சனங்கள்
வீசியடித்துப் போயினர்
சில குஞ்சுகளை,
எவரோ நட்டு வைத்த கூட்டில்
என்னைப் பராமரிப்பாளனாக்கி.
சின்னனும் பெரிதுமாய்
அசிங்கமாய் அழகதாய்
வெவ்வேறு மனத்தினதாய்
வெவ்வேறு உலகத்ததாய்
அவை மௌனத்தால் மொழிந்தன.
செயல்களால் தொடர்பாடின.
வார்த்தைகளால் புதிர் போட்டன.
எனது வார்த்தைகள்
அவற்றுக்குப் புதிராயின.
எனது செயல்கள்
அவற்றை மிரள வைத்தன.
எனது உலகம்
அவற்றை வலிந்திழுத்தது.
பால்வீதிக் கோள்களாய்
என்னைச் சுற்றின
அவற்றின் உலகங்கள்.
எனது உலகம்
விழுங்கிச் சமித்தது
அவர்களது உலகத்தையும் எண்ணங்களையும்.
வெளிச்சம் மார்கழி-தை 2005
( 1997இல் எழுதப்பட்டது)
No comments:
Post a Comment