Sunday, September 12, 2021

கவிதை - காணாமல் போனது



நேற்றிருந்து என் ஊரைக் காணவில்லை.
ஒரு அசரீரியின் பின் 
அது காணாமல் போயிருந்தது. 

முன்னரெல்லாம்
மந்தைகள் காணாமல் போயின.
பின் மனிதர்கள்.
இப்போது ஊர். 

தத்தமது ஊர்களும்
காணாமல் போனதாய் 
நண்பர்கள் சொல்கிறார்கள். 

ஒட்டுமொத்தமாய் 
நாடே காணாமல் போய் விடுமென்று 
இராக் குருவி புலம்பிச் செல்கிறது. 

எல்லா இடங்களிலும் அசரீரி ஒலிக்கிறது. 
குடுகுடுப்பைக்காரர்களோடு 
இராக் குருவிகளும் 
அசரீரியை வழிமொழிந்து பாடுகின்றன. 

யாருளர்? என்ன நடக்கிறது? 
யாருக்கும் தெரியவில்லை. 

ஒடுங்கிய வீட்டு மூலையில் இருந்து 
தொலைந்து போன ஊரின் நினைவுகளை 
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள்
முதிய மனுஷி. 

- இயல்வாணன் 
24-03-2020

தீம்புனல் 11-09-2021.

No comments:

Post a Comment