதை விபரிப்பார். தனித்த தீபகற்பமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் இத்தகைய மலையருவி ஆறுகள் எவையுமில்லை. 

யாழ்ப்பாணத்தில் கீரிமலை, கம்பர்மலை, கதிரமலை என்று மலையில் முடிகின்ற இடங்கள் இருப்பினும் இவை மலை என்று சொல்லக்கூடிய தகுதியைக் கொண்டிருப்பனவல்ல. ஒரு பிட்டியாக, மேடாக இருந்ததால் இந்தப் பெயர் பெற்றிருக்கலாம். அவ்வளவுதான். ஆற்றை உருவாக்கும் மலைகள் இல்லாவிடினும் ஆறில்லா ஊராக யாழ்ப்பாணம் இருக்கக்கூடாதென எமது முன்னோர்கள் கருதினரோ என்னவோ யாழ்ப்பாணத்தில் பெயர் சொல்ல மூன்று ஆறுகளைச் சொல்லிக் கொள்கின்றனர்.  தொண்டைமானாறு, உப்பாறு, வழுக்கையாறு என்பனவே அவை மூன்றுமாகும்.

தொண்டமானாறு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கே வடமராட்சி கிழக்கில் உள்ள ஆழியவளையை அடுத்துள்ள மண்டலாய் என்னுமிடத்தில் ஆரம்பமாகும் தொண்டமானாறு மருதங்கேணி, செம்பியன்பற்று, நாகர்கோவில், அம்பன், குடத்தனை ஆகிய ஊர்களையும் வளப்படுத்தி, முள்ளிப் பாலத்தை ஊடறுத்து மண்டான் வழியாக முப்பது மைல்கள் ஓடி தொண்டமானாறு என்ற பெயருடைய ஊரில் அக்கரை கடற்கரையை அண்டி கடலில் கலக்கிறது. இது உப்புநீரைக் கொண்டது. இதன் நீர்ப்பரப்பு 7300 ஏக்கர் அளவுடையதாகும். தொண்டைமானாறு, தொண்டைமன்னன் வடிகால் என்றும் இது அழைக்கப்படுகிறது. வல்லி நதி என்ற பெயரும் இதற்குண்டு. புகழ்பெற்ற செல்வச் சந்நிதி ஆலயம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

திருச்செந்தூரில் இருந்து முருகப்பெருமான் வீரவாகு தேவரை மகேந்திரபுரிக்கு சூரபன்மனிடத்து தூது அனுப்பியதாகவும், வீரவாகுதேவர் இலங்கையின் வல்லிநதிக் கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார் என்றும், மீண்டும் திரும்பிச் செல்வதற்கு இதே இடத்துக்கு வந்த போது சந்திக் காலம் ஆகிவிட்டது என்றும், அதனால் முருகப்பெருமானுக்குரிய சந்திப் பூசையை இந்த இடத்தில் செய்தார் என்றும், அந்த இடமே சந்நிதியாக மருவி இன்று செல்வச்சந்நிதி முருகன் ஆலயமாகத் திகழ்கிறது என்றும் ஆலய வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

பண்டிதர் சச்சிதானந்தன் எழுதிய யாழ்ப்பாணக் காவியம் 3 பருவங்கள் 38 படலங்கள் 278 பக்கங்கள் கொண்ட உயரிய காவியமாகும். அக்காவியத்திலும் தொண்டமானாறு வருகின்றது. கனகசிங்கையாரியனின் புதல்வர்கள் பரராசசேகரனும், செகராசசேகரனும் தமிழ்நாட்டில் கரந்துறைந்து போர்ப்பயிற்சிகள் பெற்று தொண்டமானாற்றின் அருகே சின்னமலை என்ற இடத்திலேயே வந்திறங்குவதாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.

தொண்டைமான் என்ற மன்னன் இந்தப் பகுதியில் விளையும் உப்பினை மரக்கலங்களின் வழியாக எடுத்துச் செல்வதற்கும், உள்ளுர் போக்குவரத்துக்குமாக இதனை வெட்டியதாகவும் கர்ணபரம்பரைக் கதைகளாகக் கூறப்பட்டுள்ளது. உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தொண்டமானாறு முக்கிய பங்காற்றுகிறது. யாழ்ப்பாணத்துக்கான குளம் என்ற குடிநீர்த் திட்டத்தை தொண்டமானாறு ஆற்றை இடைமறித்து நீரைத் தேக்கி ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

உப்பாறு

பெயருக்கேற்ப உப்புநீரைக் கொண்டுள்ள இவ்வாறு புத்தூருக்கும் சரசாலைக்கும் இடையே அமைந்துள்ள கப்புதூ என்ற இடத்தில் ஆரம்பமாகி, 12 மைல் தூரம் ஓடி நாவற்குழியில் கடலில் கலக்கிறது. இதனுடைய நீர்ப்பரப்பு 6400 ஏக்கரகும். வெள்ளநீர் வெளியேற்றத்துக்கு பயன்படும் இவ்வாற்றில் மழைகாலத்தையண்டிய குறித்த காலப்பகுதியில் மீன்பிடி நடைபெறும். மழைக்காலத்தில் வண்ணாத்திப் பாலம், கோப்பாய் பாலம், நாவற்குழிப் பாலம் ஆகியவற்றின் கீழாக இவ்வாறு பாய்கிறது.

வழுக்கையாறு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு நன்னீர் ஆறு வழுக்கையாறு. ஒரு வாய்க்கால் அளவுக்கு இன்று சுருங்கிப் போயுள்ள இந்த ஆறு அளவெட்டி பினாக்கைக் குளத்தில் ஆரம்பமாகி ஆறு மைல்கள் பயணித்து அராலியில் கடலில் கலக்கிறது. ‘யாழ்ப்பாண மாதா மலடியென்று பெயர் கேளாமல் சத்திரசிகிச்சை மூலம் பெற்றெடுத்த குழந்தையிது’ என்று இரசிகமணி கனக செந்திநாதன் இவ்வாற்றின் பிறப்பைப் போற்றுவார்.

தெல்லிப்பழை, அம்பனை, பன்னாலை பிரதேசங்களில் மழைக்காலத்தில் சேரும் உபரிநீர் அளவெட்டிப் பினாக்கைக் குளத்தை வந்தடையும். பினாக்கைக்குளம் நிறைந்தவுடன் வழுக்கையாறு ஆரம்பமாகி பெருமாக்கடவை, கந்தரோடை, சங்குவேலி, சண்டிலிப்பாய், நவாலி வழியாக உள்ள குளங்களையும் நிறைத்து அராலியைச் சென்றடைகிறது.

இலக்கியத்தில் சிறப்புப் பெற்ற ஆறாகவும் இது விளங்குகிறது. செங்கை ஆழியான் எழுதிய ‘நடந்தாய் வாழி! வழுக்கியாறு’ என்ற நடைச்சித்திரத்தின் மூலமே இது இலக்கிய ஆவணமாகியுள்ளது. சிரித்திரன் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் கதைக்களம் வழுக்கியாறு ஆரம்பமாகும் இடத்தில் இருந்து முடிவுறும் இடம்வரை இடம்பெற்றுள்ளது. தொலைந்த மாட்டைத் தேடும் படலமாக ஆரம்பிக்கும் இந்நடைச்சித்திரம் ஒரு குறுநாவல் போல சம்பவ விபரிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது. இயல்வாணனால் கவிதையொன்றும் இவ்வாறு தொடர்பில் எழுதப்பட்டுள்ளது.

