Friday, July 26, 2019

கவிதை -பரீட்சையில் எஞ்சிய வினாக்கள்


மழைமேகம் விலக்கி
சூரியக் கதிர்கள் பரவும் காலைப்பொழுது.

பசிய இலைகளை வருடி வருடி
பூந்தேன் ருசித்தன
வண்ணத்துப்பூச்சிகள்.

பின்,
இணை சேர்ந்து நடனமாடின.

மருதமரந் தழுவிய தென்றல்
பூந்தாதை ஏந்தி வந்து
முகத்தில் எற்றி விட்டு விலகியது.

நூற்றாண்டுப் பழமையின் நிழல் தேக்கி
உயிர்த்திருக்கிறது கல்லூரி
ஒரு அனுபவஸ்தனாய்.

பரீட்சை நடக்கிறது.

அங்குமிங்கும்
நடை பயில்கின்றனர் நோக்குநர்கள்.

விடைத்தாளில் கைகள் ஊர
புலன் நுழைகிறது எழுத்தாய்.

00

கிளைகள் அசைகின்றன

சற்றைக்கெல்லாம்
அவை தலைகளாகின்றன.

சுவரைத் தாண்டி வந்து
அலறுகிறது ‘மொபைல் செற்’

உள்ளே வந்தான் இராணுவ அதிகாரி
சில துப்பாக்கிதாரிகள் சகிதம்.

பின்னர்
அவர்களும் நோக்குநராயினர்.

அடையாள அட்டையைப் பரிசோதித்தனர்.

பின், 
மெல்ல மெல்ல அப்பால் மறைந்தனர்.

00

வண்ணத்துப் பூச்சிகளும் பூக்களும்
மருதங்காற்றும்
ஞாபகத்தில் அழிந்தன.

செவியில்
மொபைல்செற்றின் அலறலே எதிரொலிக்க
புலன் முழுவதும்
அவர்களே நிறைந்திருந்தனர்.

வானங் கறுத்த மதியத்தில்
வெளியே வந்தேன்
இரு வினாக்களுடன்.

இந்த மழைக்காற்றில் சுகம் காணும்
வண்ணத்துப் பூச்சியாவது எப்படி?

பரீட்சையில் எதை எழுதினேன்?

                                                            வெளிச்சம் 1997

No comments:

Post a Comment