Saturday, September 4, 2021

not finished

 கிளிநொச்சி மாவட்டத் தமிழ் நாவல்கள்

புனைவிலக்கிய வகைகளுள் நாவல் தாக்கவன்மை மிக்கதாகும். புதுமை என்ற கருத்தை வெளிப்படுத்தும் Novel என்ற ஆங்கிலப் பதமே நாவல் எனக் கூறப்படுகிறது. தமிழில் நவீனம் என்றும், புதினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. ‘வசன வடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீளமுடையதாகவும், புனைந்துரைக்கப்படுவதாகவும், பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப்பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களைச் சித்திரிப்பதாகவும் அமைவது நாவல்’ என்று வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றது.

ஈழத்தில் 1856இல் ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்த காவலப்பன் கதை முதல் நாவலிலக்கிய முயற்சியாக நோக்கப்படுகின்றது. இருப்பினும் 1885இல் அறிஞர் சித்திலெப்பையினால் எழுதப்பட்ட அசன்பேயுடைய கதையே முதல் ஈழத்து நாவலாகக் கருதப்படுகின்றது.அதனைத் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களிலும், அக்கால கட்டங்களின் போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல நாவல்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் நாவல் பொதுப் போக்காக மேலைத்தேயத் தழுவல்களாகவும், நன்னெறியைப் போதிக்கும் கருத்துக்களுக்கு முக்கியமளிக்கும் கருத்துக் கருவூலங்களாகவும் இருந்தன.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஈழத்தைக் களமாகக் கொண்ட நாவல்கள் வெளிவரத் தொடங்கின. சி.வை.சின்னப்பப்பிள்ளை எழுதி 1905இல் வெளிவந்த வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற நாவலே ஈழத்தைக் களமாகக் கொண்ட முதல் நாவலாகக் கருதப்படுகின்றது.

அதன் பரிணாம வளர்ச்சி பிரதேச நாவல்கள் உருவாகும் நிலைமையை ஏற்படுத்தின. பிரதேச ரீதியாகவும், குழுநிலைப்பட்டும் தத்தமக்கான தனித்துவமான பண்பாட்டம்சங்களுடன் வாழ்ந்து வருகின்ற மக்களின் வாழ்க்கையினை அதன் சமூக மெய்மை குன்றாத வண்ணம் சித்திரிக்கும் நாவல்களைப் பிரதேச நாவல்கள் எனலாம். மண்மணம் கமழ்வனவாக விளங்குவன பிரதேச நாவல்களாகும்.

 ‘ஒரு கதை எந்த இடத்தில் நடப்பதாகக் காட்டப்படுகின்றதோ அந்த இடத்தைத் தவிர வேறொரு இடத்தில் அது நடந்திருக்க முடியாது என்றும், அக்குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பரன்றி வேறொருவர் அதனை எழுதியிருக்க முடியாது என்றும் கருதத்தக்க வகையில் கதையின் பின்ணியும், இழைவமைதியும் அமையுமானால் அக்கதை வட்டார அல்லது பிரதேச நாவல்’ எனக் கருதலாம்.

அவ்வகையில் ஈழத்தில் வெளிவந்த நாவல்களை வடபுல நாவல்கள், கிழக்கிலங்கை நாவல்கள், மலையக நாவல்கள் என ஆரம்பத்தில் பாகுபடுத்தி நோக்கினர்.எனினும் பிரதேச தனித்துவங்கள் கருதி இப்பாகுபாடு மேலும் விரிவடைந்தது.அவ்வகையில் வடபுலத்து நாவல்கள் யாழ்ப்பாணம், வன்னி என மேலும் பகுத்தாராயப்பட்டது. அதன் விரிவாக கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிபலிக்கின்ற நாவல்கள் தொடர்பான கவனத்தைக் குவிக்கும் தேவை உள்ளது.

கவிதை,சிறுகதை ஆகியவற்றுடன் ஒப்பிடுமிடத்து கிளிநொச்சியைப் பிரதிபலிக்கும் நாவல்களின் எண்ணிக்கை குறைவானதாகும். நாவல்களின் பொது இயல்பாக வன்னிப் பிரதேச களம் அமையும் நாவல்கள் கிளிநொச்சியையும் பிரதிபலிப்பதாக உள்ள போதிலும் அவற்றைக் கிளிநொச்சி மாவட்ட நாவல்கள் என வரையறுப்பதோ அல்லது நிறுவுவதோ பொருத்தமானதல்ல.கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சுட்டிப்பாகக் காட்டும் பகைப்புலத்தைக் கொண்ட நாவல்களையே கிளிநொச்சிப் பிரதேச நாவல்கள் என வரையறுக்க முடியும்.