கந்தரோடையை மையமாகக் கொண்டு கதிரமலை இராச்சியம் நிலைபெற்றிருந்ததை வரலாறு கூறுகிறது. உக்கிரசிங்கன் என்ற மன்னன் கந்தரோடையைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்து வந்தான் என்றும், இலகுவான போக்குவரத்துக்காக இந்த வாய்க்கால் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வழுக்கையாற்றுப் படுகையில் தொல்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலங்களில் நீரைச் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் வெள்ளநிலைமை, பயிரழிவு, மலேரியா முதலான நோய்களின் தாக்கம் காரணமாக வெள்ளநீரை கடலுக்கு அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் 90ஆயிரம் ஏக்கர் அடி நீர் ஒரு மழையாண்டில் கிடைப்பதாகவும், அதில் 40ஆயிரம் ஏக்கர் அடி நீர் விவசாயம், குடிநீர், இதர தேவைகளுக்குப் பயன்படுவதாகவும், 50ஆயிரம் ஏக்கர் அடி நீர் வீணாக கடலில் புகுவதாகவும் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. அத்தகைய உபரி நீரைக் கடலுக்கு அனுப்புவதில் இந்த மூன்று ஆறுகளும் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன.


ஆறே! வழுக்கை நீ வாழ்க!

ஓடும் மேகம் ஒன்றாகி மலையில் 

கூடும் வண்மை கண்டிலையே!

மூடும் பாறை மேலே ஊற்றாய்

பீறும் தகையும் கொண்டிலையே!

காரும் கறுத்து வானிடிய மழை

தூறும் பொழுதில் நீயுயிர்ப்பாய்.

பேரும் கொண்டாய் ஆறெனவே

பெருந்தாய்! வழுக்கை; நீ வாழ்க.


மண்ணும் குளிரவுன் மடி பெருக்கும்

மெல்ல நடந்து சென்றிடுவாய்.

நண்ணும் கரையின் சுற்றந் தழுவி

நுரைத்துச் சிரித்துச் சென்றிடுவாய்.

பொன்னும் பொருளும் சீர் கொண்டு

போவாய் ; காதற் கடல் சேர

வண்ணங் கொண்டெமை வளமூட்டும்

வடிவே! வழுக்கை; நீ வாழ்க.


பாதை மருங்கில் அணி வகுத்துப்

பூத்துக் குலுங்கும் மரக்கூட்டம்

தாதை இறைத்து மணமூட்டும்

தழுவிக் காற்று தாலாட்டும்

கோதையர்கள் குருகி னங்கள்

குளித்துப் புரள்வர் உன்மடியில்

ஓதை உனதோ? கோதையதோ?

ஓதாய்! வழுக்கை; நீ வாழ்க.


ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் முதுமொழியை

அழித்து யாழ்ப்பாண மங்கைக்கு

பேறாய் உதித்துப் பேர் போக்கினையே!

பேரரசு கதிரமலை நிலைநிற்க எல்லைச்

சீராய் நின்றாய்! உக்கிரசிங்க மன்னன்

நாவாய் நகர்ந்து பொருள் தேட

ஆறானாய்! வளநகராய் ஆக்கும் நல்ல

சூரானாய்! வழுக்கை; நீ வாழ்க.


அம்பனை வெளியின் நீர் சேர்ந்து

ஆடிப் பினாக்கைக் குளஞ் சேர

வந்தனை; பெருமாக் கடவையின் வழியே

கந்த ரோடையில் இளைப்பாறி - மெல்லச்

சங்குவேலியுள் நுழைந்து வயல் விரித்த

சண்டிலிப்பாயில் உறங்கி எழுந்து

சங்கரத்தையில் ஏறி அராலியில் நுழைந்தாய்

காணலையே! வழுக்கை; நீ எங்கே?


இயல்வாணன்

    கலைநிலம் வலி.தெற்கு கலாசார பேரவை மலர் 2018


யாழ்ப்பாணத்தின் வற்றாத நீரூற்றுகள்

 யாழ்ப்பாணத்தின் வற்றாத நீரூற்றுகள்

இயல்வாணன்



இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடும் மன்னாரில் இருந்து பரந்தன் ஊடாக முல்லைத்தீவு வரையான பகுதிகளும் சுண்ணாம்புக்கல் எனப்படும் படிவுப்பாறைகளால் ஆனது. இவை மயோசீன் என்றழைக்கப்படும் புவிச்சரிதவியல் காலத்தில் உருவானவை என புவிச்சரிதவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களின் சுவடுகள் தரையில் படிந்து நீண்டகால இரசாயன மாற்றத்துக்கு உட்பட்டு சுண்ணாம்புக் கற்பாறைகள் உருவாகின. இப்பாறைப் படைக்கு மேலாக பாறைகள் சிதைவடைந்து உருவான மண்படை காணப்படுகிறது. இப்படை ஓரிரு அடிகளில் இருந்து 30 அடி ஆழம் வரை காணப்படுகிறது.

சுண்ணாம்புக் கற்பாறைகள் நுண்துளைகளைக் கொண்டவை. நீரைக் கசியவிடும் தன்மையுடையன. அத்துடன் வெடிப்புகள், மூட்டுகளையும் கொண்டிருக்கின்றன. மழை பெய்யும் போது அந்த நீரானது இவற்றினூடாக கீழிறங்கி தரைக்கீழ் நீராகத் தேங்கிப் பரவலடைகின்றது. சுண்ணாம்புக் கல் என்பது கல்சியம் காபனேற்று என்ற இரசாயனப் பெயரால் அழைக்கப்படுகிறது. 

மழை பெய்யும் போது மழைநீரில் உருவாகும் மென் காபோனிக் அமிலம் உள்ளிட்ட அமிலங்கள் காரத்தன்மையுடைய பதார்த்தங்களில் தாக்கம் செலுத்தும் போது பாறைப் படைகளில் அரித்தல் அல்லது தின்னல் செயன்முறை நடைபெறுகிறது.

இத்தின்னல் மற்றும் அரித்தல் செயன்முறை காரணமாக படை படையாகவுள்ள மேற்பகுதி இடிந்து விழ புனற்பள்ளங்கள் என்ற நிலவுருவங்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவான நிலவுருவங்களில் தேங்கியுள்ள நீரானது வற்றாத தன்மையுடையதாக இருக்கின்றது. இவ்வாறான நிலவுருவங்கள் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ளன. இவற்றை வற்றாக் கிணறுகள் என அழைக்கிறோம். 

நிலாவரை

அத்தகைய வற்றாத கிணறுகளில் முதன்மையானது நிலாவரைக் கேணியாகும். இது யாழ்ப்பாணத்தில் இருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் இராசபாதை வீதி முடிவடையும் இடத்தில் நவக்கிரி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது விளங்குகிறது.

இது எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் கர்ணபரம்பரைக் கதையொன்றுள்ளது. இராமாயண காலத்தில் இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து வந்து இலங்கையில் சிறை வைத்திருந்தான். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வானரப்படை இராமர் அணையெனப்படும் சேதுபாலத்தை அமைத்தது. அதன்வழியாக தனது பரிவாரங்களுடன் இராமபிரான் இலங்கைக்கு வந்தார். அவ்வப்போது வானரப் படைக்கு தாகம் எடுத்த போது இராமபிரான் தனது தோளில் தொங்கிய அம்பை எடுத்து வழி வழியே குத்திச் சென்றார். குத்திய இடத்தில் நீர் பீறிட்டு எழுந்தது. அவ்வாறு இராமர் குத்திய ஒரு இடமே நிலாவரையாகும். அது போலவே பொக்கணை, வில்லூன்றி என்பனவும் உருவாகின என்கிறது இச்செவி வழிக் கதை.

நிலாவரை கடல் மட்டத்தில் இருந்து 0.25 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. 52அடி நீளமும் 37 அடி அகலமும் கொண்ட நீள் சதுரவடிவில் அமைந்த இந்த கேணி போன்ற நீர்நிலை ஆரம்பத்தில் எவ்வளவு ஆழம் கொண்டது என்று அறியப்படவில்லை. அதனால் வானத்தில் உதிக்கும் நிலா வரையான தூரமளவுக்கு ஆழம் இருக்கும் என்று கருதியதால் நிலாவரை என அழைக்கப்பட்டதாகக் கூறுவர். 

