Thursday, July 25, 2019

கவிதை -சிலுவை சுமக்கும் தருணம்




ஒவ்வொரு காலையிலும்
வீட்டு வளவைத் தாண்டுகையில் 
அடையாள அட்டைகளைப் பத்திரப்படுத்தி வை.

உன்னை அடையாளப்படுத்த
எத்தனை அட்டைகளையும்
சேமித்துக் கொள்.

ஒவ்வோர் வளைவுகளிலும்
அவர்கள் நிற்பார்கள்.
அவர்கள் எப்படி நோக்கினும்
புன்னகைக்க மறக்காதே.

அடிக்கடி
சோதனை நிலையங்கள் குறுக்கிடும்.
எரிச்சலடையாதே.
வாகனங்களிலிருந்து இறங்கு.
உடலையும் பொதிகளையும்
அவர்கள் பரிசோதிக்க இடமளி.

உனது அங்கங்களில்
சேஷ்டை புரிவதாய்க்
கற்பனை செய்யாதே.

‘எங்கே’
‘யாரிடம்’
‘ஏன்’
அவர்கள் வினாக்களுக்கு விளக்கமளிப்பது
உனது கடமை.

உன்னை ஏசவும் எள்ளவும் செய்வார்கள்.
கோபம் கொள்ளாதே.

சிலவேளை
அவர்கள் உன்னை
போராளியாகவோ
போராளிகளின் ஆதரவாளனாகவோ
சொல்லலாம்.

தடுத்து வைக்கப்படவும்
நையப்புடைக்கப்படவும்
காணாமற் போகவும் சந்தர்ப்பமுண்டு.

காலம் சுருக்குக் கயிறான பின்
நாமென்ன செய்வது?
நாம் கீழமிழ்ந்துள்ளோம் அவர்களிடம்.
மிதிபடுவது நியதியென
காலம் பணிக்கிறது.
நாங்கள் பணிய வேண்டும் நண்பர்களே!

வரலாறு புரளும்
ஒரு சந்தர்ப்பம் கூடுகிற போது
கீழமிழ்ந்தவர் மேலெழத்தான் வேண்டும்.

அப்போது
காலம் நம் கரம் பற்றும்.
அதுவரை
பணிந்திரு.. பதுங்கிடு..
அதிகமதிகமாய்
உன்னைப் புடம் போடு.

           வெளிச்சம் 50ஆவது சிறப்பிதழ் 1997

No comments:

Post a Comment