அவ்வகையில் கிளிநொச்சியை சிறிய அளவில் பிரதிபலித்த வகையில் வெளிவந்த முதல் நாவல் மணிவாணன் எழுதிய ‘யுகசந்தி’ ஆகும். 1969இல் தினகரனில் தொடராக எழுதப்பட்டு 1972இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த இந்நாவலின் கதைக்களம் தர்மபுரம் பிரதேசமாகும். ஆயினும் பிரதேச பகைப்புலம் வெளிப்படுத்தப்படாமலும், மண்வாசனையின்றியும் குடும்பப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக அந்நாவல் அமைந்திருந்தது.

இந்த அடிப்படையில் பிரதேச பகைப்புலத்தை வெளிப்படுத்திய, கிளிநொச்சி மண்வாசனையை வெளிக்கொணர்ந்த முதல் நாவலாக தாமரைச்செல்வி எழுதி 1977இல் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்த ‘சுமைகள்’ நாவலைக் குறிப்பிடலாம். கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பிரதேசத்தை மையப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது. அம்மா, அண்ணன் கதிரேசன் மற்றும் மூன்று பெண் சகோதரிகளுடன் பிறந்தவன் செந்தில் என்ற இளைஞன். தந்தையை இழந்த, சிறியதொரு வயலை மட்டும் கொண்ட ஏழை விவசாயக் குடும்பம் அது. கூழாங்கல் போன்று பயனற்ற இளைஞனாகச் செந்தில் சுற்றித் திரிகிறான். பொறுப்பற்றவன் என உதாசீனம் செய்யப்படுகிறான். இறுதியில் அவனே சுமைதாங்கியாக மாறி குடும்ப பாரத்தைப் பொறுப்பேற்கும் கதையாக சுமைகள் நாவல் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்நாவலில் கிளிநொச்சி மண்ணில் நிகழும் கதைக்களம் உள்ள போதும் மண்ணுக்குரிய சமூக பண்பாட்டு அம்சங்கள் சித்திரிக்கப்படவில்லை என கலாநிதி ம.ரகுநாதன் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

தாமரைச் செல்வியின் மற்றொரு நாவல் ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’ 1992இல் மீரா வெளியீடாக வெளிவந்தது. போர்க்காலப் பின்னணி கொண்ட இந்நாவலில் முருகேசு என்ற ஏழை விவசாயியின் குடும்பத்தைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. அரச அதிகாரியான செந்தில்நாதன் தனது பதவிச் செல்வாக்கினால் கிளிநொச்சியில் குடியேற்றத் திட்டத்தின் கீழ் காடாக இருந்த ஒரு காணியைக் கையகப்படுத்துகிறார். அக்காணியில் ஏழை விவசாயியான முருகேசுவைக் குடியமர்த்துகிறார். முருகேசு குடும்பம் காடு திருத்தி காணியை வளமான நிலம் ஆக்குகின்றது. அவ்வப்போது காணியை வந்து பார்வையிடும் செந்தில்நாதன் காய்கறி, பழங்கள், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் அந்தக் காணியைத் தனது மகனுடைய பெயரிற்கு உரிமைமாற்றம் செய்து விடுகிறார். போராளியாக இணைந்த மகனோ தந்தையின் சுயநல எண்ணத்தைப் புறந்தள்ளி அக்காணியை முருகேசு குடும்பத்துக்கே எழுதி விடுகிறான். ஏழை விவசாய மக்களின் உழைப்புச் சுரண்டல், அரச அதிகாரிகளது துஸ்பிரயோகம், போராளிகளது தியாகவுணர்வு ஆகியவற்றை இந்நாவல் சித்திரிக்கின்றது.குறிப்பாக இந்திய இராணுவ பிரசன்னம் சார்ந்த விடயங்களையும் இது பதிவு செய்துள்ளது.