இது 164 ½ அடி ஆழமுடையது என முன்னர் சங்கிலிகளைப் பயன்படுத்தி ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர். மேற்பரப்பில் இருந்து 50 அடி வரை நன்னீரைக் கொண்டது. 50 முதல் 80 அடி வரை சவர் நீரையும், 80 முதல் 130 அடி வரை கடல்நீரையொத்த உப்புநீரையும், 130 அடியின் கீழே கடல்நீரை விடக் காரமான உப்புநீரையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 1824ஆம் ஆண்டில் அப்போதய அரசாங்க அதிபராயிருந்த பேர்சிவல் ஒக்லன்ட்டயிக்கின் (Pநசஉiஎயட  யுஉமடயனெ னலமந) காலத்தில் நிலாவரைக் கேணியின் ஆழம், நீர் வற்றும் வேகம் என்பவற்றைக் கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீராவியால் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி நீர் இறைக்கப்பட்டது. 8 நாள்களாக நீரிறைத்தும் நீர் வற்றவில்லை. 1946ஆம் ஆண்டில் அதிகவலுக் கொண்ட நீரிறைக்கும் இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கலன் வீதம் ஒரு வாரத்துக்கு நீரிறைக்கப்பட்டது. ஆயினும் நீர் வற்றவில்லை. ஆனால் நீரின் தடிப்பில் மாற்றம் காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

2016ஆம் ஆண்டு கடற்படை சுழியோடிகள் மற்றும் ரோபோவின் உதவியுடன் ஆழம், நீரின் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 55.5 மீற்றர் அல்லது 182 அடி ஆழமானது எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் நீண்ட காலத்துக்கு முன்னர் விழுந்திருந்த மூன்று மாட்டு வண்டில்கள் அடியில் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் நிலத்தடி நீரோட்டங்களுடனான தொடர்பும் கண்டறியப்பட்டது. நாலாதிசைகளிலும் வேகமானதும், மிதமானதுமான நீரோட்டங்கள் கண்டறியப்பட்டன. முன்னைய காலத்தில் நிலாவரையில் தேசிக்காய் போட்டால் கீரிமலையில் அதை எடுக்கலாம் எனக் கூறக் கேட்டிருக்கிறோம். அதனை மெய்ப்பிப்பது போல இந்த நீரோட்டங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரைக் கிணற்றில் இருந்து அயற் பிரதேசங்களின் விவசாய நடவடிக்கைக்கு நீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் பின்னர் அதனை தொல்பொருள் திணைக்களம் கையேற்றதைத் தொடர்ந்து அது நின்று போனது. குறைந்தளவு பிரதேசத்துக்கு நிலாவரை மூலம் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளலாம். வல்லை வெளியின் தென்பகுதியை மண்ணிட்டு நிரப்பி மாகாண அரச நிறுவனங்களையும் குடியிருப்புத் தொகுதிகளையும் அமைக்கலாம்.  அந்த இடத்துக்கான நீராதாரத்தை நிலாவரையில் இருந்து குழாய் வழியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பொக்கணை

சுன்னாகத்தில் இருந்து ஊரெழு நோக்கிச் செல்லும் திலீபன் வீதியில் உள்ளது பொக்கணை என்னும் வற்றாத நீரூற்றாகும். இது யாமா எனவும் அழைக்கப்படுகிறது. சிறிய பள்ளமாக பொந்து போலக் காணப்படும் இதற்குள் இருக்கும் நீர் வற்றுவதில்லை. தற்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அருகில் குழாய்கிணறு தோண்டப்பட்டு அதிலிருந்து பெறப்படும் நீர் குழாய் வழியாக மானிப்பாய், கந்தரோடை, கட்டுடை, நவாலி முதலிய இடங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.  

முன்னர் காற்றாடி மூலமான நீரிறைக்கும் செயற்பாடும், நீர்த்தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் செயற்பாடும் இடம்பெற்று வந்ததாகவும், யுத்தகாலத்தில்  இச்செயற்பாடு நின்று போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழைகாலத்தில் வெளியில் உள்ள மழைநீர் இதற்குள் புகுந்து மறைந்து விடும். புயல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் போதும் வெள்ளப்பெருக்கின் போதும் இதற்குள் இருந்து நீர் பொங்கிப் பிரவகிப்பதையும் காண முடியும்.

 பொக்கணை பற்றி ஊரில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு கதை உள்ளது. அருகில் உள்ள ஆலய பூசகர் பொக்கணையின் அடியில் தங்கத்தினாலான சூலம் இருப்பதாகக் கனவு கண்டார். அதனை அவர் ஊர் மக்களிடம் கூறியிருந்தார். அதனைக் கேட்ட ஒருவர் பொக்கணையின் அடிப்பகுதிக்குள் மூழ்கிச் சென்று பார்த்து விட்டு மேலெழுந்து வந்து “ஒரு சூலம் இருக்கிறது. அதைச் சுற்றி பாம்புகள் இருக்கின்றன. கீழே பெரிய ஆறு ஓடுகிறது” என்று கூறினார். மீண்டும் மூழ்கி சூலத்தை எடுத்து வரச் சென்றவர் மீண்டு வரவில்லை.

இடிகுண்டு 

நவாலியில் உள்ள கிராய் என்ற பகுதியில் வயல்நிலங்களுக்கு அருகே ஒரு குட்டை போலுள்ள வற்றாத நீரூற்று இடிகுண்டாகும். “இது 1905ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20ஆந் திகதி விடிகாலையில் உருவானது. திடீரென்று இடி இடிப்பது போல பெருஞ் சத்தம் கேட்டது. நிலம் இடிந்து விழ ஒரு அடி உயரத்துக்கு உப்புநீர் கொந்தளித்து எழுந்தது. மாலையில் அந்நீர் வற்றிவிட அந்த இடத்தில் 10 அடி அகலமும், 30 அடி நீளமும் 30 அடி ஆழமும் கொண்ட கேணி உருவானது” என பொன்னையா மாணிக்கவாசகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். வீதியோரமாக  அதனை இன்றும் காணலாம்.

அல்வாய் மாயக்கை குளம், குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு என்பனவும் வற்றாத நீர்நிலைகளாகும்.

தாய்வீடு கனடா



நேர்காணல் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

 நேர்காணல்

பண்டிதர் சு.வேலுப்பிள்ளை(சு.வே)

நேர்கண்டவர், படங்கள் : இயல்வாணன்

சு.வே. என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை நாவற்குழியில் பிறந்தவர். 1921ஆம் ஆண்டு மே மாதம் 4ஆந் திகதி சுப்பிரமணியம் - தையல்நாயகம் தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் பிரம்மச்சாரியத்தைக் கைக்கொண்டவராக, தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

ஈழத்தில் உருவகக் கதை முன்னோடியாகக் கருதப்படும் இவர் சிறுகதை, கட்டுரை, நாடகத்திலும் முத்திரை பதித்த ஒருவராவார். கல்வித் திணைக்களத்தின் பாடநூல் எழுத்தாளராக இருந்த இவர் துணைப் பாடநூல்களையும், பயிற்சி நூல்களையும் எழுதியவராவார். 84 வயதில் முதுமையும் நோயும் தளர்வடையச் செய்திருந்த நிலையில் அவரை நாவற்குழியில் சந்தித்தேன். பேசுவதற்கும், கடந்த காலச் சம்பவங்களை ஞாபகத்தில் கொள்வதற்கும் சிரமப்பட்ட நிலையிலேயே இந்நேர்காணலைப் பதிவு செய்ய முடிந்தது.

அவரது உறவினரான எஸ்.தங்கராசா உடனிருந்து கூறிய கருத்துகளும், அவர் பற்றிய ஆய்லுக் கட்டுரையும் நேர்காணலைப் பூர்த்தி செய்ய உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி: உங்களது வாழ்க்கை இளந் தலைமுறையினருக்கு ஊக்க மருந்தாக இருக்கும். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்: இயற்கையழகு மிகுந்த நாவற்குழி எனது ஊராகும். எனது தந்தையார் ஒரு விவசாயி. புராண படனத்திலும், பிரசங்கத்திலும் தேர்ச்சி பெற்றவர். குடும்பத்தில் மூத்த பிள்ளையாக நான் பிறந்தேன். இரண்டு தம்பியரும், இரண்டு தங்கைகளும் எனது உடன்பிறப்புகள்.



