Tuesday, July 23, 2019

மூன்றாம் மண்டலத்தின் காயப்பட்ட மண்ணிலிருந்து


இந்த ஆண்டு குடும்பத்தினர்க்கானதாம்!
 ஐ.நா.பிரகடனம் காதைக் கிழிக்கிறது.
 கறுத்துப் போய் இதயம் கன்றிப் போய் வயிறு.

 00

 கடந்த இரவுகளில் எனது உறவுகள் தொலைந்தன.
 எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.

 00

 இருளின் கருமைக்குள் எல்லாம் அரங்கேற
புலர்ந்த பொழுதில் நான் தூர விரட்டப்பட்டேன்.
முகம் மலர்த்தும் எனது முற்றத்தில் அந்நிய முகங்கள்.
 அவர்தம் கரங்களில் உயிர்பறி கலங்கள். 
உறவுகள் பிளந்தன!
 கிழட்டு அம்மாவின் கால்கள் அகதிக் கொட்டிலுக்குள்.
அக்காவும் அத்தானும் அப்படியே அப்பால்…
அண்ணன்மாரோ கடல் கடந்து மேற்குலகில்
வள்ளம் சிலருடன் இந்தியா நோக்கி.
 எங்களுக்குள் அந்நியம் வேர் விட்ட நினைவுடன் நான்.

00

 இடையிடை கடிதங்கள் அன்பை ஒட்டி வரும்.
 கிழிபடும் அதற்குள் காய்ந்த குருதி.
வேர்கள் இல்லாது கிளைகள் பரப்பினோம்
உலகமெல்லாம் நிறைந்து உலகமில்லா நாங்கள்.

 00

 எனது மண்ணைப் பிடித்தவன்
 எனது உறவுகளைத் தொலைத்தவன்
 என் மீது ரவைகளைப் பொழிகிறான்.
எனது இருப்பை நான் பரிசீலிக்க வேண்டும்.

 00

 ஐ.நா.பிரகடனம் காதைக் கிழிக்கிறது.
கறுத்துப் போய் இதயம்
கன்றிப் போய் வயிறு.

 00

 மூன்றாம் மண்டலத்தின் மூலையிலொரு காயப்பட்ட மண்ணிலிருந்து குரல் கொடுக்கிறேன். எனக்கு வேண்டும் எனது மண்! எனக்கு வேண்டும் எனது மொழி! எனக்கு வேண்டும் எனது உறவுகள்!

 கவிதை சித்திரை-வைகாசி 1994

No comments:

Post a Comment