தெரு நாய்களின் ஊழயொலி நிறைந்த
நிலவெறித்த முன்னிரவொன்றில்
காதல்
எம்மிடம் தோற்ற கதையழுதேன்
அன்பே!
நம்மைப் பிரித்திடவும்
நாம் பிரிந்திடவும்
காரணமில்லையென்ற
கற்பிதங்கள் சிதைந்ததை
என்னவென்போம்?
சித்திரையின் பகலொழித்து
மழை பெய்த முழுநாளும்
நீயழுத கதை கேட்டேன்.
குற்றஞ் சொன்னாய் என்மீது.
நான் என் பெற்றோர் மீதும்
அவர்கள்
தாலிக் கனவுடனிருக்கும்
என் சகோதரிகள் மீதுமாய்
மாற்றிக் கொண்டோம் குற்றத்தை.
தாள்களின் பின்னால்தான்
இந்த உலகமும் உறவுகளும் என்பதை
அறியாதிருந்தோம் நாம்.
அறிந்திடில்
நமக்குக் காதல் வாய்த்திராது.
அன்றேல்
பிரிவு நேர்ந்திராது.
தாயகம் செப்ரெம்பர் 1998
No comments:
Post a Comment