இன்றைக்கு நாவற்குழி மகா வித்தியாலயமாக இருக்கின்ற C.M.S பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றேன். இடைநிலைக் கல்வியை கோவிலாக்கண்டி மகாலக்சுமி வித்தியாலயத்தில் தொடர்ந்தேன். எட்டாம் வகுப்பிலிருந்து இன்றைய டிறிபேக் கல்லூரி எனப்படும் சாதனா பாடசாலையில் படித்தேன். அங்கு சிரே~;ட பாடசாலை தராதரப் பத்திரப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்தேன். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குச் செல்வதற்கு முன்னுள்ள இரண்டாண்டு இடைவெளியில் கைதடி சி.எம்.எஸ். பாடசாலையில் ஆங்கிலம் கற்றேன். அங்கு தலைமையாசிரியராக இருந்த பரமசாமி என்பவரது தூண்டுதலின் பேரில் திருநெல்வேலி காவிய பாடசாலையில் பாலபண்டித வகுப்பில் சேர்ந்து பரீட்சையில் சித்தியடைந்தேன்.

இக்காலப் பகுதியில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1939இல் சைவாசிரிய கலாசாலையில் பிரவேச பணடிதர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, தெரிவான 1 பேரில் நானும் ஒருவனானேன். 

அங்கு பண்டிதமணியிடம் தமிழும், மகாமுனிவரெனப் போற்றப்படும் சிந்தனைச் செல்வர் அளவெட் பொ.கைலாசபதியிடம் சமயமும் கற்க வாய்ப்பு ஏற்பட்டது. கைலாசபதி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு மெய்ப்பொருள் அடிப்படையில் புதிய வியாக்கியானம் செய்தவர். அதேபோல பண்டிதமணி அவர்களது இலக்கிய நயப்பு உன்னதமானது.

இவர்கள் இருவரிடமும் கற்கக் கிடைத்தது நான் பெற்ற பெரும் பேறாகும். இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்துக்கு இவர்களது வழிகாட்டலே துணை நின்றதென நம்புகிறேன்.

1942ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினேன். பயிற்சி முடிந்தாலும் உடனே தொழில் தேட முடியாது. நான்காண்டுகள் வேலை தேடி முயற்சி செய்தேன். இக்காலத்தில் நாவற்குழியில் சைவவித்தியாவிருத்திச் சங்கம் ஒரு பாடசாலையை நிறுவியது. அங்கு வேதனமின்றிச் சிலகாலம் பணியாற்றினேன். 

1946இல் ஹற்றனிலுள்ள டிக்கோயா டங்கெல்ட் உதவி நன்கொடை பெறும் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றினேன். 1949இல் ஹற்றன் புனித ஜோன் பொஸ்கொ பாடசாலையில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தேன். சுன்னாகம் திருஞான சம்பந்த வித்தியாசாலை, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பணியாற்றினேன். இப்போது ஓய்வுநிலையில் உள்ளேன்.

கேள்வி : நீங்கள் ஓர் ஆசிரியராக மட்டுமல்ல பாடநூல் எழுத்தாளராகவும் கடமையாற்றியிருக்கிறீர்கள். அது பற்றிக் கூறுங்கள்.

பதில்  : சுன்னாகத்தில் நான் பணியாற்றிய போது திருமகள் அழுத்தகம், தனலக்சுமி புத்தகசாலை ஆகியவற்றின் தொடர்பு ஏற்பட்டது. அங்கு முகாமையாளராக இருந்த அப்புக்குட்டி மற்றும் பண்டிதர் வ.நடராசா, மு.சபாரத்தினம் ஆகியோரின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. இத்தொடர்பின் விளைவாக 5ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘சந்திரமதி’, 7ஆந் தர மாணவர்களுக்கான உப பாடநூலான ‘குகன்’ ஆகிய இரு சிறுவர் இலக்கிய நூல்கள் என்னால் எழுதப்பட்டன. எனது முதல் நூலாக்க முயற்சிகளாக இவற்றைக் குறிப்பிடலாம்.

அதன்பின்உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டியாக ‘நாற்பது கட்டுரை மஞ்சரி’ என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதி வெளியிட்டேன். அத்துடன் பண்டிதர் வ.நடராசாவுடன் இணைந்து தமிழ் மொழிப் பயிற்சி நூல்களையும் எழுதினேன்.

1966இல் அப்போதய கல்வி அமைச்சரின் திட்டத்துக்கமைய அரச பாடசாலைகளுக்கான பாடநூல்களை எழுதும் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்ப் பாடநூல்களை எழுதும் ஒரு குழு பலாலி ஆசிரியர் கலாசபலை அதிபர் கந்தசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் பண்டிதர் க.சச்சிதானந்தன், கவிஞர் அம்பி(இ.அம்பிகைபாகன்), கந்தப்பு ஆகியோருடன் நானும் இடம்பெற்றிருந்தேன்.

காலத்துக்குக் காலம் ஆள்கள் மாறிய நிலையில் இயங்கிய பாடநூலாக்கக் குழுவில் நான் 1981 வரை தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளேன். பல்வேறு அறிஞர்களுடன் குழுவாக இயங்கப்பெற்ற அனுபவம் எனக்குக் கிடைத்திருந்தமை பெருமையும் மனநிறைவும் தரும் விடயங்களாகும்.

கேள்வி : ஆக்க இலக்கியச் சூழலுக்குள் எவ்வாறு உங்களது பிரவேசம் நிகழ்ந்தது?

பதில் : நான் முன்னர் கூறிய அம்சங்களும் இவ்வினாவுக்கான விடையாகும்.  நான் ஹற்றன் புனித பொஸ்கோ பாடசாலையில் கற்பித்த வேளை அங்கு நாடகப் பிரதிகளை எழுதுதல், நெறிப்படுத்தி மேடையேற்றல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். அப்பாடசாலையின் ஆண்டு மலரில் பாடசாலை வரலாற்றை பொஸ்கோ புராணம் என்ற பெயரில் கவிதை வடிவில் பாடியிருந்தேன். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இருந்தவேளை நாடகப் பிரதிகள் பலவற்றை எழுதியிருந்தேன்.

எனினும் 1943இல் ஈழகேசரியில் எழுதிய ‘கிடைக்காத பலன்’ என்ற சிறுகதையுடனேயே எனது இலக்கியப் பிரவேசம் ஆரம்பமாகியதெனலாம். ஈழகேசரி, இந்துசாதனம் முதலான பத்திரிகைகளைப் படித்த அருட்டுணர்வும், கனக செந்திநாதன், வரதர், நாவற்குழியூர் நடராசன், சு.இராஜநாயகன், த.தியாகராசா முதலான இலக்கிய நண்பர்களின் தொடர்பும் எனது இலக்கியப் பிரவேசத்துக்குத் துணை செய்துள்ளன. ஈழகேசரி, கலைச்செல்வி, வீரகேசரி ஆகியவற்றில் எனது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. ‘மண்வாசனை’ என்ற சிறுகதைத் தொகுதி 1972இல் திருமகள் அழுத்தகத்தால் வெளியிடப்பட்டது. இவற்றுடன் 6 கதைகளை இணைத்து ‘பாற்காவடி’ என்ற தொகுப்பை 2002இல் யாழ்.இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது.

கேள்வி : ஈழத்து நாடகத்துறையில், குறிப்பாக வானொலி நாடக எழுத்தாக்கத்தில் உங்களுடைய பங்குபணி குறித்து விதந்து கூறப்படுகிறது. உங்களது நாடக ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

பதில் : ஆசிரியராகப் பணியாற்றிய போது பாடசாலையிலும், போட்டிகளிலும் பல நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி மேடையேறியுள்ளேன். அதுவே வானொலி மற்றும் மேடை நாடகங்களை உருவாக்க வழிகோலியது. இலங்கை கலைக்கழகத்தால் நடத்தப்பெற்ற முழுநீள நாடகப் போட்டியில் வஞ்சி, எழிலரசி ஆகிய எனது நாடகங்கள் முதற்பரிசைப் பெற்றன. அதுபோல இலங்கை வானொலி நாடகப் போட்டியில் ‘மண்வாசனை’ என்ற நாடகம் முதற் பரிசைப் பெற்றது. ‘ஒருமைநெறித் தெய்வம்’ நாடகமும் பரிசு பெற்றுள்ளது.