தாமரைச் செல்வியின் இன்னொரு நாவல் ‘தாகம்’ ஆகும். இது 1993இல் மீரா வெளியீடாக வெளிவந்தது.கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கணேசபுரத்தைப் பிரதான பகைப்புலமாக இந்நாவல் கொண்டிருப்பினும் மாவட்டம் முழுமையும் உள்ளடங்கும் வகையில் காட்சிகள் விரிந்து செல்கின்றன.இக்கதையில் கிளாலிப் படுகொலை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டாம் ஈழப் போர் என வர்ணிக்கப்படும் 1990களின் ஆரம்ப கால களநிலைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பரந்தனில் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருக்கும் சதானந்தனே நாவலின் பிரதான பாத்திரமாகும்.யுத்தத்தால் அவனது தொழில் நிலையம் அழிவடைகின்றது.அதனால் அவன் கையறுநிலைக்குச் சென்று விடுகிறான். மறுபுறம் அவனது மாமி மகளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். அதை அவளது சகோதரனிடம் வெளிப்படுத்துகிறான். அவன் தனது சகோதரியைத் திருமணம் செய்து தருவதாக உறுதிகூறி விட்டுச் செல்கிறான்.சென்றவன் கிளாலிக் கடலில் படுகொலை செய்யப்படுகிறான்.இதனால் அவனது வாழ்வு திசை மாறுகின்றது.அவனது தாகம் தணியாதிருக்கிறது என்பதே நாவலின் செய்தியாகும்.

தாமரைச்செல்வியின் மற்றொரு குறுநாவல் ‘வேள்வித்தீ’ ஆகும். இது 1994இல் மீரா வெளியீடாக வெளிவந்தது.இந்நாவலில் கதைக்களம் துல்லியமாகக் காட்டப்படவில்லை. சிவானந்தன் என்ற இளைஞனும், மனோ என்ற இளம் பெண்ணும் ஒருவரையொருவர் நேசித்தனர். நாட்டின் சூழல் சிவானந்தனை ஜீவா எனும்  போராளியாக்கியது. பின்னர் அவன் வீரமரணமடைகின்றான். அவனது மரணத்தைத் தொடர்ந்து அவனது தம்பியும் போராட்டத்தில் இணைகிறான். சிவானந்தனது நினைவுடனே வேறு திருமணம் செய்யாது வாழும் மனோவுக்கு திருமணம் செய்யுமாறு வீட்டில் பல்வேறு நெருக்குதல்கள். இந்நிலையில் உத்தியோகம் பார்க்கும் மனோ ஜீவா குடும்பத்தின் பொறுப்புக்களைச் சுமப்பதற்காகச் செல்கிறாள். போகும் போது “…இனி அந்தக் குடும்பத்தைத் தாங்கப் போறன். இந்த முடிவாலை என்ரை தங்கச்சியவைக்கும் ஒரு வழி பிறக்கும். யாராவது இனிக் கேட்டால் புருசன் வீட்டிலை பிள்ளை இருக்கெண்டு சொல்லலாம். மண்ணுக்கு உயிரைத் தாறது மட்டும் தியாகமில்லை. அப்படி உயிரைத் தந்ததுகளின்ரை குடும்பத்தைக் கவனிக்கிறதும் கூட இந்த மண்ணுக்காக நாங்கள் செய்யிற தியாகந்தான்…” என்று சொல்லி விட்டுச் செல்வதுடன் கதை முடிகின்றது.

தாமரைச் செல்வியின் மற்றொரு முக்கியமான படைப்பு பச்சை வயல் கனவு.2004இல் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக இது வெளிவந்தது.காடாக் கிடந்த கிளிநொச்சியைப் பசுஞ் சோலையாகக் காணும் பசிய கனவுடன் வந்து குடியேறி, அந்தக் கனவை நனவாக்க முனைந்தவர்களை யுத்தம் ஊர் பெயர்த்து, அடித்து விரட்டி, நிர்க்கதியாக்கிய வாழ்வனுபவத்தை இந்நாவல் வெளிப்படுத்துகின்றது.ஸ்கந்தபுரத்தில் இடம்பெயர்ந்து வாழ்வதிலிருந்து நனவோடை உத்தியைப் பயன்படுத்தி நாவல் நகர்த்;தப்படுகிறது.

