Saturday, July 27, 2019

கவிதை -உறைந்து வந்த திருமுகம்


சிறு பராயத்துத் தோழனே!

பல்லாயிரம் மைல்களுக்கப்பால் 
நீ களைப்புற்றிருக்கிறாய்.

உனது வைராக்கியம் 
சீர் செய்ய முடியாமல் சிதறியிருக்கிறது.

புலன்களின் ஜீவனை 
நெருப்பு தின்று கொண்டிருக்கிறது.

எந்த நிர்ப்பந்தத்துக்கும் தலை சாய்த்து
இதயம் உருக்குலைந்து போயிருக்கிறது.

உனது பாரவையில்
குளறுபடி நேர்ந்திருக்கிறது.

தாங்க முடியாத இருளின் சுழலுக்குள்
உனதிருப்பு அலைக்கழிக்கப்படுகிறது.

000

சூம்பிய உனது இருதயத்தின் மீது
எனது கரங்களை வைக்கிறேன்.

எனது இதயத்தின் ஒலி 
உனக்குக் கேட்கிறதா?

நாம் கை கோர்த்துத் திரிந்த
ஞாபகங்களை மீட்டுவோம்.

பச்சை விரித்த மண் மீது
நமக்குப் பிடிப்பிருந்தது.
அயல் மனிதர்களை நேசித்தோம்.

இதயமிருந்த இடத்தில் 
நமது மொழியை இருத்தினோம்.
விடியலின் திசையோடும் தேரில்
இரு கை சேர்த்தோம்.

முழுநிலாப் படர்ந்த தெரு வழியே
புரட்சியின் சேதி சொல்லிப்
பாடலிசைத்தோம்.

000

இன்றென்ன புரட்சி நேர்ந்தது.

ஜாக்சனின் பாடலில் கவனம் சிதைத்து
நீ வரைந்த மடல் பெற்றேன்.
பனிக்குள் உறைந்து போகும்
உனது சூழல் போலவே
நீயுமானாய் என்ற செய்தியுடன்.

                                                         தாயகம் 34

No comments:

Post a Comment