வானொலியில் பல தொடர் நாடகங்களை எழுதியுள்ளேன். ஏட்டிலிருந்து (16 வாரங்கள்), கிராம ராச்சியம்(32 வாரங்கள்), பொன்னாச்சிக்குளம்(97 அங்கம்) என்பன இவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

இவற்றை விடவும் பல நாடகங்களை எழுதியுள்ளேன். இவற்றின் பிரதிகள் கையில் இல்லை. ஞாபகத்திலும் இல்லை. திருக்குறட் சித்திரம் (36 வாரங்கள்), நாட்டுக்கு நல்லது(24 வாரங்கள்), இலக்கிய ரசனை(32 வாரங்கள்) ஆகிய உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் வானொலியை அதிகம் பயன்படுத்திய படைப்பாளிகளில் நானும் ஒருவன்.

கேள்வி : ஈழத்தில் உருவகக் கதையின் பிதாமகனாக உங்களைக் குறிப்பிடுகின்றனர். உருவகக் கதையின்பால் உங்களின் நாட்டம் சென்றது எவ்வாறு?

பதில் : இந்தியாவில் கலீல் ஜிப்ரான் உருவகக் கதையின் முன்னோடியாக விளங்கினார். வி.ஸ.காண்டேகர் உருவகக் கதைகள் புகழ் பெற்றவை. கலைமகள், கல்கி இதழ்களில் வெளிவந்த உருவகக் கதைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். 

எனது மண்ணின் நிலைக்களனில் நேர்பொருளில் கூறமுடியாதவற்றை உருவகப்படுத்திக் கூறுவதற்கு நான் முயன்றேன். இதுவே எனது உருவகக் கதைகளின் தோற்றத்துக்குக் காரணம். 

மணற்கோயில், வெறுங்கோயில், வனமுல்லை, சுதந்திரம், மனக்குருடு உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளேன். இவற்றை ‘மணற்கோயில’ என்ற தலைப்பில் 1999இல் நூலாக வெளியிட்டுள்ளேன்.

கேள்வி : ராஜாஜி போற்றிய உருவகக் கதையின் பிதாமகர் என எஸ்.பொன்னுத்துரையும், இரசிகமணி கனக செந்திநாதனும் உங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அது பற்றிக் கூறுங்கள்.

பதில் :  எனது ஓர் உருவகக் கதையான ‘மணற்கோயில்’ கலைச்செல்வியில் வெளிவந்தது. அதன் ஆசிரியர் ‘சிற்பி’ சிவசரவணபவன் கலைச்செல்வி இதழ்களை அப்போது இந்தியாவின் கவர்ணர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும் அனுப்பி வந்தார். இக்கதை வந்து சில காலத்தின் பின் எழுத்தாளர் மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக அமரர்கள் க.தி.சம்பந்தனும், சு.இராஜநாயகனும் சென்னைக்குச் சென்றார்கள். அவ்வேளை அவர்களிடம் கல்கி ஆசிரியராக இருந்தவரும் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் தலைவருமான மீ.ப.சோமசுந்தரம் ராஜாஜி சு.வேயின் கதை பற்றி தன்னிடம் புகழ்ந்து கூறியதாக குறிப்பிட்டிருந்தார். ராஜாஜி பாராட்டினாரென்றால் அதற்கு சிற்பியே காரணகர்த்தா ஆவார்.

கேள்வி : இலக்கியம் பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் : இலக்கியம் என்பது படிப்பவர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி அவர்களது பாவனாசக்தியை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி : இளந் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை யாது?

பதில் : நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். அனுபவங்களை உள்வாங்க வேண்டும்.அதன்பின் தான் வாழும் மண்ணின், இயற்கையின், மனிதர்களின் இயல்புத்தன்மையோடு எளிய நடையில் படைப்புகளை ஆக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும்.

உதயன் சூரியகாந்தி 12-09-2004






















சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன்

 சேவையால் சிறந்தவர் பொன்னுத்துரை கமலநாதன் 

சு.ஸ்ரீகுமரன்


தனது அறிவாற்றலையும் ஆளுமையையும் சமூக மேம்பாட்டுக்காக பயன் படுத்துபவர்கள்  சிலரே. அவ்வாறு தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமூகச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணித்த ஒருவராக அமரர் பொன்னுத்துரை கமலநாதன் விளங்குகிறார்.

13-05-1947இல் தாவடி என்ற கிராமத்தில் பிறந்த கமலநாதன் தனது ஆரம்பக் கல்வியை தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூ}ரியில் சேர்ந்து தட்டச்சு சுருக்கெழுத்து துறையில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தட்டெழுத்தாளராக நியமனம் பெற்று கடமையாற்றினார்.

சிறிது காலத்தின் பின்னர் அளுத்கம ஸாஹிரா கல்லூரியில் ஆசிரிய பணியினை ஏற்றுக் கொண்டார். இக்காலத்தில் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் வர்த்தக பாடத்தில் ஆசிரிய பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். அத்துடன் ஸ்ரீஜெவர்த்தனபுர பல்கலைக்கழகம் வணிகமாணி சிறப்பு பட்டத்தினைப் பெற்றுக் கொண்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்புளோமாவையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரிய நியமனம் பெற்று பகுதித் தலைவராகவும் உப அதிபராகவும் கடமையாற்றினார். இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி தரம் 1 அதிபர் நியமனம் பெற்று யூனியன் கல்லூரியிலேயே 1994இல் அதிபர் பதவியினையும் ஏற்றுக் கொண்டார். அடுத்து தான் கல்வி பயின்ற கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றி (1996-2007) அங்கேயே ஓய்வுபெற்றார். யூனியன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் தனது அர்ப்பணிப்பான சேவையினால் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அப்பாடசாலைகளை மிளிரச் செய்த பெருமை இவருக்குரியது.

படிக்கும் காலத்தில் கொக்குவில் கிழக்கு சனசமூக நிலையத்தில் பொருளாளராக இருந்துள்ளார். விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவர் நீண்ட காலம் பொருளாளராகவும் இருந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், அப்பாடசாலையின் நிதியங்கள் ஆகியவற்றிலும் இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம், சுன்னாகம் தெற்கு சிவபூதராயர் ஆலய தர்மகர்த்தா சபை, தென்சுன்னையூர் சிவபூதராயர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புகளின் பொருளாளராக கடமையாற்றியுள்ளார்.

சைவ பரிபாலன சபையின் தேர்வுச் செயலாளராக பல ஆண்டு காலம் பணியாற்றி இலங்கை முழுவதும் சைவநெறி மற்றும் தமிழ்மொழித் தேர்வுகள் நடைபெறவும், மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறவும் அயராது பாடுபட்டார். சுன்னாகம் சிவில் பாதுகாப்புக் குழு, சுன்னாகம் அரச மருந்தக நோயாளர் நலன்புரிச் சங்கம், செனட்டர் நாகலிங்கம் சிலை உருவாக்கக் குழு என ஒன்றல்ல இரண்டல்ல பல அமைப்புகளில் அவர் பொறுப்பான பதவியினை வகித்து சமூக சேவையினை ஆற்றியுள்ளார். இவரது சேவையினைக் கௌரவித்து சுன்னாகம் தெற்கு இந்து இளைஞர் மன்றம் சமூகச்சுடர் விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது.

