Thursday, July 25, 2019

கவிதை -துயர் மருங்கிலிருந்தொரு குரல்




புன் சிரிப்பால் உலகாண்ட

மைனாப் பொன் குஞ்சே!

ஆயிரம் வசீகரங்களின் பிறப்பே!


தளையறுந்த உணர்வுகளின் வெளிப்பாடே

கவிதையெனில்>

நீ கவிதை.


உனக்குள் சிக்கித் தவிக்கும்

நமது ஞாபகங்கள் அரற்றுகின்றன.


விழிகள்

நிலவொளிரா இரவின் தனிமையில்

சாக்குருவிக் குரலெழும்ப

உனது முகம் தேடுகின்றன.


நமது மூச்சுக் காற்றுக்கப்பால்

புழுதி வயல்களில் ஈரங் குழைத்து

உன் உடலம் வீழ்ந்த கதையறிந்தோம்.


பிரபஞ்சம் அவாவும்

உனது காதலைச் சொல்லவும்

அழுது மறுகியுன்

சாதலைச் சொல்லவும்

இயலாப் பிணமானோம்.


உனது உடலுமின்றி

நமது உயிருமின்றி

பரிதவித்துச் சுழல்கிறது பூமி.

                                                                                                (மைதிலிக்கு..)

                                                                                              சஞ்சீவி 20-09-1997

No comments:

Post a Comment