கனவான்கள் கண்ணியம் நிறைந்தவராய்க்
கருதப்படுவர்.
கனவான்களிடம் கைத்தடி இருக்கும்.
கைத்தடிகளின் நுனியில்
அதிகாரம் பீறிடும்.
மாடு மேய்க்கும் இடையன்
பிரம்பால் அடிக்கும் ஆசிரியன்
குறுங்கம்பேந்திய காவற்காரன்
கம்பு சுழற்றும் சிலம்ப வீரன்
செங்கோல் தூக்கும் நீதியாளன்
வாளேந்திய அரசன்
சூலமும் வேலும் அங்குசமும்
தாங்கிய கடவுளர்
வெவ்வேறு கைத்தடிகள் எல்லோரிடமும்.
00
நடக்கும் கைத்தடியே
கனவான் சின்னம்.
அரசியல்வாதிகளும் பெருந்தனக் காரர்களும்
நடக்குந் தடியே பற்றுவர் வழமையில்
00
கைத்தடிகள் இல்லாக் கனவான்களுமுண்டு.
சிலரிடம்
ஆயுதங்கள் வெடிப்பொருட்கள்.
சீடர்கள் படை பரிவாரங்கள்
பலரிடம்
றபர்முத்திரை கடிதத்தலைப்பு பேனாவும்.
00
உங்களைப் போலவே
என்னிடமுமுண்டு அதிகாரம்
இவையெதுவும் இல்லாமல்.
கணவனாக… மனைவியாக…
தந்தையாக… தாயாக…
00
மரத்துக்கு அடித்தே
அதிகாரம் செலுத்துகிறார்கள்
நாளைய கனவானாகும்
நமது சிறார்கள்.
தாயகம் ஏப்ரல்-ஜுன் 2005
No comments:
Post a Comment