தனது வணிகத்துறை அறிவை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் வழங்கி, பலரை உயர்த்தி வைத்த சிறப்பும் இவரைச் சாரும். இவரிடம் பயின்றவர்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். இவ்வாறு செயற்கரிய செய்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பொ.கமலநாதன்  25-06-2024 அன்று காலமானார். அவரது பூதவுடல் நீங்கி ஒரு வருடஞ் சென்ற போதும், அவரது சேவையும் கீர்த்தியும் என்றென்றும் அழியாது நினைவில் நிற்கும்.

uthayan 15-06-2025



சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம்

 

சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய சிற்பி செனட்டர் நாகலிங்கம் 

சு.ஸ்ரீகுமரன்

(சுன்னாகம் பட்டின சபையின் தலைவராக இருந்து சுன்னாகம் நகரத்தை உருவாக்கிய பெருந்தகையான அமரர் செனட்டர் நாகலிங்கத்தின் அளப்பரிய சேவையினை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் முகமாக சுன்னாகத்தின் அன்பர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு திருவுருவச் சிலையினை நிறுவியுள்ளனர். அச்சிலையின் திறப்புவிழா இன்று 07-0-2025 சனிக்கிழமை வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.)

 வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலைக்கு அருகாக சுன்னாகம் பட்டினசபைத் தலைவராக இருந்து நகர நிர்மாணத்துக்கு முக்கிய பங்காற்றிய செனட்டர் பொன்னம்பலம் நாகலிங்கத்தின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வேளையில் செனட்டர் நாகலிங்கத்தின் பணிகளை நினைவுகூர்வது காலப் பொருத்தமாகும்.

14-01-1903அன்று தெல்லிப்பழையில் பிறந்த நாகலிங்கம் புகழ்பூத்த யாழ்ப்பாணக் கல்லூரியிலும், திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரியிலும் கல்வியைக் கற்றார். தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை முடித்து சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் தோற்றி சிறப்பான வாதம் புரிந்து புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கினார். 

1924ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸில் ஸ்தாபக உறுப்பினராக இணைந்து கொண்டதுடன் இணைச் செயலாளராகவும் செயற்பட்டார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களிலும், சமூகநீதிப் போராட்டங்களிலும் பங்குபற்றினார். தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமபந்தி போசனம், ஆலயப் பிரவேசம் போன்ற செயற்பாடுகளில் செயலூக்கத்துடன் பணியாற்றினார்.

யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் செயற்பாடுகள் செயலிழந்து போனதையடுத்து சமசமாஜக் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு ஒரு இடதுசாரியாகச் செயற்பட்டார். ஒரு தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்த இவர் சிறந்த தொடர்பாடற் திறனைக் கொண்டிருந்தார். இடதுசாரி அரசியல் தலைவர்களாக விளங்கிய கொல்வின் ஆர்.டீ.சில்வா, லெஸ்லி குணவர்த்தன, என்.எம்.பெரேரா போன்றோருடன் நெருக்கமான உறவைப் பேணினார். இலங்கை தொழிலாளர் சங்கம், இலங்கை சுருட்டுத் தொழிலாளர் சங்கம், வடபிராந்திய பஸ் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருந்து தொழிலாளர் நலன்பேணும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.

தொழிலாளர் பிரதிநிதியாக லங்கா சமசமாஜக் கட்சி சார்பாக செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1951 முதல் 1958 வரை செனட்டராக பதவி வகித்தார். செனற் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தொழிற்சங்கவாதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி மன்ற எல்லை மறுசீரமைப்பின் கீழ் உடுவில் கிராமசபையில் இருந்து சுன்னாகம் பட்டினசபை பிரிக்கப்பட்டு 1964ஆம் ஆண்டு ஜனவரி முதலாந் திகதியில் இருந்து செயற்பட்டது. சுன்னாகம் பட்டினசபையின் முதற் தலைவராக செனட்டர் நாகலிங்கம் பொறுப்பினை ஏற்றார். 1976இல் அச்சபை கலைக்கப்படும் வரை அதன் தலைவராகப் பணியாற்றினார். இக்காலத்தில்  அவர் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

 சுன்னாகம் பட்டின சபை அலுவலகம் தனியார் வீட்டில் இயங்கி வந்தது. அதனை நகர மத்தியில் சபைக்குச் சொந்தமான இருமாடிக் கட்டிடத்துக்கு மாற்றியமைத்த பெருமை இவரைச் சாரும். தனது நண்பரான கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் வரவுசெலவுத் திட்டத்தில் 15 இலட்ச ரூபா நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு கீழே கடைத்தொகுதிகளும் மேலே அலுவலகமும் கொண்ட மாடிக்கட்டிடம் கட்டப்பட்டது. இவ்வாறே அரசியல் தலைவர்களுடனான தனது உறவை சபையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொண்டார். வெளிநாட்டுத் தூதுவரகங்களுடனும் நல்ல தொடர்பினைப் பேணினார். 

சுன்னாகம் சந்தையானது குத்தைகையாளர்களின் பொறுப்பில் இருந்தது. அதனை பட்டினசபை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் நன்மை பயக்கச் செய்தார். அத்துடன் 30 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததுடன் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக சுன்னாகம் பட்டின சபையை மிளிரச் செய்தார்.

தனியார் வீடொன்றில் இயங்கி வந்த சுன்னாகம் பொது நூலகத்தை புதிய கட்டிடம் கட்டி அதில் இயங்கச் செய்ததும் இவரது காலத்தில்தான். மாணவர்களுக்கு அறிவு விருத்தியை ஏற்படுத்தும் நிலையமாக சுன்னாகம் பொது நூலகம் இன்றளவும் நிலைபெற்று நிற்கிறது. அத்துடன் நூலகத்தில் அக்காலத்தில் படிப்பு வட்டம் (Study Circle) ஒன்றும் சிறப்பாகச் செயற்பட்டது. ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் புகழ்பூத்த அதிபர் ஒறேற்றர் சுப்பிரமணியம், வைசர் என அழைக்கப்படும் அதிபர் சிவசுப்பிரமணியம், தொழிற்சங்கவாதி இராசசிங்கி முதலானோர் இவ்வட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தனர். பல அறிஞர்களை அழைத்து உரைகளை ஏற்பாடு செய்து அறிவுப் பெருக்கத்துக்கு இவர்கள் வித்திட்டனர்.

இவரது காலத்தில் சுன்னாகம் சந்தியில் இருந்து சுன்னாகம் பொதுநூலகம் வரையான கே.கே.எஸ்.வீதி கொங்கிறீட் வீதியாக மாற்றப்பட்டது. அத்துடன் பல வீதிகளைப் புனரமைப்பதிலும், மின்விளக்குகளைப் பொருத்துவதிலும் இவர் முன்னுரிமையளித்துச் செயற்பட்டார்.

சுன்னாகம் பட்டின சபைக்கு தூய்மைத் தொழிலாளர்களை நியமித்து சுன்னாகம் நகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பேணியதோடு சோலைவரி சேகரிப்பாளர்களை நியமித்து வரிவருமானத்தை ஈட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

இவ்வாறு தனது அறிவாலும், ஆளுமையாலும் சுன்னாகம் பட்டினத்தை சிறப்பான முறையில் கட்டமைத்த செனட்டர் பொ.நாகலிங்கத்துக்கு அவ்வூர் மக்கள் ஒன்றுசேர்ந்து சிலை அமைப்பது அவரது சேவையினையும், அர்ப்பணிப்பினையும் நன்றியுடன் நினைவுகூரும் சிறப்பான செயற்பாடாகும்.

உதயன் 07-06-2025


Wednesday, January 8, 2025

விமர்சனம் : சாந்தனின் மணிப்பூர் நினைவுகள்

 சாந்தனின் மணிப்பூர் நினைவுகள்

இயல்வாணன்

சாந்தன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வரும் ஈழத்தின் முக்கிய படைப்பாளியாவார். இவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. தமிழில் 27 நூல்கள் வெளிவந்துள்ளன. வங்கமொழியிலும், சிங்களத்திலும் இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள் ஒவ்வாரு நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் 9 நூல்கள் வெளிவந்துள்ளன. 

சாந்தனின் எழுத்துகளின் சிறப்பு எளிமையான குறுகத் தறித்த மொழிநடைதான். சொல்லவேண்டிய விடயத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும், அழகியல் வெளிப்பாட்டோடும் சொல்லும் திறன் அவரிடமிருக்கிறது. அதுவே அவரது எழுத்துகளை ஏனையோரிலிருந்து வேறுபடுத்துவதாகும். 

