புரியாப் புதிரொன்றை
முடிச்சவிழ்க்கும் பாரம் எனக்குள்.
உலர்ந்து போன இரவுகளில்
ஈரஞ் சொட்டச் சொட்ட
விழித்திருந்த அந்த நாட்களில் கூட
அதைப் புரியும் சந்தர்ப்பமில்லை.
தூங்கும் போதும்
எழுதும் போதும்
காற்றை வலித்து
மிதிவண்டியில் செல்லும் போதும்
பாரம் என்னை அழுத்துகிறது.
பிரயத்தனங்களின் முடிவு
பூச்சியமாகும் போது
அது சூன்யமெனத்
தோற்றந் தருகின்றது.
இப்போது வரையில்
போலிகள் மதிலாகி
மனவீட்டைக் காக்க நான்
தூங்குகிறேன்
பயணிக்கிறேன்
உப்பகலாக் கடல் நீரெனவான
அதற்குள் நின்று கொண்டே
கேட்கிறேன்
“வாழ்க்கை எங்கிருக்கின்றது ? ”
புரியாப் புதிரின் முடிச்சவிழ்ப்பு
இன்னமும் தொடர்கிறது.
கவிதை சித்திரை-வைகாசி 1995
கவிதை சஞ்சிகைநடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது
No comments:
Post a Comment