Wednesday, September 22, 2021

கவிதை மூழ்கி எழல்





 கவிதை


மூழ்கி எழல்
*************
1


மீண்டும் ஒரு முறை முகப்புத்தகத்துள் நுழைந்து
 முதல் விருப்பக் குறியை இட்டேன்.

சில காதல் குறிகளையும்
சில கவலைக் குறிகளையும்
சில ஆச்சரியக் குறிகளையும்
ஹாஸ்யக் குறிகளையும் கூட இட நேர்ந்தது.

முதலாவது வாழ்த்தைப் பதிந்தது கண்ணனுக்கு.
அவன் சொந்தமாக சைக்கிள் ஒன்றை வாங்கி இருந்தான். 

சில பிறந்தநாள் 
சில திருமண நாள் 
பதவியேற்ற வருட நிறைவுகள்
நான்கு கவிதைகள்
பதினெட்டு கருத்தூட்டங்கள்
சில சுய படங்கள் 
எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்! 

தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும் தம்பட்டங்கள்
உப்புச் சப்பற்ற கருத்தூட்டங்கள்
எல்லாவற்றுக்கும்
 'ஆள்' கருதிய விருப்பக் குறிகள்! 

வந்து விழும் மரணச் சேதிகளுக்கு ஒரு துயர் பகிர்வு. 

தனக்கு விருப்பக் குறி கூட இடுவதில்லை எனக் 
குறைப்பட்ட கவிஞருக்கு
இடையிடையே சபாஷ்! 

தன்னைப் பற்றிய விமர்சனத்துக்கு
விருப்பக் குறி இட்டதால் 
விமர்சகர் 'பிரான்' 
 நட்பு நீக்கம் செய்ததால்
வரும் விமர்சனங்களுக்கு
ஒரு மௌனம். 

தன்னுடைய கருத்தூட்டத்துக்கு
கொமன்ற் எழுதுமாறு 
தொலைபேசியில் 
சொல்லியவருக்கு
ஒரு 'ஆஹா' கொமன்ற். 

இதற்கு அப்பால் இடையிடையே
நானும் இருக்கிறேன் என்பதற்கான பிரலாபங்கள். 
படங்கள். 

கூலிங் கிளாஸுடன் சகிக்க முடியாத ஒரு சுயபடம் வெளியிட்டவருக்கு 
அழகோ அழகு என எழுதி விட்டு
முகநூலை மூடுகிறேன். 

இலக்கியவெளி ஜனவரி -ஜுன் 2022

 2

நேற்றெங்கள் தெருவில்
ஒலிபெருக்கி பூட்டிய ஓட்டோ
மரணச் செய்தியை 
விதைத்துச் சென்றது.

வழக்கமான ஒன்றுதான்! 
சின்னத்துரை பொன்னம்பலம்
மரணித்து விட்டாராம்!
யாரென்று தெரியவில்லை.
உறவுகளும் தெரிந்ததாயில்லை.
கொரோனாவா? வேறேதுமோ ?
கடந்து கரைந்து போனது செய்தி.

இரவு முகப்புத்தகத்தைத்
திறந்த போது 'பூச்சி' யின் 
படம் முன்னே வந்தது. 
பூச்சி இறந்து விட்டான். 
நேற்றுக் கூட கோவிலடியில் 
என்னுடன் உரையாடினானே! 
அஞ்சலிகள் நண்பனே. 

கீழே அவனது பெயர் இப்படியிருந்தது
'சின்னத்துரை பொன்னம்பலம்' 

 3

யாரந்த முச்சங்கப் புரவலரோ?
இம்மென்று ஒரு வார்த்தை
இன்தமிழால் எழுதிடிலோ
கவியென்று சான்றளிக்கும்
கடைச் சங்கப் பேராளர்.

நாலு வரி சேர்த்து
 படத்துக்கொரு கவிதை. 
சொல்லுக்கு ஒரு கவிதை. 
எழுத்துக்கு ஒரு கவிதை. 
ஒன்றும் சொற்களுக்கும்
ஒரு கவிதை.
தமிழில் எழுதினால் சான்றளிக்கும் சங்கங்கள்.

என்னே பெரும் பேறு! 

முகநூலில் மின்னும்
படம் போட்ட சான்றிதழ்கள்.
கவிச் சிற்பி, கவி வேளம், கவிப்புயல், கவிச் சிங்கம், 
கவி காளமேகமென
எண்ணற்ற பட்டங்கள்
ஈந்திடும் நற்சங்கங்கள்.

பாரிக்குப் பின் வந்த 
புரவலரைக் காணுதற்கும், 
பாரதிக்குப் பின் வந்த 
வேழமதைக் காணுதற்கும் 
முகநூல் முத்தளிக்கும். 
மூழ்கியெழாதிருக்கலாமா? 

4

என் நண்பனிடம் ஒரு வல்லமையிருந்தது
சித்தர்களைப் போல.

அலுவலகத்தில்தான் இருப்பான்.

முள்ளிவாய்க்கால் முற்றத்திலும்
காணாமல் போனவருக்கான ஆர்ப்பாட்டத்திலும்
ஆசிரியர் போராட்டத்திலும்
உணர்வொன்ற அவன் இருப்பான்.

கோவில் திருவிழாக்கள்
சாலை விபத்துக்களில் எல்லாம் நேரடிச் சாட்சியாவான்.

உணர்வு ததும்பும் சொற்கள் 
அவன் பிரசன்னத்தை உணர்த்தும்.  

முகநூலில்
ஆச்சரியங்களோடு விதந்து பேசுவர் பலரும்.

கூடவே ஒரு பெருந்தன்மையும்
அவனிடம் இருந்தது.
எந்த இடத்திலும் தன் படத்தை வெளியிட்டு
தம்பட்டம் அடிக்கானாம்! 

இயல்வாணன்

No comments:

Post a Comment