Monday, July 29, 2019

மரபுக் கவிதை-ஆறே! வழுக்கை நீ வாழ்க!


மரபுக் கவிதை


ஓடும் மேகம் ஒன்றாகி மலையில் 
கூடும் வண்மை கண்டிலையே!
மூடும் பாறை மேலே ஊற்றாய்
பீறும் தகையும் கொண்டிலையே!
காரும் கறுத்து வானிடிய மழை
தூறும் பொழுதில் நீயுயிர்ப்பாய்.
பேரும் கொண்டாய் ஆறெனவே
பெருந்தாய்! வழுக்கை; நீ வாழ்க.

மண்ணும் குளிரவுன் மடி பெருக்கும்
மெல்ல நடந்து சென்றிடுவாய்.
நண்ணும் கரையின் சுற்றந் தழுவி
நுரைத்துச் சிரித்துச் சென்றிடுவாய்.
பொன்னும் பொருளும் சீர் கொண்டு
போவாய் ; காதற் கடல் சேர
வண்ணங் கொண்டெமை வளமூட்டும்
வடிவே! வழுக்கை; நீ வாழ்க.

பாதை மருங்கில் அணி வகுத்துப்
பூத்துக் குலுங்கும் மரக்கூட்டம்
தாதை இறைத்து மணமூட்டும்
தழுவிக் காற்று தாலாட்டும்
கோதையர்கள் குருகி னங்கள்
குளித்துப் புரள்வர் உன்மடியில்
ஓதை உனதோ? கோதையதோ?
ஓதாய்! வழுக்கை; நீ வாழ்க.

ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் முதுமொழியை
அழித்து யாழ்ப்பாண மங்கைக்கு
பேறாய் உதித்துப் பேர் போக்கினையே!
பேரரசு கதிரமலை நிலைநிற்க எல்லைச்
சீராய் நின்றாய்! உக்கிரசிங்க மன்னன்
நாவாய் நகர்ந்து பொருள் தேட
ஆறானாய்! வளநகராய் ஆக்கும் நல்ல
சூரானாய்! வழுக்கை; நீ வாழ்க.

அம்பனை வெளியின் நீர் சேர்ந்து
ஆடிப் பினாக்கைக் குளஞ் சேர
வந்தனை; பெருமாக் கடவையின் வழியே
கந்த ரோடையில் இளைப்பாறி மெல்லச்
சங்குவேலியுள் நுழைந்து வயல் விரித்த
சண்டிலிப்பாயில் உறங்கி எழுந்து
சங்கரத்தையில் ஏறி அராலியில் நுழைந்தாய்
காணலையே! வழுக்கை; நீ எங்கே?

 கலைநிலம் 
வலி.தெற்கு கலாசார பேரவை மலர் 2018

No comments:

Post a Comment