பயண இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் வந்துள்ளன. பயண இலக்கியங்கள் வெறுமனே இடங்கள் குறித்த பதிவுகளல்ல. குறித்த இடங்களின் இயற்கையழகு, புவியியல் சார்ந்த விடயங்கள், பண்பாட்டு அம்சங்கள், வரலாற்றுக் குறிப்புகள், உயிர்ப்பல்வகைமை குறித்த அவதானங்கள், மனித வாழ்க்கை முறை மற்றும் நடத்தைகள் முதலான இன்னோரன்ன விடயங்கள் பயண இலக்கியங்களுக்குள் செறிந்துள்ளன. சொல்லுகின்ற முறைமையாலும், கூர்ந்த அவதானிப்பினாலும், அவற்றைக் கவனப்படுத்தி வெளியிடுவதாலும் பயண இலக்கியங்கள் பேசப்படுவனவாக உள்ளன. கி.வா.ஜகந்நாதனின் இலங்கைப் பயணக் கட்டுரைகள் இன்றும் பேசப்படுகின்றன. மணியனின் பயணக் கட்டுரைகள் சுவாரஸ்யமாக வாசிக்கப்பட்டன. 

சாந்தன் ஏற்கனவே ஒளிசிறந்த நாட்டினிலே என்ற பயணநூலை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் என 15 குடியரசுகளாகப் பிரிய முன்னர் இவையெல்லாம் சோவியத் ஒன்றியம் என்ற பெயரிலேயே இருந்தன. 1990களிலேயே அது உடைந்து சிதறியது. சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான நாடுகள் இணைந்து இரண்டாம் உலக நாடுகள் என அழைக்கப்பட்டன. அந்த சோவியத் ஒன்றியத்துக்குப் பயணப்பட்டு அங்கு கண்டனுபவித்தவற்றை ஒளிசிறந்த நாட்டினிலே  என கட்டுரையாக ஈழமுரசில் எழுதினார்.  அது ஈழமுரசு வெளியீடாக 1985இல் நூலாக வெளிவந்தது.

அதுபோல கென்ய நாட்டுக்குப் பயணப்பட்ட அனுபவங்களை காட்டுவெளியிடை(2007) என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் இலக்கிய ரீதியாக பயணப்பட்ட அனுபவங்களை எழுத்தின் மொழி(2020) என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

இப்போது மணிப்பூர் நினைவுகள்(2024) என்ற நூலினை வெளியிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்குட்பட்டு, சமையல் எரிவாயுவுக்கும், எரிபொருளுக்கும் தட்டுப்பாடும் வரிசைகளும் நிலவிய நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள், ஏனைய பொருட்கள் உச்சவிலையில் விற்ற காலத்தில் பணவீக்க நிலைமையுடன் இலங்கை பயணப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மணிப்பூர் இலக்கிய விழாவில் பங்குபற்றுமாறு இவருக்கு அழைப்பு வருகின்றது. அந்த நிலையிலும் இலக்கிய விழாவில் பங்குகொள்ள சாந்தன் ஆர்வம் கொண்டு 15 மடங்கு கட்டணம் செலுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்று, அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கிறார். அந்தப் பயண அனுபவங்களையே இந்த நூலில் அவர் தந்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், திரிபுரா, நாகலாந்து ஆகிய ஏழு மாநிலங்களும் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. எட்டாவதாக உள்ள சிக்கிம் சற்றுத் தள்ளியிருப்பதால் சகோதரன் என அழைக்கப்படுகின்றது என்ற இட அமைவுத் தகவலை இந்நூல் ஆரம்பத்தில் தருகிறது. இந்த மாநிலங்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் பங்களாதே~; இருப்பதால் இவற்றுக்கிடையே பயணப்பட 1500 கிலோமீற்றர் தூரமும் 35 மணிநேரமும் தேவைப்படுவதாக ஒரு தகவலையும் தந்துள்ளார்.

இவ்வாறே அந்த ஊரின் இயற்கை வனப்பினையும், போக்குவரத்து மார்க்கங்களையும், கலாசார அம்சங்களையும் அவ்வப்போது சொல்லிச் செல்கிறார். ஒரு பயணி பயணிக்கும் போது சந்திக்கும் மனிதர்களையும், இடங்களையும், கண்ட காட்சிகளையும், மேற்கொண்ட உரையாடல்களையும் விவரணப் பாங்கில் சொல்லுகின்ற போது அது  இலக்கியமாகிறது. ஒரு குறுநாவலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த மணிப்பூர் இலக்கிய விழாவுக்கு சங்காய் திருவிழா என்றே பெயரிடப்பட்டிருந்தது. சங்காய் என்பது இப்பிரதேசத்திற்கே உரித்தான அழிந்து வரும் உயிரினமான சங்காய் மானின் பெயராகும். மணிப்பூரின் தனித்துவத்தையும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பையும் கருதி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த இலக்கிய விழாவை ஏற்பாடு செய்தவர்கள் முன்னரங்குக்கு வராமல் பின்னிருந்தே நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியிருந்தமை பற்றியும் இந்நூல் பேசுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காங்லா கோட்டை, ராஜ்குமார் சந்திரஜித்சனா சிங் என்ற ஓவியரின் கலை அருங்காட்சியகம், மணிப்பூரின் பாரம்பரிய உணவகம், பாக்யசந்ரா அரங்கு, லோக்டாக் ஏரியின் மந்தா தீவருகே அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைய என்று ஒவ்வொரு இடங்களையும், அதன் வரலாற்றினையும், அது தொடர்பான இலக்கியங்களையும் இந்நூலில் சாந்தன் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார். அங்கு சந்தித்த மனிதர்களையும், அவர்களது பெருமைகளையும், அன்பையும் பற்றியும் இந்நூலில் பேசியுள்ளார்.

நாமறியாத பல தகவல்களை சுருக்கமாக விபரிக்கும் வகையில் இந்நூலை அவர் ஆக்கியுள்ளார். பன்மொழி இலக்கியகர்த்தாக்களின் கூடலும், அனுபவப் பகிர்வும், படைப்புப் பகிர்வும் கூட இந்நூலின் முக்கியத்துவத்தை மேன்மைப்படுத்துகிறது.

கலைமுகம் ஜுன்-டிசெம்பர் 2024






யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி

 





யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி


இயல்வாணன் (எஸ்.எஸ்.குமரன்)


வருடாந்தம் தேசிய வாசிப்பு மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தி வாசிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனில் வாசிப்பு தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்தமையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இலத்திரனியல் சாதனங்களின் பெருக்கத்தால், தொலைக்காட்சிகளுக்குள்ளும், கைத்தொலைபேசிகளுக்குள்ளும் மூழ்கும் மனநிலைக்குள் சமூகம் வந்துவிட்டமையே இதற்குக் காரணம் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.


பதிப்பிக்கப்படும் நூல்கள் மின்நூல்களாக, பிடிஎப் வடிவ நூல்களாக புத்தகங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. பலர் அவற்றை வாங்கிப் படிக்கின்றனர். பல்வேறு எண்ணிம நூலகங்களில் இருந்து நூல்களை இலவசமாகப் பெற்றுப் படிக்கும் வாய்ப்புகளும் பெருகியுள்ளன. ஆயினும் புதிய புத்தகத்தைக் கையிலெடுத்து  அதன் வாசத்தை நுகர்ந்து அனுபவித்துப் படிக்கும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. அனுபவித்து வாசிக்கவும், அடிக்கோடிடவும், குறிப்புகளை எழுதி நினைவுபடுத்தவும் புத்தகங்கள் உதவுகின்றன.