முதன் முதல் இப்பிரதேசத்தில் குடியமர வந்தவர்கள் அடைந்த துன்பங்கள், அந்தத் துன்பங்களை எதிர் கொண்டு அவர்கள் முன்னேறிய விதம், இராணுவ நெருக்கடிகள், ஆனையிறவில் ஏ-9 பாதை மூடப்பட்டதில் இருந்து அது திறக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் எல்லாம் இந்நாவலில் விபரிக்கப்பட்டுள்ளன.சிவப்பிரகாசம் என்ற முதியவரின் பார்வையில் ஆரம்பமாகும் கதை பல்வேறு கதா மாந்தரிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் கிளிநொச்சி மண்ணைத் தனது நாவல்கள், சிறுகதைகள் மூலம் குவிமையப்படுத்திக் காட்டிய முதன்மைப் படைப்பாளியாக தாமரைச் செல்வியைக் குறிப்பிடலாம்.

வன்னியைப் பொதுவாகக் கொண்டு காட்டாறு, ஓ அந்த அழகிய பழைய உலகம், யானை முதலிய நாவல்களைச் செங்கை ஆழியான் படைத்துள்ள போதும் அவரது நாவல்கள் வவுனியா மாவட்டத்தையே அதிகளவில் பிரதிபலித்தன. ஆயினும் கிளிநொச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் எழுதிய நாவல் ‘மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’ ஆகும். இது 1989இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. இரணைமடுக் குள உருவாக்கமும் அதனைத் தொடர்ந்து குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமையும் இந்நாவலில்  குறிப்பிடப்படுகிறது. இக்குடியேற்றங்களில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேச மக்கள்  குடியேறி, காட்டு விலங்குகளையும், தொற்றுநோய்களையும் எதிர்கொண்டு பிரதேசத்தை வளப்படுத்திய வரலாற்றை இந்நாவல் பேசுகின்றது.

முத்தையா என்ற இளைஞன் வெள்ளைக்காரத் துரையுடன் இரணைமடுக் குள நிர்மாணத்துக்காக வந்த இடத்தில் ஏழைப் பெண்ணான சிவபாக்கியத்தைச் சந்தித்துக் காதல் கொள்கிறான்.அவள் கர்ப்பமடைகிறான்.ஆனால் அவனோ யாழ்ப்;பாணத்தில் தாயின் விருப்பத்துக்கு இணங்கத் திருமணம் செய்கிறான்.சிவபாக்கியம் ஏமாற்றப்பட்ட நிலையில் குழந்தையைப் பெற்று விட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள்.முத்தையா வயதான காலத்தில் இதனை அறிந்து கொள்வதுடன் சிவபாக்கியம் மூலம் பிறந்த தனது பிள்ளையின் முன்பாகவே உயிரை விடுகிறார் என்பதாக கதை முடிகின்றது. ஒரு புவியியலாளரான செங்கை ஆழியானுடைய கதைகளில் பகைப்புல வர்ணனை சிறப்பாக அமைவது இந்நாவலிலும் வெளிப்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செங்கை ஆழியான் (க.குணராஜா) பிரதேச காணி அதிகாரியாக  இப்பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள முழங்காவிலில் பூஞ்சோலை என்ற கற்பனைக் குடியேற்றக் கிராமத்தைக் கதைக்களமாகக் கொண்டு து.வைத்திலிங்கம் எழுதிய குறுநாவல் ‘ஒரு திட்டம் மூடப்படுகிறது’ ஆகும். இது இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பூநகரி உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிய து.வைத்திலிங்கம்  யாழ்ப்பாணத்தைச் சே;ர்ந்தவராவார். படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் ஒன்று அரசியல்வாதிகளதும், அரச அதிகாரிகளதும் சுயநலப் போக்கினால் பாழாகிப் போன வரலாற்றை இந்நாவல் பேசுகின்றது. குறிப்பாக அமைச்சரின் ஆதரவாளனான அரசகேசரி என்ற அபிவிருத்தி அலுவலரும் அவருடன் இணைந்த குழுவினரும் மக்களை ஏமாற்றுவதையும், அதனால் மக்கள் குமுறுவதையும் நாவலில் சுட்டிக் காட்டப்படுகிறது.

பூஞ்சோலைக் கிராமத்தில் படித்த பெண்களுக்காக ஒரு குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப் படுகிறது.






No comments:

Post a Comment