Friday, July 26, 2019

கவிதை -மகனே! எங்கிருக்கிறாய்?




மகனே! நீ எங்கிருக்கிறாய்?

பிள்ளைக்கு விசுக்கோத்து வாங்கி வருவதாய்
சொல்லிச் சென்றாய்.
வழியில் 
சீருடை அணிந்தவர்கள்
உன்னைப் பிடித்துச் சென்றதாய்
சொன்னார்கள்.

எல்லாப் படை முகாம்களுக்கும்
சென்று வந்தாயிற்று.
நினைப்பு வரும் போதெல்லாம்
படை முகாம்களை நோக்கியே
கால்கள் ஏகிற்று.
எவருமே கண்டதில்லையாம் உன்னை.

விதானையார் வீட்டிலிருந்து
கச்சேரி வரைக்கும்
நடந்து தேய்ந்த செருப்புகள்
மூலையில் கிடக்கின்றன.
எவரும் அறிந்ததில்லையாம் உனது செய்தியை.

அரசியல்வாதிகள் அனைவரையும்
பார்த்தாச்சு
கண்டுபிடித்துத் தருவதாய் 
வாக்குறுதிகள் தந்தார்கள்.

அவர்கள் வாக்குறுதி அளித்த போது
மடி தவழ்ந்த உன் சின்ன மகன்
இப்போது மீசை அரும்பும் 
வாலிபனாகி விட்டான்.
அப்பா எங்கே என்று கேட்டலுத்து
அவனும் ஓய்ந்து விட்டான்.

எல்லோரும் மறந்து கொண்டிருக்கின்றனர் உன்னை.
நான் எப்படி மறப்பேன்
என் குலக் கொழுந்தே!

யோசியக்காரர்களும் குறி சொல்வோரும்
விதைக்கும் நம்பிக்கையுடன்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

மரணம் நெருங்கும் கணம் வரை 
தேடிக் கொண்டிருப்பேன்.
எங்கிருக்கிறாய் மகனே?

                              எதிரொலி 01-04-2018

No comments:

Post a Comment