இத்தகைய புத்தகங்களை வாங்குவதற்கு கடைகளை நோக்கிச் செல்வோர் அரிது. புத்தகக் கண்காட்சிகள் மூலம் வாசகர்களை அதிகளவில் ஈர்க்கவும்இ வாசிப்பின்பால் அவர்களை ஈடுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் வாசிப்பை ஊக்குவிக்க குலசிங்கம் வசீகரன் அதிகம் பங்களித்து வருகின்றார். ‘எங்கட புத்தகங்கள்’ என்ற கருத்துருவாக்கத்தின் மூலம் எமது பிரதேசத்தில் வெளியிடப்படும் நூல்களை அறிமுகம் செய்தும், விற்பனை செய்தும், நூல்களை வெளியிட்டும், பல்வேறு பிரதேசங்களிலும் நூற்கண்காட்சிகளை நடத்தியும், ‘எங்கட புத்தகங்கள்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டும் அவராற்றும் பணி முக்கியமானது.


கண்காட்சிகள் மூலம் வாசக ஈர்ப்பை ஏற்படுத்தி, தேர்ந்த நூல்களின்பால் வாசகர்களை ஆற்றுப்படுத்த முடியும். 2002ஆம் ஆண்டு கலைபண்பாட்டுக் கழகத்தால் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தப்பட்ட மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வின் ஒரு பகுதியாக நூற்கண்காட்சி இடம்பெற்றது. பின்னர் 1995 இடப்பெயர்வை அடுத்து மீளத் திரும்பிய பின்னர் ஆங்காங்கே சிறிய அளவில் நூற்கண்காட்சிகளை தேசிய கலை இலக்கிய பேரவை நடத்தியது. 2008ஆம் ஆண்டு புக்லாப் நிறுவனம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைத்துறையினருடன் இணைந்து 11 நாள்கள் நூல்வேனில் என்ற பெயரில் நூற் கண்காட்சியொன்றினை நடத்தியது. புக்லாப் நிறுவனம் தமிழகத்திலிருந்து இலக்கியத் தரம்மிக்க தேர்ந்த நூல்களை எடுத்து வந்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முக்கிய புத்தகசாலை என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வருடந் தோறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. இரு தடவை இக்கண்காட்சியினைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அதுபோல தைமாதத்தில் தமிழ்நாட்டின் பெருந்திருவிழாவாக தொடர்ச்சியாக சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.


யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்ட போது குலசிங்கம் வசீகரன் ஒரு காட்சியறையை எடுத்து ‘எங்கட புத்தகங்கள்’ நிறுவனம் மூலமாக புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். தொடர்ச்சியாக இதனை அவர் மேற்கொண்டு வந்தார். அத்துடன்  சுன்னாகம், நல்லூர், யாழ்ப்பாணம், பரந்தன், பருத்தித்துறை நூலகங்களில் புத்தகக் கண்காட்சிகளையும் செய்து வந்தார்.


அதேபோல தேசிய கலை இலக்கியப் பேரவையால் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவிலும் புத்தக அரங்க விழாக்கள் நடத்தப்பட்டன. மூன்று தினங்கள் நடைபெறும் இவ்விழாவில் புத்தகக் கண்காட்சி, நூல்வெளியீடு, புத்தக அறிமுகம், நாடகங்கள் என்பன நடைபெற்றன.


2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27ஆந் திகதி முதல் செப்ரெம்பர் முதலாந் திகதி வரை வட மாகாண ஆளுநர் செயலகத்தின் எண்ணக்கருவில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா’ என்னும் பெயரில் வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது. இலங்கையின் பல புத்தகசாலைகளும், வெளியீட்டு நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்குபற்றின. ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இவ்வாண்டின் (2024) கடந்த மே மாதத்தில் இது போன்ற கண்காட்சியினை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் தடைப்பட்டுப் போனது. இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கமே கடந்த பல ஆண்டுகளாக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரமாண்டமாக புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இதுவரை காலமும் கொழும்பில் நடைபெற்றது போல பெரியளவில் ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சி முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு (2024) நடைபெற்றது.இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆந் திகதி முதல் 11ஆந் திகதி வரை யாழ்ப்பாணம் கலாசார நிலைய வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெற்றது. அனைத்துத் தரப்பினருக்குமான புத்தகங்களையும் கொண்டதாக,  பல்வேறு புத்தக நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பெரியளவில் ஒரு புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது அதிலும் சர்வதேச புத்தகக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டமை இதுவே முதன்முறையாகும். கடந்த 14 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றமே இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.


யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கலாநிதி வாசுதேவன் இராசையா தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநராக அப்போதிருந்த திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக நுண்இ சிறியஇநடுத்தர முயற்சியாளர்கள் இலங்கை மன்றத்தின் (Ceylon Federation of MSMEs) ) தலைவர் சசிகா டீ சில்வா மற்றும் இருமொழி எழுத்தாளர் ஐ.சாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டில் எங்கட புத்தகங்கள் வசீகரனின் பங்களிப்பும் ஒருங்கிணைப்பும் முக்கியமானதாகும்.


இக்கண்காட்சியில் யாழ்ப்பாணத்தின் முக்கிய புத்தக நிறுவனங்களான பூபாலசிங்கம் புத்தகசாலை, குயின்சி புத்தகசாலை, பனுவல், புக்லாப், வெண்பா, இனிய தென்றல், அன்னை, எங்கட புத்தகங்கள், தாய்நிலம் பதிப்பகம் முதலியனவும், கொழும்பின் கொடகே, சமுத்ரா, குமரன்  முதலியனவும் பங்குபற்றின. வீரகேசரி, நூலகம் பவுண்டேசன் எனப் பல நிறுவனங்களும் இதில் இணைந்து கொண்டன. நிகழ்வில் நாடகங்களும், பட்டிமன்றங்களும், நூல்வெளியீடுகளும், பாடல் வெளியீடுகளும் இடம்பெற்றன.


எதிர்பார்த்ததுக்கு மாறாக இக்கண்காட்சியைப் பெருமளவானோர் வந்து பார்வையிட்டதுடன் நூல்களையும் வாங்கிச் சென்றனர். இளைஞர்கள் தேர்ந்த நூல்களை ஆர்வத்துடன் கேட்டு வாங்கிச் சென்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் வாசிப்பு தொடர்பான பொதுவான எண்ணத்தையும் தகர்த்ததாக இக்கண்காட்சியில் இணைந்து செயற்பட்ட சத்தியதேவன் தெரிவித்தார்.

வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும் எழுத்தாளர்களை ஊக்குவித்து தரமான இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தமை முக்கியமானது. நல்லூர் திருவிழாவையொட்டிய காலத்தில் ஜுலை- ஓகஸ்ட் மாதங்களில் புலம்பெயர் மக்கள் யாழ்ப்பாணத்தில் அதிகளவில் ஒன்று கூடுவார்கள். இக்காலத்தைத் தேர்ந்து கண்காட்சியை நடத்தினால் புத்தக விற்பனை அதிகரிப்பதோடு புத்தகசாலைகளும் ஆர்வத்தோடு  பங்குபற்றும் வாய்ப்பும் ஏற்படும். அத்துடன் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுவது போல நூல்வெளியீடுகள் நடத்தப்படுவதுடன் எழுத்தாளர் கௌரவிப்புகளும் காத்திரமான பங்களிப்புகளுக்கான விருது வழங்கலும் இடம்பெறின் கண்காட்சி மேலும் பெறுமதிமிக்கதாக அமையும்.







யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி காலத்துக்கு அவசியமான சாலச் சிறந்த பணியாகும். படிப்பார்வைத்தைத் தூண்டுவதற்கும்இ தரமான இலக்கிய வெளியீட்டுக்கும் பயன் செய்வதாக இது அமைந்துள்ளது. இதுவரை காலமும் சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் எமது மண்ணில் இதுபோன்ற கண்காட்சி இடம்பெறாதா என ஏங்கிய காலங்கள் அநேகம். இனிவரும் காலங்களில் வருடந் தோறும் இக்கண்காட்சி நடைபெறவுள்ளமை முக்கியமானதொரு விடயமாகும். அடுத்தாண்டு இன்னும் பிரமாண்டமாக இன்னும் அதிகமான பதிப்பகங்களையும் இணைத்து இக்கண்காட்சி இடம்பெறும் என நம்பலாம்.


கலைமுகம் ஜுலை-டிசெம்பர் 2024