புள்ளிவிபரங்களே வாழ்க!
உங்களால்தான்
நாட்டின் கல்வி மேம்பாடடைகிறது.
பொருளாதாரம்
சுபீட்சம் காண்கிறது.
அரசியல்
திடம் கொள்கிறது.
அறிக்கைகளே வாழ்வீர்களாக!
நீங்களே
இன மத மொழிகளுக்கிடையிலான
ஐக்கியம் பேணுகிறீர்கள்.
சமத்துவம் சகோதரத்துவம் உரிமைகளை
நிலைநிறுத்துகிறீர்கள்.
சுவர்க்கபுரியான நாட்டையும்
தார்மீக சமூகத்தையும்
கட்டியெழுப்புகிறீர்கள்.
உங்களின் ஒளிக்காட்சி
எங்கும் படிவதாக.
குருதியும் நிணமும் நாறும்
தெருக்களுக்கு
பன்னீரின் நறுமணம் தாருங்கள்.
உடைந்து சிதிலமான
வீடுகளைப் போர்த்தி
அழகு முல்லைகளை மலர்ப்பியுங்கள்.
ஊனமடைந்தவர்களை வனைந்து
இயல்பான மனிதர்களை உருவாக்குங்கள்.
கல்லறைகள் தேவையில்லை.
அவற்றை இருக்கைகளாக்கி
அழகான பூந்தோட்டம் அமையுங்கள்.
துயர் சுமக்கும் வாழ்வு குறித்தும்
துவண்டழும் மனிதர்கள் குறித்தும்
அக்கறை கொள்ளாதீர்.
செழிப்பான நாடெனும் கனவை
நிலை நிறுத்துங்கள்.
அதற்காக நீவிர் வாழ்க!
உதயன் 26-09-2004
No comments:
Post a Comment